புத்தரின் மரணம் எப்படி நிகழ்ந்தது?
----------------------
புத்தர் தனது 80 ஆவது வயதில் மரணம் அடைந்தார்.இயேசு பிறப்பதற்கு563 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அவர் கிராமம் கிராமமாக சென்று போதனைகள் செய்து வந்தார். அவ்வாறு பெலுவாவில் இருந்து பாவா எனும் கிராமத்துக்கு சென்ற போது அங்கு இரும்பு வேலை செய்யும் கண்டா என்பவரின் மாந்தோப்பில் தங்கினார். அப்போது கண்டா தன்னை அறியாமல் புத்தருக்கு அழுகிப்போன பன்றி மாமிசம் கொடுத்துவிட்டார். இதனால் புத்தர் நோய்வாய்ப்பட்டார். மரணம் நெருங்குவதை உணர்ந்தார். ஊருக்கு அருகில் வசித்த எல்லா சீடர்களையும் வரவழைக்குமாறு சொன்னார். தன் பிரதான சீடர் ஆனந்தாவிடம் சொல்லி வண்டிகளால் அழுக்காகி போன ஒரு குட்டையில் இருந்து நீர் எடுத்து வருமாறு சொல்லி பருகினார். தனக்கு அழுகிய மாமிசத்தை கொடுத்த கண்டாவிற்கு எந்தவித வருத்தமும் ஏற்பட செய்யக் கூடாது என்று சொன்னார். "நீ நல்லதே செய்தாய். நீ கொடுத்த உணவைத்தான் புத்தர் கடைசியாக சாப்பிட்டார்." என்று கண்டாவிடம் சொல்லுங்கள் என்று தன் பிரதான சீடர் ஆனந்தா விடம் சொன்னார். தன் சீடர்களிடம் " என்னை அப்படியே பின்பற்றாதீர்கள். உங்களுக்கு நீங்களே தீபமாக இருங்கள். உண்மையை கெட்டியாக பற்றி கொள்ளுங்கள். " என்று சொன்னார். ஒரு படுக்கை தயார் செய்ய சொன்னார். அப்போது துக்கம் தாளமல் அழுத ஆனந்தாவிடம் ஆறுதல் சொன்னார். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் கேளுங்கள் என்று சொன்னார். இல்லை என்று அவர்கள் பதில் சொன்ன பிறகு புத்தர் படுக்கையில் படுத்து தியானத்தில் ஆழ்ந்தார். மரணம் அவரை சூழ்ந்து கொண்டது.
எம் வி காமத் எழுதிய புத்தகத்தில் படித்தது...
-இந்திரன்
No comments:
Post a Comment