Wednesday, 28 May 2025

புத்தகம் 81


#Reading_Marathon2025
#25RM055

#12மாதம்_12எழுத்தாளர்

Book No:81/100+
Pages:-175

மாயம்
-பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் 20 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு தான் இப்புத்தகம். பொதுவாகவே பெருமாள் முருகன் அவர்கள் கதாபாத்திரங்களுக்கு பெயர் சூட்டுவது வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிப்பார். அதேபோல் இந்த புத்தகத்தில் உள்ள 20 கதைகளும் எறும்பு வரிசை கதைகள் என சொல்லும்படி ஒரே ஒரு கதாபாத்திரம் அல்லது ஒரே ஒரு பெயர் கொண்ட கதாபாத்திரம் 20 கதைகளின் நாயகனாக உருவெடுக்கிறான். அதாவது இரட்டை தசாவதாரம் போல. ஆனால் எல்லா கதைகளும் தொடர்புடையது இல்லாமல் தனித்தனியே முருகேசன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே எளிய மக்களின் வாழ்வியல் கதைகளை சொல்லி இருப்பார்.

முருகேசன் என்னும் இளைஞன் தான் இந்த புத்தகத்தின் நாயகன் என்று சொல்லலாம் .அவன் ஒரு எளிய மனிதனாக, பெண் தேடும் இளைஞனாக, கல்லூரியில் படிக்கும் மாணவனாக, குடும்பஸ்தனாக என பல்வேறு அவதாரங்களை எடுப்பது போல இந்த கதைகள் அமைந்துள்ளது. கதைகளில் மிகப்பெரும் புதிர்களோ எதிர்பாராத திருப்பங்களோ என இல்லாமல் ஒவ்வொரு கதைகளும் சமவெளியில் பயணிப்பது போல மலைகளில் ஏறுவது போல காடுகளில் அலைந்து திரிவது போல பல்வேறு அனுபவங்களை தருகிறது. 
ஊரு கதைகளின் இறுதிகளும் நாம் ஊகிக்க முடியாத சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன சில கதைகளில் இயல்பாகவும் முடிந்து இருக்கின்றன.
வாசகர்களைப் பிடித்து உலுக்காத வண்ணமும் இயல்பான நடையில் இந்த கதைகள் பவனி வருகின்றன.

தந்தை மகனுக்கு உள்ள உறவை பற்றிய கதையில் மகன் தந்தையை மிஞ்சும் அளவுக்கு வளர்ந்து விட்டால் அல்லது புகழடைந்து விட்டால் ஒரு தந்தையின் எண்ணம் பெருமிதப்படும் அதோடு தன்னுடைய சுயத்தை இழந்ததை எண்ணி ஒரு சில கனமேனும் அவர்களும் இயலாமையில் ஆற்றாமையில் வருந்துவார்கள் என்பதை தான் கடைக்குட்டி, நுங்கு, ஆட்டம், தொழில் போன்ற கதைகளில் மகனின் வளர்ச்சி அப்பாவின் சுயத்தை எப்படி ஒருகணமேனும் எண்ண வைக்கிறது என்பதை உளவியல் பூர்வமாக சொல்லி இருப்பார். மாறாக ஒளி என்னும் கதையில் தந்தையை இழந்து வாடும் மகனின் பார்வையில் தந்தை குறித்து பிம்பத்தை இதில் பதிவு செய்திருப்பார்.

பொதுவாக காதல் திருமணம் இன்றி பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணத்தில் உள்ள பெரும் குறைய பெண் தேடும் படலம் தான். அவ்வாறு பெண் தேடி அலுத்துக் கொள்ளும் இளைஞனின் மனநிலையை முருகேசன் தன்னுடைய கதைகளில் பதிவு செய்திருப்பார். போதும் என்னும் கதையில் காதல் தோல்வியை தாங்கும் இளைஞனாகவும், புதிதாய் திருமணமான புதிதில் ஏற்படும் கணவன் மனைவி இடையேயான பிணக்குகள் கதையை பசி என்னும் கதையிலும் ,திருமணம் ஆகி விருந்துக்கு செல்லும் வீடுகளில் பணம் வைத்து கொடுப்பதில் கணவன் மனைவியிடையே வரும் சந்தேகம் ஈகோவாக உருவெடுக்கும் தருணங்களில் பெண் என்ன செய்வார் என்பதனை அபிஷேகம் கதையில் அழகாக சொல்லி இருப்பார்.

இளம் வயதில் நண்பர்கள் கிடைப்பது வரம் ஆனால் சில சமயங்களில் நண்பர்களுக்கிடையே ஏற்படும் உணர்வுகள் சண்டைகள் சச்சரவுகள் பற்றிய கதைகளை தமக்கே உரிய பாணியில் இயல்பாக சொல்லி இருப்பார். அருவிக்கரையில் குளிக்கச் செல்லும் நான்கு நண்பர்களில் ஒருவன் இறந்து போனால் மீதமுள்ளவர்களின் மனநிலையை அருவி என்ன?இறந்து போன மகனை பெற்ற பெற்றோரின் மனநிலை எவ்வாறு மற்ற நண்பர்களை நடத்துபவர்கள் என்பதனை அருவி எனும் இக்கதை அழுத்தமாக விவரிக்கிறது.

முருகேசன் நண்பனான ரமேஷ் காதல் திருமணம் செய்து கொள்ள காதலியை முருகேசன் வீட்டிற்கு அழைத்து வருகிறான். தவறான நடவடிக்கையாக இருந்தாலும் நண்பனின் ஆசை நிறைவேற்றும் விதமாக முருகேசன் குடும்பமே நடந்து கொள்கிறது. ஆனால் விடியற்காலையில் எழுந்து பார்த்தால் ரமேஷை காணவில்லை அவன் அம்மாவின் பாசத்தினால் ஊருக்குச் சென்று இருப்பான். அங்கே உள்ள பெண்ணின் மனநிலை, முருகேசனின் குடும்பமும் தவிப்பும் இறுதியில் அந்த பெண் எடுக்கும் முடிவும் நான் என்னும் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. 

பொதுவாக பிரதிபலன் பார்க்காமல் செய்யும் உதவிகள் தான் நண்பர்கள் செய்வது. இது பண விஷயத்துக்கும் நிச்சயம் பொருந்தும். அடிக்கடி பணம் கேட்டு வாங்கிக் கொள்ளும் வீரேஷ் ஒருமுறை முருகேஸுடம் 10,000 உடனே அனுப்ப வேண்டும் என்று கூறுகிறான். மாத ஊதியத்தில் வேலை பார்க்கும் இவனிடம் பணம் இல்லை என்றாலும் பல்வேறு யோசனைகளுக்கு பின் அந்த பணத்தினை நண்பனுக்கு உடனே அனுப்புகிறான். ஆனால் அதற்கு பின்பு தான் தெரிகிறது அந்த நண்பனும் அவர்களின் நண்பர்களும் வைத்த சோதனை தான் அந்த பணம் கேட்பது என்று கூறி பணத்தினை திரும்ப 10500 ஆக அனுப்பும் போது நண்பனின் நம்பிக்கையை பெற்ற பெருமிதம் இருந்தாலும் ஒருமுறை சலனம் வந்ததை எண்ணி முருகேசன் வருந்துவது இயல்பான மனிதர்களின் எண்ணங்களை நம் முன் நிறுத்துகிறது.

ஒரு நொடி நேரத்தில் எடுத்த தவறான முடிவுகள் எவ்வாறு பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் ,உளவியல் சிதை மாற்றத்துக்கு உள்ளாகும் போது மனித நடவடிக்கைகள் எவ்வாறு எல்லாம் தவறான எண்ணத்தினை ஏற்படுத்துகிறது என்பதையும் முத்தம் என்னும் கதையிலும் பொண்டாட்டி என்னும் கதையில் கொலை செய்யும் அளவுக்கு செல்லும் காதலனின் நிலைமை சமகாலத்தில் நடைபெறும் கொலைகளுக்கான காரணங்களாகவும் இருக்கலாம் என்று எண்ணத்துடன் படிக்க வைக்கிறது. சில சமயம் நாம் நகைச்சுவை என்று செய்வதும் சர்ப்ரைஸ் செய்ய நினைப்பதும் எவ்வாறு தவறான நிலையை ஏற்படுகிறது என்பதனை வீராப்பு என்ற கதை நமக்குச் சொல்கிறது. 

கதைக்களங்கள் மிகவும் யதார்த்தமாகவும், கிராமத்து பின்னணியிடனும் இருக்கிறது. கதை நாயகன் பெரிய வேலை செய்வது போல் காட்டாமல், ஆடு மேய்ப்பவராகவும் அட்டை கம்பெனிக்கு வேலைக்கு போவோராகவும், காரை  வேலை செய்பவனாகவும் கதை மாந்தர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எனினும் அன்றாட வாழ்க்கையில் விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சனைகள், வாழ்வியல் சிக்கல்கள் உளவியல் காரணங்கள் பிரச்சனைகள் என அவர்கள் கடந்து செல்லும் வாழ்க்கையை நம்மையும் வாழ்ந்து பார்ப்பது போல் தன் எழுத்தில் வழயே காட்டியிருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 23 May 2025

அமலன் ஸ்டான்லி


புத்தத்தின் முதல் ஐந்து கட்டளைகளில் இரண்டாவது களவாடுதலுக்கு எதிரானது. அது பிறரது தீய குணங்களைத் களவாடி, அவற்றைப் பற்றியே எப்போதும் சிந்திப்பதைக் குறிக்கிறது. ஒருவர் பிறரின் தீய குணங்களைப் பற்றிச் சிந்திக்க அவர்களின் அனுமதியை ஒருபோதும்  கேட்பதில்லை. கேட்காமல் எடுப்பது களவுக்கு ஒப்பானது.

ஒரு வகையில் அது களவேதான். என்ன நடக்கிறது என்றால், உங்கள் மனத்தை எல்லா வகையான குப்பைகளையும் போட்டு நிரப்பிவிடுகிறீர்கள். பிறரது பழக்கவழக்கங்களையோ நடத்தையையோ களவாட நினைத்தால் அவர்களின் நன்னடத்தைகளைக் களவாடுங்கள்.

பிறரது செயல்களில் எவை நலமானதாக, முன்மாதிரியாக அமைகின்றன என்பதைப் பாருங்கள். அவற்றையே உங்களுக்கான பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். பிறரின் தவறுகளையோ தீய பழக்கங்களையோ மட்டுமே கணக்கிடப் போகிறீர்கள் என்றால், உங்களின் மனப்பாங்கைப் பற்றி மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.

பிறரது தீய பழக்கங்களைக் காண்கிறீர்கள். வெளியிலிருந்து பார்க்கையில் அவை தீயன என்றுணர்கிறீர்கள். உங்களுக்கும் அதே பழக்கங்கள் இருந்தால் அது போன்றே தீயதாகத்தானே இருக்கும்?  எனவே பிறரது தீய பழக்கங்களை ஒரு கண்ணாடியாகப் பயன்படுத்துங்கள். உங்களிடம் அவற்றில் ஏதேனும் இருக்கின்றனவா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 

ஆனால் உங்களிடம் அப்பழக்கங்கள் இல்லையென்றால், அவற்றைப் பிறரிடமிருந்து களவாடத் தேவையில்லை. நீங்கள் வீணே உங்கள் மனத்தைக் குப்பைகளால் நிரப்பிக் கொண்டிருப்பதை நிறுத்திவிடலாம்! 

~ தனிசாரோ பிக்கு 
"மனவளத்திற்கான ஐந்து கட்டளைகள்" உரையிலிருந்து

ஈரோடு கதிர்


சாதாரணமாக ஒரு உரையாடலைத் தொடங்குவது மிகவும் எளிது. ’நல்லாருக்கீங்ளா, சாப்பிட்டாச்சா, வெயில் ரொம்ப’ என ஏதேனும் மிகச் சம்பிரதாயமான முறையில் உரையாடலைத் தொடங்கிவிட முடியும். ஆனால் அதனைத் தொடர்வதில்தான் பலருக்கும் சிக்கல் இருக்கின்றது.

*உரையாடலைத் தொடர்வதற்கு, நம் சொற்களஞ்சியத்தில் உயிரோட்டமுள்ள, மனப்பூர்வமான சொற்கள் இருக்க வேண்டும்* . நாம் யாருடன் உரையாடுகிறோமோ, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும், மலரச் செய்யும் திறன் அந்த சொற்களுக்கு இருக்க வேண்டும். சம்பிரதாயமான சொற்களில் அந்த உயிர்ப்பு ஒருபோதும் இருப்பதில்லை.

அவர்கள் மீது அக்கறை, அன்பு, மதிப்பு, ப்ரியம், மரியாதை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றைச் செலுத்தும் வகையிலான சொற்கள் நம்மிடம் இருக்க வேண்டும். 
அப்படிப்பட்ட உணர்வுகளை அவர்கள் உணரும்போது, உரையாடல் தானாகவே வளரத் தொடங்கும், ஆழமானதாகவும் இனிமையானதாகவும் மாறும்.

உண்மையில், *ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்கிறோம்* .

~ ஈரோடு கதிர்

Tuesday, 13 May 2025

ராமானுஜம்


தற்குறிப்பேற்ற அணி- கவிமனமும் மனப் பிறழ்வும்

இயற்கையாக நடக்கும் விஷயத்திற்கு வேறொரு உள்ளர்த்தம் இருப்பது போல் கற்பிப்பது தற்குறிப்பேற்ற அணி!

ராமன் மணிமுடி சூடும் நாள் விடிகிறது. அயோத்தியில் சேவல் கூவுகிறது . " பட்டாபிஷேகம் இல்லை. ராமன் காட்டுக்குப் போகிறான். இது தெரியாமல் தூங்கிறீர்களே மக்களே" எனத் தங்கள் வயிற்றில் அடித்தபடி கூவுகின்றனவாம் சேவல்."தம் வயிறெற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே " என்கிறார் கம்பர். 

இதே போல் சிலப்பதிகாரத்திலும் உண்டு. கொடிகள் ஆடுவது வரவேண்டாம் எனக் கோவலனைச் சொல்வது போல் இருக்குமாம்.

"பொய்கை என்னும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள். தென்றல் என்னும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்" என இயற்கையாக நடக்கும் நிகழ்வை தென்றல் காதலன் நீர்மகளின் பூவாடையை விலக்கினான் எனப் புலமைப்பித்தன் எழுதிய  அபாரமாக வரிகளில் புதைந்திருப்பதும் இது போன்ற கற்பனைதான்.

இது கற்பனை என அறிந்திருக்கும் வரை அது ரசிக்கத்தக்கது. 
அதையே நிஜம் என நம்பினால் சாதாரண நிகழ்வுகளுக்குப் பின்னால் ஏதோ உள்ளர்த்தம் ( Unusual Significance) இருப்பது போல் யோசிக்க ஆரம்பித்து விடுவோம். சகுனம் போன்ற மூட நம்பிக்கைகள் பிறப்பது இங்குதான். 

 அதீதமானால் இது மனப்பிறழ்வில் ( Delusion) கொண்டுவிடும். இயற்கையாக நடக்கும் விஷயங்களுக்குப் பின் ஒரு விசேஷ உள்ளர்த்தத்தைக் கற்பிப்பது. Delusional mis interpretation or Delusional Perception.

குணா திரைப்படத்தில் பெயர்ப்பலகை தற்செயலாகச் சுட்டிக் காட்டும் பெண்தான் அபிராமி என குணா முடிவுக்கு வருவார். அது போல.

ஒரு நோயர் என்னிடம் சொன்னார் " புதிதாக வேலைக்குச் சேர கிளம்பினேன். ரோட்டின் குறுக்கே ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. யாரோ இந்த வேலை வேண்டாம் என  என்னை வழி மறிப்பது போல் தோன்றியது. திரும்பி வந்து விட்டேன்" . அதன் பின்னர் பத்தாண்டுகள் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை.

கற்பனை இனிமையானது.
ஆனால் அதனை உண்மையென நம்ப ஆரம்பித்தால் அது மனப்பிறழ்வாகிறது.

Fantasy and delusion differ only in the degrees of belief.

டாக்டர் ஜி ராமானுஜம்

தஸ்தா


தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு கதை இருக்கிறது .ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறான்.சுற்றியிருக்கும் மக்களுக்கு அவனை பிடிக்கவே பிடிக்காது .அவர்களை பொறுத்தவரையில் அவன் ஆபத்தானவன்,கெட்டவன்,மோசமானவன் ..

ஒரு நாள் காட்டுப்பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகத்தால் மயக்கம் அடையும் நிலையில் "தண்ணி தண்ணி " என்று கத்திக் கொண்டு கீழே விழுந்து கிடக்கிறாள்.அப்போது அந்த வழியாக இளைஞன் வருகிறான் .அவனைப் பார்க்கும் அந்தப் பெண் இந்த நேரத்தில் இவனா வரணும் என்று நொந்து கொள்கிறாள் .அவன் அந்தப் பெண்ணைக் கடந்து செல்கிறான் .சிறிது நேரத்தில் தண்ணீருடன் வருகிறான் ,அந்தப் பெண்ணுக்கு அருகில் தண்ணீரை வைத்து விட்டு அவன் போக்கில் சென்று விடுகிறான்.

ஒருவன் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் நல்லவனாக மாறலாம் ,அது மட்டுமில்லாமல் ஒருவனை மதிப்பிடுவது ,ஒருவனை பற்றி முடிவு செய்வது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தும் கதை .

 மற்றவர்களைப் பற்றிய நம் தவறான எண்ணங்களை ,மதிப்பிடுதலை நாம் உணர்கின்ற வகையில்  அழகாக சித்தரிக்கிறது

-இனிய காலை

Sunday, 11 May 2025

6 உளவியல் காரணங்கள்

உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் 6 உளவியல் நோய் அறிகுறிகள் 

😫 கிளினோமேனியா (Clinomania) 
கட்டிலில் இருந்து எழுந்த வர மனமின்மை. 
படுத்த வண்ணம் கட்டிலிலே இருக்க வேண்டும் என்ற ஆசை.

😫 ஜௌஸ்கா மோனியா (Jouska) 
உங்கள் மனதுக்குள் ஒடும் கற்பனை உரையாடல் காரணமாக கற்பனையான சம்பவங்கள், கற்பனை மனிதர்கள், கற்பனை காட்சிகள் உங்கள் தலையில் நாளாந்தம் வந்து தொல்லை தருதல். 

😫  பிலோபோபியா (Philophobia)
காதலில் விழுந்து விடுவேனோ, கல்யாணம்  கட்டினால் பிரச்சனை ஆகுமோ என்ற தீராத மனப் பயம் ஏற்படுதல். 

😫 நிக்டோபிலியா (Nyctophilia) 
தகுந்த காரணங்கள் எதுவுமின்றி இருட்டைக் காண்பதில் அல்லது இரவு வந்தால் பயம் ஏற்படுதல். 

😫 எக்ஸுலான்சிஸ் (Exulansis) 
யாரும் உங்களை புரிந்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் உங்களைப் பற்றியோ, உங்களுக்கு நடந்த சம்பவங்களைப் பற்றி யாரிடமும் வாய் திறந்து பேச மனமின்மை. 

😫 மோனோகோப்சிஸ் (Monachopsis) 
நீங்கள் உங்களுக்குப் பொருத்தமற்ற இடத்தில் இருப்பதால் உங்களை யாரும் கண்டுகொள்கிறார்கள் இல்லை என்ற மனவருத்தம்.

Saturday, 10 May 2025

புத்தகங்கள்


புத்தகங்கள்.

எந்தப் புத்தகமும் என்னை முட்டாளென்று
இழிவுபடுத்தியதேயில்லை!
மாறாக,என் அறிவைக் கிளறி விட்டது!

எந்த புத்தகமும் என்னைப் பைத்தியமென்று
பறைசாற்றியதேயில்லை!
மாறாகத் தெளிவை எனக்குத் தேடித் தந்தது!

எந்தப் புத்தகமும் என்னைப் பயன்படாதவனென்று விலக்கி வைத்ததேயில்லை!மாறாக,என் தோள்களைத் தூக்கி விட்டது!

எந்தப் புத்தகமும் எனக்குத் 
துரோகமிழைத்ததேயில்லை!
மாறாக,நேசத்தை நெஞ்சில் நிரப்பியது!

எந்தப் புத்தகமும் எனக்குப் பகைமையைப்
படிப்பித்ததேயில்லை!மாறாக, நாளும் நட்பை வளர்த்தது!

எந்தப் புத்தகமும் புகைபிடிக்கவோ, மதுவருந்தவோ என்னை அழைத்ததேயில்லை! மாறாக, 
ஒழுக்கத்தின் உயர்வை ஊட்டியது!

எந்தப் புத்தகமும் திருடவோ, பொய் சொல்லவோ எனக்குக் கற்பித்ததேயில்லை!
மாறாக, உழைப்பையும், உண்மையையும் ஒருங்கே உணர்த்தியது!

எந்தப் புத்தகமும், எனக்கு அநாகரிக வார்த்தைகளை அள்ளிக் கொடுத்ததேயில்லை!மாறாக,அன்பின் சொற்களையே அளித்தது!

மனிதர்களை விட அதிகமாக மானுடம் பேசுவதும், வளர்ப்பதும் புத்தகங்களாதலால்,
புத்தகங்களோடு பழகுங்கள்!

-படித்தது

Sunday, 4 May 2025

கோகுல் பிரசாத்


நவீன மனிதனின் வாழ்வில் அனுபவங்கள் குறைந்துவிட்டன. சராசரி மனிதனின் அனுபவக் கணக்கு எப்போதுமே குறைவானது என்றாலும் சமகாலத்தில் அது மேலும் அருகிவிட்டது. அனுபவச் சேகரத்தின் இடத்தைத் தற்போது எதிர்வினைகள் ஆக்கிரமித்துள்ளன. தீ சுட்டதும் கை தன்னிச்சையாக விரைந்து விலகி உதறிக்கொள்ளும் உடலின் மறிவினை (reflex action) போல மனமும் எதிர்வினைகளுக்குப் பழகிவிட்டது. உடலின் புறவய reflex-ஐப் போல அகவயமான reflex-ஆக மனம் செயல்படுகிறது. நமக்கு நேர்ந்த மாபெரும் இழப்பு என இதையே குறிப்பிட முடியும்.

ஒரு நிகழ்வை அதன் போக்கில் ஒழுகிச்செல்ல நாம் அனுமதிப்பதில்லை. நமது கருத்துகளால், ஓயாத எண்ணங்களால், அகந்தையால், எமோஜிக்களால் அன்றாடச் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்கிறோம். பின்னர், அந்த எதிர்வினைகளையே அனுபவம் என்றெண்ணி மயங்குகிறோம். Reacting and responding. இங்கே அறிதல் (revelation) நிகழ்வதில்லை.

புதிதாக ஒருவரைச் சந்திக்கிறீர்கள், அவருடன் உரையாடுகிறீர்கள், அந்தச் சந்திப்பு நட்பாக நீடிக்கிறது என வைத்துக்கொள்வோம். அவருடைய ரசனை, அறிவு, அழகு, குணம், பேச்சு என ஏதேனுமொரு பண்பு பிடித்துப்போய் நட்பு மலர்கிறது எனில் அது உங்களது விழிப்புநிலையின் அல்லது நீங்கள் வளர்த்தெடுத்த ஆளுமையின் இயல்பான எதிர்வினை மட்டுமே. தன்னை ஒத்த சக மனிதரைக் கண்டுகொண்டதிலுள்ள ஆர்வம், குறுகுறுப்பு. 

இந்த நட்பானது எதிர்வினை அல்லது ஒத்திசைவுள்ள எண்ணப் பிரதிபலிப்பு (harmonious reflection) என்கிற படிநிலையிலிருந்து ஆழ்ந்து சென்று வாழ்க்கை அனுபவமாக மாற வேண்டுமெனில் அகங்காரத்திலிருந்து சுயத்திற்கான (ego to self) பயணம் நிகழ வேண்டும். மன நகர்வு உண்டாக வேண்டும். ஒரு சுற்றுலாவுக்குச் செல்கிறீர்கள். இயற்கைப் பேரெழில் காட்சியைப் பார்க்கிறீர்கள். அப்போது ஏற்படுகிற ஆனந்தமும் பரவசமும் மனத்தின் எதிர்வினைகள். ஆனால், இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன் உங்களது அகம் சீண்டப்பட்டுப் பிரமித்துப்போய் மூர்ச்சையாகிறீர்கள், உள்ளடங்கி இப்பிரபஞ்சத்தின் சிறுதுகள் என உணர்கிறீர்கள் எனில் அது அனுபவம். இந்த மாற்றம் சுயத்திலிருந்து அகந்தைக்கு (self to ego) எனத் தலைகீழாகவும் நடக்கலாம்.

எப்படியாகினும் உள்ளுக்குள் ஓர் உடைவு, ஓர் அசைவு ஏற்பட்டால்தான் அதனை அனுபவமாகக் கணக்கில்கொள்ள முடியும். உங்களது வாழ்க்கைக் கண்ணோட்டத்தை மாற்றாத எதுவும் உள்ளார்ந்த தரிசனத்துக்கு வழிகோலுவதில்லை. சிரிப்பு, அழுகை, கோபாவேசம் போன்ற மேலோட்டமான உணர்ச்சிகளும் எதிர்வினைகளிலேயே அடங்கும். இவற்றை மனத்தில் இருத்தி நம் வாழ்க்கையில் உண்மையிலேயே எத்தனை அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன எனச் சிந்திக்கலாம். எதிர்வினைகளுக்கான களம் பெருகி அனுபவங்களுக்கான இடைவெளி குறுகியிருப்பது புரியும். 

We’re not experiencing anything, just reacting. வாழ்க்கையின் பெரும்பகுதி வெறுமனே எதிர்வினைகளால் நிரம்பியிருக்குமானால் அதைவிட அவலம் வேறில்லை.

-கோகுல் பிரசாத்