Friday, 26 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-13*மணி




நாட்டு தெய்வங்களை மக்களின் தெய்வங்களாகப் பார்க்கிறேன். இந்த ஆன்மிகம் மக்களுடைய ஆன்மிகம். அதாவது, இது நிறுவனமயமாக்கப்பட்டது கிடையாது. அதிகாரச் சார்பற்ற ஆன்மிகம்.
-தொ.ப

#தெய்வம் என்பதோர்
-தொ.பரமசிவன் 

2008ம் ஆண்டு இப்புத்தகத்தை வாசிக்கும் போது கிடைத்த வியப்பு இன்றளவும் இருக்கிறது எனில் தொ.ப வின் எழுத்துக்கள் தான்.ஒரு பெரியாரியவாதியான தொ.ப நாட்டார் தெய்வங்கள் குறித்து பேசுவதும் நியாயமான காரணங்களை அடுக்குவதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் வலுசேர்க்கிறது.

நமது குலதெய்வங்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களாகத்தான் இருக்கும்.அவை ஏன் எனும் காரணத்தை
தாய் தெய்வங்கள் கட்டுரையில் மிகவும் விரிவாக விளக்கியுள்ளார். உதாரணத்திற்கு முப்புறமும் கடல் இருந்ததால் வடதிசையிலிருந்து பகைவர் வருவதை அழிக்க போர்தெய்வமாக 'கொற்றவை'எனும் பெயரில் பெண் தெய்வங்கள் அழைக்கபட்டன.இதன் வேர்ச்சொல் கொல் என்பதாகும். ஆயுதம் ஏந்தியபடி சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பர்.இன்றும் நாங்கள் வழிபடும் அங்காளம்மன் சிலை வடக்கு நோக்கியே இருக்கிறது.

தாய் தெய்வங்களில் விழாக்களை விட சடங்குகளே அதிகம் செய்யப்படுகின்றன.இவை தவிர வைதீக சார்பின்றி வெயிலுகந்தாள், வாள்மேல் நடந்தாள், மாரியம்மன் மற்றும் வடபகுதியில் ஆயி என முடியும் தெய்வங்கள் குழுமாயி,சிலம்பாயி போன்றவையும், முன்பு அரச குடும்பத்தில் சமாதி செய்யப்பட்ட அரச குடும்ப பெண்களை உலகம்மை, உலகநாயகி என வழிபடுகின்றனர் தென்மாவட்டங்களில்.

கத்தோலிக்கர்களும் தாய் வழிபாட்டில் தூய மரியாளை வழிபட்டனர்.வீரமா முனிவர் தான் கட்டிய கோவிலில் பெரிய நாயகி என பெயரிட்டதுடன் காவலில் உள்ள ஊர்க்கு திருக்காவலூர் எனவும் பெயரிட்டார் என்பதை சுட்டுகிறார்.ஆண்கடவுள்களில் வீரனாகவும்,தெய்வமாகவும் வழிபட்ட சுடலைமாடன்,கருப்பசாமி, காத்தவராயன் உள்ளனர்.ஆண் தெய்வங்கள் பெண் தெய்வங்களை விட குறைவாய் உள்ளதை அறியலாம்.

சித்திர குப்த நாயனார் நாட்டர் கதைப்பாடலில் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை சொல்கிறார். எமனுக்கு உதவியாக இருப்பதாக நம்பப்படும் குப்தன் எனும் பெயர் இன்று குப்தா என்று வடமாநிலங்களில் பெயராக இருப்பதை அறியலாம்( புபேஷ் குப்தா, இந்திரஜித் குப்தா).

அடித்தள மக்கள் வாழ்விலிருந்தும் வாக்கிலிருந்தும் பெறப்படும் செய்திகளால் ஆக்கப்படும் வரலாறு மட்டுமே ஜனநாயகத்தன்மை உடையது என்பார் கோசாம்பி.
கடவுளுக்கும் மக்களுக்கும் குறுக்கே யாரும் இல்லாமல் சிறுதெய்வத்தை வழிபட முடியும். கிராம எல்லையில் நிற்கிற வீரனை நீங்கள் தொட்டுக் கும்பிடலாம். படையல் போடும்போது குடும்பப் பெரியவர்தான் பல இடங்களில் பூஜைசெய்கிறார். இந்த ஜனநாயகம் நிறுவனமயமாக்கப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டில் கிடையாது.

பெரு தெய்வ வழிபாட்டில் நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு ஆளை நிறுத்துகிறது; சம்பிரதாயங்களை நிறுத்துகிறது. இதன் மூலம் கிடைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும் அதன் வழியாகக் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தையும் கொண்டே பிராமணியம் வாழ்கிறது.
முன்பெல்லாம் ஜோசியர்கள் பரிகாரம் கூட குலதெய்வத்தை தான் வழிபட சொல்வார்கள்.காரணம் இவர்கள் அந்த குலத்தின் முன்னோர்கள்.ஆனால் இன்று பெருந்தெய்வ வழிபாட்டை வற்புறுத்துகின்றனர்.

மேலும் வள்ளலார் குறித்தும், தில்லை தேவார பாடல்கள் குறித்தும், வைணவர்களிலும் சாதி அமைப்புக்கு எதிரான மனநிலை கொண்ட தொண்டரடி பொடியாவார்,பெரியாழ்வாரை குறிப்பிடுகிறார்.சாதிய ரீதியான ஒடுக்கு முறையும் அப்போது இருந்தது. உதாரணத்திற்கு தாழ்த்தப்பட்டோர் முளைப்பாரி எடுக்கும் உரிமை இல்லை.

*நாட்டார் தெய்வங்கள் சாதிக்கயிற்றால் கட்டப்பட்டவை எனும் கேள்விக்கும்
பார்ப்பினியத்தின் பங்கு குறித்தும், பக்தி இலக்கிய ஆய்வு குறித்தும், பெரியாரின் பார்வையில் சமய நல்லிணக்கம் குறித்திம் விரிவாக விளக்கியுள்ளார்.
பிள்ளையார் சிலையைத்தான் பெரியார் உடைத்தார், சுடலைமாடன் சிலையை அல்ல..ஏன் உடைக்கவில்லை எனும்  பதிலையும் உள்ளடக்கியது இப்புத்தகம்.

#படித்ததில் பிடித்தது

*குழந்தை பெற்ற தாயினை செல்வி என்ற சொல் வழங்கப்படுவதை காணப்படுகிறது. காடுகெழு செல்வி,கடல் கெழு செல்வி எனும் தொடர் மூலமும் பிற்காலத்தில் அம்மன் எனும் சொல்போல முன்பு செல்வி என பயன்படுத்தியுள்ளனர்.

*சங்கராச்சாரியர்கள் கைப்பற்றும் முன் காமாட்சி அம்மன் கோவில்
கம்மாளர் சாதியார்க்குச் சொந்தமாய் இருந்தது.

*சங்க இலக்கியத்தில் கோட்டம் என்பது கோயிலைக் குறிப்பது.காஞ்சி கோவில் காமக்கோட்டம் என்பது பின்னர் காமகோடி என மாறியது.

*நெல்லை,குமரியில் சமண தெய்வமான இசக்கியம்மன் அதே பெயரில் பகவதி அம்மன் என இன்றும் பல இடங்களில் வழிபடுகின்றனர்.

ஒன்றை திட்டமிட்டு பழசாக்குவது தான் உலகமயம் என்பார்கள்.இப்போது சிறுதெய்வத்தையும் மறக்கடிக்கும் மனநிலைக்கு தள்ளியுள்ளனர். பளிங்கு தரையில்,சாமியை ஒரு நிமிடம் பார்த்து தள்ளி விடும் சாமிதான் பவர் புல்லானது என நம்ப வைத்துவிட்டனர்.
குலதெய்வ பெயர் வைப்பது இழிவாக பார்க்கப்படுகிறது.நாகரிகமாய் இல்லை என நக்கலடிக்கப்படுகிறது.ஆனாலும் வழிவிட்ட அய்யனார், வேம்படி முத்து, பொன்மாடத்தி, பதினெட்டாம் படியான், பொன்.இருளாண்டி எனும் பெயர்கள் கண்ணில் படும்போது கிராமத்தின் வேர்கள் இன்னும் இருப்பதாகவே தெரிகிறது.எங்கிருந்தோ வந்த சாமியை வழிபடும் நாம் முன்னோரான குல தெய்வத்தையும் வழிபடலாம். ஏனெனில் சாமி தூணிலும், துரும்பிலும், பெரு தெய்வத்திலும் சிறுதெய்வத்திலும் கூட இருக்கும்.
கடவுள் நம்பிக்கையில் நம்பிக்கையை கைவிட்டு விட்டு கடவுளை மட்டும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

 .

No comments:

Post a Comment