Tuesday, 30 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-17*மணி




நீங்கள் முழு நிறைவான, தவறே செய்யாத ஒரு நண்பனை தேடிக் கொண்டிருந்தால், நண்பன் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு யாருமே இருக்க மாட்டார்கள் 

ரூமி

#நட்பெனும் நந்தவனம்
-இறையன்பு

ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியில் இறையன்புவின் கட்டுரை புத்தகங்கள் கண்ணில் பட்டால் உடனே வாங்கிவிடுவேன். காரணம்..அறியாத, படித்த,அபூர்வ தகவல்கள் அதில் நிச்சயம் இருக்கும்.இப்புத்தகத்திலும் நட்பு குறித்து பல்வேறு தகவல்கள், உலக இலக்கியங்கள், கவிதைகள், சம்பவங்கள், ஜென் எனப் பல்வேறு உதாரணங்களுடன்  முழுத் தொகுப்பாய் வெளிவந்துள்ளது.70 கட்டுரைகளில் நட்பு குறித்து அலசி ஆராய்ந்துள்ளார்.

ஐம்பது எதிரிகளுக்கு மாற்று மருந்து ஒரு நண்பன் எனும் அரிஸ்டாடில் வரியைக் கூறி மனித வாழ்வில் உறவின் உச்சமாய் வளர்ந்திருக்கும் நட்பை பாராட்டுகிறார்.உளவியலில் 4கருத்தாங்கள் ஒருவரை ஈர்ப்பதாக சொல்கிறார்.அவை வலுவூட்டல், பரிமாற்றம்,அறுவாற்றல்,வளர்ச்சி என நான்கு அம்சங்கள் உள்ளதாக சமூகவியலாளர்கள் மனிதர்க்கு மனிதர் ஈர்க்கும் தன்மைக்கு உதாரணமாய் சொல்கிறார்.

விழிகளை விட்டு அகன்றால் மனத்தை விட்டு அகன்றுவிடுவோம் எனும் யதார்த்த வரிகளையும் பதிவிட்டு..உன்னை சாகிற வரை மறக்க மாட்டேன் என்பார்கள்.ஆனால் நம்மைவிட்டு அகன்றதும் மறந்துவிடுவார்கள்.இது நிதர்சனமானது.பள்ளி நண்பர்களை இப்போது பார்த்தால் பழைய அன்னியோன்யம் இருப்பதில்லை. நட்பை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லையேல் காலாவதி ஆகிவிடும். நட்புக்கும் காதலுக்கும் உள்ள ஒற்றுமை எப்போது நினைத்தாலும் தித்தித்துக் கொண்டே இருக்கும்.

முதல் பார்வையில் பூத்த காதல் போல் சிலர் நபர்களை முதலில் பார்க்கும் போதே பிடித்துவிடும் குணம் இருப்பதாக மார்லோ குறிப்பிடுகிறார்.நண்பர்களை கிரிஃப் நான்கு விதமாய் பிரிக்கிறார். அவசிய,ஆத்மார்த்த,நெடுங்கால மற்றும் பேருக்கு நண்பர்கள். முறையே உள்வட்டத்தில் இருப்போர், நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள், நெடும்காலமாய் நட்பு பாராட்டுவோர், பேருக்கு நட்பாய் இருப்பது என்கிறார்

ஒருவனோடு நண்பனாகும் போது அவனுக்கு மட்டுமே நண்பனாகிறோம்; எதிரியாகும்போது அவன் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமான எதிரியாகிறோம்
என்பார் லஷ்மி சரவணகுமார்.இது நட்புக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம். ஆரோக்யமான நட்பு குறித்தும். நட்பில்லாத தனிமை குறித்தும், நமக்கான நண்பர்களை தேர்ந்தெடுப்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

காவியத்தில்,இலக்கியத்தில், சங்கப்பாடல்களில், திருக்குறளில் ராமயணத்தில் அமைந்த நட்புகள் குறித்தும் கூறிகிறார். மகாபாரதத்தில் கண்ணன் ஒரு முறை அர்ஜுனா! அதோ பார் பறவை என்கிறர்.ஆமாம் என்கிறான் அர்ஜுனன். கொக்காக இருக்குமோ என்றதும் ஆமாம் கொக்கு என்கிறான். நான் என்ன சொன்னாலும் ஒப்புக்கொள்வாயா என்றதும் ஆமாம் உன்னை ஒருபோதும் மறுத்துப் பேச மாட்டேன் என்கிறார்.இது போல சுவைமிகு சம்பவங்களும் படிக்கும் போது இன்பமாய் இருக்கிறது.

மற்றொரு இடத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கும் சிறந்த பொதுவுடமை வாதியாக விளங்கிய சத்பூரி சக்லத் வாலாவிற்கும் ஏற்பட்ட நட்பு முக்கியமானதாக இருக்கிறது. இருவருமே செல்வந்தர்கள். இவர் ஜே.ஆர்.டாட்டாவின் சகோதரியின் மகன். நிறைய படித்தவர். செல்வச் செழிப்பில் இருந்தாலும் இதயத்தில் பொதுவுடமை கருத்தை வளர்த்தவர் சிங்காரவேலர்.இவரைக் காட்டிலும் 14 வயது குறைவாக இருந்தாலும் நெடுங்காலம் கடித தொடர்பு மூலமாக அவரை தன் தலைவராக மதித்துப் போற்றினார். 

அதேபோல ஐன்ஸ்டீனும் சாப்ளினும் ஒன்றாக சென்றபோது சாப்ளினுக்கு கைதட்டல் அதிகம் இருந்தது . எல்லாருக்கும் என் படங்கள் புரிந்து இருப்பதால் கைதட்டுகிறார்கள். உங்கள் கண்டுபிடிப்பை யாருக்கும் புரியாததால் உங்களைப் பார்த்து கைதட்டுகிறார்கள் என்று சாப்ளின் குறிப்பிட்டாராம்

நிலவில் கால் பதித்த ஆம்ஸ்டிராங் மற்றும் அல்ட்ரினுடைய நட்பு குறித்தும், எட்மண்ட் ஹிலாரி டென்சிங் குறித்தும் சுவையான தகவல்களை நமக்கு பகிர்ந்துள்ளார்

#ரசித்தவை

*இறுதியில் நம் நினைவில் இருக்கப்போவது நம் எதிரிகளின் சொற்கள் அல்ல, நண்பர்களின் மெளனங்களே".
-மார்ட்டின் லூதர்கிங்

*ஒருவர் எந்த அளவிற்கு சொந்த செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறார் என்பது அவர் நம்மீது வைத்திருக்கும் நட்பின் அடையாளமாக இருக்கிறது லாரன்ஸ் தாமஸ்

*புதிய நண்பர்களை சம்பாதியுங்கள் ஆனால் பழைய நண்பர்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் 

*நட்பு தூய்மையாகவும் தூய்மை நட்பை
உள்ளடக்கியதாகவும் இருக்கும்

*தண்டலை கிராமத்திற்கு காமராஜரை அண்ணா அழைத்திருந்தார்.அப்போது மழை பொழிந்த போது காமராஜர் நனையாமல் இருக்க தொண்டரிடமிருந்து குடை வாங்கி காமராஜருக்கு பிடித்தார் அண்ணா

நேர்த்தியான சுவையான தகவல்கள் மூலம் நம்மையும் நட்புடன் ஈர்க்க வைக்கிறது இப்புத்தகம்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment