Tuesday, 30 March 2021

கற்பதுவே..பகிர்வதுவே-16*மணி



படைத்தல் என்பது சிந்தனையில் சிந்திப்பதை தோற்றுவிப்பதே
-டெல்யுஸ்

#வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
-வே.மு பொதியவெற்பன்


வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்.. மயில் குயில் ஆச்சுதடி!’ என்பது வள்ளலார் வரி. தன் அழகின் கர்வத்தால் ஆடும் மயில்போன்ற மனத்தின் ஆணவத்தை இறைவன் அடக்கியதால், இப்போது மயில் வானத்திலே களிநடம் புரிகிறது. வள்ளலாரின் இந்த அபூர்வமான மாயக் கற்பனையை தன் நூலுக்கான தலைப்பாய் தேர்ந்தெடுத்துள்ளார்.

தான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தன் படைப்புகள் கல்லூரியில் நூலாக இருந்த பெருமை இருவருக்குத்தான்.. ஒருவர் வைரமுத்து மற்றவர் வே.மு பொதியவெற்வன் என படித்திருக்கிறேன்.2019ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இக்கட்டுரை தொகுப்பை வாங்கினேன்.விமர்சன கட்டுரையை ஆய்வு நூலாக எழுதுவதில் வே.மு அவர்கள் தனி பாணியை பின்பற்றியுள்ளார்.புனைவு வெளியில் அழகியலும் அரசியலும் மற்றும் கதையாடலாய்விலும் திறம்பட எழுதியுள்ளார்.

புதுமைப்பித்தன் படைப்புகளை முன்வைத்து யதார்த்தவாத படைப்பினை ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.புறவய யதார்த்த நிலையும்,படைப்பில் இயல்பாய் வெளிப்படும் யதார்த்தத்தையும் பல்வேறு உதாரணங்கள் வழி வெளிப்படுத்துகிறார்.


இவரின் மேற்கோள்கள் ஒவ்வொன்றும் அந்தக் கட்டுரைக்கு வலு சேர்ப்பது போல் இருக்கும்.திராவிட சிசு புராணம் கட்டுரையில் "சாதியும் சரி,சமயமும் சரி இரண்டும் மிக சாதுரியமானவை. இறுக்கமானது போல் நிமிர்ந்து, நெகிழ்ந்து, சராசரி இந்தியனின் முதுகின் மேல் சவாரி செய்து கொண்டிருக்கின்றனன. இரண்டும் இரட்டைப்பிள்ளைகள். சாதிக்குச் சளிபிடித்தால், சமயத்துக்குத் தொண்டை கமறும்.சமயத்துக்கு ஒரு சிறு ஆபத்து என்றால், சமயம் பார்த்து சாதி துணைக்கு நிற்கும் என  தி.சு.நடராசனின் மேற்கோள் பொருத்தமானது.

சைவம் குறித்த அடத்தியான ஆய்வும், சித்த மரபும், மதம் குறித்த மார்க்சிய நோக்கு போன்றவை குறித்தும் விரிவான கட்டுரையாய் எழுதியுள்ளார்.அறியாமையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம் என்பதற்கு உதாரணமாக
தங்களுடைய கருத்துகளை நிலைநாட்டுகிற வெறியும் எதிராளியை வென்றெடுக்கும் நோக்கமும் சாத்தியமாக்காது எனும் கூற்றினை அடிக்கோடிட்டுள்ளார்.


சிறுதெய்வ வழுபாட்டின் அவசியத்தையும்,ஆ சிவசுப்பிரமணியன்,கா.சிவத்தம்பி ஆகியோரின் ஆய்வுகளையும் எடுத்துக்கூறுகிறார்.

யானையைக் குலக்குறியாகக் கொண்டிருந்த பழங்குடிக் குலமொன்று எலியைக் குலக்குறியாகக் கொண்டிருந்த குழுவுடன் போரிட்டு அதை வென்றதால் அவ்வெற்றியின் அடையாளமாய் தன் குலக்கடவுளின் வாகனமாய் எலியை மாற்றியுள்ளதாக கூறும் ஆ.சிவசுப்பிரமணியனின் தகவல் புதியதாய் இருந்தது.

இறுதியில் கதையாடல் குறித்த ஆய்வில் உரைநடை,புனைக்கதை, அல்புனைவு குறித்து வகைப்படுத்தி விவரித்துள்ளார்.ஆய்வுநூல் என்பதால் மற்ற புத்தகம் போல் இல்லாமல் பொறுமையாய் படிக்கவும்

#ரசித்தது.


*பொருளுக்கு இரையாகுபவன் உண்மைப்பொருளைக் காணமாட்டான்.அதுவே எல்லாவகை மயக்கத்திற்கும் அடிப்படைக் காரணம்.இதுதான் முதலாளியம் வளர்த்த பெரும் மயக்கம்

*மியாவ் என்பது உனக்கு ஓசை எனக்கு சொல்

*அறிவு ஓரிடத்தில் தேங்கும்போது அது அதிகாரமாகிறது.

*அதிகாரம்.. எது தன்னை எதிர்க்கிறதோ அதையே தேடுகிறது-நீட்ஷே

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment