Tuesday, 21 January 2025

புத்தகம்-10


#Reading_Marathon2025
#25RM055

Book No:10/100+
Pages:-197

திருநீறுசாமி
-இமையம்

இமையம் அவர்களின் படைப்புகள் பொதுவாக மனித வாழ்வின் நுணுக்கங்களை, சமூகத்தின் அவலங்களை, மற்றும் எளிய மனிதர்களின் யதார்த்தங்களை நேர்மையாகப் பிரதிபலிக்கும்.
இந்த புத்தகத்தில் அமைந்துள்ள 10 கதைகளும் வெவ்வேறு வகைகளில் சிறந்தவையாக உள்ளன.

 முதலாவதாக திருநீறுசாமி கதை
 சமூகத்தின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை டெல்லியில் தனது மனைவி வர்ஷாவுடன் வசித்து வருகிறான். தங்களின் பிறந்த குழந்தைக்கு முடி எடுக்க தன் சொந்த கிராமமான திருநீறு சாமி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று மனைவியுடன் சொல்லிக் கொண்டிருக்கிறான். அது அவர்களுக்கு புரியவில்லை திருநீறு சாமி குறித்த விவாதங்கள் நிகழ்கிறது இறுதியில் என்ன ஆனது என்பது கதை. கிராமத்து மனிதர்களின் நம்பிக்கையும் நகரத்து மனிதர்களின் எள்ளல்களும் தராசில் வைத்து எடை போட்டு வைப்பதுபோல் கதை நகர்கிறது.

குழந்தை பேரு இல்லாத சங்கீதாவுக்கும் அவரின் கணவர் அசோக்கும் இடையே நடக்கும் மனப்போர் தான் சண்டையாக அடிக்கடி வெடிக்கிறது. இதில் இருவரின் நியாயங்களும் சமூகத்தில் கேள்விகளுக்கு பயந்து ,இவர்களின் உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது அதனால் கணவரின் தாழ்வு மனப்பான்மை அதிகமாகி இன்னும் இன்னும் அந்த விரிசல் தொடர்கிறது. சங்கீதா ஒரு இடத்தில் சொல்கிறாள் "வாழ்க்கை என்பது இதுதான் போல, கர்ப்பப்பை பிரச்சனன்னாளும் பொம்பள தான் சாக வேண்டி இருக்கு ,விந்தணுவில் பிரச்சனைனாளும் பொம்பள தான் சாக வேண்டி இருக்கிறது" என்று சொல்லி அழுகிறாள்.

கல்லூரி மாணவியான சாராவுக்கு ஆசை வார்த்தை காட்டி காதலில் விழுச்செய்யும் அந்த கல்லூரியில் விரிவுரையாளர் செந்தூரப் பாண்டியன் அவளை காதலிக்கிறார். இது அவரின் மனைவிக்கு தெரிய வர சாராவை வீட்டுக்கு வந்து திட்டுகிறாள். அவமானம் அடையும் சாரா என்ன முடிவு எடுத்தாள், இதற்கு ஒத்துழைக்காததால் சாராவுக்கு செந்தூர்பாண்டியன் செய்த கீழ்த்தரமான விஷயம் அவளை வாழ்க்கையின் எல்லைக்கு கொண்டு போய் தள்ளுகிறது. கதையைப் படித்து முடிக்கும்போது புத்தகத்தை மூடி வைத்து கொஞ்சம் கனமான மனதை இலகுவாக்கிக் கொண்டுதான் அடுத்த கதையை படிக்க முடிகிறது .இமையத்தின் சொற்களுக்கு மட்டுமே உள்ள ரகசியம் இது தான்.
 வார்த்தைகளில் தனது அத்தனை கணத்தையும் நம் மீது இறக்கி வைத்து விடுவார்.

கொல்லிமலை சாமி கதையில் கொல்லிமலை சித்தரை தேடிச் செல்லும் சிவகுமார் அங்கு அந்த சாமியாராய் இருக்கும் அவனுடைய இளமைப் பருவத்தில் பழகிய ஜோதியை காண்கிறான். நான் கடவுள் ஆர்யா போல எவ்வளவு தான் தன்னுடைய இளமைப் பருவ நினைவுகளை சொன்னாலும் ஜோதி முக்தி அடைந்தவள் போல் பேசுகிறாள். ஜோதிக்கு நடந்த விஷயம் என்ன? எவ்வாறு அவள் சாமியாராக ஆனாள்? என்பதை இயல்பு மாறாமல் இவ்வாரெல்லாம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்தால் என்ன செய்வது என்று யோசனையில் அந்த கதையை படித்து முடிக்க வேண்டி உள்ளது.

சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை வார்த்தை வடிவமாக்குவதிலும், கற்பனைக் கதாபாத்திரங்களை கதை வழியே கொண்டுவருவதிலும் வாசகர்களின் மனங்களில் ஆழப் பதிய வைக்கும் விதத்தில் அமைந்தவை தான் பிணத்துக்கு சொந்தக்காரி கதை .அவசர பிரிவில் இருக்கும் ராமன் இறந்து விடுகிறான். அவர் வயதானவர் ஓய்வு பெற்றவர். அவர் இறந்துவிட்ட செய்தியை உடன் இருப்பவருக்கு தெரிவிக்க நர்ஸ் அழைக்கிறார். அப்போது மீனாட்சி ஓடி வருகிறாள். ஆனால் அவள் ராமனின் வீட்டு வேலைக்காரி. ராமனின் பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். அவரின் அக்கா மட்டுமே சென்னையில் உள்ளார். இப்போது அந்த பிணத்தை யார் வாங்குவது? என்ன நடந்தது? மனிதநேயத்துடன் செயல்படும் மக்கள் இந்த பூமியில் உள்ளதுபோல் இக்கதை நமக்கு காட்டுகிறது.

மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், சமூகத்தின் மறைமுகங்கள், மற்றும் மனிதநேயத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம். இமையம் அவர்களின் எழுத்து பாணி, வாசகர்களை ஆழமாகச் சிந்திக்க வைக்கும் தன்மை கொண்டது.
ஆண்டவரின் கிருபை கதையும் அந்த வகையில் தான் நாளை கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு தயாராக காத்திருக்கும் சுலோச்சனா அவனின் தாய் கணவன் விக்டர் ஆகியோர் மூலம் அந்த கதையின் பின்னணி நமக்குச் சொல்லப்படுகிறது குழந்தை பெயர் வைக்காத சுலோச்சனாதீங்க கடந்த காலம் மிகவும் கசப்பானது அந்த கசப்பானது எல்லாம் இன்று மேலும் கசப்பாக்கம் வண்ணம் ஒரு செயல் நடைபெற உள்ளது அதனை அவர் எவ்வாறு எடுத்துக் கொண்டார் சமூகம் தரும் அழுத்தம் எவ்வாறெல்லாம் அவளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. 
பொம்பளைங்கறது கர்ப்பப்பை தான். அதுவே செத்துப் போய் இருந்தா அப்புறம் என்ன பொம்பள? புடவை ஜாக்கெட் போட்டுட்டா மட்டும் பொம்பளை ஆயிட முடியாது' என்று விக்டரின் அம்மா தேள் கொடுக்கு கொட்டுவது போல் சொன்னது அவள் நினைத்து நினைத்து அழுகிறாள் இறுதியில் என்ன ஆனது என்பது கதை.

 கோபத்தை அதிகாரத்தை பார்வையில் மட்டும் தான் காட்டுவார்கள் உயர் அதிகாரிகள். அதிகாரத்தின் முன்பு நாம் எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல எஸ் சார் எனும் கதை. கவர்னர் மாளிகையில் சந்தித்துக் கொள்ளும் டிஜிபியும் தலைமைச் செயலாளரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும்போது கவர்னரிடமிருந்து டிஜிபிக்கு அழைப்பு வருகிறது. கவர்னர் பட்டமளிப்பு விழாவுக்கு செல்லும் போது காரின் குறுக்கே மாடு வந்ததால் கார் நின்று சென்றதாக புகார் சொல்கிறார். இதற்கு டிஜிபி தகுந்த விளக்கம் கொடுத்தும் அதிகாரத்தின் முன் என்ன ஆனது என்பதுதான் இக்கதை. அழகிரி சாமியின் அதிகாரியின் நாய் எனும் கதை தான் நினைவுக்கு வருகிறது இறுதியில் பாதிக்கப்படுவது கடைநிலை ஊழியர்கள் தான் என்பதையும் ஆசிரியர் சொல்கிறார்.

மேற்கோளாக மாமல்லபுரத்தில் மோடியும் சீன அதிபரும் கலந்து கொண்ட சந்திப்பில் நாய் ஒன்று சென்றதால் என்ன ஆனது என்பதையும் இச்சிறுகதையில் நகைச்சுவை தகுந்த விளக்கியுள்ளார்.

"எல்லா இடத்திலும் டார்ச்சர் இருக்கத்தான் செய்கிறது மனுஷன் ஆகாயத்தில் வாழ முடியாது மண்ணுல தான் வாழ முடியும். டார்ச்சர் இல்லாட்டியும் வாழ முடியாது தங்கம்" என்று 'வீட்டை எரிக்கும் விளக்கு' கதையில் ஆய்வியல் மாணவியாக இருக்கும் பூங்குழலி என்ன என்ன இடர்களை எல்லாம் சந்திக்கிறார் என்பதை கதையில் தெளிவாக சொல்லி இருப்பார். மேலதிகமாக 
"நீ எதை பெருசு என்று நினைக்கிறாயோ அது பெருசு. எத சிறுசுன்ன நினைக்கிறயோ அது சிறுசு. நேத்து இருந்த மனசு இன்னைக்கு உன்கிட்ட இல்ல, இன்னைக்கு இருக்கிற மனசு நாளைக்கு உன்கிட்ட இருக்காது. அதுதான் உனக்கு பிரச்சனை படிப்பு என்பதை வெறும் புத்தகத்தில் மட்டும் படிக்கிறது இல்லை. பக்கத்தில் இருக்கிற மனுஷங்களையும் படிக்கிறது தான் படிப்பு .புரிஞ்சுதா என்று கேட்டார் பூங்குழலிக்கு போதிமர நிழலில் கிடைத்த உபதேசம் போல தோன்றுகிறது.

கதைகள் யாவும் படிக்க படிக்க அடுத்து என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆவல் தான் உண்டாக்கிறது.குறுநாவல் போல் இருந்தாலும் சிறுகதைகள் ஆழமான கருத்தினை உள்ளடக்கத்துடன் சொல்லியுள்ளது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment