Friday, 17 January 2025

அருள் மெர்வின்

விரகறி பொருந

தமிழில் என்னை மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் இதுதான். சினிமாப்படத் தலைப்புகளை வைத்துகூட சங்க இலக்கியங்களைப் புரிந்து கொள்ளலாம். சங்க காலத் தமிழுக்கும் இப்போதைய தமிழுக்கும் நூல் அறுபடாத தொடர்பு உள்ளது. நாம் பெரும்பாலும் இழந்திருப்பது அந்தகாலச் சொற்களைதான் (vocabulary). உதாரணமாக, ‘விரகறி பொருந’  என்ற சொற்றொடர். பொருநராற்றுப்படையில் வருவது. எடுத்த எடுப்பில் ஏதோ ஆப்பிரிக்க வார்த்தைகள் போல இருக்கும். 

‘துப்பறிவாளன்’ விஷால் படம். ‘அறிவாளி’ நான் அந்த காலத்தில் டிடியில் பார்த்த சிவாஜி படம். இந்த ‘வாளன்’, ‘வாளி’ என்று முடியும் தமிழ் வார்த்தைகள் ஒருவரின் நிபுணத்துவத்தை (expertise) குறிக்கும் வார்த்தைகள் என்பதை உணர்ந்து கொள்ள X-தளத்தில் ஒரு ஃபாலோவரை வைத்துக்கொண்டு பின்னூட்டம் இடுபவர்கள் அளவு மூளையே போதுமானது. அந்த காலத்தில் வாள் வீசுவதில் சிறந்தவர்களை ‘வாளி’ அல்லது ‘வாளன்’ என்றார்கள். பரிபாடலில் உதாரணங்கள் உள்ளன. பிற்காலத்தில் எதிலும் சிறந்ததைச் செய்பவர்களுக்கு அது ஒட்டிக்கொண்டது. அறிவில் சிறந்தவன் அறிவாளி. துப்பறிவதில் சிறந்தவன் துப்பறிவாளன். 

நான் இங்கே எழுதவந்தது அதற்கு முன்னே வந்த ‘அறி’ என்ற சொல். துப்பு+’அறி’+வாளன். ‘அறி’ என்றால் என்ன அர்த்தம் என்று விளக்க அவசியமில்லை. விளக்கும் அளவு ‘அறி’வுமில்லை.

விரகு+அறி+பொருந - நமக்கு ‘விரகு’க்கும் அர்த்தம் தெரியாது, ‘பொருந’க்கும் அர்த்தம் தெரியாது. 

திரைப்படத்தலைப்புகளில்  ‘தலைவர்’ அல்லது ‘தலைவன்’ என்பதை ‘தலைவா’ என்று இழுத்தார்கள். படையப்பனை படையப்பா, வீரனை வீரா என்றெல்லாம் இழுத்தார்கள். சங்க காலத்திலும் தொழிற்பெயர்களை இப்படி இழுத்திருக்கிறார்கள். பெரும்பாலும், தளை தட்டாமல் இருக்க அல்லது அப்படியொரு பழக்கமும் அந்த காலத்தில் இருந்திருக்கலாம். பொருநனை ‘பொருந’ என்று கூப்பிட்டார்கள், அல்லது இழுத்தார்கள். அந்த காலத்தில் சொல்லவந்ததை துணைக்கால் போட்டு முட்டுக்கொடுத்து முடிப்பது போன்ற வேலையெல்லாம் கிடையாது. தேவையும் அல்ல. ‘பொருந’ என்று பாகவதர் போல இழுத்துப் பாருங்கள். ‘பொருநா’ என்றே படையப்பா போல முடியும். 

யார் இந்த பொருநன்? சிங்காரவேலன் கமல் போல எல்லா வாத்தியமும் வாசிப்பவர். பொருநர் பற்றிய ஆராய்ச்சியை செய்தவர்கள், செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதை தமிழ் வரலாற்று அறிஞர்களிடம் விட்டுவிடுவோம்.

‘விரகு’ என்றால் knack. பிக்பாஸில் ஆளாளுக்கு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார்கள், ஸ்டாராடஜி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதைக் குறிக்கும் வார்த்தை. தமிழில் வழக்கொழிந்துவிட்ட வார்த்தை. ‘தந்திரம்’ என்றும் அர்த்தம் சொல்லலாம். 

இப்போது சொல்லிப்பாருங்கள் - ‘விரகறி பொருந’!

தந்திரம் அறிந்த பொருநனே!

சங்கத் தமிழ் அச்சு இயந்திரத்தில் உள்ள அச்சு போல. அதில் பழைய வார்த்தைகளுக்குப் பதிலாக இன்று புழங்கும் வார்த்தைகளைப் போட்டால் பல செய்யுள்கள் சட்டெனப் புரிந்துவிடும், பெரும்பாலும். 

பொறுமை இருந்தால் பொருநராற்றுப்படையை வாசித்துப்பாருங்கள். சங்க இலக்கியத்தில் இவ்வளவு நகைச்சுவை உணர்வா என்று வியந்து போவீர்கள். 

தமிழ் நாட்டில் அந்தக் காலத்தில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை. ஊர் ஊருக்கு ஒரு விழா எடுத்திருக்கிறார்கள். சாப்பாடு, சரக்கு எல்லாம் ஃப்ரீ. இதை என்ஜாய் பண்ணவே வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பலபேர் க்ரூப் க்ரூப்பாகச் சுற்றியிருக்கிறார்கள். எங்கே ஒரே ஊரில் டேரா போட்டுவிட்டால் சாப்பாட்டுக்கு அலைபவன் என்று நினைத்து விடுவார்களோ என்று எண்ணி, ஒவ்வொரு டைமுக்கும் ஒவ்வொரு ஊராக மாறிக்கொண்டிருந்தான் ஒரு தந்திரக்கார வாத்தியக்காரன், அதாவது விரகறி பொருநன்.

அவனிடம், “அப்படியெல்லாம் அலைய வேண்டாம். நான் சொல்லும் இடத்தில் டேரா போடு. நீயே போறேன் என்று சொன்னாலும் தடுத்து நிறுத்தி சாப்பாடும், சரக்கும் கொடுக்கும் ஒரு மகராசன் இருக்கான்” என்று ட்ராவல் டிப்ஸ் கொடுக்கும் பாடல்தான் பொருநராற்றுப்படை.

“விருந்து வீட்டுக்குப் போன இடத்தில், நிலத்தை ஏர் உழுவது போல பற்களால் மட்டன் கறியை உழுதோம். அதன்பின் வயிறு முட்ட சரக்கடித்தோம். Hang over தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. பல மாதம் இப்படியே உண்டு குடித்து போரடித்துப் புறப்பட்டோம். ‘அதற்குள் கிளம்பி விட்டீர்களா’ என்று எங்களுக்கு யானையும், தேரும் கொடுத்து அனுப்பினான் அந்த மகராசன்”, என்கிறது அந்த பாடல். யார் இந்த மகராசன்?

இன்னும் பலப்பல சுவாரசியங்கள் உள்ள பாடல் அது. தமிழின் மிகப் பழமையான பாடல் என கருதப்படுவது (சமஸ்கிருத கலப்பு ஒரு சில வார்த்தைகளே). ஒரு பெண் புலவர் எழுதியது. ‘அல்குல்’-ஐ ஓர் அழகான உவமையைச் சொல்லி உபயோகித்த பாடல். இன்று அந்த உவமையைச் சொன்னால் ஆபாசம் என்று கேஸ் போட்டுவிடும் உன்னத நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.

சரி, மேலும் டென்ஷனாகாமல் முடிவுரைக்கு வந்துவிடலாம். 

Hang over-க்கு சங்கத் தமிழில் உள்ள வார்த்தை, ‘அனந்தர் நடுக்கம்’. மேற்குறிப்பிட்ட பாடலில் வரும் அந்த மகராசன் யாரென்றால் கல்லணை கட்டிய கரிகாலன்.

No comments:

Post a Comment