Reading_Marathon2025
#25RM055
Book No:5/100+
Pages:-160
கைகாட்டி மரம்
-மினிமீன்ஸ்
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம்.குழந்தைகளை மையப்படுத்தி அவர்கள் வாசிக்கும் வகையில் இருந்தாலும் பெரியவர்களும் வாசிக்கும் வகையில் ஒரு பக்கத்தில் அமைந்த 107 கதைகள் உள்ளன. பாமரனுக்குச் சொன்னால் பண்டிதனும் புரிந்து கொள்வான் எனும் நோக்கில் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதைகளில் பெரியவர்களான நமக்கும் உணர்த்தும் பேருண்மைகள் இந்த கதைகளின் வாயிலாக எழுதப்பட்டுள்ளன. பொதுவாக கைகாட்டி மரம் என்பது ஊருக்குள் செல்லாது.. ஆனால் ஊருக்குள் செல்ல வழி காட்டும். அதே போல் இந்த கதைகளில் வரும் கருத்துகள் யாவும் அறம் சார்ந்த, உளவியல் சார்ந்த, நீதி சார்ந்த எளிமையான உண்மைகளை மனதில் பதியும்படி நமக்குச் செய்கிறது.
அரசனிடம் மந்திரியாய் இருந்த ஒருவர் தவறு செய்துவிட அவரை தண்டிக்கும் நோக்கில் நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் தூக்கி வீச ஆணையிட்டார். ஆனால் மந்திரி பத்து நாள் அவகாசம் கேட்டு அந்த நாயுடன் சகஜமாகி கொண்டார். தண்டனை நிறைவேற்றும் போது அந்த நாய்கள் மந்திரியை கடிக்க வில்லை. அரசனுக்கு உண்மையை புரிய வைக்க மந்திரி இதன் மூலம் முயல அரசரோ மந்திரியை முதலைகள் இருக்கும் குளத்தில் எறிய சொன்னார். நிர்வாகம் உன்னை தோக்கணும்னு முடிவு பண்ணினால் அதில் மாற்றம் இருக்காது கண்ணு என கார்ப்பரேட் உலகின் நிதர்சன வார்த்தைகளை நீதி கதைகளின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
ஒரு பக்கக் கதைகள் சுருக்கமானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும். கதையின் திருப்பம் ஒரு சிறிய வார்த்தைகளிலும் வெளிப்படலாம். உண்மையின் மறுபக்கம் கதையில் வரும் சிறுவன் தனது இரட்டை காலணிகளை தொலைத்து விட்டதால் அதில் ஒன்றை மட்டும் அணிந்து வந்தார்.. அவரைப் பார்த்த பெரியவர் ஏன் ஒன்றை மட்டும் அணிந்து இருக்கிறாய்? என்று கேட்டபோது என்னால் ஒரு காலணியை மட்டும் தான் கண்டுபிடிக்க முடிந்தது என்று சொன்னவுடன் ஒற்றை வார்த்தையில் ஒரு பெரிய உண்மை ஒளிந்திருப்பதை அறியலாம்.
சுருக்கமான தோரணமாய் குறுகியளவில் கதைகள் 20-20 விளையாட்டு போல சொல்லும் போது கதையின் மையமும் நீதியும் சரியான விதத்தில் இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு பிரச்சினை வரும் போது நாம் ஒதுங்கினால், நம் அக்கறையின்மைக்கு நாமும் தான் ஏதோ ஒரு வழியில் பதில் சொல்ல வேண்டி வருகிறது என்பதை எலிபொறி கதை என் வாயிலாக சொல்கிறார்.
கன மழை பெய்யும் சமயம் ஐந்து பேர் சாலையில் நடந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மட்டும் நனையவில்லையே ஏன்? என்று கேட்டார். அதற்கான பதிலை புத்தகம் படித்து அறிந்து கொள்ளலாம். இந்த கோணத்தில் நாம் சிந்திக்கவில்லையே என்று
வலுப்படுத்தப்பட்ட மையக் கருத்தினை வைத்து வார்த்தை ஜாலத்தில் வலை பின்னி இருக்கிறார்.
எடுத்துக்கொண்ட தலைப்பில் ஒரே ஒரு முக்கிய விஷயம்..
கதையின் அடிப்படையில் கட்டமைத்து கருத்துகளை கதை நெடுக மறையாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் சுவாரசியம் குன்றாமல் இருக்கும். பல புத்தகங்கள் கதைகளை தற்காலத்துக்கு ஏற்ற வகையில் தன்னுடைய கருத்தினையும் சேர்த்துச் செல்லும் போது கதைகள் யாவும் புதிய வடிவத்தில் மிளிர்கின்றன.
சிறப்பான தொடக்கம் மற்றும் முடிவு
வாசகர்களை ஈர்க்கும் வகையில் கதை தொடங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் பெண் புத்தி கதையில் அடடே மசாலாவை ஏன் வாங்க விரும்புகிறீர்கள்?எனும் கேள்விக்கு சரியான பதில் சொல்பவருக்கு வைர நெக்லஸ் பரிசு என அறிவிக்கிறார்கள். அதற்கு அந்தப் பெண்மணி எழுதிய பதில் தான் சிறந்த பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நேர்மைக்கு பரிசு கொடுக்கிறார்கள்.
பெண்புத்தி முன்புத்தி என்பதற்கான பதில் அது.. பதில் புத்தகத்தில்.
முடிவு சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சிந்திக்கவைக்கும் விதத்திலும் அமைக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் நல்ல மனிதன் கதை.
இறப்பை பற்றிய இக்கதையில் இறுதியாக உண்மையில் இறப்பு என்பது உங்களைப் பற்றிய நினைவுகளை கடைசி மனிதன் மறப்பது தான். அதனால் இறந்த பின்னும் வாழ வேண்டும் எனில் நல்ல மனிதனாய் வாழுங்கள் என்று சொல்வதாக கதை முடிகிறது.
ஒரு பக்கக் கதையில் இருக்கும் முக்கிய சவால் கடுமையான சொல் சிக்கனம். சொல்லவரும் கருத்தினை நீட்டி முழக்காமல் சுருக்கமாய் சொல்ல வேண்டும். புத்த மத கதையில் நீங்கள் எவ்வளவு காலம் வாழ விரும்புகிறீர்கள்? என புத்தரிடம் கேட்டபோது அவர் தயங்காமல் 80 வருடம் என்கிறார். சீடர்களில் ஒருவன் ஏன் ஆயிரம் வருடங்கள் கேட்கவில்லை என கேட்கும் போது.. ஆனந்தா நான் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் மக்கள் ஞானம் வளர்ப்பதை விட.. தங்கள் ஆயுளை எப்படி நீட்டிப்பது என்பதில் தான் அக்கறை காட்டுவார்கள் என்ற புத்தர் சொல்வதாக மினிமீன்ஸ் சொல்வது புத்தரே நேரில் வந்து சொல்வது போல் இருந்தது.
மிகத் தேவையான வார்த்தைகளே பயன்படுத்த வேண்டும் எனும் நோக்கில்.. 'கூட்டணி' கதையில் இறுதியில் "தொலைந்து போவதை பற்றி சிறுவர்கள் பேசும்போது, துணைக்கு ஒருவர் இருக்கும் போது நாம் ஒருபோதும் தொலைந்து போவதில்லை என்று தத்துவம் சொல்கிறார்.
விவரிப்புகள் மிகக் குறைவாகவும், அழுத்தமாகவும் இருக்க வேண்டும் என்னும் வகையில் 'கண்ணாடி' கதை தினசரி ஒருவர் கண்ணாடி பார்க்கிறார். ஏன் அழகை ரசிக்கவா? என்று கேட்டதற்கு ,அதில் ஒரு உருவம் எனக்கு தெரியும். அந்த உருவத்தில் எனக்கு கிடைத்த பெருமையை நான் பார்ப்பேன். இந்தப் பெருமையை தலையில் ஏற்றிக் கொண்டால் அடையப் போகும் வீழ்ச்சியையும் அதில் காண்பேன். ஆகவே இந்த உண்மையை புரிந்து கொண்டு நான் இயல்பு நிலைக்குத் திரும்புவேன் என்று சொல்வது மனதை தொடும் விதத்தில் இருந்தது. தினசரி கண்ணாடி பார்க்கும்போது நானும் இதையே கடைப்பிடிப்பேன்.
ஒரு சிறிய திருப்பம் அல்லது எதிர்பாராத முடிவு இருப்பது கதையை சுவாரஸ்யமாக்கும் என்னும் வார்த்தைகளுக்கு உயிர் விட்டும் வகையில் மகிழ்ச்சி எனும் கதையில் மனைவி எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார் என சொல்லி இருப்பார்.
படிப்பதற்கும் நினைவில் நிறைவதற்கும் எளிதானதாக "சாலச் சிறந்தது" கதையில் தெரிந்ததை பற்றி பேசுவதும், தெரியாததை பற்றி மௌனம் காப்பதும் தான் சாலச் சிறந்தது என்று முத்தாய்ப்பாய் சொல்லியிருந்தார்.
படிப்பவர்கள் உடனடியாகச் செரித்துக் கொள்ளும் விதமாக கதைகள் அமைந்திருக்கிறது.
சில நேரங்களில் ஒரு முக்கியக் கற்பனை அல்லது அனுபவத்தை மையமாகக் கொண்டிருக்கிறது.
இது போன்ற சிறப்புகளுடன் தனித்துவத்துவமாகவும்
படிப்பதற்கு இலகுவாகவும் புத்தகம் அமைந்துள்ளது. நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. மேடையில் உரையாற்றவும் பயன்பட போகிறது.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment