Saturday, 23 July 2016

முடிவிலி-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு)


பரபரப்பான மாநகரச்சாலையிலிருந்து உள்ளொடுங்கிய கட்டடத்தின் வாயிற் படியில் அமர்ந்திருந்தோம். பக்கவாட்டுப் பார்வைக்குச் சாலையும் அதில் விரையும் வாகனங்களும் தெரிந்தன. ஒலிகளைப் பிரித்தறிவது சாத்தியமில்லை என்றாலும், வாகனங்கள் தெளிவற்ற ஒலித் தொகுப்பாகக் கவனத்துள் வந்து, கணநேரக் காட்சியாக நிறைந்து காணாமல்போயின. இன்னமும் போய்க்கொண்டுதான் இருக்கின்றன என்பதை ஓசை தெரிவித்தபடி இருந்தது. இடைவெளியேயின்றி வாகன ஒலிகள் கேட்டதால் ஓடுவது வெவ்வேறு வண்டிகள் அல்ல, இடத்தை விட்டு நகராது - ஓய்வே இன்றி இயங்கும் - முடுக்கப்பட்ட ஒரே ராட்சத வண்டி என்கிற பிரமை தட்டியது.

‘இடம்’ என்பது தனித்துவமான இருப்பு கொண்டது அல்ல, காலத்திலல்லாது வேறெங்கும் அது இருக்க முடியாது என்ற அறிவியல் கூற்றைச் சுற்றி நகர்ந்திருந்தது எங்கள் உரையாடல். ஆமாம், எதுவுமே ‘இவ்வேளை’யில்தான் இருந்தாக வேண்டும். எனது இவ்வேளையும் பிறிதின் இவ்வேளையும் இடைக்கிடும் தருணத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் நிகழ்கணமாகிறோம்.

“நாம் இருவரும் அமர்ந்திருப்பது படிக் கட்டிலா, அனந்தத்திலா என்பது முக்கியமான கேள்வி சார். படிக்கட்டில் என்பது ஓர் அனுபவத்தின் விடை. மற்றது, அனந்தத்தில் என்பது. வேறொரு புதிர் அனுபவத்தின் அழுத்தம் கொண்டது இது. ஆனால், நடை முறைப் பொருத்தம் அதிகம் உள்ளது இரண்டாவது பதில்தான்” என்கிற மாதிரி ஏதோ சொன்னேன். உடனிருந்தவர் பதறி விட்டார்.

“அனந்தம் என்பதெல்லாம் மிகவும் கனமான வார்த்தை. இப்படிப் போகிறபோக்கில் வீசக்கூடாது.”

அமைதியாகக் கேட்டுக்கொண்டேன். அவர் மூத்த தலைமுறைக் கவிஞர். சுமார் இருபது வயது மூத்தவர். தமிழ்க்கவிதையில் தமக்கென்று ஒரு கூறுமுறை, தனித்துவமான பார்வை கொண்டவர். என் அபிமானத்துக்கு, மரியாதைக்கு உரிய முன்னோடி.

Infinity என்ற ஆங்கிலச் சொல்லைத்தான் பயன்படுத்தினேன். அநந்தம் என்ற முடிவிலி ஒரு சொல்லாக முன்வைக்கும் அனுபவம் எப்போதுமே வருங்காலத்தை யொட்டிப் பொருள் கொள்ளப்படுகிறது. பெரியவர் பதற்றப்பட்டதும் அதனால்தான்.

உரையாடல் ஒன்றில் போர்ஹே, eternityயும் infinityயும் வேறு வேறு என்கிறார்! முடிவின்மையே முடிவற்ற தொடர் தன்மை, இயங்கியல் தன்மை என்றும், முடிவிலி என்பதை முக்காலத்தையும் உள்ளடக்கிய பெருந்தளம், நிலையான அனுபவம் என்றும் பொருள் கொள்ளலாமா!

கடந்த காலத்தை அளவீடாகக் கொண்டால், இந்தக் கணம் என்பதே முந்தைய கணத்தின் முடிவிலியிலிருந்து பிதுங்கி இறங்கியதுதானே! முடிவிலியின் மடுவிலிருந்து தீராத் தாரையாகப் பீய்ச்சி இறங்குவதுதான் காலத்தின் நிகழ்முறை அல்லவா. ராஜராஜ சோழனின், பாரதி யாரின், நாற்பது வருடத்துக்கு முன்னால் காலமான என் தகப்பனாரின், அன்று காலை விடைகொடுத்து அனுப்பிய மனைவியின், படிக்கட்டில் அமர நாங்கள் சென்றபொழுதின், முடிவிலியில்தானே நாங்கள் அமர்ந்திருந்தோம்!

எதிர்காலத்தின் ஒவ்வொரு கணுவும் முடிவிலியின் அங்கம் எனும் பட்சத்தில் இறந்தகாலத்தின் கணுக்களும் அதன் அங்கம்தானே. காலம் என்ற பேரமைப்பை ஓர் அண்டரண்டப் பட்சி என உருவகிக்கலாம். கடந்த காலம், எதிர்காலம் என்ற இருபக்க இறக்கைகள் கொண்ட பறவை. முன்னோக்கியோ, பின்னோக்கித் திரும்பியோ பயணம் மேற்கொள்வதற்கு இறக்கைகள் பயன்படும். ஆனால், உடற்பகுதியாகிய, உயிர்மையமான, நிலைத்த நடுத்தண்டுதான் அனுபவத்தை நிகழ்வுணர்வாகத் துய்ப்பது. அதாவது நிகழ்காலம் எனத் திகழ்வது.

உரைநடைப் புனைவுக்கும் கவிதைக்குமான பெரும் வேறுபாடு என்று, காலம் பற்றிய மேற்சொன்ன கருத்தாக்கத்தைச் சொல்லலாம். எப்போதுமே, உரைநடை நிகழ்ந்து முடிந்த ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. அதை உன்னிப்பாகக் கவனித்து வந்தவர், நிகழ்வு முடிந்த மாத்திரத்தில் உங்களிடம் எடுத்துரைக்க ஆரம்பிக்கிறார். யாருக்கோ எப்போதோ நிகழ்ந்து முடிந்த ஒன்றைக் கேட்கிறோம் என்ற ஆழ்மன நம்பிக்கையுடனே புனை கதையை வாசிக்கத் தொடங்குகிறீர்கள். நிகழ்கால, தன்மை ஒருமை விவரிப்புமேகூட, கதைசொல்லி அனுபவித்து முடித்த ஒரு சமாசாரம்; தற்போது உரைக்கப்படுகிறது என்ற போதும் வாசகரைவிட்டு அகலுவதேயில்லை.

ஆமாம், நிகழ்கால அலகுகளில் சொல்லப்பட்ட போதும், புனைகதை தனது கற்பித அம்சம் மாறாமலே வாசகரிடம் வந்து சேர்கிறது. அதில் இடம்பெறும் ‘நான்’ நீங்கள் அல்ல என்ற உணர்வு ஒருபோதும் உங்களுக்கு மறப்பதில்லை.

கவிதையில் நிகழ்வது அந்தக் கணத்தில் நிகழ்வது. நிகழ்கணத்துடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்திருக்கிறது கவிதை என்ற வடிவம். அதனால்தான், கவிதையில் முன்னிலையாகவும் படர்க்கையாகவும் செயல்படும் ‘நான்’ கூட, நீங்களாகவே இருக்கிறீர்கள்.

“நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்’ என்ற வசனத்தைச் செய்தியாகக் கேட்டுக்கொள்பவர் கிறிஸ்தவராக இருக்கிறார். அந்த வாக்கியத்தைத் தன்னனுபவமாக உணர்பவர் கிறிஸ்துவாகவே ஆகிறார்” என்று என்னுடன் பணிபுரிந்த கிறிஸ்தவ நண்பரொருவர் பல தடவை சொல்லியிருக்கிறார். கவிதை மொழிதலின் இயல்பு நிலையும் இதுவேதான்.

முடிவிலியின் இரண்டு எதிரெதிர் சலனங்களை, நேரெதிர் மாதிரித் தென்பட் டாலும் ஒரேவிதமாக அது இயங்கும் விதத்தை உணரத் தரும் இரண்டு கவிதைத் தருணங்களைப் பார்க்கலாம். எண்ணற்ற தடவைகள் மேற்கோள் காட்டப்பட்ட,

“அதோ அந்த வண்ணத்துப்பூச்சி
தன் கால்களில் காட்டைச் சுமந்து செல்கிறது”

என்னும் தேவதச்சனின் கவிதை வரி.

வெற்றுப் பார்வைக்கு எளிதில் புலப்படாத ஓர் இணுக்கு மகரந்தப் பொடி, கவிஞர் கண்டெடுக்கும்/ அனுபவம் கொள்ளும் நுண் தருணத்தில் சட்டென்று விசிறிப் பெருத்து மாபெரும் மரக்கூட்டமாக விரிவடைவது ஒரு மாய தரிசனம். ஒரே சமயத்தில் தர்க்கத்துக்கு உட்பட்டும், தர்க்கத்துக்கு வெகு அப்பாலும் பொருள்கொள்வது. இப்படியான பார்வையின் இன்னொரு சிறப்பம்சம். மனித மனம் மட்டுமே, தன் வசப் பட்ட, மொழி என்ற சாதனத்தின் உதவியுடன் நிகழ்த்திப் பார்க்க இயலும் காட்சி இது.

இது ஒருபக்கச் சிறகின் சலனம் என்றால் மறு சிறகின் அலையாட்டத்தை, ராஜ சுந்தரராஜனின் பின்வரும் வரிகளில் பார்க்க முடிகிறது:

நானும் என் மந்தையும்
ஒரு விதையின் நிழலில்
இளைப்பாறுகிறோம்
அது மரமாகி வளர்ந்து
நிற்கிறபடியால்.

மந்தையும் மேய்ப்பனும் நிழலாடுமளவு விரிந்த விருட்சத்தை முன்னாள் விதையாகப் பார்க்கும் மாயம், மகரந்தத்தூள் வனமாகும் விந்தைக்கு நேர்விகிதத்திலானது.

இரண்டு பார்வையிலுமே, நிகழ்காலம் என்பது நிகழ்காலம் மட்டுமேயல்ல என்று காணும் கவிமனங்களின் தரிசனம் வெளிப்பட்டிருக்கிறது. முதலாவது, அனுமானத்தின் அடிப்படையில்; இரண்டாவது, நிகழ்ந்து முடிந்ததின் அடிப்படையில். இரு கவிதைகளும் நடைமுறை வாழ்வின் காட்சிகளை, நேரடி அனுபவத்தின் பௌதிகக் கூறுகளை முன்னிறுத்தும்போது, அபூத உலகத்தையும் இதே காலக்கணக்கினுள் கொண்டுவர முனையும் கொரியக் கவிதையொன்று:

போதிசத்துவருக்கு

ஒருபோதும் மட்காத கல் தாமரை மலரில்
கால் நாட்டி அமர்ந்திருக்கிறீர்:
அதனாலேயே இவ்வுலகின்
முடிவேயற்ற காலத்தைக் கடந்துநிற்கிறீர்.
ஆஹா, எத்தனை அருகில் அமர்ந்துள்ளீர்,
ஆயினும்
மூட்டமாய்த் தெரிகிற அளவு
தொலைவில் இருக்கிறீர்.

(ஹீ- ஜின் பார்க் - 1956 கொரியப் போர்க் காலகட்டத்தில் எழுதப்பட்டது.

No comments:

Post a Comment