*தீக்குச்சி*
தீக்குச்சி
விளக்கை ஏற்றியது.
எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்.
பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான்.
"ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்? "
என்று கேட்டேன்.
'ஏற்றப்பட்டதைவிட
ஏற்றிவைத்தது
உயர்ந்ததல்லவா? ' என்றான்.
அவன் மேலும் சொன்னான்.
தீக்குச்சிதான் பிரசவிக்கிறது
விளக்கோ
வெறும் தொட்டில்.
தீக்குச்சிதான்
எழுதுகிறது.
விளக்கோ
வெறும் காகிதம்.
தீக்குச்சி
பிச்சை போடுகிறது.
விளக்கோ
வெறும் பிச்சைப் பாத்திரம்.
தீக்குச்சி
ஒரே வார்த்தையில்
பேசிவிடுகிறது.
விளக்கோ
வளவளக்கிறது.
தீக்குச்சி
ஒளிக்காகத் தன்னையே
தியாகம் செய்துகொள்கிறது.
விளக்கோ
ஒளியினால் பிழைக்கிறது.
நீங்கள்
உங்கள் தீக்குச்சிகளைக்
கொண்டாடுவதில்லை. விளக்குகளையே கொண்டாடுகிறீர்கள்.
அதனால் தான்
உங்கள் திருவிழாக்கள்
இருட்டாகவே இருக்கின்றன.
நீங்களும்
தீக்குச்சியாக இருக்க
விரும்புவதில்லை. விளக்காக இருக்கவே விரும்புகிறீர்கள்.
அதனால் தான்
சூரிய வேளையில் நீங்கள் அணைக்கப்பட்டு விடுகிறீர்கள்.
இதோ. இந்தக்
குச்சியிலிருந்து புறப்படும்
அமர ஒளியை
உங்களால்
காண முடிந்திருந்தால்
உங்கள்
ஆடம்பர விளக்குககளின்
பிரகாசத்தில்
உங்கள் கண்
குருடாயிருந்திருக்கிறது.
*கவிக்கோ அப்துல் ரகுமான்*
No comments:
Post a Comment