Saturday, 21 July 2018

சுஜாதா

கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதாவின் சில கவிதை முயற்சிகள். -------

கவிதை எழுதுகிறவர்கள் நிறையக் கிளம்பியிருக்கிறார்கள். அன்று என் நண்பரும் கவிஞருமான ‘கீகீ’யை (அவருடைய புனைபெயர்) பார்த்ததும் சரேலென்று சந்தில் மறைந்தேன். அவர் என்னைத் துரத்தி ஒரு மூலையில் மடக்கி பைக்குள்ளிருந்து ஒரு காகிதத்தை எடுத்து ஒரு நேரிசை வெண்பா எழுதியிருப்பதாகச் சொல்லி அதைக் கணையாழியில் பதிப்பிக்குமாறு சொன்னார். ஆசிரியர் கி.க. மறுத்து விட்டார். அதனால் அதை இப்பகுதியில் நுழைத்திருக்கிறேன்.

“விண்ணெடுகப் பரவி
பாரிஸ் வனிதைகள் போல்
கண்ணடிக்கும் தாரகைகளின்
கணக்கை எண்ணி வைத்த
முட்டாள் ஒருத்தர் இருக்கார்
அவர் நமக்கு எட்டாத கடவுளப்பா”
(அடிக்க வராதீர்கள். ‘கீகீ’தான் எழுதினார். நான் இல்லை.)
(டிசம்பர், 1975)

பிரபலமான ஜப்பானியக் கவிஞர் ஒருவரை Chinees கவிதை எழுதுவது எப்படி என்று கேட்டபோது அவர், “சாதாரணமாக சைனீஸ் கவிதைக்கு நான்கு வரிகள் உண்டு. முதல் வரி கவிதையைத் தொடங்குகிறது. இரண்டாம் வரி கவிதையைத் தொடர்கிறது. மூன்றாவது வரி ஒரு புதிய கருத்தை ஆரம்பிக்கிறது. நான்காவது வரி முதல் மூன்று வரிகளையும் ஒன்றுசேர்க்கிறது” என்றாராம். உதாரணம்:

“கியாட்டோவைச் சேர்ந்த சில்க் வியாபாரிக்கு இரண்டு பெண்கள்.
மூத்தவளுக்கு இருபது வயது. இளையவள் பதினெட்டு.
ஒரு படைவீரன் தன் கத்தியால் கொல்கிறான்.
இந்தப் பெண்கள் ஆண்களை தத்தம் கண்களால் கொல்கிறார்கள்.”

நாமும் ஒரு சைனீஸ் கவிதை எழுதிப் பார்க்கலாமே என்று தோன்ற:

“மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்.
மணி பார்த்தான். உட்கார்ந்தான். படுத்துக் கொண்டான்.
சென்னை விட்டுத் திருச்சி போகும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.”
(ஜனவரி, 1976)

Clerihew என்பது பிரபலமானவர்களின் பெயர்களை அமைத்து எழுதிய ஒருவித வேடிக்கைப் பாட்டு. நம் நேரிசை வெண்பாவில் இந்த மாதிரிப் பாட்டுக்களை முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.
000
வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் – உள்ள
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும்போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.
000
‘மீசா’ மறைந்து ‘எமர்ஜென்ஸி’ விட்டுப் போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் -  பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டெல்லோரும்
.................. குடிக்க வாரும்!
(ஜனவரி,1978)

சென்ற கணையாழி இதழில் இந்தப் பகுதியில் என் புனர் பிரவேசத்தை விமர்சித்து ஒரு கடிதம் வெளியாகி இருந்தது. என்னதான் ‘ராயப்பேட்டை பாலு’ என்கிற பெயருக்குள் ஒளிந்து கொண்டு, அற்ப சுத்திக்காக ஒதுங்கும் இடங்களின் சுவர்களில் காணப்படும் பிரத்தியேக பாஷையை உபயோகித்து எழுதினாலும் அந்தக் கடிதத்தை எழுதியவர், எழுத வைத்தவர் யார் யார் என்பதெல்லாம் சுலபமாக எனக்குத் தெரிந்து விடுகிறது. சிரிப்புத்தான் வருகிறது.

புதுக்கவிதை தற்போது ஒரு rash போல நம்மிடம் பரவி இருக்கிறது. “அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் குரங்கைச் சின்னமாய்க் கொடுத்தால் என்ன” என்கிற வாக்கியத்தை ஐந்தாகப் பிரித்து கவிதையாகப் பதிப்பித்திருந்தார்கள்.
என்னய்யா விளையாடுகிறீர்களா?

நான் புதுக்கவிதையை எதிர்ப்பவனில்லை.... யாப்புடன் எழுதுவது மிகச் சுலபமான விஷயம். எதை வேண்டுமானாலும் யாப்புடன் சொல்லலாம். பார்க்கலாமா?

“எல்லோரும் பாட்டெழுத நான் ஏன் விதிவிலக்கா?
எல்லோரும் என்பதுடன் (யோசி) எதுகைக்கு
எல்லோரா! எப்படி? ஈஸி, கவிஎழுத
வல்லோரில் நான் ஒருவன் என்பதைக் காட்ட
அடுத்த கவிதைக்கு வந்துவிட்டேன் மேலே
தொடுத்து அமைப்பதில் தொந்தரவு இல்லை
படுத்துக் களைத்திருக்கும் பத்மாவைப் பாச்சா
கடித்த கதைபற்றிச் சொல்ல நினைத்தவன்
‘பாயை விரித்துப் படுத்தவளைப் பாச்சா
வாயைத் திறந்து....’ வரைக்கும் வந்துவிட்டேன்
மாயச் சுழலிது, மேலே முடிச்சவிழ்க்க
ராயப்பேட்டை பாலு! வா!”

இஃது பன்னிரண்டடியான் வந்த பல்விகற்பப் பஃறொடை வெண்பா.
(அக்டோபர், 1972)

No comments:

Post a Comment