Saturday, 21 July 2018

அபிலாஷ்

வாசிப்பு ஏன் ஆறுதல் தருகிறது?
-அபிலாஷ்

    டி.வி பார்ப்பது, பேஸ்புக்கை புரட்டுவது, அரட்டை அடிப்பதை விட மிக அதிகமான கவனமும் மன உழைப்பும், உணர்வுகளின் குவிப்பும் வாசிப்புக்கு தேவைப்படுகிறது. அதாவது வாசிப்பு ஒரு ஓய்வு செயல் அல்ல, அது மூளையையும் உணர்வுகளையும் அதிகமாய் தூண்டும் ஒரு வேலை. ஆனால் வாசிப்பின் ஒரு முக்கிய தன்மை வேறு பொழுதுபோக்குகளுக்கு இல்லை. அது தனிமை.

தனிமை என்றால் பௌதிகமான தனிமை அல்ல. அகத்தனிமை. வேறு பொழுதுபோக்குகளின் போது ஒன்று மனிதர்களோ, குரல்களோ, பிம்பங்களோ நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள். வாசிப்பு மட்டுமே யாருமில்லாத பிரதேசத்துக்கு நம்மை அழைத்துப் போகிறது. எல்லாரையும் விட்டு எல்லாவற்றையும் விட்டு கொஞ்ச நேரம் தனித்திருக்க மனம் ஏங்குகிறது. புத்தகம் மட்டுமே எனக்கு அதற்கு உதவுகிறது.
நமக்கு எந்தளவு மனிதர்களோடு இருப்பது அவசியமோ அந்தளவு மனிதர்கள் இல்லாது இருப்பது தேவை. நமக்கு பேசிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால் பேச்சு ஒரு கட்டத்தில் அலுப்படைய வைக்கிறது. களைத்து ஒதுங்க நினைக்கிறோம். அப்போது தனிமை அவசியமாகிறது. ஆனால் தனிமை என்பதும் நாம் நம்முடன் நிகழ்த்தும் ஒரு பேச்சு தானே. அந்த பேச்சின் சொற்கள் நமக்குள் மலையாக குவியும் போது நாம் தனிமையில் இருந்து வெளியே வருகிறோம். யாரிடமாவது உரையாட தவிக்கிறோம். மிகவும் உக்கிரமாய் தீவிரமாய் தீக்கங்குகளைப் போல் சொற்களை சமூகத்துக்கு கொண்டு வருகிறோம்.
வாசிப்பது ஒரு விதத்தில் மொழியில் இருந்து தப்பிப்பதற்கான உத்தி தான். வெளியே பேசும் மொழியில் இருந்து தப்பித்து உள்மொழிக்கு செல்வது. ஆனால் மனிதர்கள் முழுக்க மொழியில் இருந்து தப்பிக்கவே இயலாது.

சாருவின் நாவல் ஒன்றில் கதைசொல்லி ஒரு களேபரமான கொண்டாட்டத்தில் இருப்பான். அவனைச் சுற்றி நண்பர்கள் கேளிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். கதைசொல்லி சட்டென அவர்களுடன் தான் இல்லை என உணர்வான். அந்த கூட்டத்தின் நடுவே தான் மிகவும் தனியாய் இருப்பதாய் சொல்வான். அவனுக்கு அந்த தனிமை தான் வசதிப்படும். அவனால் கூட்டத்திற்கு வெளியிலும் செல்ல முடியாது. உள்ளுக்குள்ளும் சிறைப்பட முடியாது. மனிதனின் ஆகப்பெரும் அவஸ்தையே இது தான்.

அடிக்கடி பேஸ்புக்கில் இருந்து டி-ஆக்டிவேட் செய்து துறவறம் போகிற நண்பர்களை எனக்குத் தெரியும். பாதி வழியில் எப்படியும் திரும்ப வந்து விடுவார்கள். ஆனாலும் ஏன் அப்படிப் போகிறார்கள்? இரைச்சல் தாங்க முடியாமல் தான். உலகில் மிக அதிகமான ஜனநெருக்கடி உள்ள இடம் பேஸ்புக் தான். பேஸ்புக்கை சீரியசாய் எடுத்துக் கொண்டு அதில் மூழ்கும் போது சட்டென வெறுப்பு ஏற்படுகிறது. இதில் வரும் கொண்டாட்டங்கள், அன்புப் பெருக்கு, கோபம் எல்லாம் பொய் எனத் தோன்றுகிறது. ஆனால் இதை தவிர்க்கவோ தள்ளி நிற்கவோ முடியாது. நிஜ உலகில் அதற்கு ஒரு இடம் உள்ளது.

பேஸ்புக்கில் நீங்கள் அமைதியாய் இருக்க ஒரு ஊசிமுனை இடம் கூட கிடையாது. இங்கு இருந்தால் நீங்கள் எதையாவது செய்து கொண்டு, பார்த்துக் கொண்டு, பேசிக் கொண்டு இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சொற்கள் நம் கழுத்து வரை நிரம்பி நின்று மூச்சு முட்ட செய்கின்றன. டி-ஆக்டிவேட் செய்கிறோம். பேஸ்புக்கை தம் தேவைக்காய் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே நிரந்தரமாய் அதில் இருக்கிறார்கள்.

வாசிப்பின் மிக முக்கியமான பயன் அது நமக்கு தனிமையின் அத்தியாவசியத்தை கற்பிக்கிறது என்பதே. பேஸ்புக் நம்மை “தனியாய் போய் விடாதே” என அச்சுறுத்திக் கொண்டே இருக்க, புத்தகங்கள் தனித்திரு என காதில் சொல்கின்றன. இரண்டுக்கும் நடுவே மகிழ்ச்சி இருக்கிறது.

No comments:

Post a Comment