Saturday, 21 July 2018

படித்தது

*****************மானசீகன்****************

சுஜாதா எல்லோரையும் போல் எனக்கும் ஆதர்சம்தான்.எனக்குள் வியப்பை மலர்த்திய முதல் எழுத்தாளர்.என் எழுத்தில் வெளிப்படும் நுணுக்கமான கிண்டல்களில் அவர் சாயலும் உண்டு (எனக்கான தனித்தன்மைதான் அதிகம். நான் அவரை ஒருபோதும் பிரதியெடுக்க முயன்றதில்லை )

நாம் ஆரம்பகாலத்தில் சில  எழுத்துக்களைப் படித்து விட்டு மேலே வருவோம். லட்சுமி,சிவசங்கரி,ரராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்கள் ஒரே கதையை வைத்து ஆயிரம் நாவல்கள் எழுதும் சாதனையாளர்கள்(?).பிறகு யாரோ ஒரு புண்ணியவானின் தயவால் நமக்கு தீவிர  இலக்கியம் அறிமுகமாகும்.சுரா, ஜெயகாந்தன், பிரமிள்,நகுலன், வண்ணதாசன், ஜெயமோகன்  என்று படித்து விட்டு கம்பு சுற்ற  ஆரம்பிப்போம். இந்த  இரண்டு பாதைகளுக்கு நடுவில் முச்சந்தியில் நிற்கும்  இருவரை நாம் சந்திக்காமல் செல்ல முடியாது. ஒருவர் சுஜாதா, இன்னொருவர் பாலகுமாரன்.பாலகுமாரனை நாம் வாசிப்பால் தாண்டிச் சென்று விட முடியும். சுஜாதாவை அப்படி தாண்டி விட முடியாது. அவர் எப்போதும்  சரியாக  ஒரு கைப்பிடியளவு நமக்குப் பின்னால் ஓடி வந்து கொண்டிருப்பவர்.

தமிழ் இலக்கிய  உலகில் அவர் ஒரு அபூர்வம். அவர் நினைத்திருந்தால்  தீவிரமான  இலக்கியத்தை வெகு சாதாரணமாக படைத்திருக்க முடியும். அவரது வாசிப்பும், நுண்ணுணர்வும் அப்படிப்பட்ட தரத்தைக் கொண்டவை. ஆனால்  அவர் வேண்டுமென்றே அதே இடத்தில் நின்றிருந்தார். அவருக்கு அதுதான் பிடித்திருந்தது. அவர் அடிப்படையில் ஒரு ஆசான். அவரால் அறிஞர் சபையில் வந்து விவாதிக்க முடியும். ஆனால் விரும்ப மாட்டார். அறிஞர்களின் சபையில் எந்தக் கருத்தும் கூறாமல் அமைதியாய் இருந்து விட்டு அங்கே கற்றுக் கொண்டதை கடைவீதியில் மேடை போட்டுப் பேசும் சுவாரஸ்யமான  ஆசான் சுஜாதா. எனக்குத் தெரிந்து தமிழ்  எழுத்துலகில் ரெண்டு  ஆசான்கள்தான்.ஒருவர் சுஜாதா;இன்னொருவர் ஜெயமோகன்.சுஜாதா மரணத்தைக் கூட நகைச்சுவை ததும்பப் பேசுவார். ஜெயமோகன் கொசு அடிப்பதற்குக் கூட  ஒரு கோட்பாட்டைக் கண்டுபிடித்து பலமணி நேரம் விளக்குவார். ஜெயமோகனை முழுவதும் வாசித்து அவரது கோட்பாடுகளை மீறுவதன் வாயிலாகவே ஒரு இளம் படைப்பாளி வளர முடியும். சுஜாதாவை மீற வேண்டியதில்லை. அவர் 'சூது கவ்வும்' படத்தில் வரும் ஷாலுவைப் போல.  எவர் கண்ணுக்கும் தெரியாமல் நம்மோடு உரையாடிக் கொண்டிருப்பார்.

சுஜாதாவின் படைப்புகளை எதிர்காலத்தில் வாசித்தால் அவரது எழுத்துகள் சாதாரணமான  ஒன்றாகவே மதிப்பிடப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால்  சுஜாதா என்கிற  ஆளுமையுடனும்,அவர் வாழ்ந்த காலகட்டத்துடனும்  வைத்துப் பார்த்தால் மட்டுமே அவற்றின் முக்கியத்துவம் புரிய வரும். சுஜாதாவை வாசிப்பதன் மூலமாக  ஒருவன் சுஜாதாவை விட பலமடங்கு வளர முடியும். அதற்காகத்தான் சுஜாதா பிறந்திருக்கிறார்.

இலக்கிய  உலகத்திற்கு அவரளித்த பங்களிப்பாக நான் அவருடைய  நவீனமும், நகைச்சுவையும் ததும்பும் சிக்கனம் கொண்ட  உரைநடையைச் சொல்வேன். எந்த சில்மிஷத்திற்கும் வாய்ப்பில்லாத, காதலியாகப் போகிற தோழியுடனான பயணத்தைப் போன்றது அவர் உரைநடை.அதன் எல்லை குறுகியதுதான். ஆனால் அந்தக்  குறுகிய சாத்தியத்தில் ஏற்படும் அதீத மனவெழுச்சிதான் அவர் எழுத்துக்களின் வெற்றி.

பிராமண சமூகத்தை மீறியதாலேயே வளர்ந்த சமூகம்தான் தமிழ்ச்சமூகம்.கல்வி, கலை, அரசியலில் அவர்கள் நிறைய சாதித்திருந்தாலும் அவர்களை மீறுவதன் வாயிலாக  உருவான முரணியக்கமே தமிழகத்தின் தனித்தன்மையாக நீடிக்கிறது. ஆனால் சகல திராவிடர்களும்,தமிழ் தேசியர்களும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் கற்றுக் கொண்டது சுஜாதாவிடம் மட்டும்தான். அதற்கு மிக முக்கியமான காரணம் அவர் ரொம்ப நவீனமாக  இருந்தார். கடந்த காலத்தின் பெருமிதங்களைத் தூக்கிச் சுமக்காமல் நிகழ்கால யதார்த்தத்தை புரிந்து கொண்ட யதார்த்தவாதியாயிருந்தார்.கடவுளை பயங்கரமாய் கிண்டலடித்துக் கொண்டே பாசுரங்களின் அழகை வியக்கிற வைணவராயிருந்தார்.ஆழ்வார் பாசுரங்களுக்கு நிகராக சங்க  இலக்கியங்களையும், புறநூனூறையும், திருக்குறளையும் ஏற்றுக் கொள்கிற பரந்த பார்வை அவரிடம் இருந்தது. அவர் நாரதரிடம் கூகுளைக் காணாமல் உலகின் அனைத்து துறை அறிவையும் அறிமுகப்படுத்துகிறவராய் இருந்தார். பல்வேறு மதங்களின் வேதநூல்களை ஆழக் கற்றறிந்து அவற்றின் சாராம்சத்தில் உறைந்திருக்கிற ஒருமையை உணர்கிற பேரறிவு அவருக்கு வாய்த்திருந்தது.அவர் எல்லோருடனும் மிதமான குரலில் உரையாடினார். அவர் கால்பதித்த துறைகள் அனைத்திலுமே அதிகம்  அலட்டிக் கொள்ளாமலே ஜெயித்தார். ஜெயித்த பிறகும் ஒரு ஆசிரியரின் குணத்தோடு தன் வெற்றி இரகசியங்களை ஊருக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.தனக்கு யாரோ அணிவித்து விட்ட மாலையை பிறரிடம் காட்டும் போது கூட  அதிலிருக்கும் மலரின் தாவரவியல் பெயர் சொல்லி உரையாடும் அறிவுணர்ச்சியும்,அடக்கமும் அவருக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது.அவர் அறிவியலை கோவிலாக்கி அதன் வழியே கடவுளை தேடிக் கொண்டிருந்த அறிவு உபாசகன். மிக முக்கியமாக  அவர் ஹெச். ராஜா, எஸ். வி. சேகர் போன்ற  அரைகுறைகளைப் போல் ஒரு போதும்  உளறியதில்லை.

சுஜாதா விரல் நீட்டிப் பாராட்டினாலே ஒருவன்  பலரது கவனத்திற்கும் உள்ளாக முடியும் என்கிற சூழல் ஒருகாலத்தில் நிலவியது. நா.முத்துக்குமாரும்,மனுஷ்யபுத்திரனும் அடை‌ந்த  உயரங்களுக்குப் பின்னால்  இருப்பது அவர்களின் திறமை மட்டுமல்ல;அந்தத் திறமையை மிகச்சரியாய் ஒரே ஒரு கவிதையில் கண்டறிந்த சுஜாதாவும் இருக்கிறார். இன்று நிகழ்ந்திருக்கிற நவீன  இலக்கிய, சிற்றிதழ் வாசிப்பிற்குப் பின்னால் சுஜாதாவும் அவரது பத்தி எழுத்துக்களும் இருக்கின்றன.  அதற்கான  அத்தாரிட்டியாக தன்னை அவர் முன்னிறுத்திக் கொண்டதே இல்லை; அதுதான் சுஜாதா.

அவர் எவ்வளவு பெரிய  ஆள் என்று சுட்டிக் காட்ட  இரண்டு விஷயங்கள் போதும்.தமிழில் உலக  இலக்கியமே இல்லை;நல்ல  எழுத்தாளர் இன்னும்பிறக்கவேயில்லை;தமிழின் ஒரே உலக எழுத்தாளர் தான்தான் என்றெல்லாம் குடுகுடுப்பைக்காரனைப் போல் குறி சொல்லிக் கொண்டிருக்கும் சாரு நிவேதிதா சுஜாதாவின் பெயர் சொன்னால் பெட்டிப் பாம்பாக  அடங்கி விடுவார்.தன் எழுத்தில் அவரது தாக்கமிருப்பதைக் கூட  ஒத்துக் கொண்டார். இன்னொருவர் வாசுகி பாஸ்கர்.பெரியாரையும்,அம்பேத்கரையும் தனக்கான வழிகாட்டிகளாக வரித்துக் கொண்டு நவீனமான நடையில் 'பிராமணியத்தை' துவைத்துக் காயப் போட்டுக் கொண்டிருக்கிற வாசுகி பாஸ்கர் தன் முகப்புப் படமாகவே சுஜாதா என்கிற பிராமணரைத்தான் வைத்திருக்கிறார்.

சுஜாதாவை யாரும் தவிர்க்க முடியாது. டிவிட்டர், வாட்ஸ் அப்,முகநூல் என்று விஞ்ஞானத்தின் சாத்தியத்தால் எல்லோரும் எழுத்தாளர்களாகி விட்ட  ஒரு சூழலில், ஒரு புதிய உலகத்தைப் படைத்து விட்டு  உடனே தலைமறைவாகி அதற்குப் பிறகும் கூட
மற்றவர்களை  நினைக்க வைக்கிற கடவுளின் இடத்தில் இப்போது சுஜாதா இருக்கிறார்.

ஆசானே!நான் அங்கே வரும் போது  நீ அடித்த நுணுக்கமான ஜோக்குகளை கடவுளிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். அதுவரை மரித்துப் போன மதகுருக்களிடமிருந்து சொர்க்கத்தை காப்பாற்றி வை!

HBD சுஜாதா சார்!

#Mohammed Rafeek R

No comments:

Post a Comment