Sunday, 9 October 2022

பெரியாறு அணை


பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டு இன்றுடன் 127 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1895ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி, அன்றைய மெட்ராஸ் கவர்னர் வென்லாக் திறந்து வைத்தார். திருமணமான பெண், பிறந்தகத்துக்கு வரும் குதூகலத்துடன் பெரியாறு மாமதுரைக்கு வந்த நாள்.

பெரியாறு நதியின் நீர் சென்று சேரவேண்டிய கடைசி இடமான மேலூர் புளிப்பட்டிக்கு நதிநீர் சென்று சேர்வதற்கான வாய்க்கால்களின் வேலை 1895க்குள் நிறைவடையவில்லை.  மீதமிருந்த வேலைகள் 1900 வரை நடந்தன.
பிரிட்டீஷ் ஆவணங்களின் மூலம் அணை திறக்கப்பட்ட செய்தி அறிந்துகொள்வதைப் போலவே, அந்தோணி முத்துப்பிள்ளை எழுதிய சந்தமார் சிந்துக் கவிதைகள் நூலும் அணை திறக்கப்பட்ட நாளைப் பற்றிச் சொல்கிறது.

1912ஆம் ஆண்டு, கம்பம் ஆங்கூர் ராவுத்தர் என்ற காண்ட்ராக்டர் இறந்த சேதியைக் கேள்விப்படுகிறார் பிள்ளை. இறப்புச் செய்தி கேட்டு, கையறு நிலையில் பாடப்படும் சரம கவிதை எனும் இலக்கிய வடிவத்தில் இக்கவிதையை வடிக்கிறார்.

“ஆயிரத் தெண்ணூற்றரிய தொண்ணூற் றைந்தாண்டின்
மேயஅக்டோபர் விளங்குபத்தாந் தேதிதனில்
பெரியாற்றினைத் திறக்கப் பிரிட்டீசாரான
அரிய கவர்னர்துரை யங்கு வருகிறதால்
தக்க படி மகிமை தான்செய்ய வேண்டுமென்று
சர்க்காரி லுத்தரவு தந்த படியாலே
மலைவாழ் குமுளியதை வாசமிகு பொன்னகர் போல்
துலங்கும் படியாகச் சோடித் தலங்கரித்துப்” எனச் செல்கிறது பாடல்.
ஆங்கூர் ராவுத்தர் பெரியாறு அணை கட்டுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பையும், அணை திறந்த நாளன்று அவர் செய்திருந்த ஏற்பாடுகளைப் பார்த்து திருவிதாங்கூர் மகாராஜா மகிழ்ந்து 100 ஏக்கர் ஏலத்தோட்டத்தை முழு மான்யத்தில் அன்பளிப்பாக கொடுத்தார் என்றும் பாடுகிறார் பிள்ளை. 

வரலாறும் நாட்டுப்புறப் பாடல்களும் ஒத்துப்போவது அரிய நிகழ்வு.
எத்தனையோ மர்மங்களும் மாயங்களும் அபூர்வங்களும் நிறைந்த பெரியாற்றின் வரலாற்றில் இதுவும் ஓர் அரிய நிகழ்வுதான்.
பெரியாறு அணை நம் வரலாற்றில் வெறும் அணை மட்டுமல்ல.  தென் தமிழகத்தை வாழ வைத்த பண்பாட்டு அடையாளம். 

கீழுள்ள படத்தில் தெரியும் மனிதர்களைப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கை கதைக்குள் பெரியாறு இருக்கிறது. பெரியாறுக்குள் அவர்களும் இருக்கிறார்கள்.
கழுகுமலை குடவரை போல், கீழக்குயில்குடிபோல், நெல்லையப்பர் ஆலயம்போல் மதுரை மீனாட்சிக் கோயில்போல் நம் அடையாளம்.
அடையாளம் காப்போம்.
#நீரதிகாரம்
#ஆனந்தவிகடன்
#பெரியாறுஅணைதிறந்தநாள்

-அ.வெண்ணிலா

No comments:

Post a Comment