Thursday, 2 May 2024

உமா ரமணன்




ஆனந்த ராகம்..பாடல் ரேடியோவில் 90களில் ஒலிக்கும் போதெல்லாம் அந்த இசை கேட்டு ஓடிவரும் குரலில் அத்தனை துள்ளல் இருக்கும்.
கிளாசிக்கல் ஸ்டைலில் அமைந்த நிழல்கள் படத்தில் வரும் பூங்கதவே தாள்திறவாய் அந்த கதாநாயகியின் முக ஒற்றுமைக்கும் குரலுக்கும் அத்தனை பொருத்தம். ரேவதியின் நடிப்பில் உருவான பாடல்கள் சிலவற்றுக்கு உமா ரமணின் குரல் மிகப் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் அரங்கேற்ற வேலை படத்தில் வரும் ஆகாய வெண்ணிலாவே, புதுமைப்பெண் படத்தில் வரும் கஸ்தூரி மானே உள்ளிட்ட சில பாடல்களை சொல்லலாம்.

கேளடி கண்மணி என் நீ பாதி நான் பாதியும், புது நெல்லு புது நாத்து படத்தில் மரிக்கொழுந்து பாடலில் சித்ராவுடன் இணைந்து பாடியிருப்பார். அதேபோல் வைதேகி காத்திருந்தாள் படத்தில் துள்ளல் இசையாக மேகம் கருக்கையிலே பாடலில் கிராமத்து மணத்தை நமக்கும் தந்து இருப்பார். ராஜாவுடன் இணைந்து பாடிய மற்றொரு பாடல் பாட்டு பாடவா படத்தில் வரும் நில் நில் நில் பதில் சொல் சொல் பாடலும்.
பகவதிபுரம் ரயில்வே கேட் படத்தில் வரும் செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சேன் என்ற பாடலும் ராஜாவுடன் பாடியிருப்பார்.

வைக்காத செந்தூரம்தான் என சரணத்தில் ஆரம்பிக்கும் கும்பக்கரை தங்கையா படத்தில் வரும் பூத்து பூத்து குலுங்குதடி பாடலும் எப்போது கேட்டாலும் இனிக்கும். கண்மணி நீ வர காத்திருந்தாள்  பாடலில் இவரின் குரல் மட்டும் தனித்து ஓங்கி ஒலிப்பது குறிப்பிடத்தக்கது. நந்தவன தேர் படத்தில் வரும் வெள்ளி நிலவே பாடலில் நாயகனின் ஆறுதலை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை குரலிலே தந்திருப்பார்.

மகாநதி படம் வந்தபோது படத்தில் ஒரு சரணத்தை வெட்டி இருப்பார்கள். ஆனால் ஆடியோவில் அது இருக்கும். அதுதான் ஸ்ரீரங்கநாதர் பாடலில் கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும் எனும் சரணம். அந்த பத்தியில் அவ்வளவு இயல்பாய் பாடியிருப்பார்.

முரளியின் படத்தில் வரும் தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே பாடலில் நாயகனுடன் ஊடல் ஆடும் நாயகியின் மனோ நிலையை அப்படியே பிரதிபலித்து இருப்பார். ஊரடங்கும் சாமத்துல எனும் துவங்கும் புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் சொர்ணலதா உடன் இணைந்து கலக்கி இருப்பார்.

 இது என்ன இது என்ன புது மயக்கம் கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு போன்ற பாடலும்.தற்காலத்து நாயகியான திரிஷா விற்கும் சிவகாசி மற்றும் திருப்பாச்சி பாடல்களில் பாடி இருப்பார்

இன்னும் இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. ஆனால் நினைவுக்கு வந்தவை இவைகள் மட்டுமே. தனித்துவக் குரலாக அதிகம் கவனத்தில் அறியாத உமாரமணன் அவர்களின் பாடல்கள் காலம் கடந்தும் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை 

-மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment