Sunday, 14 August 2016

விக்ரமாதித்யன்-யமுனைச்செல்வன்

டாஸ்மாக்’கைக் கடந்து
செல்லும் கவிஞன்

டாஸ்மாக்கை கடந்து
செல்கிறான் கவிஞன்

உலகத்திலேயே வேறெதுவும்
கவிஞனை
இந்த அளவுக்கு
சலனப்படுத்துவதில்லை
(பெண் சபலம்
தனி)

கோயிலை
கடந்து செல்கிறான்

உணவுவிடுதியை
கடந்து செல்கிறான்

ஜவுளிக்கடையை
லாலாக் கடையைக் கடந்து
செல்கிறான்

புக்ஸ்டாலை வங்கியை
எவ்வளவோ இடங்களை கடந்து
செல்கிறான்

எதுவுமே
தொந்தரவு தந்ததில்லை

கடக்க முடியாத இடம்
இது ஒன்றுதான்

கட்டிப்போடும் டாஸ்மாக்கை
கடக்க முடியாமல் தவிக்கிறான்
கவிஞன்

ஒரு டாஸ்மாக்கிலிருந்து
இன்னொரு டாஸ்மாக்குக்கு

உள்ளூர் டாஸ்மாக்கிலிருந்து
வெளியூர் டாஸ்மாக்குக்கு

கடந்துக்கொண்டெ
இருக்கிறான் கவிஞன்

கடக்க கடக்க
வந்துக்கொண்டேயிருக்கிறது
டாஸ்மாக்

(கவிஞனை
அன்பாக நடத்துகிறார்கள்
டாஸ்மாக் விற்பனையாளர்கள்

கனிவாக
பழகுகிறார்கள் ‘பார்’
நடத்துபவர்கள்

இன்முகத்துடன்
இருக்கிறார்கள் வேலையாள்கள்

வளவுக்காரர்களைவிட
தெருக்காரர்களை விட
ஊரில் உள்ளவர்களை காட்டிலும்
நாட்டில் உள்ளவர்களை
காட்டிலும்
நிரம்ப நிரம்ப
நல்லவர்களாகத் தெரிகிறார்கள்
டாஸ்மாக்கில்
இருப்பவர்கள்

இவ்வளவுக்கு கவிஞன்
அவர்களிடம் தன்னை காட்டிக்
கொள்வதேயில்லை)

கவிஞனுக்கும்
டாஸ்மாக்குக்குமான உறவு
பூர்வஜென்மத்து தொடர்பு போல

கவிஞனும்
டாஸ்மாக்கை விடுவதில்லை
டாஸ்மாக்கும்
கவிஞனை ஒதுக்குவதாயில்லை

டாஸ்மாக்கின் வசீகரம்
அரசனின் கம்பீரம் போல

டாஸ்மாக்கின் கவர்ச்சி
கணிகையின் ஒய்யாரம் போல

கவிஞனை
மண்டியிட செய்கிறது

கவிஞனை
விழ வைக்கிறது

டாஸ்மாக்கை
கடந்துவிடப் பார்க்கிறான்
கவிஞன்

கடந்து கடந்து
தீரவில்லை தொலையவில்லை
டாஸ்மாக்குகள்

ஒவ்வொரு ஊரிலும் எப்படியோ
பேருந்து நிலையத்துக்குப்
பக்கத்திலேயே ஒரு டாஸ்மாக்

சிரம பரிகாரம்
செய்துக்கொண்டு
செல்லும்படி கேட்டுக்
கோள்கிறது ஒரு அருமையான
டாஸ்மாக்

பணவிடை அனுப்பப் போகையில்
வழிமறித்து
பந்தி உபசரிப்பது போல
அழைக்கிறது இன்னொரு நல்ல
டாஸ் மாக்

கல்யாண வீட்டுக்குக்
கிளம்புவதை எவ்வாறோ
கண்டறிந்து கொள்கிறது
வேறொரு புத்திசாலி
டாஸ்மாக்

கருத்தரங்குக்குப் புறப்படுவதை
எவ்விதமோ
கண்டுபிடித்து விடுகிறது
ஒரு கெட்டிக்கார டாஸ்மாக்

கையில் பணம் வைத்திருப்பதை
கவனித்துவிடுகிறது டாஸ்மாக்

சன்மானம் வருவதை
சரியாகத் தெரிந்துகொள்கிறது
டாஸ்மாக்

நண்பர்களை
நேரம் காலம் பார்த்து
அனுப்பிவைக்கிறது டாஸ்மாக்

கவிதை வருமென்று வேறு
ஆசை
காட்டுகிறது டாஸ்மாக்

டாஸ்மாக்கை கடந்தும் கடக்க
முடியாமல்
உழன்று கொண்டிருக்கிறான்
கவிஞன்.
°

No comments:

Post a Comment