பல ஆண்டுகளுக்கு முன், சகோதர சகோதரி நாங்கள் மிகச் சிறுவர்களாக இருந்த காலத்தில், ஒரு நாள் இரவு பாயில் படுத்துக் கொண்டு பேசுகிறோம்-
“டேய்.. அப்பா ஃபோன் வாங்கலாம்னு சொன்னாரு தெரியுமா..?"
“சூப்பரா இருக்குன்டா...! கறுப்பா இருக்கும்... ! 'கிர்ர்ர்ருக்.. கிர்ர்ர்ருக்’குன்னு நம்பர சுத்தணும்...!”
"சுத்துனா..?"
"நாம இங்கேந்தே, ஊர்ல இருக்ற பெரிப்பா, அத்தம்மா, எல்லார்ட்டேயும் பேசலாண்டா.. அதுல கேக்கும்..!"
“நெஜமாவா..? ஐ..! ஜாலி...! ஜாலி...!”
எல்லோரும் மகிழ்ச்சியுடன் தூங்குவோம்..!!
:::::::::::::::::::
வேறொரு நாள்:
“டேய் , அப்பாட்ட டி.வி வாங்லாம்பான்னு சொன்னேன்டா..! அடுத்த வருஷம் வாங்கிட்லான்னிருக்காரு..!”
“டி.வியா...? டயனோராவா, சாலிடெரா..? அய்......யோ..!!!.. சூப்பரா கிரிக்கட் மாட்ச் பாக்கலாண்டா...! ஸ்ந்தீப் பட்டேல் ஸிக்ஸர்...! ஊஷ்ஷ்ஷ்ஷ்....!!”
“ஜாலி..!. ஜாலி...!! ஜாலியோ ஜாலி..!!!.”
எல்லோரும் மகிழ்ச்சியான கனவுகளோடு தூங்குவோம்...!!
:::::::::::::::::::
மற்றொரு நாள்:
“டேய்.. நம்ம அப்பாகிட்ட நிறையா பணம் இருந்தா என்னென்னல்லாம் வாங்கலாண்டா...?”
எல்லோரும் உட்கார்ந்து மனதுக்கு தோன்றியதையெல்லாம் லிஸ்ட் போட்டோம்...
“கூலிங் கிளாஸ்.. கேஸியோ வாட்ச்.. மிக்ஸி.. டெலிபோன்.. டி.வி.. டேப்ரெகார்டர்.. ஃப்ரிட்ஜ்.. ஸ்கூட்ட்டர்.. அம்பாசிடர் கார்.......”
“காரா....? டேய்... இருந்தாலும் உனக்கு கொழுப்பு ஜாஸ்திடா...! ஹா.. ஹா.. ஹா.. ஹா.. ஹா.!”
சிரித்து.... சிரித்து.... சந்தோஷத்தில் மிதந்தோம்...! கடவுளாலும் கொடுக்க முடியாத நிஜ சந்தோஷம்..!
“எல்லாம் இருந்தா எவ்ளோ ஜாலியா இருக்கும் இல்ல..?”
::::::::::::::::::::::::::
இன்று எல்லாம் இருக்கின்றன.... ஆனால், ஜாலி எங்கே..? அந்த சந்தோஷம் எங்கே..? மகிழ்ச்சியான தூக்கம் எங்கே..?
No comments:
Post a Comment