(‘நாய்’ என்பதை வசைச்சொல் என நம்புகிறவர்கள் தொடரவேண்டாம்)
சதா கார்களைத் துரத்தும்
இந்தத் தெருநாயைப்
புரிந்துகொள்ள முடிவதில்லை
புழுதி பறக்கும் அதன் அறச்சீற்றம்
விரையும் சக்கரங்களில் சிக்கிடுமோவென
பதட்டத்துடன் பரிவும் தளும்புகிறது
அக்கணங்களில்
கூறுகெட்ட அதன் செய்கைமீது
நமக்கு கோபமும் வருகிறது
அதன் சாலையோர வன்மத்திற்கு
நெடுஞ்சாலைக் கார்கள்தான் காரணமா
அதற்கு முலையூட்டிய தாயையோ
அது முலையூட்டிய மகவையோ
எதோவொரு காரின் சக்கரத்தாழ்வான்
தார்க்கித்தானில் வைத்து
ரத்தச்சித்திரம் தீட்டிப் போயிருக்கலாம்
ஒருமுறை சிறுவனை
பிற்பாடு ஒரு நடுத்தரவயதுக்காரனை
நேற்று ஒரு மூதாட்டியை
அந்த நாய்
வாய் வைத்திருக்கிறது
தேடிப்போய் உரியவர்களைக் குதறத் துப்பற்ற இது
அண்மிக்கிற எளிய இலக்குகள் மீது
பல் பதித்து ஆசுவாசம் கொள்கிறது
காரைப் புரட்டி ஒரு பூனையாக்கி
கழுத்தைக் கவ்விப் போகும் மூர்க்கத்தோடுதான்
ஒவ்வொரு முறையும் விரட்டிப் போகிறது
தன் நகக்கீறலின் சாத்தியமுமற்று
மூச்சிறைக்க மீளும்
அதன் சிவந்த கண்களை
வேறெங்கோ நான் சந்தித்திருக்கிறேன்
கட்சித் திட்டமொன்றின் இறுதி வாக்கியத்திலோ
பழைய செய்கைக்கு நீதிமன்றம் வந்து போகிறவனிடமா
இப்பவும் புஜம் காட்டும் கவிதை வரியிலா
நினைவில்லை
ஆற்றாமையின் வன்மத்தில் மினுங்கும்
அவை நேசிப்பிற்குரியவை
ஒரு காரை
காருக்குள்ளிருக்கும் ஒருவரைக்
கடித்துவிட்டால்கூடப் போதும்
இது அமைதி கொள்ள
°
லிபி ஆரண்யா
No comments:
Post a Comment