Sunday, 4 April 2021

கற்பதுவே..பகிர்வதுவே-24*மணி




நேற்றைய வரலாறு தெரியாது போனால்,இன்று நடப்பது புரியாமல் போகும்.இன்று நடப்பது தெரியாமல் போனால் நாளை என்பது நம் வசம் இல்லை

-பகத்சிங்

#வரலாற்றுச் சுவடுகள்
1937-1967
பாகம்-1

காரில் முன்னோக்கிச் செல்லும் போது..பின்னால் வருவனவற்றையும் அடிக்கடி பார்த்து செல்வது போல, கடந்த கால வரலாற்றையும் அறிந்து கொண்டால் முன்னோக்கிய பயணம் நன்கு அமையும்.வியப்புகள், ஆச்சர்யங்கள்,சரித்திர குறியீடுகள், துரோகங்கள்,சம்பவங்களை அறிந்தால்தான் எதிர்காலத்தை கட்டமைக்க எளியாய் இருக்கும்.

#உலக வரலாறும் முக்கிய நிகழ்வுகளும்

இரண்டாம் உலகப் போர் துவங்க முக்கிய காரணங்களும், ஹிட்லரின் வரலாறு மற்றும் ஹிட்லர் லண்டன் மீது தொடுத்த தாக்குதல், ரஷ்யாவின் வீரப்போர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின்  எல்லையில் ஜப்பானிய படைகள் குவிந்தது, ஹிட்லரை கொல்ல முயற்சி நடந்த சம்பவம்,இறுதியில் முசோலினி என்ன ஆனார்..
அணுகுண்டு வீச்சு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்கள் உள்ளிட்ட கட்டுரைகள் விரிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன இவை தவிர முக்கிய மரணங்கள் உலகை உலுக்கிய சம்பவங்களும் இத்தலைப்பின் தொகுப்பில் உள்ளது

இந்தியாவில் இரண்டாம் உலகப் போர் துவங்கியபோது, போரில் இந்தியர்களை உயிர்பலி கொடுக்க கூடாதென எண்ணி.. காந்தி காங்கிரசிலிருந்து விலகினார். அதன்பின் நடைபெற்ற சமரச திட்டமும்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் எழுச்சியும், நேரு அமைத்த இடைக்கால அரசாங்கமும், பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி சம்மதித்த விவரம்.. இந்தியாவின் சுதந்திரம் குறித்து சிறு சிறு சம்பவங்களாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.இறுதியில் காந்தி கொல்லப்பட்ட சம்பவங்களும்,கொலை வழக்கும் விளக்கப்பட்டுள்ளது

#முக்கிய நிகழ்வுகள்

சுதந்திரத்திற்குப் பின் சமஸ்தானங்கள் இணைந்ததும், காஷ்மீர் மீது பாகிஸ்தான் படை எடுத்ததும், இந்தியா மீது சீனா படையெடுத்ததும், கட்சியை பலப்படுத்த காமராஜரின் திட்டம், நேருவின் மறைவு, இந்தியா பாகிஸ்தான் போர் குறித்தும், சாஸ்திரிக்கு பிறகு இந்திரா காந்தி பிரதமர் ஆன அரசியல் சம்பவங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்திய விடுதலைப் போராட்டத்தை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பிரெஞ்சு ஆட்சியை எதிர்த்து புதுச்சேரி மக்களின் போராட்டத்தையும் பத்தகம் பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த சுவாரசியமான சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது, கோவா விடுதலை பெற்றதும், ரூபாய் மதிப்பு குறைக்கப்பட்ட நிகழ்வும் முக்கிய நிகழ்ச்சியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

#தமிழகத்தில்

தமிழகத்தில் நீதிக்கட்சியின் தோற்றமும்,முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், பெரியாரின் வாழ்க்கை வரலாறு, அண்ணா பெரியார் இடையே ஏற்பட்ட பிரிவும் திமுகழகத்தின் உதயமும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட அவசியத்தையும், காமராஜரின் அரசியல் பயணமும் எழுச்சியும் அவர் கொண்டுவந்த திட்டங்களும, 1957 முதுகுளத்தூர் கலவரமும் காரணமும்,
1967இல் காங்கிரஸின் வீழ்ச்சியும் முத்துராமலிங்கத்தேவரின் மரணமும் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டமும் அதன் விளைவுகளும் எந்தெந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற விபரமும், அண்ணா முதலமைச்சர் ஆன வரலாறும் அவரின் சாதனைகளும் மற்றும் தமிழகத்தில் அப்போது நடைபெற்ற முக்கியமான சம்பவங்களும் இதில் விரிவாக அலசப்பட்டுள்ளன.

வரலாற்றை அறிந்து கொள்வோருக்கான புத்தகம்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment