Tuesday, 13 April 2021

இலக்கியம்,இசை, ஹாலிவுட் பதிவுகள்-ஆர்.பி.ராஜநாயஹம்

#

ராஜநாயஹம் சாரை திருப்பூரில் இரு முறை சந்தித்திருக்கிறேன்.அவரிடம் பேசும் போது கேட்பதற்கு இரு காதுகள் போதாது.அத்தனை அனுபவங்கள்,சம்பவங்கள், வரலாறுகள்,துணுக்குகள்.இரு நாட்களில் மணிக் கணக்கில் நின்று பேசியிருக்கிறோம்.அவரின் வலைப்பூ விலும் அப்படித்தான் ஏராளமான தெரியாத சங்கதிகள் அதிகம் இருக்கும்.ஒரு கட்டுரையை நீங்கள் க்ளிக் செய்தால் அதிலிருந்து ஒன்று மற்றொன்று என சென்று கொண்டே இருக்கும்.

நல்ல ஆங்கில ஞானம் கொண்டவர். உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது கூத்துப் பட்டறையில் ஆசிரியராக இருக்கிறார்.தி.ஜானகி ராமன்,அசோகமித்திரன்,கி.ரா என்றால் அவருக்கு உயிர்.தி.ஜா,ஷேக்ஸ்பியர் படைப்புகளை அவரளவிற்கு சிலாகித்து சொல்ல முடியாது.

இப்புத்தகத்தின் முதல் இக்கட்டுரையில் வரும் child is the father of the man அவர் சொல்லி கேட்டிருக்கிறேன்.அதனை குறும்படமாக எடுக்க சிலர் கேட்டதையும் சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு பத்தி எழுத்துக்களிலும் அவர் அதிக தகவல்களை பகிர்ந்திருப்பார்.ரொனால்ட் ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரியும்.ஆனால் அவர் ஒரு நடிகராக வாழ்வைத் துவங்கியவர்.விவாகரத்து செய்யப்பட்ட ஒரே ஜனாதிபதியும் அவரே.டென் கமென்ட்ஸில் காஸ்ட்ரோ ஒரு காட்சியில் நடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
என அறியாத தகவல்கள் அதிகம் இருக்கும்.

நல்ல நகைச்சுவை படத்தில் இருந்து சிரித்தால் அடுத்த காட்சி போய்விடும் என்பது போல ஒவ்வொரு பத்தியும் நிதானமாக படிக்க வைக்கிறது புத்தகம்.நட்சத்திரம்,சிறகின் இறகு, சீதை இவை மூன்றையும் வைத்து ஒவ்வொரு எழுத்தாளர்கள் எடுத்தாண்ட விதத்தை விளக்குகிறார்.உதாரணத்திற்கு லா.ச.ரா சொல்கிறார்

 "சீதை குளித்த நெருப்பு
நெருப்பின் புனிதம் சீதைக்கா?
சீதையின் புனிதம் நெருப்புக்கா?

பல்வேறு எழுத்தாளர்களுடன் நட்பு பாராட்டியதை ஆங்காங்கே சிலாகித்திருக்கிறார்.சுந்தர ராமசாமியிடம் அசோகமித்திரன் போல் பேசிக்காட்டியது,பிரமிளிடமும்
ஜெயந்தனிடமும் ஏற்பட்ட அனுபவங்களையும் சொல்லியிருக்கிறார்.ஷேக்ஸ்பியரின் வசனங்கள்,படைப்புகள் அத்தனையும் அத்துபடி. பத்து நிமிடம் பேசினால் ஒரு ஷேக்ஸ்பியர் quote பரிசாகப்பெறலாம்.ஷேக்ஸ்பியர் குறித்து எழுதும்போது tempest,henry, sonnet குறித்து மின்னல் கீற்று போல் ஆங்காங்கே சொல்லியிருக்கிறார்.

எல்லா கடவுள்களுக்கு வாகனங்கள் இருப்பதுபோல் குபேரனுக்கும் இருக்கிறது. கரிச்சான் குஞ்சு சிறுகதையில் சொல்லுவார் "குபேரனுக்கு வாகனம் மனிதன்தான். பணக்காரன் ஏழை மனிதர்கள் மீதுதானே சவாரி செய்கிறார்.

அமெரிக்கன் கல்லூரியில் படித்த போது சாலமன் பாப்பையாவுடனான தன் அனுபவத்தை பகிர்கிறார். ஆர்.பி யிடம் கத்தியை காட்டி மிரட்டிய மாணவனிடமிருந்து காப்பாற்றியவர் பாப்பையா தான் எனும் நெகிழ்வு சம்பவத்தை தன்னிடம் பகிர்ந்து கொள்கிறார்.

தி.ஜா,ப. சிங்காரம்,எஸ்.ரா,க.நா.சு, லா.ச.ரா, சட்ட கி.ராஜநாராயணன் போன்றோரின் படைப்புகளையும் தன் அனுபவங்களையும் பொருத்தமான ஆங்கில தெறிப்புகளையும் பதிவு செய்திருக்கிறார்.

சுவையான சம்பவங்களையும் ஆங்காங்கே பதிவு செய்திருப்பது ரசிக்கத்தக்கதாய் இருக்கிறது. ஒருமுறை கோவி மணிசேகரன் தான் சில ஆயிரம் பக்கங்களுக்கு நாவல் எழுதியதாய் குறிப்பிட்டு எவன் தமிழில் இத்தனை பக்கங்களுக்கு நாவல் எழுதி இருக்கிறான் சொல்லு என்று சத்தமாக கேட்டாராம். அதற்குபின் அசோகமித்திரனுக்கு சென்னையில் விழா ஒன்று எடுத்த போது சுந்தர ராமசாமி பேசினார் ஆயிரம் பக்கம் எழுதிய எழுத்தாளர்களை எல்லாம் நாம் மே தினம் அன்று கௌரவித்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார் சபையில் பலத்த சிரிப்பொலி எழுந்ததாம்

#ரசித்தது

*நாவலாசிரியர் வெர்ஜினியா வூல்ஃப் வீட்டின் அருகில் உள்ள நதியில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார்.

*சித்தி என்ற புதுமைப்பித்தன் கதை.
சின்னம்மா என்று பொருள் கொள்ள கூடாது.ஆத்மசித்தி! சந்நியாசத்திற்கான பக்குவம் இல்லாமல் தவிக்கும் நாயகன் கதை

*Tragedy is not with actor's cry
Tragedy is  with audience cry

*மலைக் காட்சியிலே புனல் வீழ்ச்சியிலே-பாரதி

*புகழுக்கு விலை கொடுத்தே ஆகவேண்டும்
There is an optical illusion about every celebrity.

*மலத்தைவிட மோசமானது குடிகாரனின் வாந்தி

*Too many cooks spoil the cake

*A useless life is an early death

*வெட்டப்பட்ட மரம் கடத்தப்பட்டது சுற்றிக் கொண்டே நிற்கிறது அனாதையாய் மர வாசம்

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment