Tuesday, 20 April 2021

அகம் புறம்-வண்ணதாசன்

#30D0044

நாள்-26
புத்தகம்-43



அனுபவங்கள் மட்டும் ஆசானால்ல.. அந்த அனுபவத்தை உள்வாங்கி உள்ளதை உள்ளவாறு மெருகேற்றி மற்றவர்க்கு பகிர்பவரும் ஆசான்தான்.வியாழக்கிழமை விகடன் வரும் என்ற நாளை இன்னும் ஆர்வத்துடன் வாசிக்க வைத்தது வண்ணதாசனின் அகம் புறம் தொடர் மூலம்தான்.தூர்தர்சனில் ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்து வாரம் முழுக்க சிலாகிப்போமே அப்படி ஒரு ரசனையான தொடர்தான் இது.வண்ணதாசன் தான் சந்தித்த மனிதர்கள்,அனுபவங்கள், கண்ட காட்சிகள் மண்ணின் மனதோடு அழகாய் பதிவு செய்திருக்கிறார்.

80களின் வீடுகளில் திண்ணையும் ஊஞ்சலும் உள்ள வீடுகள் இருக்கும்.
அந்த ஊஞ்சலில் ஆடிய மனிதர்களின்நினைவுகள், காட்சிகள் அழகிய சிறுகதை போல் காட்சிப்படுத்தியிருப்பார்.இறுதியில் வரும் வரி அந்த எழுத்துக்கு உயிர் கொடுத்தது போல இருக்கும்..

"அவர்களுடைய வீட்டில் ஊஞ்சல் இருக்கிறதா,தெரியவில்லை.
வீட்டில் இல்லாவிட்டால் என்ன, மனதில் இருக்கிறது!
மனதில் என்ன மனதில்..?
மனம்தான் அந்த ஊஞ்சலே!
என்று படித்தபோது அப்படியே புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வானத்தை பார்த்தால்தான் மோட்சம் கிடைத்தது மாதிரி

ஓவியம் என்றவுடன் நினைவுக்கு வருவது ஓவியர்கள் மட்டும் தான். ஆனால் வண்ணதாசன் சற்று வித்தியாசமாக கார்ட்டூன் ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் வரையும் ஓவியர்களையும் அவருடைய ஓவியங்களையும் மிகவும் சிலாகித்து எழுதியிருப்பார். ஒவ்வொரு ஓவியரின் தனித் திறமைகளையும் மனம் நெகிழ்ந்து பாராட்டியிருப்பார்.

மனிதர்கள் யாரும் துருப்பிடிக்க முடியாது. அவர்கள் யாரும் உலோக வார்ப்புகள் அல்லர். இந்த பேனா, சில சமயங்களில் ரொம்ப கெட்டிக்காரத்தனமாக இருக்க முயலும் .கெட்டிக்காரத்தனம் என்பது உப்பு மாதிரி, கொஞ்சம் கூடினால் ரொம்ப கரிக்கும்.ருசி கெட்டுவிடும் என்று ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார்.

நான் பழுத்திருந்தபோது/ பழம் கடிக்க வராமல்/ உளுத்து விட்டதும்/ புழு பொறுக்க/ ஓடிவரும்/ மனங்கொத்தி நீ

என்ற அவரின் கவிதை வரியைச் சொல்லி அபிதா என தலைப்பிட்டதை நினைத்து.. லா.ச.ராவின் அபிதா புத்தகத்தை படித்த நினைவும், விக்கிரமாதித்தனின் ஜமீலா புத்தகம் என்னிடம் இருப்பது போல் என்னுடைய அபிதா புத்தகமும் யாரிடமோ இருக்கும். நல்ல புத்தகங்கள் ஆறு மாதிரி நகர்ந்து கொண்டே இருக்கும் என்பார்.

தன் அனுபவங்களை சொல்லிக்கொண்டே இருக்கும்போது,  தெருவில் பெண்களைப் பார்த்த அனுபவத்தை சொல்கிறார்."இந்தப் பெண்களுக்குத் தான் ஒரு மாயம் உண்டே! தானும் இன்னொருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, தன்னை தாண்டி போகிறவர்களை ஒரு நொடிக்குள் படம் பிடிக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார்களே.. அப்படித்தான் அந்தப் பெண் என்னை பார்த்தது. அதுவும் சந்தோஷமாகவே இருந்தது. சந்தோஷம் என்பது என்ன இன்னாருக்கு இவ்வளவு என்று எழுதியா வைத்திருக்கிறது. என்னை பார்த்த பெண்ணின் முகத்திலும் சந்தோஷம் வழுக்கிக் கொண்டு போயிற்று. என்று தெருவில் தான் பார்த்த பல பெண்களின் சிரிப்பினை நமக்கு தெரிவிக்கிறார்

வழியில் சந்தித்த பால்ய வயது நண்பன் தான் நமது மறதியின் ஒட்டு மொத்த உருவமாய் வந்து நின்றான் என்று நா. முத்துக்குமார் பதிவு செய்திருப்பார். அதுபோல வெற்று திரை மனசு எனும் கட்டுரையில்
தான் மறந்த பல பிம்பங்களை நினைவுக்கு கொண்டுவர முயன்று இருக்கும் வண்ணதாசன், சாதாரண மனிதர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறார்.

ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்/ எந்தப் பறவை எழுதியிருக்கும்/ இந்த கடிதத்தை இன்று திறந்து பார்க்க போகிறேன் ஒரு பறவையின் கடிதத்தை?/ என்று தன் வீட்டு வாசல் கதவில் வைத்திருக்கும் தபால் பெட்டியில் வெறுமையாய் இருப்பதையும், கடிதம் வாராத தன் நினைவையும், கடிதம் வழியே தான் சந்தித்த பல மனிதர்களை குறித்தும், தபால்காரர்கள் குறித்த நினைவுகளையும் தெரிவித்திருப்பார்.

மலையாளத்தில் சீனிவாசன் எழுதி நடித்த 'கத பறயும் போள்' என்ற சினிமாவில் ஆரம்பித்து தன் ஊரில் தான் சிறு வயது முதல்  சந்தித்த முடி வெட்டும் தொழிலாளர்களை பற்றிய நினைவுகளையும் அப்படத்தில் சீனிவாசனின் நடிப்பையும் சிலாகித்து இருப்பார். இந்த கட்டுரையில் தான் "மனிதர்கள் வாசல்படியில் நிற்பதை பார்த்த யாரோதான் புகைப்படங்களுக்கு சட்டம் இடுவதைத் துவங்கியிருக்க வேண்டும்" என்ற சலூன் கடை நினைவுகளோடு இந்த ஒரு முத்தான வரிகளையும் நமக்கு தந்திருப்பார்.

#மனம் கவர்ந்தவை

*மரத்தை மனிதர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ மரங்கள் மனிதர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன

*கஷ்டப்பட்டு பாரம் சுமக்கிறவர்கள் என்று விவிலிய வசனத்தை தபால்காரர்களுக்கு சொல்லியிருப்பார்.

*அச்சடித்த புத்தக வரிகளின் மேல் சின்னஞ்சிறு பிள்ளையார் எறும்பு ஊர்வது போல எந்த தடங்கலுமின்றி அது ஊர்ந்து கொண்டு இருக்கிறது. ஊர்ந்து கொண்டிருக்கும் அந்த உயிரின் அழகு முக்கியம் என்று நமக்கு பிடிபட்டால் போதும்.

*மழையிடம் எது குறித்தும், எவர் குறித்தும், எந்தக் கேள்விகளும் இல்லை. சொல்லப்போனால் எல்லாக் கேள்விகளுக்கும் மழைதான் விடை.

*அவரவர்களுக்கு அவரவர்கள் விடைகள்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் இத்தொடருக்கு புகைப்படத்தை மிக அழகாய் கொடுத்திருப்பவர் தேனி ஈஸ்வர்.இன்றைய கர்ணன் படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.சிறு வயதில் வானில் வரும் விமானம் தெரியவில்லை எனும் போது ஒரு அண்ணன் என் கைக்கு நேராய் பார் எனும்போது கை காட்டிய திசையில் விமானத்தை கண்டுபிடித்துப் பார்க்கும் போது ஒரு இன்பம் வருமே அது போல் வண்ணதாசன் காட்டிய வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்தால் நிச்சயம் நிம்மதியும் அமைதியும் உண்டு.

தொடர்ந்து பகிர்வோம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment