Tuesday, 4 May 2021

கற்பதுவே பகிர்வதுவே-29*மணி




#RM314

3/100+

#மொழிபெயர்ப்பின் சவால்கள்
தமிழில் ஜி.ஜெயராமன், லதாராமகிருஷ்ணன்

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"
என்றார் பாரதியார். தமிழை தவிர மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்கள், கட்டுரைகள் தமிழ் மொழியில் மொழிபயர்ப்பது மிகவும் உன்னதமான ஒரு விஷயம். இந்த மொழிபெயர்ப்பில் ஏற்படும் சவால்களும் அதிலுள்ள இடர்களையும் இந்த புத்தகம் மிகவும் தெளிவாகப் பேசுகிறது. அதோடு மொழிபெயர்ப்பு குறித்து நமக்கு அறியாத பல தகவல்களையும் நுணுக்கங்களையும் மிக அழகாக எடுத்துரைக்கிறது.

மொழிபெயர்ப்பு குறித்து பேசும் போது சிலர் சொல்லுவார்கள் மழையை கையிலேந்தி மழைத்துளிகளை லாவகமாக பெற்றுத் தருவது போல பரந்த அனுபவத்தை அழகியலை நமக்கு தருவதுபோல என்று சொல்வார்கள்.
நல்ல மொழிபெயர்ப்பு மொத்த மழையையும் நமக்குத் தந்துவிடுவார்கள்.

ஒரு மொழிபெயர்ப்பு.. வாசகரை உணர்வுபூர்வமாக தன்பக்கம் இழுக்க வேண்டுமானால் எளிய புழக்கத்தில் உள்ள சொற்களை பயன்படுத்த வேண்டும். மொழிபெயர்ப்பு 99% வியர்வை 1% உத்வேகம் என்பது உண்மையே என்று கட்டுரையாளர் ஜெயராமன் கூறுகிறார். அவ்வளவு மெனக்கெடல் ஒவ்வொரு புத்தகத்தில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் இன்றும் இலக்கியவாதிகளால் இரண்டாம் நிலையிலேயே வைத்திருப்பது, இலக்கிய விவாதங்களில் புறக்கணிப்பதும், தனித்துவம் இல்லாததும் வருத்தத்திற்குரியது.

 ஒரு மொழிபெயர்ப்பை மிகவும் கலை உணர்வோடு செய்கிறோமே தவிர பொருளாதார நன்மைக்காக அல்ல என்கின்றனர் மொழிபெயர்ப்பாளர்கள். வாசகர்கள் மொழிபெயர்ப்பாளர்களை அதிகம் கொண்டாடுவதில்லை. அவர்களின் பெயர்கள் இருளிலேயே உள்ளன. துடைத் தெரியும் துணியை போலவே பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகிறார்கள்.

தலித் இலக்கியம் குறித்து கூறும்போது இன்னும் அதிகம் விவாதிக்கப்பட வேண்டி உள்ளது.
தலித்திய படைப்புகளை தேர்ந்தெடுப்பதில் கூட பாரபட்சமாகவே நடந்து கொள்கிறார்கள். புரிதலற்ற தன்மையில் சிலர் மொழிபெயர்க்கும்போது தலித் இலக்கியத்தின் நோக்கமே மாறிவிடுகிறது. ஆகவே பொருள் உணர்ந்து..பிரச்சனையின் தன்மை அறிந்து அதனை மொழிபெயர்க்க வேண்டியது அவசியமாகிறது.

மொழியாக்கத்தில் ஏற்படும் இடர்கள் குறித்து சில தகவல்களை நமக்கு அளிக்கிறார்கள். இந்தியிலிருந்து மொழிபெயர்க்கும்போது ..தமிழில் எப்படி வருகிறது. ஆங்கிலத்திலிருந்து நேரடி மொழிபெயர்ப்பில் சில சொற்கள் எவ்வாறு மாறுகிறது என்றும், நன்கு உணர்ந்து கற்ற பிறகு தம்முடைய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்கிறார்கள்.

1980 ஆம் ஆண்டு பதிப்பாசிரியர் ஜார்ஜ் ஐ கொண்டு சாகித்ய அகாடமி இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகியுள்ள தலை சிறந்த படைப்புகளை.. தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்கள் கொண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு
 'இந்திய இலக்கியத்தின் உன்னத படைப்புகள்' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல் 1999இல் 'இடைக்கால இந்திய இலக்கியம்' என்ற தலைப்பில் நான்கு நூல்களாகவும் வெளி வந்துள்ளது.

தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள வை குறைவே என்னும் தகவல் புதியதாய் இருக்கிறது. பலரும் சொல்வது போல மூல மொழி குறித்த போதுமான அறிவு இல்லாமல் இணைப்பு மொழியை பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்தல் என்றும் நிறைவளிக்காது.

இலக்கிய மொழி ஏனைய மொழிகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமானது .எனவே அதனை மொழிபெயர்ப்பது சவாலானது ஆகும். மூல மொழி பயன்பாட்டில் உள்ள மூலப் பிரதியை அவ்வாறே நகலெடுக்காமல்.. நமது மொழிக்கு தகுந்தவாறு அதேசமயம் அந்த கருத்து குறையாமலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சில சொற்களுக்கு ஏற்ற தமிழ் சொற்கள் இல்லாமல் போகலாம் அதற்கேற்ப இணையான வேறு நல்ல சொற்களையே பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு வாசகன் சிறுகதையில் ஆரம்பித்து நாவலில் பயணம்செய்து கட்டுரையில் முடித்து இறுதியில் மொழிபெயர்ப்பில் தன்னை அர்ப்பணிப்பான் என்பார்கள். அந்த மொழிபெயர்ப்பு குறித்து இத்தனை விபரங்களையும், தகவல்களையும், அதில் உள்ள சவால்களையும், இடர்களையும், மொழிபெயர்ப்பாளர்கள் சந்திக்கக்கடிய பல்வேறு பிரச்சினைகளையும், இப்புத்தகம் நன்கு அலசி உள்ளது.

நல்ல மொழிபெயர்ப்பு அப் புத்தகத்துடன் ஒன்ற வைப்பதில் இருக்கிறது.. மொழிபெயர்ப்பாளரின் திறமையும். அதேசமயம் மொழிபெயர்ப்பாளர்களை கொண்டாட வேண்டியது வாசகனாகிய நம்முடைய கடமையும் கூட .

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment