Friday, 7 May 2021

கற்பதுவே..பகிர்வதுவே-30*மணி



6/100+

#சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
-பழ.கருப்பையா

அரசியலில் பல்வேறு வேறுபாடுகள் கருத்துக்கள் இருந்தாலும் பழ. கருப்பையாவின் தமிழுக்கு என்றும் பலர் அடிமையாக இருப்பார்கள். பேச்சு வழக்கில் அசாதாரணமான உண்மைகளையும் மிக சாதாரணமாக சொல்வதில் வல்லவர். கொண்ட கருத்தை மிக ஆழமாக உள்வாங்கி.. அதனை பிறருக்கும் மிக எளிதில் புரிய வைப்பதில் வல்லவர். தான் கொண்ட நேர்மையான அரசியலில் நிலைத்திருக்க முடியாமலும், நிற்க விரும்பாமலும் பரிசுத்தம் ஆகவே அதில் இருந்து தானாகவே வெளியேறியவர் கருப்பையா என்று நக்கீரன் கோபால் முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

உடையவனும், இல்லாதவனும் ஒரே மாதிரி வெறுங்கையோடு தான் செல்கிறார்கள். வெறுங்கையோடு செல்வதற்கு இவ்வளவு அட்டூழியம் ஏன்? என்று அப்படிப்பட்டவர்களின் மனசாட்சியையும் பிடித்து பலமாக உலுக்குகிறார். இப்புத்தகம் தற்போதுதான் வெளிவந்துள்ளது.. வந்தவுடன் உடனடியாக வாங்கி படித்து விட்டேன். 112 கட்டுரைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த அரசியல் நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியாக தன்னுடைய கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.

அண்ணா அவர்கள் கூறியது போல மாநில சுயாட்சி குறித்து தன்னுடைய கருத்துகளையும் தயங்காமல் வெளிப்படுத்தக் கூடியவர். கேரளாவில் ஐயப்பன் ஆண்களுக்கான கடவுள் ஆனது ஏன் என்ற கட்டுரையில் கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு உரிமைகளையும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்ட வரலாற்றினை தெரிந்து கொள்ள முடிந்தது இக்கட்டுரையில்.

ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் ஒருமுறை யாருடைய பேச்சு யாரைப் பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு வள்ளலார் குறித்து பழ கருப்பையா பேசினால் அருமையாக இருக்கும் என்று கூறினார் கழுகார். அதேபோல் கட்டுரையிலும் அவ்வப்போது வள்ளலாரின் கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஒரு இடத்தில் சங்கராச்சாரியாரை நேருக்கு நேர் சந்தித்து உரையாடியபோது "சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்! என்று சங்கராச்சாரியார் சொல்ல அப்படியானால் தமிழ்தான் எல்லா மொழிகளுக்கும் தந்தை என பதிலடி கொடுக்கிறார் வள்ளலார்.

எந்த நிலையிலும் மனிதன் சமநிலை இழக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக 'ராஜாஜி ஒரு முறை உடல் நலமில்லை' என்று பதவியை உதறி விட்டு வெளியேறியபோது.. அன்று மாலையே எந்த பதட்டமும் இல்லாமல் மகாபாரதம் படித்துக் கொண்டிருந்த அவரது மனச்சமநிலை பற்றி கூறுகிறார்

தமிழகத்தில் அனைவரும் முதல்வராகலாம் என்ற கருத்தில் அவர் எழுதிய கட்டுரையில்  இன்னாரை முதல்வர் ஆக்காமல் நான் ஓயமாட்டேன் என்று முழங்குவது எப்படி என்றால்.. இத்தகைய ஆவேச உரைகள் இரண்டு குறைகளை உடையவை..

 ஒன்று தான் நினைத்தால் ஒருவரை முதல்வராக முடியும் எனும் அதீத சக்தி தனக்கு இருப்பதாக நம்புவது. இன்னொன்று தான் அந்த பெரிய இடத்துக்கு உரியவரில்லை என்றுதானே வெளிப்படையாக உடன்படுவது..என
 கட்டுரை முழுக்க முதல்வர்  ஆவது குறித்த பல்வேறு நபர்களின் மனதை கூறியிருக்கிறார். இறுதியில் எது தான் தெரியாது? யாருக்குத்தான் தெரியாது? நான் ஏன் முதல்வராக கூடாது என்று கிண்டலாக முடித்திப்பார்.

ஜாதி எனும் அரசியல் தீமை கட்டுரையில் மாரடைப்பு வருகின்ற போது நம்முடைய ஜாதி மருத்துவரிடம் தூக்கிக்கொண்டு போ என்று எந்த நோயாளியும் சொல்வதில்லை. ஆனால் மற்ற நேரங்களில் எல்லாம் நாம் ஜாதி குறித்துப் பேசுகிறோம். ஜமீன்தார்களின் கோரப்பிடியில் இருந்து உழவர்களை விடுவித்து ரயத்துவாரி முறை வரிவிதிப்பை மாற்றி, உழவர்களை உயர வழி கண்ட தாமஸ் மன்றோ என்று அண்ணாசாலை நின்று கொண்டிருக்கிறார். .அவர் எந்த ஜாதியையும் பார்க்கவில்லை. ரிப்பன் எங்கள் அப்பன் என்கிறோமே அவர் எந்த ஜாதி பார்த்து  எதுவும் செய்யவில்லை. சாதி என்பது சமூக தீமை என்று சொல்லப்பட்டது இன்று ஜாதி கொடிய அரசியல் தீமை ஆகிவிட்டது.

இன்றைய அரசியல் நிலை குறித்து துக்ளக் ஆண்டு விழாவில் அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அதிகம் பேர் அக்காணொளியை மீண்டும் மீண்டும் கேட்டுள்ளனர். அதேபோல் இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் தலைப்புக்கு ஏற்ற வகையில் தான் கொண்ட கொள்கையை ஏற்று.. அதற்கு உரிய வகையில் விளக்கமும், அடுக்கடுக்கான முறையில் கட்டுரைக்கு நியாயம் கற்பித்து.. முக்கியமாக ஒவ்வொரு சொற்களுக்கும் தமிழ் சொற்களையே பயன்படுத்தி உள்ளார். வடமொழிச் சொற்கள் அல்லாமல் பேசுவதைப் போலவே எழுத்திலும் தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார் பழ கருப்பையா.

#ரசித்தது

*எளிய மனிதன் கூட தன் விருப்பத்திற்கு ஒரு கடவுளை உருவாக்கி கொள்ள முடியும். வழிபாட்டு சுதந்திரம் தான் இந்த சமயங்களின் சாரம்.

*எலி பூனை பிடித்ததாகவும் பூனை ஓலமிட்டு நியாயம் கேட்க உச்சநீதிமன்றத்தை நாடியது ஆகவும் ஒரு இடத்தில் கூறுகிறார் பூனைகள் எல்லாம் பூனைகளும் இல்லை எலிகள் எல்லாம் எலிகளும் இல்லை

*குனி குதிரை இறை வேண்டும் என்கிறார்கள் முடியாது என்று சொன்னால் கண்டனம் தெரிவிக்கிறார்கள். குதிரை தெரிவிக்க வேண்டிய கண்டனத்தை அதன்மீது ஏறுகிறவன் தெரிவிக்கிறான் என்ன கொடுமையடா.

*தின்ற சோற்றுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா

*பாம்பு தின்கிற  ஊரில் நடுத்துண்டம் நமக்கு

*பலமுறை மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டன.மாநில ஆளுநர்கள் கங்காணிகளாக செயல்பட்டனர்.

*என்னை பொய்மையிலிருந்து வாய்மைக்கு வழிநடத்து இருளிலிருந்து ஒளிக்கும் இறப்பிலிருந்து இறப்பின் மைக்கும் வழிநடத்து

*எந்த கோரிக்கைக்கும் மோனாலிசா வுக்கு நிகரான ஒரு புன்னகையை அரசியல் தலைவர்கள் அளிக்கிறாரகள்

*சுரண்டுவதற்கு அந்த மந்திரி வைத்திருக்கின்ற பெயர் கட்சி நிதி

இதுபோல் எண்ணற்ற கிராமத்து சொலவடை களையும் சொல்லும்போது படிப்பதில் ஆர்வம் ஏற்படுகிறது 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment