Monday, 10 May 2021

Nayattu (மலையாளம்) விமர்சனம்*மணி




நல்ல புத்தகத்துக்கு சிறகுகள் உண்டு நிச்சயம் பறந்துவிடும்னு ஜெயகாந்தன் சொல்வார்.அதேபோல் தான் நல்ல படத்துக்கும்.நேற்றே நெட்ப்ளிக்சில் வந்த போது பாசிட்டிவ் விமர்சனம் வந்துவிட்டது.அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்த்தேன் ஏமாற்றவில்லை.

ஒரு போலிஸ் கதை தான். ஆனால்.ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டோ, போலிஸ் இல்ல பொறுக்கினு பன்ச் பேசும் போலிஸ் இல்லை.சாதாரண மிடில்க்ளாஸ் போலிஸ் 3  பேரின் வாழ்க்கை தான் கதை.ஒரு எளிய சம்பவம்..அதை சுற்றி சுருக்குமடி வலைபோல் திரைக்கதை..இறுதியில் நெகிழும் ஒரு க்ளைமேக்ஸ்..இதைக் கொண்டு சேட்டன்கள் சிக்ஸ் அடித்துள்ளனர்.

#கதை

குஞ்சக்கோபோபன் காவல் துறையில் ஜீப் ஓட்டுநர்.தந்தையும் போலிஸ்..சில ஆண்டுக்கு முன் விபத்தில் இறந்தவர்.தாயாருடன் எளிமையான வாழ்க்கை. புதிதாய் அந்த ஸ்டேசனுக்கு வருகிறார்.

ஜோஜு ஜார்ஜ் அந்த காவல் நிலைய உயரதிகாரிகளில் ஒருவர்.மகளை போட்டிகளில் பங்கேற்க வைத்து மகிழும் பாசக்கார தந்தை.ஒரு நிமிசம் வீட்டில் போன் எடுக்கவில்லை என்றாலும் வீட்டுக்கே போய்விடுவார்.

நிமிஷா சஜெயன் தந்தையை இழந்த பெண் காவலர்.முதல் 30நிமிடங்கள் இவர்கள் வாழ்க்கையை மட்டும் சொல்லி நம்மையும் இவர்களுடன் வாழ வைத்திருக்கிறார். 

தேர்தல் நேரத்தில் காவல் நிலையத்தில் அனுமதிகேட்க வரும் குரூப்புடன் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் ஹீரோவுக்கு தகராறு வர லாக்கப்பில் வைத்து வெளியேவிடுகின்றனர். தேர்தல் நேரம் என்பதால் மீடியா அதை பெரிதுபடுத்துகிறது.உடனே அவரை  விடுதலை செய்கிறது போலிஸ். இதை மறந்து ஒரு திருமண விழாவில் குடித்துவிட்டு அக்கா பையன் வேறு ஜீப் ஓட்ட 4 பேரும் வர வழியில் ஒரு விபத்து.அந்த விபத்தில் இறக்கிறார் காலையில் தகராறு செய்த நபர்..

போலீஸ் துரத்த..மீடியா பெரிதுபடுத்த..தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகளின் அழுத்தம் என அத்தனையும் துரத்த மூவரும் ஓடுகிறார்கள்.நிரூபிக்க எந்த வழியும் இல்லாமல்  இறுதியில் என்ன ஆனது என்பதை நெகிழ்ச்சியான க்ளைமேக்ஸில் முடிச்சை அவிழ்த்திருக்கிறார் இயக்குநர் martin prakkat

#டின்ச்

*அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு விடுப்பு கேட்கும்போது தன் இயலாமையை நொந்து கொள்வதும், இந்தபெண் ஓகேவானு கேட்கும் போது ஜீப்புக்குள் வெட்கப்படுவதும், இறுதிக்காட்சியில் கதறுவதும் குஞ்சக்கோபோபன் கச்சிதம்

*நிமிஷா கிரேட் இந்தியன் கிச்சனில் நடித்ததை விட முதிர்ச்சி.ஒரு பெண் இப்படி ஓட வேண்டியதாய் உள்ளதே என்ற அவஸ்தையையும், இறுதிக்காட்சியில் கையெழுத்து போடமுடியாது எனும் போது நிமிர்ந்துநிற்கிறார்.எந்த வித சலனமும் இன்றி துரோகியாக மாட்டேன் என நினைத்து செல்கிறார்.

*ஜோஜூ ஜார்ஜ் நடிப்பு அசுரன் என்றே சொல்லலாம்.போலிசாகவும், தந்தையாகவும், குடித்துவிட்டு பேப்பர் செய்தியை காண்பிக்கும்போதும், இறுதியில் அசால்டாய் லுங்கி மாற்றி சென்று நடக்கும் போதும்.. ஜோசப் படம் போல இதிலும் சிங்கில் பாலில் சிக்ஸ் அடித்துபடத்தை வெற்றி பெறச் செய்துள்ளார்.

*இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. கழுகுப்பாதையில் மூணாறின் அழகியலையும், தப்பித்துச் செல்லும் படபடப்பை நமக்கு தருகிறார் ஒளிப்பதிவாளர்.

ஒரு யதார்த்தசினிமாவை த்ரில்லுடன் சொல்லியிருக்கிறது இப்படம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment