#RM314
5/100+
#தமிழ் இலக்கிய வரலாறு
-மு.வரதராசன்
தமிழ் மொழியின் இலக்கிய வரலாறு மு.வரை தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக எழுதி விட முடியாது. சிறுகதை ஆனாலும் சரி, நாவலானாலும் சரி, எந்த ஒரு இடத்திலும் சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் மேற்கோள் கூறிவிடும் திறமை அவரிடம் எப்போதும் உண்டு. தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கூறும்போது 12 தலைப்புகளில் முதலாவதாக தமிழ்மொழியின் சிறப்பினையும் இலக்கண வளமையையும், தமிழ் மொழியின் எழுத்து மற்றும் சொற்களின் முக்கியத்துவத்தையும், தனித்தமிழ் இயக்கம் உட்பட திராவிட மொழிகளில் தனிச்சிறப்பு வாய்ந்த தமிழ் குறித்து விரிவாகக் கூறியுள்ளார்.
தமிழ் இலக்கியத்தையே பழங்காலத்தில் நீதி இலக்கியம் சங்க இலக்கியம் காப்பியங்கள் எனவும், இடைக்காலத்தில் பக்தி இலக்கியம் காப்பிய இலக்கியம் உரைநூல்கள் புராண இலக்கியம் என்றும், இக்காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு தோன்றிய இலக்கியங்களையும் மிக விரிவாக சொல்லியுள்ளார்.
சங்க இலக்கியத்தை கூறும் முன்பு சங்கம் என்ற பெயர் இக்காலத்தில் 4,5 ஆம் நூற்றாண்டில் சமண சமயத்தைச் சார்ந்த துறவிகள் தமிழ்நாட்டில் சங்கம் ஏற்படுத்திய கல்வித் தொடர்பு இருந்ததாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், முதல் இரண்டு சங்கங்கள் குறித்த வரலாறு, மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஊக்கத்தினால் சங்கம் சிறப்புற வளர்ந்ததும் கூறி சங்க இலக்கியத்தை சொல்லியுள்ளார்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் கல்வி பற்றி கூறிய ஒரு பாடலை சொல்லி 'வேண்டிய உதவிகள் செய்தும் மிகுதியாக பொருள் கொடுத்தும் எவ்வாறேனும் கல்வி கற்பது நல்லது. பணிந்து பின் நிற்பதை பற்றி வெறுப்பு கொள்ளாமல் கற்றோரை அணுகி, வணங்கி கற்றுக்கொள்ளவேண்டும். கீழான குடும்பத்தில் பிறந்த ஒருவன் கல்வியறிவில் சிறந்து விளங்கினால் மேலான குடும்பத்தில் பிறந்தவனும் அவனுக்கு பணிந்து போவான் என்ற பாண்டிய மன்னனின் பாட்டில் கூறியுள்ளதாக சொல்லியுள்ளார்.
நீதி நூல்களில் திருக்குறள் பற்றியும் திருக்குறளின் சிறப்பு பற்றியும் அதில் அறம் குறித்து பாடிய திருக்குறளையும், நாலடியார் பாடல்களையும் மற்ற நூல்கள் பற்றி கூறும்போது பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள நூல்களையும் சொல்லியுள்ளார்.
இரட்டை காப்பியங்கள் பற்றி சொல்லும்போது சிலப்பதிகாரத்தில் உழவர்களின் தொழிலோடு இயைந்த பாடல்களாகிய விதை விதைக்கும் பாட்டு, களைகட்டல் பாட்டு, அறுவடை பாட்டு ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிட்டு இருப்பதால் இக்காப்பியத்தை மக்கள் காப்பியம் என்று அழைக்கிறார்கள். சேர மன்னன் இமயத்தை வென்று திரும்பும் போது நான்கு வகை நிலங்களில் வாழும் தொழிலாளிகள் பாட்டுக்களை பற்றியும் நான்குவகை குறிப்புகளைத் தந்துள்ளார்.
பக்தி இலக்கியங்களில் சைவர்களும் வைணவர்களும் குறிப்பிட்டதோடு பல்வகை நூல்கள் பகுதியில் கலம்பகம் மற்றும் பரணி பற்றி குறிப்பிட்டுள்ளார். பரணி பற்றி நாம் தெரிந்தவைதான். 11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் குலோத்துங்கன் அனந்தவர்மன் சோடகங்கன் ஆண்டுவந்த கலிங்க நாட்டின் மீது படையெடுத்தான் சோழனின் படைத் தலைவன் கருணாகர தொண்டைமான். சோழ அரசனையும் படைத்தலைவனையும் புகழ்ந்து பாராட்டி இயற்றப்பட்ட நூல் கலிங்கத்துப் பரணி. தனியே ஒரு போர் பற்றி எழுந்த பெரு நூல் இது. ஆயிரம் யானைகளை போர்களத்தில் கொன்று வெற்றியை நிலைநாட்டிய ஒருவன் வீரன் ஒருவனை புகழ்ந்து பாடுவது பரணி. தோற்ற நாட்டுப் பெயரால் நூல் வழங்குவது மரபானது. அதனால் கலிங்கம்.
இரண்டு இரண்டு அடிகளால் ஆன தாழிசை என்னும் செயல் வகையால் இடம்பெற்றது. உதாரணமாக எடும்எடும் எடுத்ததோர் இகழ்ஒலி கடல் ஒலி இகக்கவே
விடு விடு விடு பரி கரிக்குழாம்
விடும் விடும் என ஒளிமிகைக்கவே
என்ற பாடல் பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்புத் தமிழ் பாடத்தில் மனப்பாடபாடலாய் இருந்தது. இதுபோல நூற்றுக்கணக்கான செய்யுள்கள் விரைவும் எடுக்கும் உடையனவாய் உணர்ச்சி வேகத்திற்கு ஏற்றவாறு ஒலிக்கும்.
போர்க்களத்தில் வீரர்கள் வழிபடும் தெய்வம் காளி. காளியை சுற்றியுள்ள கூட்டம் பேய்களின் கூட்டம். காளிக்கு உரிய நட்சத்திரம் பரணி. அதனால் நூலுக்கு பரணி என்று பெயர் அமைந்தது என்று கூறுவார்கள்.
கம்ப ராமாயணத்தைப் பற்றி சொல்லும் போது ராவணன் போர்க்களத்தில் விழுந்து மாண்டு கிடக்கும் காட்சியை கூறுமிடத்தில் இவ்வாறு 'அடங்க' என்ற ஒரு சொல்லை திரும்பத் திரும்ப கூறி அதன் ஒலியால் இராவணனது வீரம் முதலிய எல்லாம் அடங்கிய காட்சியை நமக்கு பதிய வைக்கிறார்.
"வெம் மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம் அடங்க வினையும் வீயத் தெம் மடங்க பொரு தடக்கைச் செயல் அடங்க
மயல் அடங்க ஆற்றல் தேய
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலைஅடங்கச் சாய்ந்த நாளின் மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான்
உயிர்துறந்த முகங்கள் அம்மா"
பொல்லாத சிங்கம் கோபம் கொண்டு எழுவது போன்ற ராவணனுடைய சினம் அடங்கியது; மனம் அடங்கியது; வினையும் அழிந்தது; பகைவர்கள் அழிவதற்கு காரணமாக நீண்ட கைகளில் வீரச்செயல் அடங்கியது அவனுடைய காம மயக்கம் அடங்கியது ;ஆற்றல் தேய்ந்தது;தம் புலன்கள் அடங்கிய முனிவர்களையும் தலைமை அடங்குமாறு தவநிலை அடங்குமாறு அடங்கிய அந்தக் காலத்தில் ராவணன் முகங்கள் பெற்றிருந்த பொலிவை விட, இன்று அவன் உயிர் துறந்து விழுந்து கிடக்கும் போது அந்த முகங்கள் மூன்று மடங்கு பொலிவு பெற்று விட்டன என்கிறார்.
இவ்வாறு வரலாறு பற்றி மட்டும் கூறாமல்.. அந்த தமிழ் பாடல்களில் தன்னை கவர்ந்த பாடல்களை ஆங்காங்கே குறிப்பிடும் போதும், சில முக்கியமான பாடல்களை மிகவும் சிலாகித்து கூறும் போதும் நமக்கும் படிப்பதில் ஆர்வம் வருகிறது. தமிழ் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போது இந்த புத்தகம் வாசிப்பது மிகவும் உபயோகமானதாக இருக்கும்.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment