Monday, 25 September 2017

பா.ரா

💥ஒவ்வொரு ஓணம் வருகிறபோதும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடை நினைத்துக்கொள்கிறேன். நான் அவரது கவிதைகள் எதையும் படித்ததில்லை. பெரிதாக அவரைப் பற்றி ஏதும் தெரியாது - பெரிய ஆள் என்பதைத் தவிர.

ஒரு ஓணத்தன்று தாம் சாப்பிடாதிருந்ததைப் பற்றியும், ஏதோ ஒரு வீட்டுப் படியேறி பசியைச் சொல்லப் போக, பதறி இலை போட்டு உணவிட்ட பெண்மணியைப் பற்றியும் அவர் எழுதிய ஒரு கட்டுரையை மட்டும்தான் படித்திருக்கிறேன். அதைப் படித்தும் எத்தனையோ பல வருடங்களாகிவிட்டன. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட இந்தத் தினத்தில் அவரை அக்கட்டுரை நினைவூட்டுகிறது.

அதில் அவர் பசியைத்தான் சொல்லியிருப்பார். பசிக்கு உணவிட்ட பெண்மணியைப் பற்றித்தான் எழுதியிருப்பார். ஆனால் அக்கட்டுரையின் சாராம்சம் பசியோ, உணவோ, பண்டிகையோ அல்ல. ஓர் உயிர் இன்னொரு உயிரின் மீது கவியும் விந்தை என்பார் சுரா. அது, இதில் நிகழ்ந்திருக்கும்.

*நல்ல எழுத்து இத்தகையது. வாசித்தபோது உண்டான உணர்வு, கட்டையில் போகிற காலம் வரை அதன் கனல்த்தன்மை குறையாமல் நினைவை நிறைத்து அடங்கும்.*

கேவி ஷைலஜா மொழிபெயர்த்த பாலச்சந்திரனின் சிதம்பர நினைவுகள் நூலில் அக்கட்டுரை உள்ளது. தேடிப் படித்துப் பாருங்கள்.

- பா.ராகவன்.

No comments:

Post a Comment