Monday, 25 September 2017

படித்தது

தமிழ் எழுத்தாளன்

குழந்தைகள் இலக்கியம் என்பது ஒரு தனி உலகம். பெரியவர்களுக்கான உலகின் தர்க்க நியாயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது அது. குழந்தை எழுத்தாளன் ஒருவகையில் தானே குழந்தையாகிவிடுகிறான். காலமெல்லாம் குழந்தையாக இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்!

- வாண்டுமாமா

வயதானவர்கள், வளர்ந்தவர்கள் எப்போதுமே எவற்றையும் தாங்களாகவே புரிந்துகொள்ள மாட்டார்கள்; ஆக, குழந்தைகளுக்கு, எல்லா விஷயங்களையும், எப்பொழுதும் இவர்களுக்குத் திருப்பித் திருப்பிச் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பதில் ஒரே ஆயாசமாகவே இருக்கும்.

- ‘குட்டி இளவரசன்’ நாவலில்

ஆதிவாசி சமூகங்கள் பெரும்பாலும் குழந்தைகள் பெரியவர்கள் என்ற வேறுபாட்டினை தங்கள் ஊடாட்டத்தினுள் கொண்டு வருவதில்லை. குழந்தைகளும் பெரியவர்களாகவே பெரும்பான்மையான சூழல்களில் நடத்தப்படுகின்றனர். விளையாட்டுகளையும், கதை சொல்லல்களையும், நடனங்களையும் பயனற்ற கேளிக்கைகளாக ஆதிவாசி சமூகங்கள் கருதுவதில்லை; வாழ்தலின் உன்னத கணங்களாகவே அவை கருதப்படுகின்றன. ஆதிவாசிகளின் கதை சொல்லலின்போதும் விளையாட்டின்போதும் மரம், செடி, கொடிகள், வான், நிலம், நீர், நதி, கடல், காடு, வன விலங்குகள், மனிதர்கள் என அனைத்தும் ஒரே வகை ஜீவன் ததும்பும் யதார்த்தமாகின்றனர். தான் வேறு இயற்கை வேறு என்ற பிரிவினை முற்றிலுமாக அழிக்கப்பட்டதாய் உணர்ந்த நிலையிலேயே கதை கேட்டலும் விளையாட்டும் நடக்கின்றன; அதே சமயத்தில் விளையாட்டின் வெற்றி தோல்விகள் சமூகத்தின் பிற தளங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. சடங்குகளாக கதைசொல்லல்களும் விளையாட்டுகளும் அந்நியர்களையும் வரவேற்பதாகவும் ஆதிவாசி சமூக உள் ஒப்பந்தங்களின் இறுக்கத்திற்கு அப்பாற்பட்டவையாகவும் இருக்கின்றன. கற்பனையும், புதுமையும், குழும வரலாற்றின் சூட்சும பதிவுகளும் குழந்தைகளின் விளையாட்டுக்களிலும் கதைகளிலும் இருப்பதாக ஆதிவாசி சமூகங்கள் நம்புகின்றன. ஆதிவாசி சமூகங்களின் இத்தன்மைகள் பரவலாக்கப்பட்டுவிட்ட நாட்டுப்புற கதைகளிலும்கூட காணக்கிடைக்கின்றன.

- எம்.டி.முத்துக்குமாரசாமி

No comments:

Post a Comment