Monday, 25 September 2017

எழுத்தறிவு தினம்

செப்டம்பர்-8.உலக எழுத்தறிவு நாள்.
-ச.மாடசாமி

அறிவொளி நினைவு வந்து அலைமோதும் நாள்.
கல்லூரி வகுப்பறைகளில் கற்பனையைக் கிளப்பி விடப் பெரும்பாடு படுவோம்.சிறு சிறு தூறலிலும் சினிமாவே நிரம்பிக் கிடக்கும்.
அறிவொளி ஒரு வாய்ப்பாக வந்தது. புறப்பட்டோம்.
சும்மா புறப்பட்டிருக்கலாம்.'அறியாமை இருள் அகற்றப்' போவதாகச் சொல்லிப் புறப்பட்டோம்.
படிக்க வந்த எளிய கிராம மக்களின் பேச்சும் பாட்டும் கதையும், வறண்ட எங்கள் புத்தக மூளைகளுக்குப் புதுப் பரவசம்!
'அண்டாப் பணமும் பணியார மழையும்' - கதையில் எத்தனை சாமர்த்தியமான கற்பனை?
விடுகதை இன்னொரு உச்சம். "பிணம் வேகும்; துணி வேகாது. அது என்ன?" என்பார்கள். விடை 'இட்லி'யாம்!
சொலவடைகளில் கற்பனையோடு நக்கலும் இருக்கும்."என்னையும் தூக்கிவிட்டு எங் கோமணத்தையும் கட்டிவிட்டா, ஒம்பது பேரை வெட்டிச் சாய்ப்பேன்னானாம்!"
மறுபுறம் பாடல்களில்-குறிப்பாக மணவாழ்க்கை குறித்த பாடல்களில்- மனதைப் பிழியும் சோகம்!
"தேளடையும் வாசலில யம்மா தெரிஞ்சிருந்தும் என்னைக் கொடுத்திட்டியே!"
தொண்டர்கள் இன்னொரு சிகரம். "கமுக்கமாச் சொன்னா 'அ'. கத்திச்சொன்னா 'ஆ' "என்று புது இலக்கணம் படைப்பார்கள்.
எங்கள் வகுப்பறைகளையே குப்புறக் கவிழ்த்துத் தூசி தட்டிக் கொடுத்தது அறிவொளிதான்.
அறிவொளி முடிந்து வகுப்பறைக்குத் திரும்பும் போது,சூரியனுக்குப் போய் கை நிறைய வெளிச்சத்தை அள்ளிக்  கொண்டு வந்த சந்தோசம் எங்களுக்கு.
அறியாமை இருளகற்றப் புறப்பட்டவர் நாங்கள்...
உண்மையில் யார் இருளை யார் அகற்றியது?....,

No comments:

Post a Comment