#Reading_Marathon2025
#25RM055
Book No:21/100+
Pages:-119
மற்றாங்கே
-கலாப்ரியா
நெல்லை மாவட்டம் வீரத்துக்கு பெயர் பெற்ற பல விடுதலை வீரர்களை தந்ததும் பெருமை அடைந்தது அதன் எச்சமாக கவிஞர்களையும் படைத்திட்ட பெருமை நெல்லைக்கு உண்டு. கல்யாண்ஜி வண்ண நிலவன் கலாப்ரியா மூவரும் நெல்லை பற்றி பெருமை பேசும் போது ஆகா நாமும் நெல்லையில் பிறந்திருக்கலாமே என்ற எண்ணம் வரும். உண்மையில் முதன் முதலில் தாமிரபரணியில் கால்நனைத்த போது கல்யாண்ஜியை தான் நினைத்துக் கொண்டேன். இந்த ஈரத்தை தானே இவர்கள் தன்னுடைய கவிதைகளில் வாசக மனங்களை தொட்டிருப்பார்கள் என எண்ணியதுண்டு. நல்ல வரிகளுக்கு சிறகுகள் உண்டு. அவை விரைவில் பறந்து விடும் என்று சொல்வார்கள். கலாப்ரியா அவர்களின் கவிதை பட்டிதொட்டி எங்கும் ஒலித்த ஒன்று "சலுகை" எனும் தலைப்பில் வந்த 'அழகாயில்லாததால் /அவள் எனக்குத்/ தங்கையாகி விட்டாள்/ என்பதுதான். இது போன்ற கிளாசிக் கவிதைகள் புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறது இத்தொகுப்பில் உண்டு.
அவளின் பார்வைகள் என்னும் கவிதையில் காயங்களுடன்
கதறுடன் ஓடி
ஒளியுமொரு பன்றியைத் தேடிக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்
என பெண்களின் பார்வைகள் ஆண்களின் மனதை கொத்தும் வித்தையை சொல்லி இருப்பார் சிறிய நறுக்குகளில்.
என்ன செய்தும்/ இவன் காலடியில்/ தலை வைத்து பணிய மறுக்கிறது நிழல் /இவனின் நிழல்
என ஒருதலை காதலை சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருப்பார்
ஈக்களுடன் மட்டுமே தூங்கும் /அனாதை பிணங்களின் உலகில்/ இந்த பைத்தியக்காரியை சில ஆவியற்ற பூக்களும் மொய்த்திருக்கின்றன/ என நஷ்ட ஈடு கவிதையில் சொல்லி இருப்பார்.
இயல்பாய் நடக்கும் ஒரு விஷயங்கள் சாதாரண மனிதனுக்கு இயல்பாக தான் தெரியும். ஆனால் ஒரு கவிஞனின் பார்வையில் அது பேருண்மையை உலருக்கு உணர்த்துகிறது அவர் வழியே சொல்கிறது. அந்த வழியை அஞ்சலி என்னும் தலைப்பிட்ட கவிதையில்
உயர்ந்த கொடி மரத்தின்
உச்சியில்
புது கயிற்றைத்
தொடுக்கப் போன
25 வயது பையன்
தவறி விழுந்து
கடைசி தியாகியானான்"
கொடிக்காக உயிர் நீத்த குமரனை நினைவுபடுத்துகிறது கவிதை.
வேலை இல்லாதவனின் மனம் எல்லாவற்றையும் ரசித்து விட்டு இறுதியில் பெருமூச்சோடு சொல்லும்படி கவிதை என இறுதியில்
"என் துயரங்களுக்கும் 26 வயசு முடிஞ்சு போச்சு" என்று முடித்து இருப்பார் முதுகலமான கவிதையின் இறுதியில் கோரமான உண்மையின் முகமும் நமக்குத் தெரிய வருகிறது.
வேலையில்லா திண்டாட்டத்தை எண்பதுகளின் ஆரம்பங்களில் பேசுபொருளாக இருந்தது. வெளிச்சமற்ற சங்கீதங்களின் கதையில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞன் பற்றி சொல்லும் போது கடைசியில்
கனத்து நகன்ற
நாளெண்ணிப் பார்க்கையில்
கவரில் தூங்கும்
பட்டங்கள்
இன்னும் கணக்கும்
என வேலையில்லாதவன் ஏக்கக் குரலை பதிவு செய்திருப்பார்.
மழை பிடிக்காத கவிஞர்கள் யாரும் இல்லை என சொல்லலா.ம் மழையை பாடுபொருளாக வைத்து பாடும் கவிதைகள் ஏராளம். கவிஞரும் மழை வேணும் என வார்த்தைகளில் வேண்டி நிற்கிறார்
"அந்தப் பரபரப்பு சுகத்தை
எல்லாம் மனசுலையே
ரசித்தபடி நனைகிறேன்
என் கவிதைகளுடன்
மழை எதையும்
இழுத்துப் போகட்டும்
மழை வேணும்"
தேசியக்கொடிகளும்
நனைய
மழை
பகலிலும் பெய்யணும்.
என முடித்திருப்பார்.
அற்புதங்கள் எதுவும் இல்லாத இயல்பான சூழலில் கூட சில வரிகள் படிக்கும் போது உற்சாகம் கொள்ள இயலும். எதார்த்த நிகழ்வுகளில் கவிதைகள் முளைத்து பின்பு அற்புதத்தை நோக்கி பயணிக்கும் அதுவே கவிதையின் சிறப்பு. சாதாரண வரிகளில் கூட வாழ்வை குறித்த அழுத்தமான பார்வையை வாசகன் காண்கிறான். அதன் மூலம் புதிய அனுபவத்தை தனக்குள் ஏற்படுத்திக் கொள்கிறான். அல்லது ரசித்துக் கொள்கிறான். ஜன்னல் வழியே தான் காணாத உலகத்தை கவிதைகளின் வழியே காண்கிறான் அதில் இன்பமும் கொள்கிறான். கவிதைகளைப் பொறுத்தவரை நல்ல கவிதைகள் பிறரை எழுதத் தூண்டுகிறது. சில கவிதைகள் எண்ணி பிரம்மிக்க வைக்கிறது. வாழ்வின் நெருக்கடியில் சூழலின் இறுக்கத்தில் கவிதைகள் இன்றைய ரீலீஸ் பார்ப்பது போல நிம்மதியை தருகிறது. சிரிக்க வைக்கிறது. மனம் கணக்க வைக்கிறது. ரசிக்க வைக்கிறது. இதேபோல் நாமும் எழுதலாம் என தூண்ட வைக்கிறது .அதுவே கவிஞனின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment