Friday, 21 March 2025

புத்தகம்-23


#Reading_Marathon2025
#25RM055

Book No:23/100+
Pages:-288

ரொம்ப கெத்தான ஆளா நீங்க?
-ஜீயோ டாமின்

இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகம் இது. இந்த புத்தகம் வாங்கும் போது இதன் ஆசிரியரையும் சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. பூவுலகின் நண்பர்கள் என்றாலே அனைவரையும் பயமுறுத்துவார்கள் வார்த்தைகளில் அச்சப்படுத்துவார்கள் என்று பலரும் தவறாய் எண்ணி வருகின்றனர். தற்போது சூழலில் எவ்வாறு உள்ளது என்பதனை எப்போதும் நினைவூட்டிக்  கொண்டும் எதிர்காலத்தில் நடைபெறும் மாற்றங்களை தங்களின் எழுத்துக்கள் வாயிலாகவும் உரக்க சொல்லி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலம் மாறும் வேகத்தை விட தொழில் நுட்பங்கள் வேகமாக முன்னேறி வருகின்றன அதற்கு விலையாக நாம் பலவற்றை இழந்து வருகிறோம் நுகர்வு உற்பத்தி என்பது எல்லாம் மிகையாகி வருகிறது. இந்தத் தொகுப்பில் சிந்திக்க வைக்கும் வகையில் 29 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

2050 ஆம் ஆண்டில் ஒருவன் பூமியை பற்றி எண்ணுவது தான் அல்லது எழுதும் டைரி குறிப்புகள் தான் முதல் கட்டுரையாக அமைந்துள்ளது. ஐந்தாம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் கூட இது போன்ற ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நெகிழி வேண்டாம் உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொன்னால் அதனை வெறுமனே சொல்லாமல் அதற்கான காரணத்தையும் தகவல்களையும் தரவுகளையும் மேற்கோளாக காட்டும் போது ஆமாம் தானே என்று படிப்போரையும் எண்ண வைக்கிறது.

குப்பைகள் கொட்டுவது முதல் பசுமை இல்ல வாயுக்கள் சூடாவது என பல இயற்கைக்கு விரோதமான பல செயல்களை நம்முன் காட்சிப்படுத்துகின்றனர். நெகிழி சாலைகள் பயன்படுத்துவதை ஊக்கு விக்கலாமா என்றால் அது நெகிழியை அப்படியே குப்பைகளில் கொட்டுவதை விட ஆபத்தானவை என்பது பெட்டி செய்தியில் விளக்கியுள்ளார்.

மினிமலிச கொள்கையை விளக்குவதுடன் தேவைக்கு அதிகமான பொருட்கள் வாங்கும் நுகர்வு கலாச்சாரத்தையும் சாடியுள்ளார். எந்த பொருட்களாலும் நம் மதிப்பையோ மகிழ்ச்சியோ அதிகரிக்க முடியாது. எந்த பொருட்களாலும் நமக்கு மகிழ்ச்சியை கொண்டு வர முடியாது .பொருட்கள் மனிதருக்கும் இந்த பூமிக்கும் சுமை பொருட்களற்ற வெறுமை தரும் எளிமை என்பது வறுமையல்ல மாறாக வளமை என்று கூறுகிறார்.

சூழல் பொறுப்புள்ளவராய் உணர்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை பற்றி கூறும்போது முதலில் மறுபரிசீலனை செய்யுங்கள் என்கிறார் .நாம் செய்யும் செயல்களை சுற்றுச்சூழல் தாக்கத்தின் அடிப்படையில் சீர்தூக்கி பார்க்கவும், பரிசீலனை முடிவில் அத்தியாவசியமாக தேவையற்றதாய் உணரும் அத்தனை பொருட்களையும் புறக்கணிக்கும்படியும் சொல்கிறார். பின்பு புறக்கணிக்க இயலாத பொருட்கள் இருப்பின் அதனை குறையுங்கள் என்கிறார். நாம் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலும் நீரை வீணடித்து பசுமை இல்ல வாயுக்களை உமிழ்ந்து சூழ்நிலை மாசு படுத்தி அடைவதை பழுது பார்த்து தொடர்ந்து பயன்படுத்துங்கள் என்கிறார்.

 தேவை முடித்த பின்னர் மாற்றுப் பயன்பாட்டுக்கு உட்படுத்தி அதன் ஆயுளை அதிகாரியுங்கள் என்கின்றனர். அதன் பின்பு சமூகத்தில் ஒருவருக்கொருவர் பொருட்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் நாம் குறைவான நுகர்வுத் திறனை அடையலாம் என்கின்றனர். பின்பு முடிந்தவரை பொருட்களை மறுசுழற்சி செய்யலாம் .இவ்வாறு எல்லாம் செய்தால் இறுதியாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம் என்கிறார்கள்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறையுங்கள்  என்று சொல்கிறார்களே தவிர அதன் உற்பத்தியை குறைப்பதாக இல்லை. அங்கு தான் ஒளிந்துள்ளது கார்ப்ரேட் மயம். பில்கேட்ஸ் எழுதியுள்ள காலநிலை பேரழிவை எப்படி தடுப்பது போன்ற புத்தகங்களை பற்றியும் சொல்லி உள்ளார்.

பொருட்கள் வாங்கிக் குவிப்பதை சுட்டிக்காட்டும் வகையில் பொருட்கள் பணத்தை வீணாக்குகின்றன. உறவுகளை விலக்குகின்றன. பொருட்களால் பெறப்படும் கெத்து ஒரு சமூக அநீதி. அது மதிப்பை அன்றி ஏளனத்தையும் புறக்கணிப்பை மே பெற்றுத் தரும். மனிதர்களை உள்ளடக்கிய நம் சூழலின் மீதான காதல் தான் உண்மையாக தலைநிமிறச் செய்யும் கெத்து என்று புத்தக தலைப்புக்கு ஏற்ற வகையில் கட்டுரை அமைந்துள்ளது.

வளர்ச்சி என்ற பெயரில் நாம் கொடுக்கும் விலை அதிகம் என்பதனை ஒவ்வொரு கட்டுரைகளிலும் நாம் பார்க்க முடிகிறது. பாதிக்கப்படாத வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சி. அது இயற்கையை எப்போதும் சீண்டுவதில்லை. முன்னேறும் போது எந்தவித பாதிப்பையும் செய்யாமல் முன்னேற்றம் அடையும்போது அனைவருக்கும் ஆன வளர்ச்சி அங்கு ஏற்படுகிறது .அதை நோக்கிப் பயணிக்கும் வகையில் இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தையும் நாம் எண்ணிக் கொண்டு பயணித்தால் நம்முடைய வளர்ச்சியில் உண்மையிலேயே நல்ல வளர்ச்சியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment