வால் -சபரிநாதன்
---------------------------------------------
1)மின்மினியே என்ற கவிதையில் இருந்து தொடங்குவோம்.
"யார் தொட்டு எழுப்பியது உனை (1)
எந்தக்கரம் உனக்கு பார்வை தந்தது (2)
எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கி பாய்கிறாய் (3)
கனவா நனவா கருத்தவெட்டவெளியில் (4)
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய் (5)
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய் (6)
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய் (7)
எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய் (8)
பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில் (9)"
இந்த கவிதையில் இரண்டு பிரதிகள் இருக்கிறது. இந்த பிரதியில்
(1)வது வரிக்கு பிறகு (5)ம் வரி
(2)வது வரிக்கு பிறகு (6)ம் வரி
(3)வது வரிக்கு பிறகு (7)ம் வரி
(4)வது வரிக்கு பிறகு (8)ம் வரி
(5)வது வரிக்கு பிறகு (9)ம் வரி
என வாசித்தோம் எனில் மற்றொரு கவிதை பிரதி உருவாகிறது. இது கவனிக்கப்பட வேண்டிய உத்தி முறைமை ஆகும்.
2) சகமாணவர்கள் இவர்கள் என்ற கவிதையில் ஒரே வார்த்தையை தொடக்கமாக கொண்டு வரும் வரிகள் 19 இருக்கின்றன. இடையில் 19வரிகள் 'ஒருவர்' என்ற வார்த்தையால் தொடங்குகிறது. இப்படி செய்வதை Alliteration என்பார்கள். இந்த கவிதை ஆத்மாநாமின் நிஜம் கவிதையில் அமைந்திருக்கும் tautogram தன்மையை நினைவுபடுத்துகிறது. tautogram என்பது பத்தியின் அனைத்து வார்த்தைகளும் ஒரே எழுத்தில் தொடங்குவது. இது ஒரு தனித்துவ கவிதை வடிவம் ஆகும். இனி வருபவர்கள் இதை முயன்று பார்க்கலாம்.
3)அர்த்த மண்டபம் எனும் கவிதை இந்த தொகுப்பில் அதன் இறுக்கமான தன்மையாலும் படிமங்களின் நுட்பமான பயன்பாட்டு தன்மையால் இந்த கவிதை தனித்துவம் பெற்று காணப்படுகிறது. இந்த தொகுதியில் மற்ற கவிதைகளில் காணப்படும் எளிமை இங்கு ஏன் இல்லை என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். சபரிநாதன் தன் கவிதைகளின் எல்லையை இந்த கவிதையில் மீற முயன்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
4)கவிதையியல் குறித்த பார்வை ஆச்சர்யக்குறி என்ற கவிதையில் பதிவாகிறது .இந்தக்கவிதை வாயிலாக கவிதைகளில் நிறுத்தக்குறிகள், ஆச்சர்யக்குறி பயன்படுத்தாமல் இருப்பது பற்றி பேசப்படுகிறது. தற்கால கவிதைகளில் கடைசி வரியில் இரண்டு ஆச்சரியக்குறியிட்டு கவிதைக்கு போலியாக ஆச்சரியம் தருகிறது என்ற போக்கிற்கு மாறாக கவிதைகளில் நிறுத்தக்குறிகள் பயன்படுத்துவதை தவிர்ப்பது என்பது கவிதையின் முடிவிலா தன்மையை ஏற்படுத்த காரணமாக அமைகிறது. இந்த போக்கு தான் பல பிரதிகளை ஒரு பிரதிக்குள்ளாகவே உருவாக்க காரணமாக அமையும்.
5)சபரிநாதன் தாமஸ் ட்ரான்ஸ்ரோமரை மொழிபெயர்த்திருக்கிறார். அந்த மொழியாக்க நூல் உறைநிலைக்கு கீழே என்ற பெயரில் வெளிவந்துள்ளது. கவிஞர்கள் கவிஞர்களை மொழியாக்கம் செய்யும்போது யாரை மொழியாக்கம் செய்கிறார்களோ அவர்களுடைய தாக்கம் பெற்று விடுவது எப்படி என இனியான கவிதையியல் ஆய்வு அமையவேண்டும் என நினைக்கிறேன். சபரிநாதன் கவிதைகளில் தாமஸ் ட்ரான்ஸ்ரோமர் கவிதைகளில் நிலவும் கூர்மையான கவனித்தல் மற்றும் மிதமான ஒருவிதமான உருகல் தன்மை ஆகியவையை சபரிநாதன் கவிதைகளிலும் தென்படுகிறது . மேலும் உணர்ச்சி ரீதியாக பார்க்கும்போது சபரிநாதன் கவிதைகள் வாசகனிடத்தில் தன் மீதான ஈர்ப்பை உச்சமாக வைத்துக்கொள்கிறது. மேலும் சபரிநாதன் கவிதைகளில் தென்படும் அமைதி அவரது கவிதையின் தனித்துவம்.
6)மூளை பற்றிய சிந்தனைகள் , உருமாற்றம், பூஜ்யம் புள்ளி பூஜ்யம் ஒன்று அறிவு ஆகிய கவிதைகள் மூளை பற்றிய பாடுபொருளை எடுத்துக்கொள்கிறது. இந்த கவிதைகள் தனித்துவமானவை. ஒரு கவிஞன் ஒரு பாடுபொருளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் எனில் அவனுடைய மனநிலையை பற்றி இங்கே யோசிக்க வேண்டும். கவிதை உருவாக்க முறைகளில் மனநிலையின் தாக்கம் பற்றி பிராய்டின் கருத்துக்கள் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது .
The Relation of the poet to day dreaming என்ற பிராய்டின் கட்டுரை சொல்லும் கருத்துக்கள் இங்கே கவனம் கொடுக்க தக்கது.
7)வகுப்பிலே மிக அழகான பெண்,ஹாரன், மறதி, பழைய ஆண்டனா , வாழும் வலியது , மறதி, பல் மருத்துவரது ஞானம் , கழுதையை காணவில்லை- ஒரு தேவதைக்கதை என குறிப்பிடத்தகுந்த கதைசொல்லல் கவிதைகளும் இந்த தொகுப்பில் இருக்கிறது. அவை வெறும் கதை சொல்லல் என இல்லாமல் துல்லியமான காட்சி விவரணைகள் மூலம் கவனத்தை பெறுகின்றன .
இலக்கியத்தில் உரைநடையில் கவித்துவமும் கவிதையில் உரைநடையும் ஆதிக்கம் செலுத்துகிறது என சொன்ன பேயோனின் கருத்து இங்கு கவனிக்க தக்கது.
8)கொலாஜ்ட் கவிதையாக சபரிநாதன் உயிர்த்தெழுதலின் கீதங்கள் எனும் கவிதையை முயன்று வெற்றிக்கண்டிருக்கிறார். பாரதியின் வரியையும் பைபளின் வரிகளையும் பிணைத்திருக்கிறார் .
9)இது வெளியேறும் வழி அன்று என்ற கவிதையை Investigative Poetry எனும் வகைமையில் சேர்க்கலாம். இந்த கவிதை நம்மை துப்பறிய சொல்கிறது. வாசகனை கவிதைக்குள் பொருத்தி விடுகிறது.
Ed Sanders என்ற கவிஞர் வெளியிட்ட கவிதையியல் வகைமையே Investigative Poetry.அவர் முன்வைத்தது என்னவெனில் வரலாற்றின் எந்தவொரு பகுதியும் கவிதையாகலாம். கவிஞன் என்பவன் ஒரு துப்பறியும் அதிகாரி போல இருக்க வேண்டும் என்றார்.
10)சபரிநாதன் கவிதைகள் பலவும் மூடிய ஒன்றாக இருப்பதில்லை. அதன் கடைசி வரி எப்போதுமே திறந்த வடிவத்துடன் அமைகிறது. பெரும்பாலான கவிதைகளின் இறுதி வரி கேள்வியாக இருக்கிறது. இது கவிதையை முடியவிடாமல் செய்கிறது.
12)இந்த கவிதை தொகுப்பின் சிறந்த கவிதைகள் என பார்த்தால் மின்மினியே, அர்த்தமண்டபம் , வகுப்பிலே மிக அழகான பெண், மனித மூளை தொடர்பான சிந்தனைகள் , குசக்குடித்தெரு, இந்திய விளம்பரக் குடும்பம் ஆகியவை.
13)இந்த தொகுப்பிலிருக்கும் கவிதைகளின் குறைபாடு என்னவெனில் ஏற்கனவே மேலே குறிப்பிட்ட கதைசொல்லல் கவிதைகளும் உருகல் தன்மையும்.சில சமயம் இந்த கதைசொல்லல் கவிதைகள் நிமிடக்கதைகள் போல ஆகிவிடும் ஆபத்துக்கள் உண்டு. சபரிநாதன் கவிதைகளில் கவிதைகளுக்குள் நடக்கும் அசைவுகள் ஒரு தளத்தில் தங்கிவிடுவதால் சில சமயம் குறுங்கதை போல தோன்றும் தன்மையையும் ஏற்படுகிறது. எனவே இந்த யதார்த்த தன்மையிலான கதைசொல்லல் கவிதைகளில் ஒருமையை தவித்துவிடலாம் . இது சபரிநாதன் கவிதைகளை அடுத்தக்கட்ட கவிதையாக்கலுக்கு நகர்த்தி செல்கிறது . ரொமான்டிசம் கவிதையை இன்றுவரை தொற்றுநோய் போல தொற்றிக்கொண்டு தான் இருக்கிறது. ரொமான்டிசத்தை முழுவதும் எதிர்க்க வேண்டியதில்லை மாறாக பயன்படுத்தி பயன்படுத்தி தேய்ந்து போன ரொமான்டிக் தன்மை கூறுகளை தவிர்த்துவிடலாம் . சபரிநாதன் கவிதைகளும் இதற்கு விதிவிலக்கில்லை .
இந்த கவிதைகள் அழகியலை உயர்த்தி பிடிப்பவை. அழகியல் மிகும் போதும் பிரச்சினை எனும் பார்வையும் இங்கு கவனிக்க தக்கது.
மொத்தமாக சொல்லப்போனால் அமைதியான வசீகர உருகல் கவிதைகள் என சபரிநாதன் கவிதைகளை சொல்லலாம். மேலும் சபரிநாதன் தன் கவிதைகளில் செய்திருக்கும் புதிய முயற்சிகள் கவனிக்க தக்கவை.
No comments:
Post a Comment