Monday, 29 May 2017

கவிதை

மழை

கிழக்கில் பொட்டல் பரப்பில் குக்கிராமத்திசையில் எங்களூர் காத்து வீசும்.

அங்குதான் கடைசியாய் மழை பார்த்தேன். வானம் நீச்சல்குளமாய் நிரம்பியிருக்கும் காலத்தை நான் பார்த்ததுண்டு .

கடல்காற்றிலேறி மழை தாளமிட்டு விழுகையில் ஊரே கொட்டானை குடையாக்கி கொஞ்சூண்டு நனையும்.

ஒடம்பூக்களை உதிர்த்த மழைக்காற்றில் மழைகளை எண்ணினேம்.

அணிலோடும் பாதையில் விழுந்த நீர் ஈரமாயிருந்தது.

மாட்டுவண்டி நிழலில் நனையாது மழை பார்த்த நியாபகம் எப்போதும் மனதுக்குள் மழையாய் பெய்யும்.

இரவில் மழைவானத்தை அன்னார்ந்து பார்க்கிற ஆனத்தம் எங்களுக்காய் இருந்தது .

இரவெல்லாம் மழைமேல்மழைபெய்து நீர்த்தடங்களால் ஊரே மணமணக்கும்.

தாய்சேலை போர்த்திப்படுத்த கனவில் மழை பெய்வதுண்டு.

கனவில் விழும் இடிமின்னல்களை கைகால் விரல்களால் எண்ணுவோம்.

காலையில் வெட்டப்பட்ட மரச்சிதைவில் குட்டிகுட்டியாய் பூத்த காளான்பிஞ்சுகளை பிடிங்கிவந்து ஆத்தா கை கொடுத்தா ஊரே கறிக்கொழம்பா மணக்கும்.

சாயங்கால வானத்தைப்பார்த்து முத்தமிட்டு மகிழ்வதுண்டு.

மழைஓய்ந்த வெயிலில் முள்முட்டும் தட்டான் தோகைகளை பிடிக்க கொழிஞ்சிக்கொப்பொடித்து திருடனாய் திரிவோம்.

இரவில் மழை கூரைமேல் நடந்துசெல்கையில் தூக்கம் விழிதாண்டிச்செல்லும்.

மழைகேட்டுக்கொண்டு தூங்கிய இரவு அந்த நாளோடு முடிந்துவிட்டது.

மழைக்குளிரில் நடுங்கி இரவில் சேலைபோர்த்தி அயர்ந்த வருடம் எத்தனை ஆனது .

பாலைவன வருடங்கள் கடந்து இந்த இரவில் கேட்கிறது மழைபோலொரு சொட்சொட் எனும் சத்தம்.

வருடங்களைப் போர்த்திக்கொண்டு படுக்கப்போகிறேன்.

விடியலில் நிலம் மழையாய் இருந்தால் காங்கிரேட் தெருவில் மகிழ்ந்தவனாய் இருப்பேன். இன்றைக்காவது கனவில் யாரும் காளான் விற்க வேண்டாம் இறைவா .....

- அதிரூபன் 😍

No comments:

Post a Comment