முதல்வன்
--------------------
ப.திருமாவேலன்
--------------------------------
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருவரைப்பாராட்டி எழுதக்கூடிய பாக்கியம் கிடைத்திருக்கிறது. “வாழ்த்துகள் பினராயி விஜயன்”!அநேகமாக இதை அண்டை வீட்டாரின் பொறாமை என்றும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறநேரத்தில், ஓர் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார் பினராயி விஜயன்.தமிழகமும் கேரளாவும் ஒட்டி இருக்கும் மாநிலங்கள். ஆனால், ஒன்று போல் இருந்ததில்லை பலவற்றில்.நம்மைப் போலவே திரையுலக மோகம் கொண்டவர்கள்தாம். ஆனால், அரசியல்வாதிகளைத் திரையில்தேர்ந்தெடுப்பதில்லை அவர்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களும், எந்தக் கட்சியாக இருந்தாலும் வானத்திலிருந்து குதித்தவர்களாக நடப்பதில்லை. எளிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று கேரளாவில் நினைப்பார்கள். இங்கேயோ எல்லோரும் ஜெயலலிதாவாக ஆகத் துடிப்பார்கள். அங்கேயும் ஊழல், முறைகேடுகள் உண்டு. அவை உடனடியாக வெளிச்சத்துக்கு வரும். அது பொதுமக்களாலும் பேசப்படும். ஊழலைசமூகத் திருட்டாக அம்மக்கள் நினைப்பார்கள். நம்மவர்களைப் போல, ‘நல்லா சம்பாதிச்சாரு’ என்று சொல்வதில்லை.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் ஓட்டு கேட்டுச் செல்ல கேரளாவில் பயப்படுவார்கள். மிக முக்கியமான வேறுபாடு, பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் கேவலக் கலாச்சாரம் இன்னும் கேரளாவில் பரவவில்லை. இத்தகைய வேறுபாடும் மாறுபாடும் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இருக்கும் நிலையில்... எடப்பாடிபழனிசாமியையும் ஓ.பன்னீர் செல்வத்தையும் நாம் பார்த்து நொந்து கொண்டிருக்கும்போது இதோ, பினராயிவிஜயன். அதனால்தான் அவர் பளிச்செனத் தெரிகிறார். கேரளாவிலிருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சியை விதைக்கிறது.திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அர்ச்சகர் நியமனத்தில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித். 30 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர். மணப்புரம் சிவன் கோவிலில் அர்ச்சகர் ஆகியுள்ள யதுகிருஷ்ணன், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். “திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் 1,248 கோவில்கள்உள்ளன.
இது 1949இல் தொடங்கப்பட்டது. மெரிட் அடிப்படையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தபூசாரிகளும் நியமிக்கப்பட்டுவந்தனர். முதல் முறையாக தலித் பூசாரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய, மாநிலத் தேர்வு வாரியத்தின் விதிமுறைப்படியே இந்த நியமனம் நடந்துள்ளது. இதே நடைமுறை இனி கொச்சி மற்றும் மலபார் தேவசம் போர்டுகளிலும் கடைப்பிடிக்கப்படும்” என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சொல்லப்பட்டது. கேரளாவைக் கடவுளின் தேசம் என்று அழைப்பது நம்பிக்கை. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பரசுராமன், அரபிக்கடலில் உருவாக்கிய தேசம்என்பார்கள். இதை ஏற்றுக்கொள்வோர், கடவுளின் தேசத்தில் நடந்துள்ள மகத்தான மாற்றம் என்று நினைப்பார்கள். நாராயண குரு, வைகுண்ட சுவாமிகள், அய்யங்காளி, டி.கே.மாதவன் எனச் சமூகச் சீர்திருத்த வழித்தடம் உள்ள கேரளாவில் இது சர்வசாதாரணமாக நடந்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் சென்றுவழிபாடு செய்துகொள்ளலாம் என்பது கேரள அரசின் நிலைப்பாடாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறுவேறு சாதியினருக்குள் திருமணம் செய்து கொண்டவர்களை ‘சாதியற்றவர்’கள் என வரையறுத்து இட ஒதுக்கீடுவழங்க கேரள அரசு முன்வந்துள்ளது. ‘நவ கேரள மிஷன்’என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்கள். சுகாதாரம், கல்வி, விவசாயம், வீட்டு வசதி ஆகிய நான்கும் முக்கிய இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொச்சி மெட்ரோ ரயில்திட்டத்தில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது. வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேறு மாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்களும் இதில் பதிவு செய்துகொள்ளலாம் என்ற அடிப்படையில் 34 லட்சம் தொழிலாளர்கள் இதில் பதிவு செய்துள்ளனர்.அனைத்துப் பள்ளிகளிலும் மாணவியருக்கு சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைத்துத் தரப்பட்டுள்ளது. பணிமுடிந்து இரவில் வீடு திரும்பும் பெண்கள் பாதுகாப்புக்காக ‘பிங்க் பெட்ரோல் பாதுகாப்பு வசதி’ ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் தலைமைப் பொறுப்பையே மாற்றுத்திறனாளிகள் வசம் ஒப்படைத்துள்ளார்கள். கிராமங்களுக்கு உள்ளேயே, அருகிலேயே பள்ளிகளை உருவாக்குவது, இருக்கும்பள்ளிகளைத் தரம் உயர்த்துவது என முடிவெடுத்துள்ளார்கள். கல்விக்கடன் பெறும் மாணவர்கள் மிகமிகஏழைகளாக இருந்தால் அவர்களுக்கு அரசாங்கமே உத்தரவாதக் கையொப்பமிடுகிறது. குறிப்பிட்ட இடங்களில் இலவச வைபை வசதி. 2 லட்சம் புதிய கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மனிதக்கழிவு இல்லாத மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.இவற்றில் பெரும்பாலானவை ஓர் அரசாங்கம் செய்துதரவேண்டிய அடிப்படைக் கடமைகள்தாமே என்று தோன்றலாம். இந்த அடிப்படைக் கடமைகளைச் செய்ய மறுத்த, மறுக்கும் அரசாங்கங்கள் இருப்பதால்தான் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. பெரும்பாலான அரசுகள், ஒரு திட்டத்தைஅறிவிக்கும் போது தடபுடலாக இருக்கும்.
அது அப்படியேநின்றுபோகும். கவனிப்பாரற்றுக் கிடக்கும். மாதந்தோறும் பள்ளிப் பிள்ளைகளுக்கு புராகிரஸ் ரிப்போர்ட் கொடுப்பதுபோல ஒவ்வொரு அமைச்சருக்கும் தேர்வு வைத்துக் கொண்டிருக்கிறார் பினராயி விஜயன். அதனால் தான் ஓரளவாவது ஒழுங்காக நடக்கிறது.பொதுவாக முதலமைச்சர்கள் போராட்டங்களில் பங்கெடுக்கமாட்டார்கள். பணமுடக்க நடவடிக்கையை மத்திய பாஜக அரசு எடுத்தபோது அதைக் கண்டித்து, கேரளரிசர்வ் வங்கி முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜயன் கலந்துகொண்டார்.கடிதம் எழுதும் முதலமைச்சர்களைத்தாம் தமிழகத்தில் பார்த்திருக்கிறோம். கடிதம் கூட எழுதத் துப்புஇல்லாத முதலமைச்சரையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வீதிக்கு வந்தார் கேரள முதலமைச்சர். இந்ததேசத்தின் லட்சக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும்போது, அவர்களுக்குச் சோறு போட வக்கற்றவர்கள், ‘மாட்டுக் கறி சாப்பிடாதே’ என்று உத்தரவுபோட்டார்கள். கேரள முதலமைச்சர்தான் சொன்னார், ‘எந்த வகையான உணவு சாப்பிடுவது என்பது அவரவர் சுதந்திரம், அவரவர் விருப்பம்.
கேரள மாநிலத்தில் விரும்பிய உணவை எடுத்துக்கொள்ளலாம்’ என்று. இதனால்தான் இந்தியா முழுக்க அவருக்கு எதிரிகள் உருவானார்கள்.கேரளா குறிவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடிக்கடி வருகிறார். அமித்ஷா நடைபயணம் போகிறார்.இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று அழைக்கப்படும் யோகி ஆதித்யநாத் வந்து செல்கிறார். கேரள அரசுக்குஎதிரான பேரணி தில்லியில் நடக்கிறது. ஒரு மாநில அரசைக்கண்டித்து இந்தியத் தலைநகரில் பேரணி நடக்கிறது.மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையேபழிக்குப் பழி வாங்கும் குற்றக் கொலை நிகழ்வுகள் கேரளாவில்தான் அதிகம் நடக்கின்றன. 205 பேருக்குமேல் எங்கள் தோழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்கிறது. 100 பேருக்கு மேல் எங்கள் அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளார்கள் என்று இந்துத்துவ அமைப்பினர் சொல்கிறார்கள். இது கேரளாவுக்கும் நல்லதல்ல;
இந்தியாவுக்கும் நல்லதல்ல. மாநில மக்களைக் காப்பாற்ற வேண்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நல்லதல்ல;இந்திய மக்களைக் காப்பாற்ற வேண்டிய பாரதிய ஜனதாகட்சிக்கும் நல்லதல்ல. எல்லாக் கொலைகளும் அரசியல் நோக்கம் கொண்டவையாக மட்டும் இருப்பதில்லை; உள்ளூர், தனிமனிதப் பகைமை இருக்கும். ஆனால், எல்லாக் கொலையுமே குற்றம்தான். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கும், குறிப்பாக முதலமைச்சருக்கும் உண்டு.திமுக-அதிமுக என மாறிமாறி ஆளும் வாய்ப்பைத் தமிழ் மக்கள் இங்கு தருவது மாதிரிதான், காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கட்சிகளுக்குக் கேரள மக்கள் அங்கு தருகிறார்கள். அதற்குள் மூன்றாவதாக பாஜக நுழையப் பார்க்கிறது. எப்படியாவது கேரளாவில் காலூன்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு முட்டுக்கட்டையாக பினராயி விஜயன் இருக்கிறார். அதனால்தான் கோபம், வன்முறையாக மாற்றப்படுகிறது. “சமூக நீதிக்கான இயக்கங்கள் மூலம் உறுதியான மதச்சார்பற்ற சமூகத்தைக் கேரளம் பெற்றிருக்கிறது. அத்தகைய கேரளசமூகத்தில்தான் ஆர்எஸ்எஸ் தனது அடித்தளத்தை நிறுவ முயன்றுவருகிறது. கேரளத்தில் மிகவும் உறுதியுடன் செயல்படும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முக்கிய எதிரியாகக் கருதி, அழித்து இல்லாமல் செய்துவிட்டால் தங்களுடைய பிரிவினைத் திட்டங்களை எளிதாக நிறைவேற்றலாம் என்ற எண்ணத்தில்தான் தாக்குதல்கள் எங்கள்தோழர்கள் மீது நடந்துவருகின்றன” என்று பினராயி விஜயன் பேசியிருக்கிறார். இது சித்தாந்த மோதலாக இருக்கும் வரை சிக்கல் இல்லை.
வன்முறைப்பாதையாக மாறிக்கொண்டிருப்பதுதான் பதற வைக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட கொல்லைப்புற வழி, கேரளாவில் கொலைப்புற வழியாகியிருக்கிறது.பக்கத்து மாநிலத்தில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள்குறித்த எந்தப் படிப்பினைகளும் இல்லாமல் பக்கவாதத்தில் கிடக்கிறது தமிழக அரசு. இவர்களுக்கு எப்போதோ விஷ ஊசி போடப்பட்டுவிட்டது என்ற உணர்ச்சியே இல்லாமல் மரத்துப்போய்க் கிடக்கிறார்கள். கேரளாவுக்கு முன்பேஅனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனச் சட்டம் கொண்டு வந்தது தமிழ்நாட்டில்தான். 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் உடனடித் தடை விதித்தாலும், 2015ல்வழங்கிய இறுதித் தீர்ப்பில் தடை இல்லை. அச்சட்டம்செல்லாது எனச் சொல்லவில்லை. ‘அந்தந்தக் கோவில்கள்தங்களுடைய ஆகம விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும்’ என்று பொதுவாகத்தான் சொல்லியுள்ளது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் இவர்களுக்கு எங்கேகவலை? இவர்கள் தங்கள் கடவுளையே (ஜெயலலிதாவையே...!) மறந்தவர்கள். காசுக்காகக் குலதெய்வத்தையே தில்லி என்று மாற்றிக்கொண்டவர்கள்!
நன்றி : ஆனந்த விகடன் (01.11.2017)
No comments:
Post a Comment