போர்க்களம்
வீதி வழியே சென்ற பைத்தியம்
தன் கையில் நீண்ட இறகொன்றை வைத்திருந்தான்.
இறகால் உன்னைக் குத்திக் கொன்றுவிடுவேன் என்று
எதிரே வருபவர்களை மிரட்டிக்கொண்டிருந்தான்.
வெயிலில் அவன் சாணை தீட்ட சாணை தீட்ட
மிகக் கூர்மையாகப் பளபளத்தது அந்த இறகு.
உண்மையில் இத்தனை மென்மையான வாளால்
கொலை செய்வதானால்
கொலை படுவதுகூட சுகந்தான் இல்லையா?
உயிர் போகாமல் கொலை செய்வது
காமத்தில் மட்டும்தான் சாத்தியம்.
போர்க்களத்தில் இல்லையே!
எங்கே என்னைக் குத்திக் கொல் பார்ப்போம் என்று
மார்பை விடைத்துக்கொண்டு நிற்கிறான் ஒரு துக்கிரி.
பைத்தியத்தின் கைகள் நடுங்குகின்றன.
அவனறியாமல் வாளைக் கீழே நழுவ விடுகிறான்.
காற்றில் மிதந்து மிதந்து இறங்கி வரும்
சமாதானத்தை ஏந்திக்கொள்ள
பூமி அவ்வளவு ஆசையாகக் காத்திருக்கிறது.
- கார்த்திக் திலகன்
No comments:
Post a Comment