Thursday, 23 November 2017

தமிழ்த்தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே !
                                                                   தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே !
                        வாழ்த்துதுமே !
                        வாழ்த்துதுமே !
                                    - மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை

பத உரை:
ஆரும்- ஒலிக்கும்
மடந்தை- பெண்
எழில்- அழகு
பிறைனுதல்- பிறை போன்ற நெற்றி
தரித்த- அணிந்த
நறும்- வாசனை
அணங்கு- பெண்.

பாடலைப் பிரித்துப் பொருள்கொள்ளும் முறை:

நீர் ஆரும் கடல் உடுத்த நிலம் மடந்தைக்கு எழில் ஒழுகும்
சீராரும் வதனம் என திகழ்பரதக் கண்டம் அதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்து உலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும்தமிழ் அணங்கே! தமிழ் அணங்கே!
உன் சீர் இளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

விளக்கம்:

ஒலி எழுப்பும் கடலை ஆடையாக உடுத்துகின்ற நிலமாகிய பெண்ணின் அழகு ஒளிருகின்ற சிறப்பு பொருந்திய முகமாக திகழ்வது பரதக்கண்டம். அதில் தெற்கு நாடுகள் பிறை போன்ற நெற்றியாகும். அவற்றில் சிறந்த திராவிட நாடு அந்த பிறை போலும் நெற்றியில் நல்ல மணம் பொருந்திய திலகமாக திகழ்கிறது. அந்த திலகத்தின் வாசனை போல அனைத்து உலகமும் இன்புற்றிருக்க எல்லாத்திசைகளிலும் புகழ் மணக்க இருக்கின்ற (புகழ் பெற்ற) தமிழ் ஆகிய பெண்ணே! என்றும் இளமையாக இருக்கின்ற உன் திறத்தைக் கண்டு எங்கள் செயலை மறந்து வாழ்த்துகிறோம்

No comments:

Post a Comment