*தமிழுக்கு நிறம் உண்டு* கவிதை தொகுப்பலிருந்து,
*அழைப்பு* கவிதை..
தயவுசெய்து
என்னை தொல்லைசெய்!
தயவுசெய்து
என்னை கொள்ளையடி
கழுத்தடியில்
ஒரு
செல்ல கடி கடி
கூந்தல் கலைத்து
பூக்களை உதிர்த்துவிடு
ஓடிப்பிடித்து
என்னை உருக்குலைத்து
போடு
குளித்துவரும்
என்னை மீண்டும்
அழுக்காக்கு
எதிர்பாரா இடத்தில்
என்னை தீண்டு
எவ்வளவு இயலுமோ
அவ்வளவு தழுவு
எங்கே என் உயிர் என்று
கண்டு பிடி
அதன்
இட வலம் தொடு
இது தான்
இது தான் நான் கேட்டது
உதட்டு எச்சிலால்
உடல் பூசு
முத்தமிட்டு
என் மூச்சை
நிறுத்து
இது ஒன்றும்
ஒரு வழிப்பாதையல்ல
என் பங்கு செலுத்த
எனக்கும் இடம் கொடு
அங்கங்கே பரவு
எலும்பின் மஞ்சைகளில்
ஊருடுவு
மார்பக பள்ளத்தில்
முகம் வைத்து மூச்சுவிடு
மேகங்களுக்கு இடையில்
நட்சத்திரம் தூங்கினாலும்
இலைகளுக்கு இடையில்
காற்று தூங்கினாலும்
என் கண்கள்உனக்காக
இரவெல்லாம்
விழித்திருக்கும்
உனக்கில்லாத உரிமையா?
பூனையின் பாதம்
பொருத்தி
பொசுக்கெண்டு வந்து
புடவையிழு!
தீவிரத்தால் என்னை
திணறவை
என்னை தீண்டி விட்டு
எங்கேனும் ஒழிந்து கொண்டு
நித்தம் ஒரு தடவை
என்னை அழவை
என் பெண்மையின்
பரிபூரணமே!
என்
வெற்றிடம் வழியே
நிறைந்த நிறைவே
தாழாத தணங்கள்
தாழ்ந்தன உனக்காக!
ஆகாய கங்கை
பாய்ந்தது
உனக்காக
வா
என்னை வலி செய்
உயிர் பருகி என்னை
ஒலிசெய்
என்னுயிர் பயிராகும்
நீ பதித்த பள்ளத்தில்
எனக்குள்ளே பூப்பொழியும்
நீ முட்டும் அதிர்வில்
உன் நகர்த்தலுக்காக
துடிக்குது என் ஆடை
உன் நகம்
கிழிக்க
வீங்குது என் மார்பு!
தொட்டுக்கொண்டுறங்கும்
சுகமொன்று கருதி
உடல் என்ற உலையில்
கொதிக்குது என்குருதி!
நீ தந்த சுகம் எல்லாம்
நெற்றியில் தீ எரியும்
தியானத்தில்
வந்ததில்லை
வில்லாய் விறைக்கும்
கலவியில் கண்டதில்லை
பிரசவம் முடிந்த
பெரு மூச்சில்
கண்டதில்லை
எங்கே
மீண்டும் ஒரு முறை
முந்தானைக்குள் புகுந்து
முயல் குட்டியாகு!
தட்டாதே
தாய் சொல்லை கேள்
பத்துமாதம்
என் வயிறு சுமந்த
பிஞ்சு பிரபஞ்சமே!
-வைரமுத்து-
No comments:
Post a Comment