#Reading_Marathon2025
#25RM055
Book No:20/100+
Pages:-143
அருகில் வந்த கடல்
-மு.குலசேகரன்
இந்த ஆண்டு வாசிக்காத எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவலில் காலச்சவடு அய்யா சாமி சார் அவர்களின் உதவியுடன் இந்த புத்தகத்தை திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வாங்கினேன். ஓரிரு கதைகளை படித்திருந்தாலும் இந்த தொகுப்பில் உள்ள 10 கதைகளும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அனுபவத்தை கொடுத்தது.
கதைகளை நேர்கோட்டில் சொல்வது ஒரு உத்தி என்றால் நான் லீனியர் முறையில் கதைகள் சொல்வது, வார்த்தை ஜாலத்தில் அந்த கதையின் இறுதி பகுதியை மலை மேல் ஏறுவது போல் ரசிப்பு தன்மையுடன் சென்று அடைவது என்பது இன்னொரு வகைகளில் இருக்கும். குலசேகரன் அவர்களின் எழுத்துக்களில் திளைத்து எழுந்து வந்த உச்சியை அடையும்போது அது ஒரு நல்லதொரு அனுபவத்தை தந்தது.
மொழியின் சித்து விளையாட்டுகளில் மூழ்கி எழுந்து உச்சிவரை செல்லலாம் என்பதற்கு இந்த கதைகள் ஒரு உதாரணங்கள். மனதுடன் நெருங்கி கதாபாத்திரங்களையும் சூழலையும் விவரிக்கும் போது. அது எல்லை இல்லாமல் விரியும் சாத்தியமுள்ளது. இந்த சாத்தியத்தை தனது கதைகளில் எல்லாம் நுட்பமாய் பயன்படுத்தி வருகிறார். அகத்தில் தோன்றும் காட்சி படிமங்களை அப்படியே வார்த்தைகளின் தோற்றங்களில் காண முடிகிறது."அருகில் வந்த கடல் கதையில் கடற்கரையோரம் இருக்கும்போது வரும் பேரலையில் சிக்கித் தவிக்கின்றனர்.மொத்தமாய் விவரிக்க கிராமங்களும் மக்களும் சிக்கித் தவிப்பது போல் இருந்தது. இப்படியே விவரித்துச் செல்லும் போது கடைசியில் கனவாக கதை முடிகிறது.ஒரு வெற்றுக் காலத்தை,காட்சியை அவன் மனம் ஏற்க மறுக்கிறது என்பதனை இதில் கூறியிருப்பார் இதில் வரும் காட்சிப்படுத்துதல் கதைகளுக்கான வேகத்தை கூட்டி இருக்கிறது.
எழுதி முடிக்காத உயில் கதையில் வாரிசு இல்லாத தனது நோய்வாய்ப்பட்ட சித்தப்பாவை கவனித்துக் கொள்ளும் அண்ணன் மகனும் சித்தியும் தான்.. தற்போது மருத்துவமனைகளில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனை சூழலும் நோயாளியின் வலியையும் இந்த கதைகளில் நேரடி காட்சிகளைப் போல நமக்கு காட்டி இருப்பார். இறுதியில் எதிர்பார்த்த முடிவுகள் தான் என்றாலும் அதனை நோக்கிச் சென்ற விதம் ரசிக்கும் படி இருந்தது. நோயாளிகளை பற்றி சொல்லும் போது "மற்றவர்கள் எல்லாம் ரயில் பயணிகளைப் போலவும் அல்லது ஏதோ விற்பனை கூடத்தில் பொருட்களை வாங்க வந்தவர்களை போலவும் காணப்பட்டார்கள். ஓர் இருவர் மட்டும் தான் நோயாளிக்குரிய அறிகுறிகளுடன் இருந்தனர் என்று புற உலகின் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வருகிறார்.
கதைகள் ஒவ்வொன்றும் பாசாங்கற்று வாசகனுக்கு மிகவும் நெருக்கமான மொழியில் இருந்தது தான் சிறப்பாக அமைந்திருக்கிறது. குடும்பச் சண்டையில் தனது தம்பி தூக்கு கயிற்றில் தொங்கிவிட அதற்குப் பிறகு குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள் தான் தூக்கு கயிற்றின் அழைப்பு கதை ஆகும். நடைமுறை வாழ்க்கையில் நிகழும் சாதாரண விஷயங்கள் குறித்தும் அதன் மீது அக்கறை கொள்ளாத மனிதர்களும் அதன் பின் அடையும் அவமானங்களையும் இக்கதைகளில் பதிவாக்கியுள்ளார்.
வாழ்க்கை தரும் நெருக்கடிகளின் உடைய மன இருப்பின் அவஸ்தைகளை விவரிப்பதில் அழாத இன்பம் எழுத்தாளர்களுக்கு திரும்பிச் செல்லும் வழியில் கதையில் நோய்வாய் பட்ட கணவன் சுந்தரேசனுக்கு ஆறுதலாய் பணிவிடை செய்கிறாள் பத்மாவதி. அவருடைய ஆதரவு அவனுக்கு பெரும் நம்பிக்கையும் காதலையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. எதிர்பாராத திருப்பத்துடன் சுந்தரேசன் கோபத்துடன் பழிவாங்க விரைகிறார். பேருந்து நிலையம் சென்றபோது ஓய்வின்றி குறுக்கும் நெடக்குமாய் அலைந்து கொண்டிருக்கும் பேருந்துகளில் மனமும் குறுக்கும் நெடுக்குமாக அலைவதை சொல்லி இருப்பார்.
நேரம் முடிவில்லாமல் வளர்ந்து கொண்டிருப்பது மையப்படுத்தி அணைக்கட்டு கட்டும் முயற்சியில் இறங்கி இருக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசாங்கத்தின் முயற்சியில் அந்த ஊரிலிருந்து காலி செய்யப்பட்டு சென்ற மனிதர்களின் உணர்வுகளை பேசுகிறது ஒற்றை முள்ளின் சுழற்சி கதை. நகரத்தின் வளர்ச்சி கிராமத்தினை கருவறுத்து விட்டது போல் நிலைமை .எங்கும் ரியல் எஸ்டேட் தொழில்கள் மலர விவசாயம் கருகிக் கொண்டிருக்கிறது என்பதை மையப்படுத்தி அவரவருக்கு சொந்தமான நிலம் கதையினை கூறியிருப்பார்.
அங்கங்கே இயந்திரங்கள் பெரிய விலங்குகளை போல் உறங்கிக் கொண்டிருந்தன அவற்றின் நுட்பமான எண்ணற்ற உள்ளுறுப்புகள் உயிரற்று உரைந்து இருந்தன இன்று மாபெரும் தொழிற்சாலையின் உள்இருப்பை மனிதர்களின் உழைப்பையும் ஓடாமல் போன இயந்திரம் கதை நமக்கு குறிப்பிடுகிறது இக்கதைகளில் வரும் வார்த்தைகள் நேரில் நின்று பார்த்த அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது."உற்பத்தியான பொருட்கள் எந்த மதிப்பும் இல்லாமல் ஓரமாகக் கிடந்தன. நிழலை போல் அரை இருட்டு சூழ்ந்து இருந்தது. சுற்றிலும் கவிழ்ந்திருந்த ஆழ்ந்த மௌனத்தின் அடியில் இருந்து பேரோசை எழுந்து கொண்டிருந்தது என்ற வரிகள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தன.
காதலித்த பெண்ணை கை பிடிக்க செல்லும் ஒருவன் திருமணத்தின் போது ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்கிறான். திருமணம் முடிந்து முதல் நாள் நடக்கும் ஏமாற்றும் அவனுக்கு எந்த வகையில் மன அமைதியைக் கொடுத்தது என்பதைத்தான் அழிக்க இயலாத கதையில் சொல்லி இருப்பார்.
கதைக்களங்கள் பெரும்பாலும் சிறிய பரப்பினுள் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சிறு சம்பவத்தை தான் விவரணையாக சொல்லி இருப்பார். மனித மனங்களை அப்பட்டமாக சொல்லும்போது சில இடங்களில் நம்மையும் அதனோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. இந்த கதைகளின் முடிவுகள் மிக எளிமையாகவோ அல்லது எதிர்பார்க்கும் படியே இருந்தாலும் அந்த முடிவை நோக்கி அழைத்துச் செல்லும் வழி மிகவும் அழகாக நம்மை சொற்களின் வழியே கையைப் பிடித்து அழைத்திச் செல்வதில் தான் அவரின் எழுத்து திறமை நம்மை கட்டி போடுகிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment