Saturday, 18 February 2017

அதிரூபன்

நன்றி:சதீஷ்

பனியில் மூழ்கும் உயிர்கள்

- - - - - - - - -

வால்சுருட்டி தட்டான்கள்
நீராதர நிலத்தின் முள்ளில் குவிகின்றன
பொண்ணிற விழிகளுள் மின்னுகிற அழுக்கு
ஒரு மழையை ஏந்திநிற்கிறது

ராணித்தேனீக்கள்
தன் இனிப்பை,
தட்டானின் வாய்க்கருகில் கொண்டுபோய் விழுங்குகிறது
உமிழ்நீரின்ஆசை தேனீக்களின் நாவை
கத்தரிக்க நினைக்கின்றன

பூஞ்சைக்காளானின் வேரில்
பசி உண்ணுகிற கரையான்கள்
மணல் அடுக்குகளின் கீழ்
புணர்ந்து வயிறூதும்
இதன் கர்ப்பம் தெரித்த நாளொன்றில்
பனி கரையான்குஞ்சுகளை குளிப்பாட்டும்

சாயங்கால வானத்தில்
மேகத்திற்கும் பூமிக்குமாய்
வலை நெய்கிற சிலந்தியின் எச்சிலில்
உதிர்ந்த வானவில்லொன்று,
பச்சோந்தி வயிற்றில் விழுந்ததை
என் அந்திக்கனவொன்று காட்டிச்செல்கிறது

வரையாட்டின்
காம்பில் சுமந்த சீம்பால் வாசணை
மண்பானையில் கொதித்துக் கிடக்கிறது,
பானையில் மிதக்கிற
பாலாடை கட்டிகள்
வரையாட்டு கொம்புகளை வரைகின்றன ....

- அதிரூபன்

No comments:

Post a Comment