Tuesday, 28 February 2017

அழகு-நவீன்

அழகு என்றால் என்ன?அழகு என்பது பார்ப்பவரின் கண்களிலா இருக்கிறது? நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? அதாவது, சுட்டித்தனமாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் ஒரு அழகான பொம்மையைக் கொடுத்துப் பாருங்கள்! அவன் கவனம் முழுவதும் பொம்மையில் திரும்பி விடுகிறது. விஷமம், விளையாட்டு எல்லாம் ஓய்ந்து, அவன், தன்னை மறந்து, பொம்மையின்பால் ஈர்க்கப்படுகிறான்.ஒருவர்,கவிதை ஒன்றில் தன்னை மறப்பதும், ஓவியத்தாலோ, அழகிய முகத்தோற்றத்தாலோ கவர்ந்திழுக்கப்படுவதும் உண்டு. இந்த ஈர்க்கப்படுதல், தன்னை மறத்தல்தான் அழகு என்பதா? பனிமுகடும் உறைபனியும்கூடிய அற்புதமான மலை ஒன்றை, நீல வானத்தின் பின்னணியில் பார்க்கும் பொழுது, மலையின் கம்பீரத்தை, நான் வியந்து பார்க்கும் அந்த கணப்பொழுதிற்கு, 'நான், எனது' என்ற உணர்வு, என் பிரச்சனைகள், கலக்கங்கள் ஆகியவை மறைந்து விடுகின்றன. பெரும்பாறைகளின் கம்பீரத்தையும் பள்ளத்தாக்குகளின் அழகையும், ஆறுகளையும் ரசிக்கும் அந்த நேரத்தில், 'நான், எனது' என்ற உணர்வு இருப்பதில்லை. பொம்மையால் குழந்தை அமைதியானது போல, மலை, நமது தன்னுணர்வை விரட்டி விட்டது. ஆக, மலையும், ஆறும், நீல நிறமாய் இருக்கும் பள்ளத் தாக்கும் ஒரு நொடிப்பொழுதிற்கு, உங்கள் பிரச்சனைகள், உங்கள் தற்பெருமை, கலக்கங்கள் எல்லாவற்றையும் துரத்திவிடுகிறது. அப்போது ‘எவ்வளவு அழகாய் இருக்கிறது’ என்று வியந்து சொல்கிறீர்கள். வெளியிலிருக்கும் ஒன்றால் ஈர்க்கப்படாமல், அதே சமயத்தில் அழகு  இருக்கமுடியுமா? அப்படி இருக்க முடிந்தால் அங்குதான் உண்மை அழகு இருக்கிறது. அதாவது,   வெளியிலிருக்கும் ஒன்றால் ஈர்க்கப்படாமல்  எங்கு  'நான், எனது' என்ற தன்னுணர்வு இல்லையோ,  அங்குதான் அழகு இருக்கிறது.

No comments:

Post a Comment