*70கள் 80களில் குறைவாக எழுதுவதே நல்ல எழுத்து என்ற போக்கு இருந்தது. இப்போது ஒரு எழுத்தாளர் 10 நூல்களை ஒரே சமயத்தில் வெளியிடுகிறார்களே?*
-வண்ணநிலவனின் பதில் 👇🏻
💥குறைவாக எழுதுவது நிறைய எழுதுவது என்பது ஒரு விஷயமே அல்ல. எழுதியவற்றில் கலாபூர்வமாக, இலக்கியபூர்வமாக எத்தனை தேறும் என்றுதான் பார்க்க வேண்டும். புதுமையான நடை, உருவ சோதனைகளில் எந்தளவுக்கு ஒரு ஆசிரியன் அல்லது கவிஞன் ஈடுபடுகிறான், அவற்றில் எத்தனை படைப்புகள் தேறுகின்றன, மொழியை அவனது படைப்புகள் எந்தளவுக்கு வளப்படுத்தியிருக்கின்றன என்பதையெல்லாம் தான் கவனத்தில் கொள்ளவேண்டும்.
💥நிறைய எழுதும்போது அழகுணர்ச்சி குன்றிப் போய், காலப்போக்கில் வறண்டுவிடும் ஆபத்து நிறைய உண்டு. 90 சதவீத எழுத்தாளர்களின் ஆரம்பகாலப் படைப்புகளில் உள்ள கலையுணர்வு, இறுக்கம், அழகு எல்லாம் போகப் போகக் காணாமல் போய்விடுகின்றன. வயதான காலத்தில் அவர்கள் எழுதும் எழுத்துக்களைப் படிக்கவே முடிவதில்லை. அந்தளவுக்கு வறட்டுத்தனமாகி விடுகிறது அவர்களுடைய எழுத்து.
💥 எனக்குத் தெரிந்தவரை மிகக் குறைவாக எழுதியதால் மௌனியின் சிறுகதைகள் அதன் அழியா இளமையுடன் இருக்கின்றன. இறுதி வரை தன்னைச் சட்டை உரித்துக் கொண்டு, வறண்டு போகாமலிருந்த ஒரே எழுத்தாளர் சுந்தர ராமசாமிதான். பெரும்பாலான, எழுதிய, எழுதிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களின் எழுத்துக்களில் கிழடு தட்டிவிட்டது என்பதே உண்மை.
💥காவேரிக்கரை எழுத்தாளர்கள், தாமிரபரணிக் கதை எழுத்தாளர்கள் முக்கியப் படைப்புக்களைத் தமிழுக்குத் தந்துள்ளார்கள். அவற்றுக்கும் நல்ல எழுத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
ஆற்று நாகரீகத்துக்கும் எழுத்துக்கும் பெரிய சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. பாரதி பிறந்த எட்டயபுரம், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணனின் இடைசெவல் போன்ற ஊர்கள் வறண்ட கரிசல் பூமிதான். இந்த ஊர்களிலிருந்து இவர்கள் எழுதி பல படைப்புகளைத் தமிழில் தரவில்லையா?
நதிக்கரை என்பதைவிடச் சூழல்தான் மிக முக்கியம் என்று தோன்றகிறது.
No comments:
Post a Comment