வீட்டிலிருந்து பார்
*மணி
உன்னைச் சுற்றி
பல்பு எரியும்...
வீடு அர்த்தப்படும்...
பகலின் நீளம்
விளங்கும்.
குளிக்காமல் உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும் கலங்கும்
நொறுக்கித் தின்றால்
நூறு வயது-நீ
நொறுங்குத் தீனி தின்றே
நூறு கிலோவாவாய்
வீட்டிலிருந்து பார் !
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமாகும்
வருஷங்கள் யுகங்களாகும்
அண்டை வீட்டுக்காரன் கூட
அணுக பயப்படுவான்
எதிர்வீட்டுக்காரன்
எச்சரிக்கையோடு பார்ப்பான்
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
நீ தும்மினால்
உலகமே ஒருமுறை
உன்னை கவனிக்கும்
செல்போன் ஒன்று உன்
கையிலிருக்கும் அல்லது
சார்ஜில் இருக்கும்
வீட்டிலிருந்து பார்!
அடிக்கடி செய்தி பார்ப்பாய்
இறப்பு எத்தனை
என கணக்கிடுவாய்
இன்று பிழைத்து விட்டோம்
என இறுமாப்பு கொள்வாய்
ஓயாமல் யாரிடமாவது
போனில் பேசுவாய்
கதறி அழும் தொலைக்காட்சிக்கு
கருணை காட்ட மாட்டாய்
வீட்டிலிருந்து பார்!
சும்மாதான இருக்கீங்க
எனப் பேசியே
வீட்டுவேலை வாங்குவார்கள்
அடிக்கடி கடைக்கு போய்வர
தாங்குவார்கள்
அழுக்குத்துணி குறையும்
அழுக்குப் பாத்திரம் நிறையும்
எப்படா விடியும்
எப்படா முடியும்
எனத் தோன்றும்
வீட்டிலிருந்து பார்!
-மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment