அழகியல்
*மணி
"மழலை மொழியில் வார்த்தைகளே கிடையாது, வெறும் அர்த்தங்கள் மட்டுமே.""
என்று படித்திருக்கிறேன்.
அதுபோல் இன்று ஒரு மழலையர் போட்டியில் ஆத்துச்சூடி ஒப்புவித்தலுக்கு நடுவராக சென்றிருந்தேன்.
இனிமையான பொழுதாய் இன்றைய நாள் அமைந்தது.ஒவ்வொரு குழந்தையும் வந்து ஆத்திச்சூடியை தனக்கே உரிய பாணியில் சொன்னது.அதில் நடந்த சுவாரஸ்யங்கள்..
#ஒவ்வொரு குழந்தையும் பாத்ரூமுக்குள்ள பல்லி இருக்குதானு பார்க்கிற மாதிரி நைசா நடுவரை எட்டிப்பார்ப்பாங்க.
#எவ்வளவு படிச்சீங்க னு கேட்டால் இரண்டாவது னு சொல்லும். சரிமா எவ்வளவு ஆத்திச்சூடி படிச்சிருக்கீங்க கேட்டால் இரண்டாவது னு சொல்லும்
#பொதுவா டக் இன் செய்வது 2வகை.சட்டை மேல் பேன்ட் போடுவது.இன்னொன்னு அவசரத்தில் டவுசருக்குள் சட்டையை சாக்குமூட்டைக்குள் சொருகுவது போல் செருகுவது. இது மாதிரி இரண்டு பசங்க வந்திருந்தாங்க
#ஒரு பொன்னுக்கு பர்த் டே. தலை முழுக்க மல்லிகை பூ.உச்சந்தலையே தெரியல.கையிலிருந்த டைரி மில்க்கை கடைசி வரை விடவேயில்லை. கொடிகாத்த குமரன் போல்
#சில குழந்தை தேம்பி தேம்பி புருசன் அடிச்சதை மகளிர் காவல் நிலையத்தில் கம்ளைன்ட் செய்வது மாதிரி..தேம்பி தேம்பி சொன்னாங்க
#சில குழந்தைகள் 109 ஆத்திச்சூடியும் ஒப்புவித்து, பாரதியின் ஆத்திச்சூடியும் ஒப்பிச்சாங்க.
#ஒரு குழந்தை ஒளவை மாதிரி வேஷம் போட்டு, லேஸ் சாப்பிட்டு துடைக்காமல் வந்து சொல்லுச்சு
#ஒரு குழந்தை வந்ததில் இருந்து அக்கா அக்கானு அழுதுச்சு..
சமாதானம் செய்தவுடன் எப்போதும் வேணாலும் வெடித்து அழும் துக்கம் தோய்ந்த குரலுடன் சொல்லி முடித்து..சென்றது
#ஒன்றாவது படிக்கும் பையன்.. பாடகர் உதித் நாராயணனின் சிறுவயது குரல் போல
"அகைவகுக்கும் வகக்கம்.ஆத்திச்சூகி
அகம் செய்ய விகும்பு
ஆகுவது செனம்
இகவது ககவேல்
ஈவகு விகக்கே
என பன்னிரண்டும் சொல்லி முடித்து, இகை எகுதியவர் அவ்வையா ணு சொல்லி நன்கி னு சொன்னான்.
#சில குழந்தைக அமைதிப்படை அமாவாசை மாதிரி கைகட்டி வந்து பவ்யம் காட்டியது
#சில குழந்தைகள் வகுப்புக்குள் நுழையும்போது ஆத்திச்சூடி சொல்லிக்கொண்டே வந்தது
#சில குழந்தைகள் சொல்லும்போது இன்டிகேட்டர் வேலை செய்யாத பைக்கில தலையை வெட்டி வெட்டி கிராஸ் செய்வது மாதிரி தலையை வெட்டி வெட்டி சொன்னது
#ஒரு சில குழந்தைகள் தலையை ஆட்டி ஆட்டி சொன்னது. நானும் அதனுடன் சேர்ந்து ஆட்டியதில் அதற்கு கொஞ்சம் கம்பெனி கொடுத்தது மாதிரி ஆகி இன்னும் ஜிமிக்கியை ஆட்டி ஆட்டி சொன்னது
#சில குழந்தைகள் கண்ணை பார்க்காமல், தவிர்க்கும்பொருட்டு கீழே விழுந்த சில்லரை காசை தேடுவது போல் தேடிக்கொண்டே சொல்லியது
#ஒரு குழந்தை சீலிங் பேனிடமும், கடிகாரத்திடமும் சொல்லிச் சென்றது
#மறந்த வரிகளின் போது எச்சில் விழுங்கியது.பின் மீண்டும் ஏர் வாங்குன கம்ப்ரசர் மாதிரி நின்னு நின்னு ஓடியது போல் சொல்லியது
#பொதுவாய் போட்டி என்பது பெயருக்குத்தான். குழந்தைகள் அதை மிக இயல்பாய் எடுத்துக்கொண்டனர். ஒரு விளையாட்டும் போட்டியும் நல்லதுக்குத்தான். தோல்வி கிடைத்தால் நாளை வெல்வேன் என்ற நம்பிக்கை கிடைக்கும். தோல்வியை தாங்கும் மனவலிமை கிடைக்கும். எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாமல் முதல்முறை தோல்வி கிடைக்கும்போது அதை தாங்கும் மனப்பக்குவம் இல்லாமல் உடைந்துவிடுகின்றனர்.
சிறுவயதிலிருந்து விளையாட்டும் போட்டியிலும் ஈடுபடுவோனுக்கு தன்னம்பிக்கையும், தோல்வி கண்டு துவளா மனமும் இருக்கும். வெற்றியைத்தான் இழந்தோம் களத்தை இழக்கவில்லை எனும் மன தைரியம் வரும்.இதில் அக்குழந்தைகளின் உள்வாங்கிச் சொல்லும்திறன் வெளிப்பட்டது, சைகை,உச்சரிப்பு உடல் மொழியில் வெளிப்படுத்திய பாங்கு அமைந்திருந்தது.பள்ளியில் படித்த போட்டியை பற்றிய தங்கவிதியொன்று நினைவுக்கு வருகிறது. "Taking part is more important than winning"!
-மணிகண்டபிரபு
மீள் பதிவு
No comments:
Post a Comment