எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்நில்லா தோட நீ எனக் கருள்வாய்...அருணகிரிநாதர்
கொரொனா அலைகள் முடிந்த பின்.. மக்கள் தடுப்பூசிகளை ஆர்வமுடன் போட்டுக்கொள்ளும் நேரம். தடுப்பூசி மையத்தில் அன்று ஒருநாள் நூறு ஊசி மட்டும் போடப்படும் என்பதால் மக்கள் அனைவரும் அதிகாலை முதலே காத்திருந்தனர். நேரம் ஆக ஆக செவிலியரை வசைபாட துவங்கினர். சிறிது நேரத்தில் செவிலியர் ஒருவர் வியர்க்க விறுவிறுக்க மருந்து பெட்டி சகிதம் வந்து சேர்ந்தார். வந்தவுடன் மின்சாரம் பாய்ச்சியது போல் அத்தனை வேகத்துடன் அத்தனை பேருக்கும் முகம் சுழிக்காமல் ஊசி போட்டு முடித்தார்.
பின்பு தான் கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தை பிரித்து உண்ணத் துவங்கினார். விசாரித்ததில் வீட்டைவிட்டு காலை ஏழு மணிக்கு கிளம்பி.. இப்போதுதான் காலை உணவையே உண்பதாக இரண்டு மணிக்கு கூறினார். இது போல் சம்பவங்கள் நிறைய முறை நடந்துள்ளதாகவும் சொன்னார். உண்மையில் அனைத்து மக்களுக்கும் கொரொனா தடுப்பூசி செலுத்துவதில் தொண்ணூறு சதவீத பங்கு செவிலியர்களையே சாரும்.
#கிராம சுகாதார செவிலியர்கள்
ஒரு கிராமத்தில் ஐயாயிரம் மக்கள் தொகை இருந்தால் துணை சுகாதார நிலையங்களும், முப்பத்தைந்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் பேர் இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்படும். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இருப்பார்கள்.இங்கு பணிபுரியும் செவிலியர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையங்களுக்கு சென்று கருவுற்ற தாய்மார்கள், குழந்தை பேறு பெற்ற தாய்மார்களை கண்காணிப்பார்கள்.
கருவுற்ற பெண்களின் உடல்நலனை பேணுவதுடன் அரசு வழங்கும் தொகையினையும் பெற்று தருவது, சிறுவியாதிகளுக்கு நிவாரணம் வழங்குதல், குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளை, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளையும் கண்காணிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, தாய்-சேய் நல அட்டை வழங்குவது,சத்து மாத்திரை கொடுப்பது, இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது என தனக்கு ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இது போன்ற 40க்கும் மேற்பட்ட விபரங்கள் அடங்கிய படிவங்களையும் பராமரிக்க பணிகளை செய்து வருகின்றனர்.
#தடுப்பூசி போடும் பணி
கொரொனாவை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுப்பூசி ஒன்று தான் நம் முன் இருக்கும் ஒரே கவசம் என உலகின் பல்வேறு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும் களப்பணியில் கிராமப்புற செவிலியர்களின் பங்கு அளப்பரியது.
காலையில் 7 மணிக்கு பணிக்கு செல்லும் செவிலியர்கள்.. அங்கன்வாடியில் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று பதிவேடுகள், கர்ப்பிணியை ஆய்வு செய்து விட்டு ஆரம்ப சுகாதார நிலையம் செல்கிறார். அங்கு தனக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை சரிபார்த்து வாங்கிக் கொண்டு தடுப்பூசி போடும் மையங்களுக்கு வர பத்து மணியாகிவிடும்.வந்தவுடன் தடுப்பூசி போடுவோரின் பெயர் எழுதி,செல்போனில் பதிவிட்டு சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்கிறார்.
சில கிராமங்களில் டவர் கிடைக்காது. ஒவ்வொருவரின் பெயர், ஆதார் பதிவிட பத்து நிமிடமாகும். தாமதமானால் காத்திருப்போரின் வசைகளையும் வாங்கும் நிலை. ஊசி போட ஒருவரே இருப்பதால் ஊசி பிரித்து போடும்போது நூறு தடுப்பூசிகள் போட 1 மணியாகிவிடும்.200 என்றால் 3 மணியாகிவிடும்.ஒரு முறை 300ஊசி போட 6 மணியான நிகழ்வுகளும் நடந்ததுண்டு.ஒரு செவிலியர் அதிக பட்சம் 600 தடுப்பூசி ஒரே நாளில் போட்டுள்ளதாக கூறினார்
#செவிலியர்கள் சந்திக்கும் இடர்கள்
புதிதாய் கட்டப்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறம் இருப்பதால் அங்கு சென்று மருந்து எடுத்து வர தாமதமாகிறது. அங்கன்வாடி இருக்கும் பகுதியும் ஆரம்ப சுகாதார நிலையமும் தூரமாய் இருப்பதால் இந்த நிலை. சிலருக்கு வாகனம் இல்லாததால் பேருந்திற்காக காத்திருந்து செல்வதால் இன்னும் தாமதமாகிறது. இதனால் காலை உணவை கூட தவிர்த்துவிட்டு ஊசி போடும் பணியில் ஈடுபடுகின்றனர்.
ஊசி போடும் முன் சந்திக்கும் பிரச்சனையில் தலையாயது மக்களுக்கு டோக்கன் கொடுப்பது. ஆரம்ப நாட்களில் இதில் பல சண்டைகள் வரும்.அரசியல் கட்சியினர் பல டோக்கன் எடுத்துவிட காத்திருந்த மக்கள் கொதித்தெழ தள்ளுமுள்ளு நடந்த சம்பவங்களும் உண்டு.தற்போது கிராம நிர்வாக அலுவலகம் மூலம் கொடுப்பதால் ஓரளவு பிரச்சனை இல்லை. இருப்பினும் சிலர் கடைசி நேரத்தில் வந்து உறவினருக்கு தடுப்பூசி போடவேண்டும் என சங்கடப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
*இடையில் தேநீருக்கோ, இயற்கை உபாதை கழிக்க கூட செல்ல இயலாத சூழல்.
*பதிவேடு எழுத ஒவ்வொரு முறையும் ஆட்களை பிடித்து உதவி செய்ய வேண்டியுள்ளது
*அலைபேசி எண்ணிற்கு ஒரு நாளில் குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறது. எடுக்கவில்லையென்றாலோ, அணைத்து வைத்துவிட்டாலோ பிரச்சனை தான்
*ஒவ்வொரு முறை மருந்து எடுத்துச் சென்று திரும்பவும் ஊசி போடும் மையத்திற்கு வருவது சவால்தான்.
*பேருந்து வசதி இல்லாத பகுதிகளில் நடந்தே சென்று சேவை செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
*குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போடும் போது.. குழந்தைகள் ஒத்துழைக்க தாமதப்படுத்துவார்கள்.
இதனால் சில சமயங்களில் தடுப்பூசி போட தாமதமாக செல்லும் நிலை ஏற்படுகிறது.
*பல மாதங்களாக விடுப்பு இன்றி பணியாற்றி வருகின்றனர். தொடர்ச்சியாக கொரொனா கால தடுப்பூசி போடுவது பணிப்பளுவை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு நாள் மாலையிலும் வீட்டுக்குச் சென்று தன் குழந்தைகளை கொஞ்சும் போது மனது உறுத்தலாகவே இருக்கும். பெரும்பாலும் குழந்தைகளை தூக்குவதையே தவிர்த்துவிடுவேன் என மனம் கனத்த குரலில் பேசினார் ஒரு செவிலியர்.தினசரி கிளம்பும்போது இன்று எந்த பிரச்சனையும் இன்றி தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டுதான் கிளம்புவதாக ஒருவர் கூறினார்.
தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னேறிய மாநிலமாக மாறியதற்கும்,பேறுகால இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கும்,கொரொனா காலத்தில் தடுப்பூசி செலுத்தும் பணியிலும் கிராமப்புற செவிலியர்களின் பங்கும் முக்கியமானது.
கிரிமியன் போரில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனையில் கையில் விளக்குடன் வலம் வந்த நைட்டிங்கேலின் வழியில் தான் இன்றைய கொரொனா காலகட்டத்தில் கையில் சிரஞ்சுடன் நாள்தோறும் வலம் வருகின்றனர் செவிலியர்கள்.
கடந்த செவிலியர் தினத்தில் இவர்களின் பணியைப் போற்றும் வகையில் கோவையில் செவிலியர்களின் காலில் விழுந்து, ‘‘நீங்கள்தான் இப்போதைய சூழலில் கடவுள்’ என இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் கூறியது இவர்களின் பணிக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம்.
செவிலியர் என்பவர்கள் மருத்துவர்கள் அல்லர்,ஆனால் மருத்துவத்தை விட, ஒரு நோயாளியை வெகு அக்கறையோடு கவனிப்பதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். இனிமேலாவது அவர்களை ஊசிபோடும் இடங்களில் கண்டால் கருணையோடு பார்த்தாலே போதும்.. அவர்களின் பணிக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரமும் அதுதான்.
Care for one that is love, Care for hundreds that is nursing"
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment