Monday, 6 September 2021

கற்பதுவே பகிர்வதுவே*மணி



RM314
9/100

#கொங்கு தேன்
-சிவகுமார்

சொல்வதற்கு விஷயமுள்ளவனுக்கு மொழி பற்றிய கவலை அவசியமில்லை-சுந்தர ராமசாமி

ரெண்டு மாசத்துக்கு முன்னாலயே இந்த புக்க வாங்கியாச்சு.பொறவால படிச்சிக்கலாம்னு வச்சது அப்பிடியே உட்டுப்போச்சு.இப்ப மறுக்கா இன்னிக்கு படிச்சுமுடிச்சுப் போட்டேன்.இப்பிடியே புஸ்தக மெல்லாம் பக்கத்து வூட்டு திண்ணையில உட்கார்ந்து சிவகுமார் சொன்னது போல் முடி முதல் அடி வரை கொங்கு பாஷை தான்.

புத்தகத்தில் அவர் இளமை வாழ்க்கையைப் பற்றி அவர் பல மேடைகளில் சொன்ன விசயங்கள மற்றும் இளமை பருவ நினைவுகள் முழுக்க பரிமாறியிருக்கிறார். சிவகுமார் என்றாலே நியாபகம் தான். சிறுவயதில் என்ன சட்டை போட்டிருந்தேன் என்று கூட சொல்லுமளவிற்கு ஞாபக சக்தி. இது இருவகைகளில் வருவது ஒன்று அடிக்கடி நினைவு படுத்தி சொல்லிக்கொண்டிருப்பது, தன் ஒத்த வயதினரை கண்டு உரையாடியோ அல்லது நினைத்தாலே படம் ஓடுவது போல் மனதுநீரூற்று போல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

புத்தகத்தில் இளமையில் இருந்த வீடு, கண்ட முதல் மரணம்,சந்தித்த நபர்கள் அதாவது கிராமத்தில் உள்ள மனிதர்கள்,வில்லு வண்டி நினைவுகளை சுவைபட சொல்லியிருக்கிறார்.அதில் துருத்திப்பெட்டி கட்டுரையில் ஆணுக்கு மூணு வேளை இருக்கும். சூலூர் குளத்தில் தண்ணி வத்தினதும் மண் அள்ளி வருவது.கிணறு வெட்டுவது, அடுத்து காடுகரையில் அருகு தோண்டுவது.அந்த அருகே என்னதான் எடுத்துப் போட்டாலும் அடுத்த மழைக்கு மீண்டும் முளைக்கும்.ஆல்போல் தழைத்து அருகே போல் வேரூன்றினு பெருசுக சும்மாவா சொன்னாங்க.

இளமைக்காலத்தில் சினிமாவில் மீது ஆசை வந்ததும் தன் அம்மாவை சினிமாவுக்கு கூப்பிட்டு போய் பவர் போனதும் வீட்டுக்கு வந்தது ஏமாற்றமாய் இருந்து மீண்டும் அழைத்துப் போய் காட்டிய படம் தான் கற்பகம்.பல வயதானவர்கள் சினிமா அனுபவம் அப்போது இப்படித்தான் இருந்திருக்கும்.

அப்போதெல்லாம் போட்டோ எடுப்பது பெரிய விஷயம்.பலரின் ஏழ்மையை போல சிவகுமாரும் பள்ளி வயதில் குரூப் போட்டோவை காசு கொடுத்து வாங்க முடியாமல் இருந்துள்ளார்.
சிறுவயதில் பஸ் ஏறி ஊருக்கு போவதென்பது ஏதோ வேறு உலகத்துக்கே போவது போல.அப்பிடி தான் சென்ற பொள்ளாச்சி அனுபவத்தை எழுதியிருப்பார். அப்போது வந்த முதல் வட்டார் மொழி படமான மக்களை பெற்ற மகராசி படம் கோவையில் உருவாக்கிய அலையையும் சொல்லியிருப்பார். அந்த படம் ஏ.பி நாகராஜன் வி.கே ராமசாமி இணைந்து தயாரிச்சிருப்பாங்க.அந்த படத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சனைக்குப் பின் ஏ.பி என்,வி கே ஆர் இருவரும் சேரவேயில்லை.

தன் உறவினர் மகளை சிவகுமார் சென்னையில் வளர்த்து வந்தார் அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் அவர் இறக்க நிலை குழைந்து போனதும், அதற்குபின் அப்பெண்ணின் தந்தை சிவகுமாரிடம் சொன்ன வார்த்தைகள் நெகிழ்ச்சி.முதன் முதலில் நீச்சல் அனுபவத்தையும், சைக்கிள் அனுபவத்தையும் சொன்னது நம் வாழ்வில் சொன்னது போல் இருந்தது.தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை இன்னும் நினைவில் வைத்திருந்து பாராட்டியதோடு அல்லாமல் சந்தித்தது குறித்தும் நெகிழ்ந்துள்ளார்.

கோவையில் சினிமா ஸ்டூடியோக்கள் இருந்த வரலாறு, தேவருடனான சினிமாப்பயணம், தண்டுக்காரம் பாளையத்தில்  பெண் எடுத்தது, திருமணவிழா,கோவையில் தனிப் பெரும் ஆளுமைகளாய் விளங்கிய பொள்ளாச்சி மகாலிங்கம், ஜி டி நாயுடு போன்றோர் குறித்த தகவல்களையும் எழுதியுள்ளார்.

*அப்போது கடலை மாவுல பலகாரம் செய்வது..அதாவது லட்டு.அதுக்கு பேரு ஒப்புட்டுனு சொல்வாங்க

*கம்பரக்கத்தி பிரசவம் அக்காலத்தில் நடந்த அனுபவத்தை அறிய முடிந்தது

*எம்.ஜி ஆரின் படப்பிடிப்பில் குண்டுமணியை தூக்கி காலில் போட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியும்.ஆனால் அதே எம் ஜி ஆர் பத்திரிக்கையாளரின் முன்னிலையில் குண்டுமணியை தூக்கி காண்பித்தது அறியாத தகவல்

#கொங்குசொற்கள்

ஒரம்பரை-உறவினர்
அப்புச்சி-தாத்தா
ஓதம்-ஈரப்பதம்
பொடக்காளி-புறக்கடை
படல் (fence)
ஒருவாட்டி-ஒரு முறை
வடவறம்(வடக்கு)அப்பிடியே மேவரம், கிழவரம், தெம்பரம்
பொக்குனு போயிடுவ-ஏமாந்து போயிடுவ,
நங்கையா-அண்ணி
அக்கட்ட போ-அந்தப்பக்கம் போ

கீழுருந்து உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை சாதாரணமாகவே துவங்கியுள்ளது.ஜெயித்தவர்களின் கதைகள் மட்டுமே வரலாறும் ஆகின்றன.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment