யுத்தம் பொறுமைக் கோருகிறது. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, சந்தர்ப்பங்கள் தம்மை முன்னிறுத்தும்போது பொறுமைசாலிகளே அத்தகைய சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.ஜியாங் ரோங்
முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு துவங்கியது. உலக நாடுகள் எல்லாம் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அமைதிப் பூங்காவான தமிழகம் நவராத்திரி கொண்டாட்டங்களில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தது. போர்க் காலம் என்பதால் வங்கக் கடலில் தீவிர கண்காணிப்புடன் இருந்தனர் ஆங்கிலேய படை வீரர்கள். அவர்களின் கண்களில் படாமல் சென்னை துறைமுகத்திற்கு 2.7 கி.மீ தொலைவில் கேப்டன் கார்ல் வான் முல்லர் தலைமையில் தமிழரான பொறியாளர் செண்பகராமன் உட்பட பல வீரர்களும் இருந்த எம்டன் போர்க்கப்பல் நங்கூரம் பாய்ச்சி நின்றது
போலந்து நாட்டில் உருவாக்கப்பட்டு.. எத்தகைய அலையிலும் முன்னேறிச் செல்லும் பொருள்கொண்ட எம்டன் கப்பல் ஒரு ஜெர்மானிய போர்க்கப்பல் ஆகும்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த, எம்டன் கப்பல், தன் பணி காலத்தில், 31 கப்பல்களை மூழ்கடித்திருக்கிறது. தன் வசீகர தோற்றத்தால், 'கிழக்கின் அன்னப்பறவை' என, எதிரி படைகளாலும் வர்ணிக்கப்பட்ட பெருமை, இதற்கு உண்டு. திடீர் தாக்குதல் மூலம் வெற்றி பெற்ற எம்டன் இருபதுக்கும் மேற்பட்ட கப்பல்களை கைப்பற்றியுள்ளது.
மோஸ்கெட் எனும் போர்கப்பலையும், செம்ச்சுக் எனும் ரஷ்யக் கப்பலையும் மூழ்கடித்துள்ளது.
கைப்பற்றப்பட்டவற்றுள் எஸ்.எஸ்.ரியாசான்,எஸ்.எம்.எஸ் கார்மோரான் என்பவைகள் ஜெர்மன் போர்க்கப்பலாக மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து புயல் போல் வேகத்தில் வந்த குண்டுகள் முதலில் துறைமுகத்தில் இருந்த 'பர்மா ஆயில் கம்பெனியின்' 5000லிட்டர் கொள்ளளவு கொண்ட மண்ணெண்ணெய் கிடங்கை தாக்கியதில் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தன. சென்னை மக்கள் அதனை நீண்டநேரமாய் வானவேடிக்கை பார்த்தனர்.
மூன்று கிடங்குகளும், ஒரு வர்த்தக கப்பலும் சேதமடைந்தது. சிறிய வணிக கப்பலை சுட்டு வீழ்த்தியதிலில் மூன்று பேர் உயிர் இழந்ததுடன் சிலர் காயமும் அடைந்தனர். சென்னை துறைமுகம் அறுபது சதவீதம் சேதம் அடைந்ததாக தெரிவித்தன்ர். உயர்நீதி மன்றத்தின் கிழக்குச் சுவர் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. முதல் உலகப் போரில் இந்தியாவின் மீது நடந்த ஒரே தாக்குதல் இதுதான் எனும் பெருமையையும் எம்டன் தான் சென்னைக்கு பெற்றுத் தந்தது.
ஜெர்மானிய கப்பல் படையில் முக்கிய அங்கம் வகித்த, இந்த கப்பலுக்கு, 1913ல், வான் முல்லர் என்பவர், எம்டனின் கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார்.பல்வேறு வெற்றிகளைப் பெற்று தந்த ராசியான எமகாதகன் எம்டன் சீனா தேசத்தில் வெற்றிக் கொண்ட பெருமிதத்துடன் வங்காள விரிகுடாவில் வலது காலை எடுத்து வைத்து தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். கேப்டன் தனது திட்டத்தை விளக்கி முடித்தவுடன்.
இரவு 9.30 மணியைத் தாண்டியவுடன் தாக்குதல் துவங்கியது. சற்றும் எதிர்பாராத ஆங்கிலேயர்கள் நிலைகுலைந்து போயினர். 13 சுற்றுகள் ஒரு சுற்றுக்கு 10 குண்டுகள் வீதம் 130 குண்டுகளிலும் சென்னையின் பெயர் எழுதப்பட்டிருந்தது. தாக்குதலில் இருந்து காக்க ஆங்கிலேயர்கள் புத்திசாலித்தனமாக நகர் முழுவதும் மின்சாரத்தை துண்டித்தனர். ஆனால் கலங்கரை விளக்கம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற கோபுர விளக்கை அடையாளம் கொண்டு தாக்குதலை துவங்கினர்.
பிரிட்டன் படைகள், சுதாரித்து, எதிர்தாக்குதல் நடத்த, அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.
தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் மறைந்தது.சென்னை வாழ் மக்கள் பலருக்கு இந்த உண்மையே விடிந்தவுடன் தான் தெரிந்தது. விஷயம் அறிந்தவுடன் சிலர் பீதியில் ஊரைவிட்டு சென்றாதகவும் கூறப்படுகிறது.அப்போதைய சென்னை ஆளுநராக இருந்த பெண்ட்லாண்ட் ஓய்விற்காக ஊட்டி சென்றிருந்தார்.தகவல் அறிந்ததும் செப்டம்பர் 25ம் தேதி சென்னை திரும்பினார்.
ஆங்கிலேயரையே தலை குனிய வைத்த எம்டனை சென்னை மக்கள் பெருமையுடன்பேசினர்.வெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
#ஜெய்ஹிந்த் செண்பகராமன்
எம்டன் என்றவுடன் நினைவுக்கு வரும் பெயர் பொறியாளர் செண்பகராமன். இக்கப்பலில் உதவிப் பொறியாளராக பணியாற்றினார்.1891ல் திருவனந்தபுரத்தில் பணியாற்றிய காவல் அதிகாரியின் மகனாய் பிறந்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்தவரான இவர், இளம் வயதிலேயே சுதந்திர வேட்கையுடன் இருந்தார். ஜெர்மானிய உளவு அதிகாரியான சர்.வில்லியம் உடன் தன் 17ம் வயதில் அயல்நாடுகளுக்கு சென்று கல்வி பயின்றார். சுவிட்ஸர்லாந்தில் அறிவியலில் பட்டமும், ஜெர்மனியில் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். 12க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றார்.
நிறவெறிக்கு எதிரான பார்வையும், அடிமைத்தளையை உடைத்தெறியும் கோபமும் இயல்பாகவே அவரிடம் இருந்தது.'ப்ரோ இந்தியா' பத்திரிக்கையை ஆரம்பித்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும்இந்தியாவுக்கு ஆதரவான செய்திகளையும் வெளியிட்டார்.
ஜெர்மனியில் கெய்சர் இவர்பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெர்லினில் சக்தி வாய்ந்த மனிதராக வலம் வந்தார்.1933ம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மாநாட்டில் தான் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.ஜெய் ஹிந்துஸ்தான் (jai Hindustan) எனும் வெல்க இந்தியா எனும் பொருளில் ஜெய்ஹிந்த் அமைந்திருந்தது. நேதாஜி இந்திய ராணுவ படைக்கு இந்த மந்திரத்தையே பயன்படுத்தினர்.
இந்தியர்கள் பிரிட்டிஷாருக்கு அடிமையாகவே இருக்கவே தகுதி படைத்தவர் எனக்கூறிய ஹிட்லரை தன் வாதத் திறத்தால் மன்னிப்பு கேட்க வைத்தார். இதனை வெறுத்த ஜெர்மானியர்கள் உணவில் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இறக்கும் தருவாயில் மனைவி தனக்குப் பின் இந்திய சுதந்திரத்திற்காக போராட் வேண்டுமெனவும் தனது அஸ்தியை கரமனை ஆற்றிலும், நாஞ்சில் நாட்டு வயல்களிலும் தூவும் படியும் கூறிவிட்டு மறைந்தார்.
எம்டனின் இறுதிக்காலம்
சென்னை உள்ளிட்ட பகுதிகளை தாக்கிவிட்டு இறுதியாக ஆஸ்திரேலியா சென்றான் எம்டன்.அங்கு நடைபெற்ற கடற்படை சண்டையில் HMAS Sydney என்ற கப்பலினால் தாக்கப்பட்டதால் “எம்டன்”கப்பல் 1914 நவம்பர் 09 அன்று கடலில் தரைதட்டி நிறுத்தப்பட்டது.கப்பலில் இருந்த 376 பேரில் 133 பேர் கொல்லப்பட்டு மீதமுள்ளோர் சிறைபிடிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.அப்போது வென்றஇந்த சிட்னி கப்பலை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் கப்பலான கார்மோரான் தாக்கி மூழ்கடித்து தானும் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 'எம்டன்' கப்பல் குண்டு வீசிய பகுதியான உயர்நீதிமன்ற வளாகத்தில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. குண்டு வீசிய பொறியாளர் செண்பகராமனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. "நீரைவிட பலவீனமானது வேறொன்றுமில்லை ஆனால் வன்மையை வெற்றிக் கொள்வதில் அதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை"ம்என்பார் தாவோ. தனியொரு மனிதனாக அயல் தேசம் சென்றாலும் தாய் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டு ஆங்கிலேயரால் பிடிக்க முடியாமல் உயிர்துறந்த செண்பகராமன் எம்டன் குண்டுவீச்சினை நினைக்கும் போதெல்லாம் நினைவு கூறப்படுவார்.
-மணிகண்டபிரபு
No comments:
Post a Comment