Saturday, 26 March 2022

30நாள்_வாசிப்புப்போட்டி

#30நாள்_வாசிப்புப்போட்டி
#30D105

Book no:1
Pages:302

#கலைடாஸ்கோப்
-சந்தோஷ் நாராயணன்

படித்த புத்தகங்களை விட படிக்காத புத்தகங்கள் மேலும் மதிப்புமிக்கவை. அது உங்களுக்கான ஞானங்களை ஒளித்துவைத்து அமைதியாக இருப்பவை.ஆகவே, படிக்காவிட்டாலும் பரவாயில்லை.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை வாங்கிச் சேமிக்கலாம்

-தலேப்

விகடனில் தொடராய் வந்த போது சின்ன சின்ன விஷயங்கள், தகவல்கள்,மினிமலிச ஓவியம், வினோதமான தகவல்கள்,அறிவியல், குட்டிக் கதைகள் என தலைப்பிற்கேற்றவாறு ஒரே பக்கத்தில் வண்ண வண்ண அழகாய் இந்த கலைடாஸ்கோப் இருந்தது. ஐம்பது வருடங்கழித்து வரும் டெக்னாலஜி வளர்ச்சியாகட்டும், இரண்டாயிரம் வருடத்திற்கு முன் நிகழ்ந்த ஆய்வுகள் ஆகட்டும் சமகாலத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மினிமலிச ஓவியத்தில் தீப்பிட்டி பட அட்டையில் 'சாதீ'ப் பெட்டி என மைக்ரோ செகண்ட் மூளையில் சட்டென மின்னல் வெட்டியது.
வளர்ச்சி?? ஓவியத்தில் மனிதனின் மேல் பாகம் விவசாயியாகவும், கீழ் பகுதி கைப்பையுடன் அலுவலகம் செல்லும் மனிதன் என நவீன காலத்தை இரண்டு சிறு ஓவியங்களில் விளக்கியிருப்பார்.
வண்டி பத்து நிமிசம் நிக்கும்னு சொல்லும் போது மோட்டல் குறித்த பிம்பம் நமக்கு வந்திடும். 2 ம் உலகப் போருக்கு பிறகு தான் உலகம் எங்கும் வந்ததாக சொல்லி அதனால் தான் பெரும் அக்கப்போராக இருப்பதாக நையாண்டி செய்திருப்பார்.

நாஸ்டால்ஜியா நோட்டில் காணாமல் போன ஜவ்வு மிட்டாய், பாம்பே மிட்டாய் பற்றி கூறியிருப்பார். சாக்லெட் வியாபாரத்தை விரிவு செய்த வியாபாரமயம் ஜவ்வு மிட்டாயை வழக்கொழிய வைத்துவிட்டது.ஹரிக்கேன் விளக்கின் சிறப்பை கூறும் போது அதன் திரி நாடாபோல் இருக்கும். சுடரை பற்ற வைத்து லாக் செய்தால் புயலே வந்தாலும் சுடர் அசையாது. பெயர் காரணம் புரிகிறதா? Hurricane lamp

நானோ ஹிஸ்டரியில் தீக்குச்சியின் வரலாறு சொல்லியிருப்பார். பல்வேறு சோதனைகள் பல்வேறு அறிஞர்கள் கண்டறிந்த பின் ஜான் வால்க்கர் கண்டறிந்த இன்றைய குச்சி கைகளில் நெருப்பு படாமல், உரச எளிதாகவும் இருந்தது.இதனால் தான் சேஃப்டி மேட்ச்சஸ் என சொல்வது புரிகிறது.

முகநூலில் லைக் சிம்பலின் தோற்றமும் அது எங்கிருந்து வந்தது எனும் வரலாற்றையும் பின்னணி தகவலையும் அறிந்து கொள்வது அட இதுக்கு பின்னணியில் இப்படியா என எண்ண வைக்கிறது.

தலையாணையின் ப்ளாஷ்பேக்கை திரும்பி பார்த்தால் தூங்கும் போது எறும்புகள் போன்றவை காதிலோ மூக்கிலோ நுழையாமல் இருக்க தலையை கொஞ்சம் உயர்த்தி தூங்க எகிப்தியர்கள் தீர்மானித்திருந்தனர். சீனர்கள், ரோமானியர்கள், ஐரோப்பியர்கள் கிரேக்கர்கள் என வரலாறு பயணித்தாலும் அந்த தலையணை மந்திரத்தை கண்டுபிடித்தது நாமதானாக்கும்.

விஷூவல் கார்னர் பகுதியில் உலகின் பல்வேறு பகுதிகளில் அதிசயிக்கத் தக்க வண்ணம் உள்ள புகைப்படங்களை பகிர்ந்திருப்பதுடன் அதன் பின்னணியிலுள்ள வரலாற்றையும் படிப்பது சுவாரஸ்யமாக்குகிறது.

கொலாஜ் பகுதியில் தன் பாணியில் உருவாக்கிய தன்னம்பிக்கை வாக்கியங்களை பகிர்ந்திருப்பார். அதில் ரசித்தவை சில

*ஒரு குக்கரைப் போல் இருங்கள்.. பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்து விடுங்கள்

*தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது..அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள்

*தாமதமான வெற்றி என்பது பல் இழந்த பின் கிடைக்கும் நல்லி எலும்பு போல

ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யமாய் இருந்தது. அறியாத ஏதேனும் ஒரு அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவியாய் இருந்தது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment