#30நாள்_வாசிப்புப்போட்டி
#Rm105
Book:5
Pages:326
தி இந்து நாளிதழில் மொழிபெயர்ப்பாளராக மட்டும் அறிமுகமாகியிருந்த ஆசை அவர்களின் எழுத்து.. பின்னர் காந்தி குறித்த தொடர் கட்டுரைகளின் வழியே மனதிற்கு மிகவும் அருகில் வந்தார்.இலக்கிய விமர்சகராக ஆய்வாளராக ஞாயிறுதோறும் கட்டுரைகள் எழுதி வந்த போது அவரின் இன்னொரு முகம் நமக்கு அறிமுகமாயிற்று. ஒவ்வொரு ஆண்டு புத்தக கண்காட்சியிலும் இவரின் ஒரு புத்தகமாவது வாங்கிவிடுவேன். அந்த வகையில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு வித்தியாசமாக இருந்தது. தெரிந்து கொண்டதில் ஹோர்ஹ லூயிஸ் போர்ஹேஸின் "பேபல் நூலகம்" என்ற சிறுகதையின் தொடக்க வரியிலிருந்து இந்த புத்தகத்திற்கான தலைப்பு கிடைத்ததை அறியமுடிந்தது.
புனைவுகள் ,கவிதை, மொழிபயர்ப்புகள், அபுனைவு, பதிப்புத்துறை& அஞ்சலி என பல்வேறு தளங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் படிப்பவர்களை பரவசமூட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மௌனி குறித்த அறிமுக உரையில் அவரின் கதைகளை முதன்முறையாக படிக்கும்போது பாழடைந்த ஒரு பெரிய வீட்டுக்குள் நுழையும் உணர்வுதான் என்று குறிப்பிடுகிறார். மௌனியின் கதைகளைப் படித்தவர்களுக்கு இந்த வரி நிச்சயம் நெருக்கமாக இருக்கும். அர்த்தமற்ற சம்பவங்களின் மங்கிய பின்புலத்தில் அவற்றை ஒன்று சேர்த்து, ஒரு சரடு போல் ஓடும் மொழிதான் அவரது சாதனைக்கு பிரதான காரணம் என்ற ஒற்றை வரி அவருக்கு புகழாரம் சூட்டுகிறது.
மனிதர்களை கருப்பு வெள்ளை என்று தனித்தனியாக பிரிக்க முடியாது எல்லா குணங்களின் கலவை தான் மனித இயல்பு. அந்த மனித இயல்புகளை தன் எழுத்துக்களில் வடித்த தி.ஜாவின் ஒவ்வொரு கதையிலும் வந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு நம்மையும் உரையாட வைத்திருப்பார்.அடுத்து பாகிரதியின் மதியம் நாவலின் அடிநாதத்தை மிகவும் பாராட்டும் ஆசை அவர்கள் போர்த்துக்கீசிய நாவலாசிரியர் ஜூஸே ஸரமாகுவைப் போல்
பா. வெங்கடேசனும் அடுக்கி அடுக்கி நீண்ட வாக்கியங்கள் எழுதக்கூடியவர். அந்த நாவலில் முற்றுப்புள்ளியை நீங்கள் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்பது என்னுடைய ஒரு ஒப்புதல் வாக்குமூலம். அடுக்கடுக்கான கதைகளை கொண்ட தாண்டவராயன் கதை நாவல் குறித்தும் சிலாகித்து சொல்லியிருக்கிறார்.இவர்களைத் தவிர தஞ்சை பிரகாஷ், பிரான்சிஸ் கிருபா, கி ராஜநாராயணன் போன்றவர்களின் படைப்புலகையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.
வீட்டினுள் இருக்கும் கண்ணாடியை எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிக்காது என்பது போல்தான் பாரதியின் கவிதைகளும். ஆசை அவர்களும் பாரதியின் கவிதைகளை சிலாகித்துக் கூறும்போது அவரின் கவிதையில் ஒரு கம்பீரம் இருக்கும். அதட்டல் இருக்கும். 'இவை அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ என்பதுபோல. ஆனால் இயல்பான மனங்களிலிருந்து குமுறலாக வெளிப்படும் பாடல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்ணதாசனின் சினிமா பாடல்களை சொல்லும்போது காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் "தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்" எனத் துவங்கும் வரியில் வரும் இந்த மயக்கத்தை அவர் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக் கொண்டிருப்பார்கள் என்று கண்ணதாசனின் கவிதை நயத்தை நம்மோடு சேர்ந்து கைகுலுக்கி பாராட்டி இருப்பார்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகிறோமோ இல்லையோ நவீன காலத்தில் இலக்கியம் தேடுகிறோம்.
"ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். மொழிபெயர்ப்பு என்ற விஷயம் இல்லை என்றால் மௌனத்தை எல்லைகளாக கொண்ட வட்டாரங்களில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம் என்ற ஜார்ஜ் ஸ்டெயினரின் மேற்கோளை கூறியது மிகவும் பொருத்தமாக இருந்தது. சிறந்த மொழிபெயர்ப்புகளை நமக்கு அறிமுகம் செய்வதுடன், தாவோ தே ஜிங் மற்றும் உலக அரங்கில் கவனம் பெற்ற இலக்கியங்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதில் ஆசை அவர்களின் பங்கு அதிகம்.
அபுனைவு தலைப்புகளில் பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய அறியாத பல சின்னஞ்சிறு செய்திகளையும் நேர்த்தியுடன் கட்டமைத்து இருக்கிறார். பதிப்பகத் துறை வரலாற்றினையும் ஒவ்வொரு காலகட்டத்தில் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் நமக்கு சொல்லி இருக்கிறார். இறுதியில் சார்வாகன் மற்றும் பிரான்சிஸ் கிருபாவிற்கான அஞ்சலிக் கட்டுரைகள் நம்மையும் நெகிழ வைக்கும் படி இருந்தன.
ஒரு சில கட்டுரைகளை அவ்வப்போதே படித்திருந்தாலும் புத்தகமாக வாசிக்கும்போது முழு நிறைவை தருகிறது. இலக்கியவாதிகளுக்கு பிடித்தமான ஒரு நூலை தந்ததில் ஆசை அவர்கள் இன்னொரு சிக்ஸர் அடித்து உள்ளார்.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment