Tuesday, 16 January 2024

கவிஞனும் கவிதையும்-எஸ்.ரா


#Reading_Marathon2024
#24RM050

Book no:3/100+

கவிஞனும் கவிதையும் 
-எஸ்.ராமகிருஷ்ணன்

இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. எஸ்ராவின் கட்டுரை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. வாசித்தவற்றை, அவரின் அனுபவங்களையும் சேர்த்து தரும்போது அந்த கட்டுரை நேர்த்தியாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் அமைந்துவிடும். அதேபோலதான் இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும்.. கவிதை குறித்த அவர் பார்வையும் உலக கவிதைகள் குறித்த மேற்கோள்களையும் இதில் சுட்டிக்காட்டி இருப்பார். 

பொதுவாக கவிதை என்றால் மிகவும் எளிதாக எழுதி விடுவார்கள். ஆனால் அதுதான் இருப்பதிலேயே எழுதுவதற்கு கடினமானது. நாலு பேர் பாராட்டி விட்டாலே சிலர் 400 கவிதைகளையும் ஒரே முறையில் எழுதிவிட்டு அடுத்த முறை புத்தகங்களையும் போட்டு விடுவார்கள். ஆனால் கவிதையின் உள்ளார்ந்த நோக்கம் சொற்களின் ஆழம், இது பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. முதல் இரண்டு கவிதைகள் நன்றாக வந்த உடனே அடுத்தடுத்த கவிதைகளும் அவ்வாறு வந்துவிடும் என எண்ணிக்கொள்கிறனர் ஆனால் கவிதையை எழுதுபவர்கள் இதற்கு முன் எழுதிய கவிதைகளில் 10%  வாசித்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு நல்ல கவிதை என்பது கைகூடும். அந்த வகையில் இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் கவிதை குறித்த பார்வையும் தெளிவும் வாசகனுக்கு ஏற்படுத்திவிடும்.

கவிதையின் ஒரு வரி அல்லது ஒரு சொல் நம்மைக் காலத்தின் கைபிடித்து அழைத்து செல்கிறது. சொற்கள் வலிமையானது ஒரு ஆயுதம் அதை பயன்படுத்துகின்றவனே அதற்குரிய வலிமையை ஏற்படுகிறான் சொல்லை அடையாளம் காண்பதும் பிரயோகம் செய்வதும் எளிதானது இல்லை என சொற்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் கவிஞர்கள் என்பன குறித்த கட்டுரையை எழுதி இருப்பார். இதனையே வழிமொழிவது போல இன்றைய பெரும்பாலான கவிதைகள் நிஜமீன்கள் போலவே செல்போன் திரையில் நீந்தி கொண்டிருக்கும் பிம்பமீன்கள் என்பதனை போட்டு உடைக்கிறார்.

வெகுஜனத்தளத்தில் கவிதை என்பது சாக்லேட் போன்ற ஒரு நுகர்வு பொருள். அது உடனடித் தன்மை கொண்டதாகவும் சுவையானதாகவும் இருக்க வேண்டும். கவிதை எழுதுபவர்கள் உடனடியாக கவனிக்கப்படுகிறார்கள். கவிஞர்கள் சீக்கிரம் வெளிச்சத்திற்கு வந்து விடுவது இதனால் தான்.
கவிதையின் முதல்வரி என்பது கவிதைக்குள் செல்வதற்கான கதவில்லை. மாறாக கவிதையின் எல்லா வரிகளும் எப்போதும் திறந்து இருக்கின்றன என்பதனை இது இடங்களில் வலியுறுத்துகிறார். இதே போல இன்னொரு இடத்தில் கேப்ரியல் டிமே லோவின் வரிகளான "கைகழுவதைப் போல கவிதைகளிலிருந்து வெளியேறுவது சுலபமில்லை" என்கிறார் .உள்ளே வருவதும் போல் வெளியேறுவது சுலபமில்லை என்பதனை நமக்கு உணர்த்துகிறார்.

தேவதச்சனின் பாலங்கள் கவிதையில் சொற்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உளவியல் பார்வையை கவிதை எவ்வாறு இணைக்கிறது என்பதனை சொல்லி இருப்பார்.
ஒரு கவிதையில் "ஈரம் பட்டவுடன் நாம் ஏன் கோபம் கொள்கிறோம். நாம் விரும்பும் நேரத்தில் மட்டுமே தண்ணீருடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறோம். என்ற மனிதனின் மன உணர்வை எளிதாக சொல்லி இருப்பார் .அதிலே ஒரு வரி வரும் "அறிந்த நீருக்குள் அறியாத நீர் இருக்கிறது போலும்" என்று சொல்லுவார் இந்த வரி மிகவும் வசிக்க வைத்தது.

பத்து பேர் நினைவு கூறும் முன் பத்து பேர் சிந்திக்கும் முன் யார் முதலில் சொல்கிறார்களோ அவனே கவிஞன் என்பார்கள். இந்த கட்டுரையிலும் கவிஞனை பற்றி சொல்லும் போது மீட்க முடியாத விஷயங்களில் முன்னால் தான் ஒரு சிறு துளி என்று உணரும் நினைவுகளே கவிஞரை வழிநடத்துகின்றன என்கிறார்.

எதையும் கேள்வியின் மூலம் அறிந்து விட முடியும் என எண்ணுகிறோம். ஆனால் காலமாற்றத்தில் அதே கேள்விகள் தான் வேறு வேறு வடிவில் தோன்றிய படியே இருக்கின்றன. ஒரே பொருள் தான் ஆனால் ஒவ்வொரு கவிஞர்களும் அணுகும் முறை வேறு வேறு ஆக மாறுகிறது. உலக கவிஞர்களின் வரிசையில் ஒவ்வொருவராக நமக்கு அறிமுகம் செய்து தான் ரசித்த ஒரு கவிதையை தன் அனுபவத்தின் வாயிலாக அதனை விவரிக்கிறார் எஸ்ரா.

மெலோவின் கவிதையில் "எங்கே ஆற்றின் வாழ்க்கை முடிகிறதோ, அது அதன் சமாதி தானே என்ற வரி மூலம் நம்முடைய சிந்தனையை கலைத்துப் போடுகிறார். சரியான கவிதை நம்முடைய வெற்றிடத்தை நிரப்புகிறது என்பதனை சில வரிகள் மூலம் நமக்கு காண்பிக்கிறார். மகிழ்ஆதன் ,மதார் ,மோகனரங்கன் ஆகியோரின் கவிதைகளையும் கட்டுரையில் மொழிபெயர்ப்பு கவிதைகளோடு தமிழ் கவிஞர்களின் கவிதைகளையும் கட்டுரையாக எழுதியுள்ளார்.

ஒரு வனத்திற்கு செல்லும் போது நமக்கு ஏற்படும் புதிய அனுபவம் வேறு வேறு குரல்களை கேட்பதாகவும், அறிந்தும் அறியாத காட்சிகளின் வழியே நம்மை இழக்கத் தொடங்குகிறோம். அன்றாட உலகில் இருந்து விடுபட்டு வேறு உலகில் சஞ்சரிக்க ஆரம்பிக்கிறோம். இப்படி தொடர்பில்லாத படி துண்டிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை போல கவிதைகளும் மொழியாக்க கவிதைகளை வாசிக்கும் போது நமக்கு கிடைக்கிறது. நம்மில் அதை பொருத்திப் பார்க்கிறோம் .அப்போது அந்த அனுபவம் நம்முடைய அனுபவமாக பொருத்திப் பார்க்கும் போது அந்த கவிதை வெற்றியடைகிறது. அந்த கவிஞனின் நோக்கம் நிறைவேறுகிறது. இப்படி கவிதைகள் மொழிபெயர்ப்பு என்ற உணர்வுகள் இல்லாதவாறு நமக்கு மிகவும் எளிமைப்படுத்தி இந்த தொகுப்பு முழுவதும் தந்திருக்கிறார். இதில் உள்ள 22 கட்டுரைகளும் வெவ்வேறு அனுபவங்களை தருகின்றனவாக அமைகின்றன.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment