Tuesday, 31 December 2024

உலகில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். செய்பவர்கள், பார்ப்பவர்கள், வெறுமனே இருப்பவர்கள். முதல் பிரிவில் இருப்பவர்கள் 'செயல் வீரர்' என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆர்வமும் உற்சாகத்துடன் எதையாவது புதிதாக செய்து கொண்டே இருப்பார்கள். அது வெற்றி பெற வேண்டும் என முழுமையாய் நம்புவார்கள். தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு விடமாட்டார்கள். இரண்டாவது வரும் பிரிவினர் ''பார்ப்பவர்கள்' புதிய முயற்சியில் ஆர்வம் இருக்கும். அதே சமயத்தில் தயக்கமும் இருக்கும். புதிய முயற்சியில் ஒருவர் வெற்றி பெற்று விட்டால் உடனே இவர்கள் அதனை தொடர்ந்து செய்யத் தொடங்கி விடுவார்கள். வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சியும் தோல்வியடைந்தால் பின்வாங்கியும் விடுவார்கள். இறுதியாக வருபவர்கள் தான் 'வெறுமனே பார்ப்பவர்கள்' இவர்களுக்கு எந்த ஆர்வம் இருக்காது. முயற்சித்துப் பார்ப்பதில் ஆசையும் இருக்காது. தங்கள் தலைவிதியை நொந்து கொண்டு இறுதிவரை பொழுதை போக்கி விடுவார்கள். இதில் எந்த ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் #கற்கை_நன்றே_2

Monday, 30 December 2024

புத்தகம் 41


Reading_Marathon2024
#24RM050

Book No:41/100+
Pages:-232

உலகம் 20 குடும்பங்களுக்குச் சொந்தம்
-வேங்கடம்

திருப்பூரில் கடந்த ஆண்டு பஞ்சு விலை மிகவும் உயர்ந்து தொழில்கள் அனைத்தும் நலிவுற்று இருந்தன. காரணம் ஆன்லைன் டிரேடிங் முறை வந்ததால் என்று சொன்னார்கள்.இப்போது கொஞ்சம் சீராகிவிட்டது. சிறுவயதில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் நாய் வளர்ப்பது என்பது எல்லாரும் ஒரே நாயை வளர்ப்பது அல்ல. ஒவ்வொரு வருடமும் நாயின் வெவ்வேறு வடிவங்களை பார்த்து வருகிறேன் .இதை எல்லாம் யார் தீர்மானிக்கிறார்கள் ,எந்த நாயை வளர்க்க வேண்டும் என்று யார் சொல்கிறார்கள் என்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். ஆனால் ஏதேனும் ஒருவரின் விருப்பத்தின் பேரில்தான் இவை அத்தனையும் நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் உறுதியாக தெரிகிறது. அது போலத்தான் இந்த புத்தகத்தை படிக்க படிக்க என்னுடைய சில கேள்விகளுக்கு விடையாக இருந்ததே அறிய முடிகிறது.

பேராண்மை படத்தில் ஒரு வசனம் வரும் எப்ப படித்தாலும் சர்வதேச அரசியல் படிங்க என்று .இந்த புத்தகத்தின் அறிமுகத்திலும் கையில் இருந்து நழுவி விழுந்த காசு காலுக்கு அருகில் தான் விழுந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு போல நம் எல்லா பிரச்சனைகளுக்கும் மிக அருகாமையில் உள்ள சிறு வட்டத்துக்குள் விடையைத் தேடிக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி இருப்பார்.
ஆனால் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் வெளியே பல காரணிகள் உண்டு என்பதை இந்த புத்தகம் விளக்கிக் கூறுகிறது. 

725 கோடி பேர் வாழும் இவ்வுலகில் மிகப்பெரும் பணக்காரர்கள் 20 குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே என்பது திகைக்க வைக்கிறது. தங்களின் சுய பாதுகாப்பு கருதி அவர்கள் ஏராளமான கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர். பெரும் பண முதலைகள் எந்த அரசாங்கங்களையும் உண்மையில் ஆள விடுவதில்லை. நாம் எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை பணக்காரர்களை தீர்மானிக்கிறார்கள்.
சட்டம் அனைவருக்கும் சமம் என்ற போதிலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் பணக்காரர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. அவர்களின் அதிகார பிரயோகம் எந்த எல்லை வரையிலும் சென்றடையும்.

உலக நாடுகளின் மையமாக பொருளாதார அதிகாரம் மையமும் அரசியல் அதிகார மையமும் ஆன்மீக அதிகாரம் மையமும் உள்ளதை விரிவாக அலசி உள்ளார். 

இலுமினாட்டி என்ற லத்தின் சொல்லுக்கு ஞானம் பெற்றவர்கள் என்று அர்த்தம். இலுமினஸ் என்பதன் பன்மைச் சொல்தான் இழுமினாட்டி. கோடி கோடியாக சொத்துக்களை கொண்ட மாபெரும் செல்வந்தர்கள் ராஜாக்கள் தலைமையில் பலரை உறுப்பினராகக் கொண்டு பல நூற்றாண்டாக இயங்கும் ரகசிய குழு தான் இவை. இவர்கள் பல்வேறு துறைகளில் நட்பு பாராட்டி பேசி மகிழ மாட்டார்கள் அனைத்து திட்டங்களையும் ரகசியமாக வைத்திருப்பது நோக்கமாகச் சொல்கிறார்கள் இவர்களின் பிள்ளைகளை பல துறைகளில் பயிற்சி பெற்று இவர்களை மேலே தூக்கி விட பத்திரிகை டிவி போன்ற மீடியாககள் அனைத்தும் இவர்கள் கையில் வைத்திருப்பதால்..இருக்கும் அறிவைக் கொண்டு அவர்களால் நாளைய தலைவர்கள் ஆவது மிக எளிதாகி விடுகிறது.

இலுமினாட்டிகளின் நோக்கம் எதிர்காலத்தை உலகை ஒரே குடையின கீழ் கொண்டு வருவது அதாவது ஒரே அரசாங்கம் ஒரே கரன்சி ஒரே கொள்கை என்பது.தொழில்மயமாவது நிறுத்திவிட்டு ஜீரோ குரோத் சொசைட்டியாக உருவாக்குவது. கணினி தொழில்களையும் சேவை தொழில்களையும் மட்டும் விட்டு வைப்பது. 2050 வருடத்திற்குள் சிறு போர்கள் நோய்கள் பட்டினி போன்றவற்றால் மூன்றாம் உலக நாடுகள் மக்கள் தொகை குறைந்தபட்சம் 300 கோடி ஆவது குறைப்பது போன்றவை சொல்கிறார்.

பொதுவாக Problem -Reaction- Solution என்ற கொள்கை படி குழப்பம் இல்லாத நாட்டில் கூட பிரச்சினைகளை தூண்டி விடுவது. அதற்கு மக்கள் எதிர்வினை ஆற்றுவது, அந்த குழப்பமான சூழலுக்கு தீர்வு காண்பதாக சொல்லி மூக்கை உள்ளே நுழைப்பது என்று அவர்களுடைய யோசனை மிகவும் நயவஞ்சகமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

தங்களை விட தாழ்ந்தவர்கள் சொல்லும் அறிவாளித்தனமான யோசனைகளை கூட என்றும் செயல்படுத்தாதவர்கள். கீழ் நிலையில் இருப்பவர்கள் என்றாவது செல்வத்திலும் பதவிகளும் சற்று மேல்நிலைக்கு வந்துவிட்டாலும் அவர்களை ஒரு பொருட்டாக இவர்கள் மதிக்கவே மாட்டார்கள். மக்களுடைய பலவீனத்தையும் கோழைத்தனத்தையும் முழுமையாக சுயயலாபத்துக்காக உபயோகித்துக் கொள்வார்கள். அதை சார்ந்த தங்களுடைய தலைமை பீடம் இருக்கிறது என்பதை உணர்ந்து இருப்பார்கள்.

வளர்ந்த நாடுகளுக்கு கடன் கொடுப்பது வளரும் நாடுகளுக்கு கடன் கொடுப்பது தொழில் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது என கடன் கொடுத்தே தங்களுடைய காரியங்களை சாதித்துக் கொள்ளும் ரோத்சைல்ட் குடும்பத்தினர் பற்றி விரிவாக சொல்லியுள்ளார். இவர்கள் மனது வைக்காமல் எந்த சண்டையுமே எந்த நாட்டோடும் நடைபெறாது பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் தங்கம் வெள்ளி போன்றவற்றிலும் இவர்களின் பங்கு அளப்பரியது.

உலக அளவில் ஆதிக்கம் செலுத்திய 13 குடும்பங்கள் பின்னணிகள் குறித்தும் தகவல்களாக செய்திகளாக சேகரித்து சொல்லியுள்ளார். வட்டி என்பது அணுகுண்டை விட மோசமானது லேசர் கதிர்களை விட கூர்மையானது கொடுமையானது ஒவ்வொரு அரசாங்கமும் உலக வங்கிய இடம் வாங்கும் கடனுக்கு எதிராக நாட்டு வரி வசூலிப்பை உத்தரவாதமாக கொடுக்கிறது வரி மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது அதாவது கடனுக்கு மறைமுகமான உத்தரவாதம் அந்நாட்டு ஒவ்வொரு பிரஜையும் தான் ஒவ்வொருவரும் பன்னாட்டு வங்கிக்காக உழைத்து வட்டியாகும் வழியாகவும் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

*அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டிசி அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒரு மாநிலம் அல்ல அது தனிப்பட்ட நபர்களுக்கு சொந்தமானது. அதேபோல் அமெரிக்க டாலர் நோட்டை அச்சடித்து வெளியிடும் உரிமை பெற்ற பெடரல் ரிசர்வ் வங்கி அமெரிக்க அரசுக்கு சொந்தமானது அல்ல. தனி நபருக்கு சொந்தமானது.

*ஏழை மக்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்ய இயலாத நிலையில் ஒரு மூடிய சமூகமாக (Gated community ) சுவர் எழுப்பிக் கொண்டு வாழ்பவர்கள். 

சிந்திக்கத் துண்டும் விதத்தில் அமைந்த இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கருத்துக்களும் யோசித்துப் பார்த்தால் ஆமா ல்ல என்பது போலவே இருக்கும். இறுதியாக முத்தாய்ப்பான வரியோடு முடித்திருப்பார்." தீய சக்திகள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க அவர்களுக்கு ஒரே ஒரு தேவை தான் இருக்கிறது .அது நல்லவர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பது என்று"

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

பீட்டர் கொள்கை (Peter principle) என ஒரு கொள்கை நிர்வாகவியலில் உண்டுஒருவர் ஒரு பள்ளியில் நல்ல ஆசிரியராக இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். விருது எல்லாம் வாங்குகிறார். பல வருடம் பணி செய்து சீனியாரிட்டி வந்துவிடுகிறதுபுரமோஷன் கொடுத்தெ ஆகவேண்டும். துணை ப்ரின்சிபாலாக நியமிப்பார்கள். அதற்கும் ஆசிரியர் பணிக்கும் சம்பந்தமே இல்லை. இது திடீர் என தொழிலையே மாற்றுவது மாதிரிதான். அதில் அவரால் பழைய திறமையை காட்ட முடியவில்லைஇப்போது ப்ரின்சிபால் வேலை காலி ஆகிறது. அதற்கு இவரை போடமாட்டர்கள். வெளியே இருந்து இன்னொருவரை எடுத்துவிடுவார்கள். இவர் அதற்கு வருத்தபட்டாலும், எதுவும் செய்ய முடியாது, துணை ப்ரின்சிபால் வேலையில் ஆசிரியருக்கு கொடுப்பதை விட சம்பளம் அதிகம். கவுரவம் கூடுதல். ஆனால் ஆசிரியர் பணியில் இருந்த மனமகிழ்ச்சி இல்லை.பள்ளியும் நல்ல சிறப்பான ஆசிரியர் ஒருவரை இழந்து, மொக்கையான ஒரு துணை ப்ரின்சிபாலை அடைந்தது.அதனால் இவர் இனி தன் மீதமிருக்கும் பணிநாள் முழுக்க துணை ப்ரின்சிபாலாக காலத்தை ஓட்டவேண்டியதுதான். பள்ளியும் இவரை துரத்த முடியாமல் "எப்ப ஓய்வு பெறுவார்?" என எதிர்பார்த்துக்கொன்டிருப்பார்கள் என்கிறது பீட்டர் கோட்பாடு~ நியாண்டர் செல்வன்

குத்துச்சண்டை வீரரான கோர்பெட் ஒரு ஆற்றங்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மீனவன் கரையோரத்தில் மீன்பிடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மீனவன் தன் வலையல் அகப்படும் மீன்களில் சிறியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய அளவிலான மீன்களை ஆற்றில் தூக்கி போட்டுக் கொண்டிருந்தான் இதை பார்த்து ஆச்சரியப்பட்ட கோர்பெட் அருகில் சென்று சிறிய மீன்களை மட்டும் வைத்துக்கொண்டு ஏன் பெரிய மீன்களை மீண்டும் தண்ணீருக்கும் தூக்கிப் போடுகிறாய்? என்று ஆர்வமுடன் கேட்டார். அதற்கு அவன் ஐயா இப்படி செய்வதில் எனக்கும் விருப்பமில்லை தான். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் வீட்டில் இருப்பது சிறிய எண்ணெய் சட்டி தான் என்றாராம். அந்த மீனவன் குறிப்பிடுவது உங்களையும் என்னையும் சேர்த்து தான் பெரிய அளவில் செய்யக்கூடிய திட்டங்களுக்கான வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும்போது கடவுளே! இவ்வளவு பெரிய திட்டத்தை என்னால் செயல்படுத்த இயலாது. என்னிடம் இருப்பது குறைந்த திறமை தான் என நினைக்கிறார்கள் .பெரிய விஷயங்கள் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக செயல்படுத்தி இருக்கக்கூடும் சிறிய அளவிலான திட்டங்களை தள்ளி வைத்து பெரிய அளவிலான திட்டங்களை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.கனவை நனவாக்க நம்பிக்கை மட்டும் போதாது துணிச்சலும் வேண்டும் இனிய காலை வணக்கத்துடன் மணி

Sunday, 29 December 2024

புத்தகம் 40



Reading_Marathon2024
#24RM050

Book No:40/100+
Pages:-1000

வெளிக்காற்று 
-எழுத்தாக்கம் கமலாலயன் 
தொகுப்பாசிரியர்கள்
ச.தமிழ்ச்செல்வன். ஆ பரிமளா தேவி

இளம் வயதில் கற்கும் விழுமியங்களை தங்களது வாழ்நாள் முழுவதும் மனிதர்கள் ஏந்தி நடக்கின்றனர். அதன் வழியே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின்றனர். இவற்றில் பள்ளிகள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றன, குழந்தை வளர்ப்பு என்பது குறித்தும், மாணவர்கள் அறிய வேண்டிய அறிய கருத்துக்களையும் கட்டுரை வாயிலாக இந்த புத்தகம் ஆரம்பிக்கிறது. இந்த புத்தகத்தின் அறிமுக உரையை ஆர் பாலகிருஷ்ணன் அவர்கள் மிகவும் அழகியலுடன் எழுதியுள்ளது இந்த புத்தகத்திறகான சிறந்த வரவேற்புரையாக கருதுகிறேன். தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளியின் 31 கட்டுரைகள் நிறைந்த பெரிய அறிவு கருவூலமாக புத்தகம் இருக்கிறது. 

தமிழர்கள் மொழியின் மீது ஆழ்ந்த பற்று உடையவர்கள். அதே வேளையில் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி என்பது என்று கணினியிலும் நுழைந்து எட்டு திக்கிலும் பரவி நிற்கிறது. அவ்வாறான தமிழ் மொழியின் சிறப்பையும் கணினியில் மொழிப் பொருளாதாரம் குறித்து விரிவாக அலசி இருப்பார் ஆழி செந்தில்நாதன். காலம் தோறும் பெண் கல்வி குறித்த படிநிலைகள் எவ்வாறு அமைந்தன. நவீன காலத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவம் என்ன என்பதை குறித்து வ.கீதா அவர்கள் விளக்கியுள்ளார்.

தாய் மொழி வழி கல்வி குறித்த அவசியத்தை எடுத்துரைக்கும் வசந்தி தேவி பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பேணி பாதுகாப்பது நவீன காலத்தில் கல்வி எவ்வாறெல்லாம் மாற்றமடைந்துள்ளது என்பதனை விரிவாக ஒவ்வொரு கனவுக்கும் ஒரு பாதையில் என்பதை விளக்கி இருப்பார். பெற்றோருக்காக படிக்கும் தலைமுறை உருவாகியது ஒரு அமெரிக்க சிறுகதை வாயிலாக ஜெயமோகன் சொல்லி இருப்பார். கிராமத்தில் இருக்கும் தன் தாய் நகரத்தில் இருக்கும் தன் தந்தையின் உதவியாளரான அவரிடம் பேக்கரியில் சேர்ந்து ரொட்டி சுடும் கலையை கற்று வருமாறு கூறுவார் ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் தானே தொழில் துவங்கிய பெரிய பணக்காரர் ஆன பின்னும் அவர் ரொட்டி சுடும் கலையில் ஏன் சேரவில்லை என்று சொல்லுவார் ஒவ்வொரு முறையும் இது தொடரும் பது இறுதியில் ஜனாதிபதி ஆகி தன் தாயின் முன் நிற்பார் அப்போதும் அவர்..ஏன் நீ ரொட்டி சுடும் வேலைக்குச் செல்லவில்லை என்று தான் சொல்வார். அத்துடன் கதை முடிகிறது.சில அம்மாக்களின் அறியாமையும் இதுபோலத்தான் என்று சொல்கிறார்.

கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம் தான் மனிதர்களை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கிறது. மொழியை பகிர்ந்து கொள்ளுதல் என்பது கற்றல் கற்பித்தலில் முக்கியமான படிநிலை.இந்த பகிர்வில் என்ன வருகிறதோ அதை கொண்டு தான் அடுத்த நிலைக்குப் போக வேண்டும் முயல வேண்டும் என்பதனை நாசர் அவர்கள் கற்றலின் இன்றியமையாமையில் கூறுகிறார்.

ஆங்கிலத்தில் ஹெவி என்று சொல்வதுண்டு. சிலருடன் பேசும்போது மிக லேசாக பறப்பதை போன்று உணர்வை அடைகிறோம். சிலர் வீட்டுக்கு வந்தாலே சுமை உணர்வை உணர்கிறோம். சிலர் எதிர் படும் போதே மனது பாரமாகி விடுகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே சென்று
 பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இதுபோல் இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக கல்லூரியில் மாணவர்கள் கணக்கு வகுப்பறையில் ஆசிரியர் சாக்பீஸை எடுத்துக்கொண்டு சென்று கரும்பலகை அருகில் நின்று அங்கே நில்லப்பா கணக்கு தானாக வரும் என்று நம்பிக்கை ஊட்டிய ஆசிரியரை மாடசாமி சிலாகித்து casual learning  ஐ போற்றுகிறார்.

நெடுந்தோறும் முன்சென்று நில் நேற்றை மற, இன்றை மற நெடுந்தோறும் சென்று முன் நின்று மூச்சை விடு 
கண் திறந்து பார் 
காட்சி படிமத்தை கண் முன் நிறுத்து அந்த நொடியில் அங்கு இரு 
எங்கிருக்க விரும்புகிறாய் 
அங்கு ஓர் அடிக்கோடிடு 

 தேடல் கால இயந்திரத்தின் செயல்பாட்டை கண்முன் நிறுத்தும் விதமாக ஆர். பாலகிருஷ்ணன் முன்னிறுத்திய கவிதை ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டிய கனவு ஆகும் அதுவும் எதிர்கால கனவு.

இந்த காலத்தில் எல்லாமே காம்படிஷன் கண்டஸ்ட் போட்டி பந்தயம் இவைதான் இலக்கு. இவை எதுவாயிருந்தாலும் அவரவர் பிள்ளைகள் தான் வெற்றி பெற்று கோப்பைகள் சான்றிதழ்கள் பரிசு பொருள்களுடன் வர வேண்டும் என்பதே பெற்றோரின் கனவு. இது இன்றைய டிஜிட்டல் யுகத்தின் முதன்மையான பிரச்சினையாக ஆகிவிடுகிறது. முதல் ராங்க், முதல் பரிசு, நம்பர் ஒன் என்று எப்போதும் நமது குழந்தைகள் முதல் இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட கீழே இறங்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். இன்னொரு தரப்பினர் எதுவும் தெரியாமல் ஆசைப்பட்டது திறமை என்று அடிப்படையில் சிலர் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் என்று சிவபாலன் இளங்கோவனும் உளவியல் ரீதியான மாணவர்களின் மனநிலையை சொல்லியிருக்கிறார்.

ஒரு பள்ளிக்கு முக்கியமான தேவையை கட்டிடங்கள் வகுப்பறைகள் மைதானங்கள் மட்டுமல்ல அவை ஒரு கல்வியின் பகுதியே ஆசிரியர்களே கல்வியின் விளை நிலம் ஆவார்கள். குழந்தைகளைப் புரிந்து கொண்டு நேசிக்கிற நேசிக்க கற்றுத் தருகிற ஆசிரியர்தான் சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும். அவர்களின் மொழி வழியே உரையாடும்போது தான் அவர்களை சிந்திக்க வைக்க முடியும். கற்பது எவ்வாறு என்பதை சொல்லித் தரும் இடம் தான் பள்ளிக்கூடம் என்று நான் படித்திருக்கிறேன்.

எஸ் ஆர் வி பள்ளியில் நூற்றுக்கணக்கான தலைப்புகளில் உரையாற்றிய ஆளுமைகளின் கட்டுரைகளை தெரிவு செய்து நமக்கு இந்த தொகுப்பாக சொல்கிறது. இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே கல்வியின் அவசியத்தையும் நவீன கால கல்வியின் மாற்றத்தையும் வாசிப்பின் நோக்கத்தையும் அங்குலம் அங்குலமாக நமக்குச் சொல்கிறது.

ஒவ்வொரு கட்டுரைகளும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய் கருத்து வளம் மிக்க கருத்துக்களும் மேற்கோள்களும் சொந்த அனுபவங்களும் நம்மை இன்னும் வாசிப்பு இன்பத்தை நுகர செய்கின்றன. புத்தகத்தை படித்து முடிக்க ஏறத்தாழ ஒரு 20 நாட்கள் ஆகின. தொடர்ந்து வாசித்ததில் மட்டுமே சாத்தியமானது.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம் 39


Reading_Marathon2024
#24RM050

Book No:39/100+
Pages:-286

உங்கள் விதியைக் கண்டறியுங்கள்
-ராபின் ஷர்மா

"வாழ்க்கை உங்கள் வாதத்தை கேட்பதில்லை. அது கவலைப்படாமல் தன் வழியே போகும். நீங்கள் வாழ்க்கை சொல்வதைக் கேட்க வேண்டும். உங்கள் வாதத்தை கேட்காது. உங்கள் வாதத்தை பற்றி கவலைப்படுவதில்லை."

கேள்விகள் எல்லோருடைய மனதிலும் இருக்கின்றன. ஆனால் அந்த கேள்விகளை கேட்டால் பதில் கிடைக்க சொல்லக்கூடிய நபர்கள் நம்மளுடைய அன்றாட வாழ்வில் மிகவும் குறைவு. அல்லது இதை கேட்டால் தவறாக நினைத்து விடுவார்கள். இதற்கான உண்மையான பதில் இதுவல்லவே என்று நம்மளுடைய தர்க்கம் அவர்களுடைய பதில் சொல்லலையும் புறக்கணித்து விடுகிறது .அதுபோன்ற சமயங்களில் சில புத்தகங்கள் வழியே நாம் தேடி கண்டடையும் பதில்கள் நமக்கானவையாக இருக்கின்றன. நாம் இத்தனை நாள் தேடியவைக் காண விடையாகவும் அவை கிடைக்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி கிடைக்கிறது .அதனால் தான் புத்தக வாசிப்பு
 மிகவும் சிறந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள். இந்த புத்தகத்தில் உள்ள சில கருத்துக்களும் அவ்வாறுதான் இருந்தன.

பொதுவாக நமக்கு கஷ்டம் வரும் நேரங்களில் நாம் பார்க்கும் உலகமே உண்மையானது என்று நினைக்கிறோம். அது தவறு. ஏனெனில் நாம் நம்முடைய நம்பிக்கை இழந்த கோணத்திலிருந்து பார்க்கிறோம் .நாம் சற்று தேறியதும் நமக்கு உலகம் நன்றாக இருப்பதாக தெரியும். நமக்குள்ளே மிகுந்த மகிழ்ச்சி பரவும் போதுதான் வெளி உலகமே அதை பிரதிபலிக்கும் என்பதை தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.

மகாபாரதத்தில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்வதை போல டார் என்பவனுக்கு ஜூலியன் மெண்டல் என்பவன் கற்பிக்கிறான்.

டார் என்பவனுக்கு ஜூலியன் மேண்டல் என்பவன் கேட்கும் கேள்விகளுக்கு வாழ்வியல் குறித்த தெளிவுகளை வழங்குகிறான். அதில் வெற்றி கண்ட மற்றும் நிறைவடைந்த மனிதர்கள் சிந்திக்க திட்டமிட ஆழ்ந்த நோக்கம் நேரத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் விழிப்புடன் இருக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு நாளும் நம்ப முடியாத விலைமதிக்க முடியாத பரிசு என எண்ணுகிறார்கள் என நேரத்தின் அவசியத்தை அவர் தெரிவிக்கிறார்.

அழகான வாழ்க்கை உருவாக்குவதில் ஆக்கபூர்வமான பெருமை முக்கிய பங்காகும் என காந்தியின் மேற்கோளை இதற்கு உதாரணமாக சொல்கிறார்." நீங்கள் செய்ய வேண்டிய வேலை எவ்வளவு முக்கியம் இல்லாததாக இருந்தாலும் பரவாயில்லை. அதை உங்களால் முடிந்தவரை நன்றாக செய்யுங்கள் .முக்கியமான வேலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவீர்களோ அதுபோல் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் சிறிய வேலைகளால் தான் உங்களை எடை போடுவார்கள் என்கிறார்". இதே போல தானும் அர்ப்பணித்து வாழ்க்கையில் தான் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சிறந்த மனிதராக சுயமரியாதை நம்பிக்கை உடையவர்களாக திகழ முடியும் என்று கேட்கிறான்.

சுய விழிப்புணர்வு பற்றி சொல்லும்போது ஏழு கட்டங்களாக சொல்கிறார், முதலாவதாக சுயநினைவு இல்லாமல் வாழ்க்கை வாழ்வதாகும். அதாவது ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்து தூங்குவதைப் போல் ஆகும் எதற்கு பொய்யாக வாழ்தல் என்று பெயர். இரண்டாவதாக உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று சரி இல்லை என்று தோன்றினால் புதிய ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். இது ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு வழிகாட்டும் என்கிறார். 

மூன்றாவதாக வியப்பும் சாத்தியமும் என்பதாக இந்த கட்டத்தில் புதிய கண்களால் பார்க்கத் துவங்குகிறீர்கள். அதாவது பார்த்திராத உண்மையை இந்த உலகம் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என விரும்புவதை நம் மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. நான்காவது கட்டமாக பொய்யான வாழ்க்கை வாழ்வது என்பதை தாண்டி தெரிந்தெடுத்தல் என்னும் கட்டத்தில் உங்கள் சிறந்த சுயத்தை வெளிப்படையச் செய்து உலகத்தில் மாயைத் தாண்டி அளவற்ற வாய்ப்புகள் என்னும் உலகத்தை நீங்கள் உணர ஆரம்பிப்பது.

ஐந்தாவதாக மாற்ற மனிதனும் மறுபிறப்பும் இது மிகவும் சவாலான காலகட்டம் மிகப்பெரிய சுயத்தை உணரத் தொடங்கி முழு உலகமும் மாறத் தொடங்கும். மாற்றம் என்பது எளிதல்ல அது உண்மை ஆறாவதாக சோதனை என்பதாகும். நாடுபவர் பொக்கிஷத்தை அடைவதற்கு முன்பு ஒரு சோதனை சந்திக்க நேரிடும் .இதில் ஒன்று கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டாரா என்பதும், எதனை விரும்புகிறார் என்பதும் எதனை கைவிடுகிறார் என்பதையும், தேர்ந்தெடுக்கும் குழப்பமும் இதில் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏழாவதாக பெரிய விழிப்புணர்வு ஆகும். உங்கள் உண்மையான இயல்புக்கானவை எவையெல்லாம் என்று அவற்றையெல்லாம் நீங்கள் அடைவீர்கள். இது இயற்கையின் சக்தி இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்ததை இயற்றியவுடன் தொடர்பு நிலைக்கு திரும்பி வீர்கள் என்கிறார்.

உலகம் ஒரு பெரிய புத்தகம் .வீட்டை விட்டு வெளியே நகராதவர்கள் ஒரு பக்கம் மட்டும் படிக்கிறார்கள் என்பார் செய்ன்ட் அகஸ்டின். இதற்கு உதாரணமாக மலையேறும் கதையை சொல்கிறார் .சூரியன் மறைவிற்குள் மலை ஏறி இறங்க வேண்டும் என்பதனை நிர்ணயித்துக் கொண்டு ஏறியவன் கீழே இறங்கும்போது பயம் வருகிறது. சூரியன் மறைந்து விட்டால் இருள் வந்து வடும் என்று பயப்படுகிறாள். அவன் பயத்தின் காரணமாக சூரியனும் மெல்ல மெல்ல மறைவதாக தோன்றுகிறது.
 கடைசியில் சூரியன் மறைந்து விட்டது. இப்போது அவன் இருளில் மாட்டிக் கொண்டான். பயம் வந்துவிட்டதால் அப்படியே உறங்கிப் போகிறான். பிறகு அடுத்த நாள் சூரிய ஒளி வந்த போது கீழே பார்க்கிறான் .அவன் இறங்க வேண்டிய தூரம் வெறும் ஐந்து அடி மட்டும்தான் இருந்தது. ஆகவே பயத்தை போக்க வேண்டும் என்று அவன் சிரித்துக் கொள்கிறான்.

*சுய வளர்ச்சிக்கு வலியும் துயரமும் சக்தி வாய்ந்த சாதனங்கள் 

*ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வெவ்வேறு பலன்களை எதிர்பார்ப்பது

*துணிச்சலான செயல்களில் இறங்கும் போது பயம் தூண்டப்படும் .துணிச்சலுடன் இருப்பது உயிர்ப்புடன் இருப்பது போன்றதாகும்.

*நம்முடைய வாழ்வின் சிறந்த பகுதியை புகழ் மற்றும் பணத்தை துரத்துவதிலேயே செலவழிக்கிறோம்.

இந்த ஏழு கட்டங்களோடு தன்னை உணர்தலின் முக்கியமாக கடுமையாக ஐந்திணை குறிப்பிடுகிறார். அவை தினசரி காலை எழுந்து உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவது ,அதை புனிதமான நேரம் என்கிறார். புதிய உலகை உருவாக்குவதில் உங்கள் பங்கினை செலுத்துவதும், எவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு மேலாக உங்கள் வேலையில் உயற்சியை காட்டுவதும் உங்களுக்குத் தெரிந்த மிகவும் விரும்பத்தக்க மனிதராக மாறுங்கள் என்று.. இந்த புத்தகத்தின் இறுதியில் சொல்கிறார்கள் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday, 28 December 2024

புத்தகம் 38


Reading_Marathon2024
#24RM050

Book No:38/100+
Pages:-590

தம்மபதம்-4
-ஓஷோ

புத்தரின் கருத்துக்களை முன்வைத்து ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகள் தான் தம்ம பதம். இவை பல பாகங்களாக வந்துள்ளது. அதில் நான்காம் பாகம் தற்பொழுது பார்ப்போம்.

புத்தரைப் பொறுத்த அளவில் நீங்கள் செய்வதெல்லாம் விஷமம் தான். ஏனென்றால் செய்வதெல்லாம் உணர்வின்றி செய்து கொண்டிருக்கும் காரியங்கள். அவருடைய விபரணையில் விஷமம் என்பது உணர்வின்றி செய்யும் காரியம். அகத்திலிருந்து நாம் வாழ்வதில்லை. பிறரை பார்த்து நடந்து கொள்வதுதான் வாழ்க்கை என்றாகி போய்விட்டது. நம்முடைய அக்கறையெல்லாம் நாம் செய்வதை பிறருக்கு காட்சி பொருளாக்குவதாக ஆகிவிட்டது,
எனெனில் சிறந்த மனிதர்கள் மற்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்வதே இல்லை என்பதை உதாரணத்துடன் ஓசோ விளக்குகிறார்.

நீயாக தெரிந்து கொள்ளும்போது நாம் அவ நம்பிக்கையை தூக்கி எறிய முடியும். பார்க்க முடிந்த கண்களே வியப்பில் வளர்கின்றன. அறிவு ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பதன் வெளிப்பாடு. ஆனால் விவேகம் என்பது வித்தியாசமானது. அது வரைபடம் இல்லாத கடலுக்குள் போவதைப் போல என்று விவரிக்கிறார். அதுவே படைப்புத்திறனாகவும் விளங்குகிறது.

*இந்தியாவில் இரண்டு மொழிகள் இருந்தன பிராகிருதி என்றால் இயல்பானது என்ற பொருள். அது மக்களுடைய இயல்பான மொழி. மற்றொன்று சமஸ்கிருதம் என்றால் திருந்திய என்ற பொருள். அது மேல் தட்டு மொழி பண்டிதர்களும் அறிஞர்களும் பேசிய மொழி.. புத்தரும் மகாவீரரும் முதன்முதலில் மக்கள் மொழியை பயன்படுத்தி அவர்கள் பிராமணர்களால் அவர்கள் மன்னிக்க முடியவில்லை. சாஸ்திரங்களை கும்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் ஒருபோதும் அதனை புரிந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணமே இதற்கு அடிநாதமாக விளங்குவதை சொல்கிறார்.

நல்லதை விரைவாக செய் என்பதை வலியுறுத்தும் விதமாக பல்வேறு கதைகளையும் அவருடைய வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களையும் தொகுத்து கூறுகிறார். யோசனைக்கு பின்னால் யோசனை என்ற ஒரே யோசனைதான் இருக்கும். மெத்தனமாக இருந்து விடக்கூடாது விரைந்து செயலாற்ற வேண்டும். ஏனெனில் மனம் விரைந்து செயல்படுவது. வேறு எதை விடவும் வேகமாக போவது. ஒளியை விட வேகமாக உள்ளது. சுதாரிப்போடு இருக்கவில்லை எனில் மனம் உன்னை குப்புற தள்ளிவிடும். எதையும்  செய்யாமல் இருந்தால் மனம் தரும் தண்டனை தான் சலிப்பு.

இதைத்தான் புத்தர் நல்லதை செய்யும் நெஞ்சோடு இரு. திரும்பத் திரும்பச் செய்திடு. மகிழ்ச்சி உன்னை நிறைத்து விடும் என்கிறார் .மகிழ்ச்சி துயரத்தைப் போலவே ஒரு துணைப் பொருள்தான். ஏதாவது கெடுதல் செய்யும்போது துயரம் ஒரு  நிழலை போல உன்னை தொடர்கிறது. ஏதாவது ஒரு நல்லதை செய்தால் மகிழ்ச்சியும் நிழலை போல உன்னை தொடர்ந்திடும் என்கிறார்.

மேலும் உன் குறைகளை மலிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அது என்னவாகி போகிறது என்று மட்டும் இருந்து விடாதே. சிறு துளிதான் ஒரு கடலையும் உருவாக்குவதே. அதனால் ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கவனமோடு இரு என்கிறார். ஏனெனில் வாழ்க்கை சின்னவற்றால் ஆக்கப்படுகிறது. பெரியவை என்று ஏதுமில்லை. சின்ன சின்ன விஷயங்களை திரட்சியே பெரிய விஷயமாகிறது என்கிறார்.

துயரத்தை எதைக்கொண்டாவது மறந்திருப்பது நுகர்ச்சியின்பம் என்கிறார்கள்.பாட்டு கேட்டபின், தூங்கி எழுந்தபின் மீண்டும் துயரத்துக்கு திரும்புகிறோம். துயரத்தோடு போராடாதே. அதனால் எந்த பயனும் இல்லை. இங்கும் அங்குமாக துயரத்தை தள்ளி வைக்கலாம். ஆனால் இருந்து கொண்டே தான் இருக்கும் .பிறர் மீது பொறுப்பை சுமத்தாதே. இரண்டு நெஞ்சங்களுக்கு இடையேயான தொடர்பை கம்யூனியன் என்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் குடும்பம் என்ற கொள்கையே முடை நாற்றம் வீசுவதாக போய்விட்டது. ஒரு காலத்தில் சிறப்பாக இருந்தது ஆனால் அதன் பணி முடிந்து விட்டது. இனி குடும்பத்துக்கு எதிர்காலம் இல்லை .உண்மையில் துயரத்துக்கு காரணமாக குடும்பம் இருப்பதால் அதை இனி காலாவதியாக கூடும் என்பதை அன்றே உணர்ந்து கூறியிருக்கிறார்.

Can you float a loan? என்பது வியாபாரமொழி இதில் float என்ற வார்த்தைக்கு என்ன பொருளோ அதை தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறவன் அப்படியே எடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும்? எந்த ஒரு நிலையிலும் எதை சொன்னாலும் அவன் அவனுக்கு தெரிந்த மொழியில் தான் அதை எடுத்துக் கொள்கிறான். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதை நம்மில் பெரும்பாலானோர் பெரும்பாலான சமயங்களில் புரிந்து கொள்வதே இல்லை. நம்மால் எப்படி புரிந்து கொள்ள முடியுமோ எப்படி வசதியாகப் புரிந்து கொள்ள முடியுமோ அதை மட்டுமே நாம் புரிந்து கொள்கிறோம் .மரணப்படுக்கையில் இருந்தவர் தன்னுடைய மகன்கள் அருகில் இருக்கிறார்களா என்று கேட்டுக் கொண்டார். அனைவரும் இருக்கிறார்கள் என்று சொன்னவுடன் பின்பு யார் கடையை பார்த்துக் கொள்வது என்று கேட்கிறார். இறக்கும்போது கூட வியாபாரத்தின் மீதுதான் அவரின் நினைவு இருக்கிறது.

புத்தர் இறந்த ஏழு எட்டு நூற்றாண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் பௌத்தர்கள் அனைவரையும் கொன்று குவித்தார்கள். அதனால் சில தப்பித்து இந்தியாவை விட்டு ஓடினார்கள் .பலர் இறந்தார்கள். இப்படித்தான் திபெத் மங்கோலியா சீனா தாய்வான் போன்ற நாடுகளுக்கு சென்று ஆசியா முழுக்க பௌத்தம் பரவியது. இதுவும் ஒரு வகையில் நல்லது தான் என்கிறார்.

புத்தருடைய அஹிம்சையும் முழுக்க வேறானது. குணவியல்பில் வேறுபட்டது. அவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை என்ற நிலையில் பேசுபவர். யாரையாவது நோகடிப்பது என்றால் அது உன்னையே நோகடித்துக் கொள்வதாய் போகிறது. எதையாவது அழிக்கும்போது உன்னையே அழித்துக் கொள்வதாய் போகிறது என்கிறார். புத்தர் கடவுள் என்ற வார்த்தையை பயன்படுத்துவதே இல்லை. ஆனால் கடவுளை குறிக்க அவர் ஆங்காங்கே குறிப்பு காட்டுகிறார். இதுதான் அவர் சுட்டிக் காட்டும் வழி

எல்லாரையும் வெறுக்கிறவன் ஒருபோதும் யாரையும் நேசிக்க முடியாது. ஏனெனில் வெறுப்புக்கு பழகிப் போகிறான். அவன் ரத்தத்தில் வெறுப்பு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் வீட்டிலும் அவனுக்கு சண்டை தான் போராட்டம் தான். பிறகு எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது. ஒரு போலீஸ்காரன் வீட்டிலும் போலீஸ்காரனாகவே இருக்கிறான். நீதிபதி எப்போதும் நீதிபதி தான். இன்றைய இணைய உலகிலும் கணினி உலகிலும் மன அழுத்தம் என்ற வார்த்தை அனைவருக்கும் பழகிப் போனது தான் .அதனை விடுபடுவதற்கு தேவையான ஆலோசனைகளை இந்த புத்தகத்தில் அவர் கூறியிருப்பார்.

உடைந்து கிடக்கும் காண்டாமணி போல சும்மா இரு மவுனித்திரு. எந்த மகிழ்ச்சியும் இல்லாமல் விடுபட்டிருக்கும் நிச்சலனத்தை தெரிந்து ஆசையிலிருந்து விடுபட்டு இரு. ஆசைதான் உனக்குள் ஆரவாரத்தை உண்டு பண்ணுகிறது.
மனோதத்துவ சிகிச்சையில் எல்லாவற்றையும் உணர்வின் மேல் நிலைக்கு கொண்டு வர செய்கிறார்கள். அப்போதுதான் அதை தொலைக்க முடியும். கனவுகள் ஆழ்ந்த உணர்வின் குறுக்கலைகள் மேலே வந்து சேரும் போது அதை உணர்ந்து கொள்வதால் தொலைத்து கட்ட முடிகிறது என்கிறார். 

புத்தகம் முழுக்க ஆங்காங்கே ஓஷோவக்குரிய கிண்டலும் கேள்வியுமாக வயது வந்த நகைச்சுவைகளை ஆங்காங்கே தெளித்து அயல்நாட்டு மேதைகளின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களையும் சொல்லிக் கொண்டு வந்ததில் புத்தகம் விரைவாக படித்திட முடிகிறது.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம்-37


Reading_Marathon2024
#24RM050

Book No:37/100+
Pages:-300

உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க
-ஜான்.சி மேக்ஸ்வெல்

"ஒரு பெருமுயற்சியில் வெற்றி பெறுவதற்கான திறவுகோல், பிறரை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும் திறமையைப் பெற்றிருப்பது தான்"

தற்போதைய வாழ்க்கையில் தலைமைத்துவம் என்பது அடிக்கடி புழங்கப்படும் சொல்லாகும். தலைமைத்துவம் என்பது ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய அதிகாரியிடம் மட்டும் இருக்கும் குணம் அல்ல. சாதாரண மனிதனின் அன்றாட நிகழ்வில் நாம் நம்முடைய ஆளுமைத் திறனை வெளிப்படுத்துவதற்கு தலைமைத்துவம் மிகுந்த முக்கிய பங்கு வகிக்கிறது.
தலைமைத்துவம் என்பது வளர்க்கப்படுவது, கண்டுபிடிக்கப் படுவதல்ல.

தலைமைத்துவத்தையும் நிர்வாகத் திறனையும் குழப்பிக்கொள்ள வேண்டியது இல்லை. இப்புத்தகம் தலைமைத்துவத்தை பற்றி மட்டும் பேசுகிறது.தலைமைத்துவம் என்பது நம்மைப் பின்பற்றுபவர்களைப் பெறக்கூடிய திறமை.மேலதிகாரி தன் ஊழியர்களை வேலை வாங்குவார்; தலைவர் அவர்களுக்குப் பயிற்சியளிப்பார்.

தலைமைத்துவத்தின் ஒவ்வொரு அலகுகளிலும் அது குறித்த விரிவாக அலசப்பட்டுள்ளது. தலைவர் என்பவர் சுயநலமாய் இருக்கக் கூடாது. தனக்கு பின்னே தலைவர்களை உருவாக்க வேண்டும். அதற்கு உதாரணமான வரிகளை கொடுத்துள்ளார்.ஒருவர் சிறந்த தலைவராகத் திகழ்வதற்குக் காரணம் அவரது அதிகார பலம் அல்ல, மாறாக, பிறருக்கு அதிகாரம் வழங்கும் அவரது திறன்தான். வெற்றி பெற்ற ஒருவர், தனக்குப் பின் அதைப் பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யாதபோது, அது தோல்விதான், ஒரு தொழிலாளரின் முக்கியமான பொறுப்பு, வேலையைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்து, அதைத் திறம்படச் செய்ய அவர்களை உருவாக்குவதுதான்.

ஒரு தலைவனுக்குரிய திறவுகோல்களின் முக்கியமானது 
"மக்களை இரண்டு காரியங்களைச் செய்ய வைப்பது மிகவும் கடினம்: ஒன்று, அவர்களைச் சிந்திக்க வைப்பது; மற்றொன்று, செயல்களின் முக்கியத் துவத்திற்கேற்ப அவற்றை வரிசைப்படுத்த வைப்பது."இதற்கு சான்றாக பரேட்டோ கொள்கையை சொல்கிறார் ஆசிரியர்.
நீங்கள் உங்கள் நேரத்தையும், ஆற்றலையும், பணத்தையும், ஊழியர்களையும் நீங்கள் முன்னுரிமை கொடுக்கும் 20 சதவீத விஷயங்களில் செலவிட்டால், அது உங்களுக்கு 80 சதவீத உற்பத்தியைக் கொடுக்கும்.

ஒரு தலைவனுக்கு தேவையான பண்புகளில் முக்கியமானது நாணயம்.நாணயம் என்பது நாம் என்ன செய்கிறோம் என்பதல்ல; மாறாக, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதுதான். நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பது நாம் என்ன செய்கிறோம் என்பதைத் தீர்மானிக்கும். நமது மதிப்புகள் அமைப்பு, தம்மிடமிருந்து பிரிக்க முடியாத அளவிற்கு நம்மில் ஒரு பெரும் அங்கமாகத் திகழ்கிறது. அது நம்மை வழிநடத்தும் 'வழிகாட்டும் அமைப்'பாகச் செயல்படுகிறது.

"ஒரு தலைவராக இருக்க வேண்டுமென்றால், புதிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அளிக்கக்கூடிய தலைமைத்துவத்தின் தரம், புதிய கருத்துக்களை மதிப்பீடு செய்யும் உங்கள் திறனையும், மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஏற்படும் மாற்றத்திலிருந்து மக்களுக்காக ஏற்படும் மாற்றத்தைப் பிரித்தறியக்கூடிய திறனையும் சார்ந்திருக்கும்."

'பீனட்ஸ்' என்ற கேலிச்சித்திரத்தில், சார்லி பிரவுன் லைனஸிடம், "லைனஸ், உன்னால் என் கேள்விக்கு விடையளிக்க முடியும். உன்னை யாருக்குமே பிடிக்கவில்லை என்று நீ உணர்ந்தால், நீ என்ன செய்வாய்?" என்று கேட்பான். அதற்கு லைனஸ், "நான் என்னைப் பாகுபாடின்றி அலசுவேன். பிறகு, என்னை மேம்படுத்திக் கொள்ள என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்பேன். சார்லி பிரவுன், இதுதான் என் பதில்," என்று கூறுவான். அதற்கு சார்லி, "நான் அந்த பதிலை வெறுக்கிறேன்," என்று பதிலளிப்பான். சார்லி பிரவுனைப் போல நம்மில் பலர், மாற்றத்தை எதிர்ப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

தலைமைத்துவத்தை விரைவில் அடைவதற்கான வழி: தீர்வு காணல்

"நீங்கள் எங்கே போக வேண்டும்?" என்று ஓட்டுனர் கேட்டார். "அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, எங்காவது போங்கள். எனக்கு எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் இருக்கின்றன," என்று கத்தினார். சில சமயங்களில் கடந்தகாலச் சந்ததியினரைவிட நமக்கு அதிகமான பிரச்சனைகள் இருப்பதாக நாம் நினைக்கிறோம்.

ஒரு கழுகு பெரும் வேகத்துடன் எளிதாகப் பறப்பதற்கு, அது தகர்த்தெறிய வேண்டிய ஒரே முட்டுக்கட்டை காற்று மட்டும்தான். ஆனால், அந்தக் காற்று முழுவதும் உறிஞ்சப்பட்டிருக்கும் வெற்றிடத்தில் அந்தப் பெருமைமிகு பறவை பறக்க நேருமானால், அது அக்கணமே கீழே விழுந்துவிடும். எந்தப் பொருள் பறப்பதற்குத் தடையாக உள்ளதோ, அதே பொருள்தான் பறப்பதற்கேற்ற சூழலாகவும் அமைகிறது.

*"தலைமைத்துவம் என்பது மக்களை உங்களுக்காகப் பணியாற்றச் செய்வது - அது அவர்களுடைய கடமையாக இல்லாதபட்சத்தில் கூட!" - ஃபிரெட் சுமித்

*எது உண்மையிலேயே முக்கியமானது என்பதை நாம் அடிக்கடி மிகவும் தாமதமாகவே கற்றுக் கொள்கிறோம்.

*ஜெஃப் டான்சிகளின் கேலிச்சித்திரம் ஒன்றில், ஒரு நிறுவனத் தலைவர் தன் ஊழியர்களிடம், "நேர்மைதான் நமது இந்த வருடத்தியக் கொள்கை," என்று அறிவிக்கிறார்.

*"ஆதிக்கம் என்பது ஒரு மேலதிகாரி தன்னிடம் வேலை பார்ப்பவர்கள்மீது கொண்டிருக்கும் அதிகாரம் அல்ல. மாறாக, அந்த அதிகாரத்தை அவர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தன் ஊழியர்களிடம் செல்வாக்குடன் விளங்கும் திறன்,"

*"என் மக்கள் என்னைப் புரிந்து கொண்டால், நான் அவர்களது கவனத்தை ஈர்ப்பேன். என் மக்கள் என்மீது நம்பிக்கை கொண்டால், நான் அவர்களைச் செயலாற்ற வைப்பேன்."

*"தான் செய்வது ஒருவராலும் கண்டுபிடிக்கப்பட முடியாது என்ற நிலையிலும் ஒருவன் என்ன செய்வானோ, அதுவே அவனது உண்மையான நடத்தைக்கான அளவீடு,"

*"தரக்கட்டுப்பாட்டில், நாங்கள் பொருட்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. செயல்முறையில்தான் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். செயல்முறை சரியாக இருந்தால், பொருளுக்கு உத்தரவாதம் உள்ளது,"

*மாற்றம், அறியாதவை குறித்த பயத்தை உருவாக்குகிறது.

*ஒரு மனிதன் செய்யக்கூடிய மாபெரும் தவறு, ஒரு தவறைச் செய்வதற்குப் பயப்படுவது என்று.

*"ஒரு விளக்கை மாற்ற எத்தனை பேர் தேவை?" அதன் விடை: "நான்கு. விளக்கை மாற்ற ஒருவர், பழைய விளக்கு எவ்வளவு நன்றாக இருந்தது என்று நினைத்துப் பார்க்க மூவர்.

*"நாம் எதை அனுபவிக்கப் போகிறோம் என்பதைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். அதை எப்படி அனுபவிக்கப் போகிறோம் என்பதை நாம் தேர்ந்தெடுக்கிறோம்." 

*தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் அல்லது அதைச் செய்ததற்கான எல்லாப் புகழையும் தானே பெற வேண்டும் என்று நினைப்பவர் எவரும் ஒரு சிறந்த தலைவராக உருவாக முடியாது.

தலைமைத்துவம் குறித்த பல்வேறு கருத்துக்கள் பல்வேறு உதாரணங்களுடனும் மேற்கோள்களுடனும் கிளை கதைகளுடனும் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக புத்தகம் பதிவு செய்கிறது 

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 27 December 2024

புத்தகம் -36


Reading_Marathon2024
#24RM050

Book No:36/100+
Pages:-247

திருநெல்வேலி எழுச்சியும் வ உ சி யும் 1908
-ஆ.இரா வேங்கடாசலபதி

வரலாறு என்பது நாம் தெரிந்து கொண்ட வரலாற்றை விட நாம் அறிந்து கொள்ளும் வரலாற்றை மீண்டும் நம் மனதில் கட்டமைக்கிறோம். நேற்று திருச்செந்தூர் செல்லும் வழியில் பாரதியாரின் இல்லத்துக்குச் சென்றிருந்தபோது கிடைத்த தகவல்.. அது பாரதியாரின் தாயார் வீடு அவரின் தந்தை வீடு சீவலப்பேரில் உள்ளது. அப்போதே வீட்டோட மாப்பிள்ளையாக வந்ததால் அந்த வீட்டிலேயே இறுதிவரை பாரதியாரின் தந்தை இருந்தார் என்பதுதான். இவ்வாறு வரலாற்றை மீளாய்வு செய்து கேட்கும்போது உண்மையான வரலாறு நமக்குத் தெரிய வருகிறது.

தமிழை தமிழ் படித்தவர்கள் மட்டுமல்லாது பொறியியல் படித்தவர்களும் தமிழ் இலக்கிய உலகுக்கு சேவை செய்வது போலத்தான்..சலபதியும் வணிகவியல் படித்து வரலாற்று துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆய்வு நூல் விளங்குகிறது.

நூலின் துவக்கத்தில் 1908 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தின் உச்சகட்டமாக மார்ச் 12ஆம் தேதி வ உ சி சுப்பிரமணிய சிவாவும் பத்மநாப அய்யங்கார் கைது செய்ததை அடுத்து..ஊரில் நடைபெற்ற எழுச்சிகளை விவரிக்கும் விதமாக இருக்கிறது. இதனை அரசாங்க அலுவலகத்தில் ஆவணங்களிலும் திருநெல்வேலி கலகம் என்று குறிப்பிடப்படுகிறது. மக்கள் எழுச்சி என்ற போது வெள்ளையர் தமக்கும் அதிகாரத்தின் கிளர்ச்சியாகவும் கண்டமையால் கலகம் என்றே வருணித்தனர். ஆனால் எழுச்சி என்பதே மிகவும் பொருத்தமானது என்று கூறுகிறார் ஆசிரியர்.

இந்த எழுச்சியின் பின்னால் சுதேச இயக்கத்தில் இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெற்றது. தமிழகத்தில் அப்போது அமைதி பூங்காவா இருந்தது அடுத்து சுதேசி இயக்கம் வந்தபின் தான் கிளர்ச்சிகள் ஆரம்பித்தன.
வ உ சி யோடு இணைந்து சுப்பிரமணிய சிவாவும் வந்தது அந்தப் பகுதி மக்களிடையே புது உத்வேகத்தை தந்தது. பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது கருத்தாழமிக்க உரைகள் மக்களை சிந்திக்க தூண்டின. அதோடு கப்பல் கம்பெனியும் ஆரம்பித்தது அன்றைய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. தூத்துக்குடியில் தடை மீறி போராட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. அறிந்த வின்ச் அவர்கள் வ.உ.சிக்கு மிரட்டல் விடுத்தார். ஆயினும் மிரட்டலுக்கு பணியாத நிலையில் அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆயினும் பிணை வழங்க மறுத்தாலும் பத்மநாப ஐயங்கார் மட்டும் விடுதலை ஆனார். ஜூலை 7ஆம் தேதி வ உ சிக்கு இரட்டையாளர் தண்டனையும் சிவாவுக்கு 10 ஆண்டு விதித்தது.

மறுநாள் ஊரில்  கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர் இந்து கல்லூரியில் மாணவர்களும் ஆசிரியர்களும்.
காவல் நிலையத்தில் சென்று வந்தே மாதரம் முழங்கியவாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மருத்துவ நிலையத்தை முற்றுகை இட்ட சிலரையும் கைது செய்தனர்.மின் கம்பிகள் அறக்கப்பட்டன.தெருவிளக்கு ஏறத்தாழ அனைத்தும் உடைக்க பட்டன. எல்லாம் காரணம் வ உ சி ஏற்படுத்திய எழுச்சிகரமான பேச்சை கேட்டு மாணவர்கள் பலரும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாய் பங்கு கொண்டதே ஆகும். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இருந்ததாக செய்திகள் தெரிகிறது தச்சநல்லூரிலும கிளர்ச்சிகள் தொடர்ந்தவாறு இருந்தன.

வணிகர்கள் அனைவரும் கடைகளை அடைத்து விட்டு நெல்லைக்கு வந்து தூத்துக்குடி வணிகர்கள் கடைக்காரர்களை கடைகளை மூடுமாறு தூண்டியதே துவக்க புள்ளியாக அமைந்ததாக சொல்கிறார். அன்றைய நெல்லை மாவட்டத்தில் மொத்தம் இருந்த ஐரோப்பியர்கள் 397 பேர் மட்டுமே .இங்கிருக்கும் மக்கள் எழுச்சி தொடர்ந்து நிகழ்ந்தால் என்ன செய்வது என்று அதிகாரிகள் கையை பிசைந்தனர்.
ஆனாலும் கிளர்ச்சிக்குப் பிறகு கைது செய்வோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. திருநெல்வேலி 57 பேரும் தூத்துக்குடியில் 36 பேரும் கைதாக 27 பேர் தண்டனை அடைந்தனர். எழுச்சியை கட்டுப்படுத்த உதவிய போலீசாருக்கு பரிசுகளையும் அரசாங்கம் வழங்கியது.

திருநெல்வேலி கஷ்ட நிவர்த்தி நிதியை திரட்டுவதற்கு அனைவரும் மயன்றனர் அதில் வந்த தொகையையும் முக்கிய பிரமுகஸ்தர்கள் அனுப்பிய நன்கொடையும் அது தெளிவாக விரித்துள்ளார். கலகத்தை தொடர்ந்து வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றது கழகத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் தண்டனை கிடைத்தது. வழக்கின் முடிவில் 32 பேர் எழுச்சிக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆனவர்கள் கலவரத்துக்கு முழு முதற்காரணம் வ.உ.சி.எம் சுப்பிரமணிய சிவாவும் என்ற குற்றம் சாட்டப்பட்டனர் நீதிபதி. இதில் முதலாதவர் ஏட்டு குருநாதய்யர் அவரின் பின்புறம் என்ன என்பதையும் விரிவாக ஆய்வு செய்கிறது. அவருக்கு ஏழு ஆண்டுகள் நாடு கடத்தல் தண்டனை விதிக்கப்பட்டது. இவரின் வரலாற்றை அறியும் போது மிகவும் வியப்பாக இருந்தது. 

அதேபோல லோகநாத ஐயர் சங்கரநாராயண அய்யர் சங்கரநாராயணன் பிள்ளை மற்றும் சிறை கைதிகள் பற்றியும் இந்த நூல் விரிவாக பேசுகிறது. .பொதுவாக கைதானவர்களை பற்றி மட்டுமே பேசாமல் கைதுக்கு பின்புலமாய் யார் இருந்தார்கள் என்பதை குறித்தும் ஆய்வு செய்கிறது. வ உ சிக்கு ஆதரவாக எதிராக ஆஜரான வக்கீல்கள் அவர்களின் சம்பளத்தொகை முதல் கொண்டு என்ன ஒவ்வொரு நாளையும் விவரிக்கிறது. 

தமிழகத்தில் இப்படி ஒரு எழுச்சியா என்பது மற்ற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கவும் அளவிற்கு திருநெல்வேலியில் இருந்தது என்று கூறுகிறார். ஆறு மாதத்திற்குப் பிறகு லாலி கவர்னர் நெல்லை வந்தார். அதற்குப்பின் தண்டகாவல்படை விளக்கிக் கொள்ளப்பட்டது. தண்டக்காவல் படை என்பது குற்றச்செயலில் ஈடுபட்டால் அல்லது கிளர்ச்சி செய்தால் மொத்த ஊரையுமே குற்றவாளியாக கருதி கூட்டு தண்டனை விதிப்பது இதுவாகும்.

இச்செய்திகள் எல்லாம் சுதேசி,இந்து நாளிதழ் விரிவாக பதிவு செய்தனர். பாரதி நடத்திய இந்தியா இதழ் சுதேசி இயக்கத்தின் அரிய கருவூலமாக சலபதி கூறுகிறார்.

வ உ சி யின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பது ஒரு கதாநாயகனுக்கு உரிய அம்சத்தோடு விவரிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியை கண்டு செய்திகளை கேட்டதும் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வைத்ததும் அறிய முடிகிறது. தம்மோடு சேர்ந்து சிறை கைதிகள் அதிகம் வருவதுகண்டு கவிதை நடையிலேயே வீரமிக்க பாடல்களை சொல்லி இருக்கிறார். அதன் பின்பு கடித போக்குவரத்து மூலம் சுதேச இயக்க நிலைப்பாட்டினையும், குடும்பத்தாரின் எண்ணங்களையும், மற்றும் உள்ள தலைவர்களின் நிலையும் அறிந்து கொள்ள உதவியது.

இந்த எழுச்சி ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன கிடைத்த விடுதலை உணர்வு என்ன, மக்களின் மனதில் தோன்றிய கருத்துக்கள், மக்களின் கைதுகள், ஆங்கில அரசின் திட்டங்கள் என்பனை பற்றி எல்லாம் விரிவாக இறுதி அத்தியாயத்தில் பேசுகின்றது. கரூரில் திருவனந்தபுரத்திலும் இந்த எழுச்சி ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன தெரிய வருகிறது. அதை தொடர்ந்து திலகரும் சில மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டபோது, ரஷ்ய புரட்சியாளர் லெனின் உடன் கடிதப் போக்குவரத்து நடைபெற்றதும் அறிய முடிகிறது.

வ உ சி யும் சுப்பிரமணிய சிவாவும் விடுதலை ஆன பின்பு அவர்களை முடக்கி போட்டு விட்டது. காந்தி யுகத்தின் எழுச்சி சுதேசி இயக்க பல அரசியல் செயல்பாட்டாளர்களை நிலைகுலைய வைத்தது. பலர் காந்தி வழிக்கு திரும்பியதால் இவர்களால் தொடர்ந்து இயங்க இயலாமலும் போய்விட்டது.
அதன் பின்பு வந்தவர்களும் திருநெல்வேலியில் எழுச்சியை பற்றி தொடர்ந்து கொண்டு செல்ல இயலவில்லை இவை வெற்றியா தோல்வியா என்ற கருத்து மட்டும் கேள்வி மட்டும் எஞ்சி நிற்பதாக சொல்லி இருக்கிறார். ஆனாலும் இந்த திருநெல்வேலி புரட்சி தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அகில இந்திய அளவில் பேச வைத்தது. துவக்க நிலையிலேயே இந்த எழுச்சி மக்களிடையே தன்னம்பிக்கை வளர்த்தது. தமிழகத்தின் தென்பகுதியில் இதன் தாக்கம் அதிகம் இருந்ததை உணர முடிகிறது.

ஆய்வு நூலுக்குரிய அத்தனை அம்சங்களும் இருக்கிறது. ஒவ்வொரு பத்தியின் முடிவிலும் இது எங்கிருந்து எடுக்கப்பட்டது, இதன் ஆய்வு நூல்கள் என்னென்ன என்பதையும ,பிற்சேர்கை நூல்கள் எவை என்பதனையும் அறிய முடிகிறது. விரிவான ஆய்வு பார்வை இருந்தால் மட்டுமே இது போன்ற நூல்களும் வரலாற்று உண்மைகளையும் மீண்டும் படிப்பது சாத்தியமாகும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம்-35


Reading_Marathon2024
#24RM050

Book No:35/100+
Pages:138

இசூமியின் நறுமணம்
-ரா.செந்தில்குமார்

இந்த ஆண்டு வாங்கிய புத்தகம் இசூமியின் நறுமணம் மற்றும் பிற கதைகள். ரா. செந்தில்குமார் அவர்களின் 13 மோதிரங்கள் ஏற்கனவே சிறுகதை தொகுப்பு படித்ததால் இந்த புத்தகத்தையும் வாங்கினேன். கதையின் முக்கிய பகுதிகளில ஒன் லைனர் கதைகளாக இருந்தாலும் அதை சொல்லிய விதத்திலும் ஜப்பானிய சூழலில் எழுதப்பட்ட வாழ்க்கை முறை அந்த பின்புலத்தில் அமையப்பட்ட கதைகள் எளிமையாகவும் படிக்கத் தூண்டும் விதத்திலும் இருந்தன.

காதலியின் திருமணத்திற்கு பரிசு பொருளோடு செல்லும் காதலனின் மன உணர்வுகளையும் மெல்லிய உணர்வையும் மலரினும் மெல்லியது கதையில் பார்க்க முடிகிறது. அவள் முகத்தில் கருணை அரும்பி இருந்ததை கண்டதும் எரிச்சலானது என்ற ஒரு சொல் கதையின் ஆரம்பத்தில் வருகிறது. இலக்கில்லாத கோபத்துடனும் சோகத்துடனும் எழுந்த மனம் எவ்வாறெல்லாம் அங்கு கசப்பான அனுபவம் தந்த வலி இருப்பதை உணர முடிந்தது .தெரியாத மனுஷன் என்ன பெரிய தீமையை செஞ்சிட முடியும்னு கேட்கும் முன்பின் அறியாத நபரே கதையின் மையமாக கதையின் உள்ளடக்கத்தை சொல்பவராகவும் உள்ளார்.

டோக்கியோவில் பணிபுரி செல்லும் இளைஞனின் வாழ வாழ்வில் சஷுமி வருகிறாள். அவள் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களை கேட்டபடியே இருக்கிறான் நாயகன். பெண்களின் மனதில் இருக்கும் உண்மைகளையும் அவர்கள் விவரிக்கும் பொருளில் வரும் சொற்களையும் ரசிக்கிறான். தானிவத்தாரி கதையில் தானிவத்தாரி எனில் அடர்ந்த பள்ளத்தாக்கை கடந்து மற்றொரு பள்ளத்தாக்கு செல்லும் பாடல் என்றும், இருண்டு கிடக்கும் பள்ளத்தாக்கை கடக்க நேருகையில் துணையாக வரும் பாடல் என்றும் பொருள்களெல்லாம் என்று சொல்கிறான். ஒரு இடத்தில் நாயகன் ஜப்பான் மொழி குறித்து பேசும்போது நாயகி "கற்றுக்கொள்ளும் போது பெரும் இத்தகைய ஆச்சரியங்களை நீ இழக்க விரும்புகிறாயா? வாழ்நாள் முழுவதும் எதையேனும் கற்றுக் கொண்ட இரு என்ற தத்துவத்தை உதிர்ப்பது பொருத்தமாக இருந்தது

திருமணம் ஆகி செல்லும் இளந்தம்பதிரான வினோத்தும் சம்யுக்தாவும் ஜப்பானில் வசிக்கின்றனர். புத்தாண்டுக்கு இந்தியா செல்ல விரும்பும் போது எதிர்பாராத விதமாக வினோத்துக்கு வயிற்று வலி வருகிறது .அதனை தொடர்ந்து மருத்துவ வாசம் நோயின் வாதை போன்றவை அவனைப் பற்றிய இருண்ட பக்கத்தை சமீபத்தாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சமேதராக வருவார்கள் என்று காத்திருக்கும் பெற்றோர்களுக்கு சடலமாக வரும் வினோத்தும் அதற்கு துணையாக வரும் சந்தித்தாலும் வரும் கதைதான் செர்ரி பிளாசம்.

தந்தையின் சொத்துக்களை விற்று வருவதற்காக கிராமத்துக்கு செல்லும் அருண் தன்னுடைய பெரியப்பாக்களை உறவுகளை கண்டு மகிழ்வான். நிலத்தை விற்பதற்கு ஏதுவாக குத்தகைதாரர்களிடம் பேசும் பெரியப்பா ...விலை படியாமலும் கிராமத்திய வாழ்க்கையில் சொத்து விற்பதற்கான அணுகும் முறைகளையும் அவன் கண்ணாரக் கண்டு எரிச்சல் அடைகிறான் என்பதுதான் அனுபவ பாத்தியத்தின் கதை

நாம் ஒருவரை கண்டு அறிமுகமாகும் போது அவர்களின் வாசனை பிடித்துப் போயிருந்தால் அவர்களை எப்போது பார்க்கும் போதும் அந்த வாசனையே நினைவுக்கு வரும்.சகுரா மலர்கள் மலரும் போது எழும் மெல்லிய மனம் நாசி உள்ளவர்களே சுகத்தை அறிந்தவர்கள் என இசுமியின் நறுமணக்கதை ஒரு நறுமணத்தை பற்றிய பிம்பத்தை நமக்கு கொடுக்கிறது. அந்த வாசனை எங்கெங்கெல்லாம் உள்ளது என்பதை தேடித்அலதேடி அலையும் நாயகனின் இறுதியில் அதனை ஒப்பிட்டுப் பார்த்து ஆசுவாசமடைகிறான்.

இது போன்ற மற்ற கதைகள் கிராமத்து பின்னணியிலும ஜப்பானிய பின்னணியிலும் எழுதப்பட்ட கதைகள் படிப்பதற்கு சுவாரசியமாகவும் புதிய அனுபவத்தை தரும் விதத்திலும் உள்ளன.

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

புத்தகம்-34


Reading_Marathon2024
#24RM050

Book No:34/100+
Pages:152

காற்றில் கரையாத நினைவுகள்
-வெ இறையன்பு

தொலைந்து விட்ட வாழ்க்கையை மீண்டும் கண் முன் நிறுத்தும் நோஸ்ட்ராலஜியா பதிவுகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம் இந்த புத்தகம் தி இந்து நாளிதழில் தொடராக வந்தவை மீண்டும் புத்தகமாய் படிக்கும்போது நினைவு கூறுதலுக்கு சுகமாய் உள்ளது. 

விடுமுறை தினங்களில் செல்போனில் விளையாடும் குழந்தைகளுக்கு ஊரில் தாத்தா பாட்டி சந்தித்ததை சொல்லும்போது அவர்களுக்கு வியப்பாக இருக்கும். உறவின் மேன்மையை மௌனமாய் கற்றுத் தந்த காலங்களவை. அழைப்பு மணி ஓசை கேட்ட வீடுகளை போன் காரர் வீடுகள் என்று இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அன்று வீதிக்கு ஒரு போன் இருந்தபோது இருந்த இன்பம் இப்போது வீட்டுக்கு ஒரு போன் வந்தபோது இல்லை என்பதை இந்த பதிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

90களில் பாலுமகேந்திரா இயக்கிய வீடு படம் ஒரு வீடு கட்டுதலில் இருக்கும் துக்கத்தையும் துயரத்தையும் நடுத்தர மக்கள் எவ்வாறு அல்லல்படுகின்றனர் என்று சொல்லப்படுவதை சொந்த வீடு பற்றிய கட்டுரைகள் காண முடிகிறது. இன்று வீடு வாங்குவது சாதனை அல்ல நிகழ்வு என்று ஆகிவிட்டது. அன்றிருந்த மகிழ்ச்சியும் திருப்தியும் இன்று கட்டிய வீட்டை வாங்குபவர்களுக்கு கட்டாயம் இருக்க வாய்ப்பு இல்லை என்று முடித்திருப்பார்.

தோட்டம் தொரவு என்று பேச்சு வழக்கில் நாம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். தோட்டம் என்பது நமக்கு தெரியும் தொடர்பு என்பது கிணறு வகைகளை சார்ந்தவை. அன்று கிணறு வைத்திருந்தவர்கள் மிகப்பெரிய செல்வந்தராக கருதப்பட்ட காலம். ஊரில் கிணறுகள் இருப்பது அன்றைய குழந்தைகளுக்கு நீச்சல் பழகுவதற்கு கிடைத்த அதிர்ஷ்டம். ஆனால் இன்று நகரங்களில் கிணறு என்பது அரிதாகிவிட்டது. கிணறுகளை காண வேண்டும் ஆயின் எங்கேயும் சுற்றுலா சென்று தான் பார்க்க வேண்டி உள்ளது.

கடிதங்கள், பக்கத்து வீடுகளில் டிவி பார்ப்பது, அதில் வரும் நிகழ்ச்சிகள், புகைப்படம் எடுப்பது ,இரவில் நகை வாங்கி செல்வது அல்லது இரவல் பாத்திரங்கள் பண்டமாற்று முறையில் வீட்டுக்கு வீடு வாங்கிக் கொண்டு இருப்பது, உறவுகளை பேணிக்காத்த காலம் .ஏனெனில் ஒருவரிடம் இரவல் வாங்குவதற்கு அவருடன் நட்பிருந்தால் மட்டுமே வாங்க முடியும். இன்று அண்டை வீட்டாரோடு அதிகம் பேசக்கூட இயலா சூழ்நிலையை பொருத்திப் பார்க்கும்போது நாம் எத்தகைய வாழ்வை வாழ்ந்து இருக்கிறோம் என்பதை இந்த கட்டுரைகள் காட்டுகின்றன.

அந்தக் கால படிப்பு என்பது இன்றும் ஒருவரை அறிமுகப்படுத்தும் போது கம்பீரமாக சொல்லப்படுபவை. ஏனெனில் அந்த காலத்தில் இருந்த பயம் அப்படியே மாணவ மாணவியரிடம் பொறுப்புணர்ச்சியாக மாறியது. அந்த பொறுப்புணர்ச்சி இன்னும் படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தந்தது. தொடக்கப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்கள் சந்திப்பு ,மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும்போது நடந்தவை, போட்டிகளில் கலந்து கொண்டவை, தேர்வுகளை எழுதிய அந்த அனுபவங்கள் ,அந்த நட்புகள் இன்று வரை நாம் கடைப்பிடிப்பது போன்ற மாணவப் பருவ சூழல்களையும் விரிவாக அனைவரும் ரசிக்கும்படியும் இதில் எழுதி இருப்பார்.

வீதிக்கு வீதி மருத்துவமனை வந்த இந்த காலகட்டத்தில் அப்போது மருத்துவ வசதி குறைவாக இருந்தபோது கை வைத்தியம் பார்ப்பது, நோயற்ற உணவுகளை சாப்பிடுவது என்று ஆரோக்கியமான சூழல் இருந்ததையும் நாம தவற விட்டு ஆரோக்கியத்தையும் எண்ண முடிகிறது. ஆன்லைன் வசதியும் அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் சூழலோ இல்லாததால் காலையில் சென்ற பெற்றோர்கள் மாலையில் வீடு திரும்பி தங்களுடைய நேரத்தை தங்களுடைய பிள்ளைகளின் நலனுக்காகவும் பிள்ளைகளுடன் அதிகம் நேரம் செலவிடும் காலங்களையும் அன்றைய காலகட்டம் விளங்கியதை பார்க்க முடிகிறது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கான உறவு சமூகமாகவும் தற்கொலை எண்ணம் இல்லாமல் மன அழுத்தம் இல்லாமல் வாழ்ந்த வாழ்வையும் எண்ணிப் பார்க்க முடிகிறது.

போர் அடிப்பதை ஏற்றுக் கொண்ட அந்த தலைமுறையினர் தங்களுடைய பொழுதுபோக்கு நல்ல வகையில் கழித்தனர். புத்தகம் படிப்பது நண்பர்களுடன் உரையாடுவது அரட்டை அடிப்பது சொந்தங்களுடன் பேசி மகிழ்வது பத்திரிகைகளை வாசிப்பது என்ற அன்றைய காலகட்டங்கள் பொழுதுபோக்கினை மிகச் சறந்த முறையில் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவியதை அழகுற நினைவு கூறுகிறது.

தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டங்கள் வாழ்க்கையை முழுமையாக ரசனையுடன் வாழ முடிந்தது. நாம் தவறவிட்டதை அல்லது தலைமுறை இடைவெளியில் நாம் நினைக்க மறந்ததை செய்ய தவறியதை இந்த புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் நமக்கு சொல்லித் தருகிறது .அந்த காலகட்டங்களில் குறைகளே இல்லையா என்றால் குறைகளும் உண்டு. ஆனால் அதனை அவர்கள் எவ்வாறு நிவர்த்தி செய்தனர் என்பதை இந்த தலைமுறையினர் தற்போது செய்ய தவறுகின்றனர்.  நல்ல விஷயங்களை கற்று கொள்வதன் வாயிலாகவே இந்த தலைமுறையினர் தன்னுடைய அனுபவங்களை மெருகேற்றி வாழ்க்கையை சுவைபட வாழவும் இந்த புத்தகம் உதவும். 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 25 December 2024

நியாண்டர் செல்வன்

ஆங்கில ரிடையர்மெண்ட் குழுவில் ஒருத்தர் எழுதி இருந்தார்

அவருக்கு ஓய்வுபெறும் வயது. ஒரு Caravan வாங்கிட்டு நாடு முழுக்க சுற்றவேண்டும் என ஆசை. பென்ஷனே கடைசியா வாங்கும் சம்பளத்தை விட 107% கூடுதலா வரும்.

ஓய்வு பெறும் நாளன்று மேனேஜர் அழைத்தார்.

"உன் வேலைக்கு இன்னொரு ஆளை எடுப்பதை விட காண்டிராக்டுக்கு விடலாம் என இருக்கோம். உனக்கு கொடுத்த அதே சம்பளம். ஆனால் பென்சன் மாதிரி பெனிபிட்ஸ் எல்லாம் இருக்காது என்பதால் அதில் எங்களுக்கு காசு மிச்சம். வேன்டுமென்றால் நீ ஓய்வு பெறுவிட்டு அடுத்த நாளே சேர்ந்துக்கலாம். உனக்கு பென்சனும் வரும், பழைய சம்பளமும் வரும்"

200% சம்பள உயர்வு. மனிதருக்கு தலைகால் புரியவில்லை. 

மகிழ்ச்சியுடன் ஓய்வுபெறும் திட்டத்தை மூட்டைகட்டிவிட்டு வேலைக்கு சேர்ந்தார்

10 ஆண்டுகள் கடந்தன. இப்போது வேலை செய்யவே முடியவில்லை. ஓய்வு பெற்றே ஆகவேண்டும். ஆனால் காராவான் பயணம் போகமுடியவில்லை. கண்பார்வை மங்கிவிட்டது..."

"வயிற்றுக்காக ஆன்மாவை விற்றது தவறு என உணர்கிறேன்" என எழுதினார்

நமக்கு இருப்பது ஒரு லைஃப்

அதை முதலாளிக்கு உழைத்து கிடைப்பது என்ன?

அல்லது நீங்கள் முதலாளியாகவே இருந்தாலும் உங்கள் உழைப்பு உங்கள் வாடிக்கையாளருக்கானது. அதில் என்ன பலன்?

Age is a number என்பது மாதிரி ஒரு எல்லைக்கு மேல் பணமும் ஒரு நம்பர்தான்.

போதுமான அளவு சேர்ந்தபின் அதை அனுபவிக்க உடலில் தெம்பு இருக்கணும். சும்மா சேர்த்து வெச்சு பீரோவில் பூட்டி வெச்சு பலன் இல்லை

~ நியாண்டர் செல்வன்

Tuesday, 24 December 2024

கணவாய்


கணவாய்:

ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இரண்டு மலை முகடுகளுக்கு இடையே செல்லும் பாதை.....
கணவாய் என்பது பெரிய மலை சாலையில் ஏறி மற்றொரு பக்கம் இறங்கும் பாதை இல்லை.......

இரண்டு மலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு மேடான பகுதி இருக்கும்....... அதன் வழியாக செல்லும் பாதை கணவாய் என்று அழைக்கப்படுகிறது........

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகமாக கணவாய்கள் உள்ளன......

தமிழகத்தில் உள்ள முக்கியமான கணவாய்கள்

1. தொப்பூர் கணவாய் :

சேலம் - தருமபுரி இடையே உள்ள ஒரு முக்கியமான கணவாய்.....
இந்த கணவாயில் 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறுகிறது.....

2. ஆண்டிப்பட்டி கணவாய்:

தேனி மாவட்டத்தையும், மதுரை மாவட்டத்தையும் இந்த கணவாய் இரண்டாக பிரிக்கிறது......
இந்த கணவாய் காரணமாகவே வைகை ஆறு தேனி மாவட்டத்தில் வடக்கு நோக்கி பாய்ந்து வைகை அணையை அடைந்து வைகை அணையில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது......

3. மஞ்சவாடி கணவாய்:

சேலம் ( அயோத்தியாபட்டினம் ) - வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த கணவாய் 
கல்வராயன் மலைகளையும், சேர்வராயன் மலைகளையும் பிரிக்கிறது.....

4. மேலுமலை கணவாய்:

கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே உள்ள இந்த கணவாயில் 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறுகிறது......

இதில் தொப்பூர் கணவாய் மிகவும் ஆபத்தான கணவாய் பகுதி.......
நீண்ட கணவாய் பகுதி.....

இது தவிர தருமபுரி மாவட்டத்தில்

பாலக்கோடு - ராயக்கோட்டை( கிருஷ்ணகிரி) இடையே

மாராண்டஹள்ளி - தேன்கனிக்கோட்டை( கிருஷ்ணகிரி) இடையே

பென்னாகரம் - அஞ்செட்டி ( கிருஷ்ணகிரி) இடையே.....

தீர்த்தமலை - தானிப்பாடி ( திருவண்ணாமலை மாவட்டம்) இடையே

கோட்டபட்டி - தும்பல் ( சேலம் மாவட்டம்)

ஆகிய கணவாய்கள் உள்ளது.........



படம்:  பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் நாடுகளை பிரிக்கும்
இந்துகுஷ் மலையில் உள்ள கைபர் கணவாய்......

பாலக்காடு கணவாய் கேரளா என்பதால் அதை பற்றி குறிப்பிடவில்லை.....

Tuesday, 17 December 2024

புத்தகம்-33


Reading_Marathon2024
#24RM050

Book No:33/100+
Pages:710

ஷாஜி இசைக்கட்டுரை  முழுத்தொகுப்பு
-ஷாஜி

பாடல்கள் என்பது மனித வாழ்க்கைக்கு கிடைத்த வரம். சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழன் என்றால் அவை பாடல்களே. பாடல்கள் கேட்காத மனிதர்களே இல்லை எனலாம். பாடலின் நுட்பத்தை அறிந்து கொண்டு கேட்கும் போது அந்தப் பாடல் இன்னும் தெய்வத்துவம் ஆகிவிடுகிறது. தமிழகத்தில் தோன்றிய இசையமைப்பாளர்கள், பாடல்கள் மட்டுமின்றி உலக அளவில் இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் பாடகர்கள் குறித்த முழுமையான அறிமுகத்துடன் அவர்களின் திறமையுடனும் இந்த புதிய புதிய தகவல்களை இந்த புத்தகம் நமக்குச் சொல்கிறது. அதுபோலத்தான் இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும் பாடல்கள் குறித்து நம்மை முழுமையாக செய்திகளை தீர்த்து வைக்கும் விதத்தில் ஒவ்வொரு கட்டுரைகளும் இருக்கின்றன. இன்று அலெக்சாவில் பாட்டு கேட்கும் ஹைடெக் வாழ்க்கை வந்தாலும் கூட.. பாடல்கள் கேட்பதில் அரிச்சுவடி ரேடியோ தான். அந்த ரேடியோவில் இருந்து தான் இந்த கட்டுரையும் துவங்குகிறது.

நல்ல பாடல் சரணங்களில் பல்லவியை விட மேலே சென்று புதிய இடங்களை தொடுவது எம்.எஸ்.வி யின் சிறப்பம்சம். எம்எஸ்வியின் இன்னொரு முகம் உச்ச ஸ்தாயில் பாடும் பாடல்கள் அதற்கு உதாரணமாக பல பாடல்களை சொல்லலாம் ஜகமே மந்திரம் ,சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பாடல்கள். Could you be loved?, In Bob I Trust போன்ற வரிகள் பாப் மார்லியின் சட்டைகளில் விரிந்திருப்பதாகும். ரெகே ஸ்பானிஷ் மொழிச் சொல் அதற்கு அரசனின் இசை என்ற பொருள் உண்டு என்று பாப் மார்லி சொல்லி இருப்பார். தமிழில் சின்ன சின்ன ஆசை, முஸ்தபா ,அகிலா அகிலா போன்றவை அந்த வடிவங்களை பெற்றுள்ளவை ஆகும். இசை உலகுக்கு அவர் வந்த பயணத்தையும் அனுபவத்தையும் இதில் விவரித்துள்ளார். 

'பெண்ணே நீ அழக்கூடாது 
உனது துயர்களை எல்லாம் 
துடைத்தெறியும் எதிர்காலம் அதோ வருகிறது பெண்ணே நீ அழக்கூடாது
No woman No cry.. என்பது பாப் மார்லியின் புகழ்பெற்ற பாடல். 

இதேபோல பாப் மார்லியின் மகனும் ரிக்கே பாடகனும்மாகிய சிக்கிமார்லி 
கடவுளின் பெயரால் எனும் தன் பாடலில் இவ்வாறு பாடினார் என்பதை சொல்கிறார் 

கடவுளின் பெயரால் கொல்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால் 
கடவுளின் பெயரால் கைப்பற்றுகிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால் 
கடவுளின் பெயரால் வெறுக்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால் 
கடவுளின் பெயரால் பீற்றிக்கொள்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால் 
எல்லா மதங்களும் துடைத்தழிக்கப்பட வேண்டும் அதன் பின் நாம் வாழ்வுக்காக வாழ்வோம் 
நம்மை பிரிப்பது மதம் 
குழம்பிப்போன மனிதர்களால் உருவான மதம் 
என்று பாடல் நிதர்சன வரிகளை உள்ளடக்கியது

இதே போல் தான் மக்கள் பாடகன் டி எம் சௌந்தரராஜன் குறித்த கட்டுரையில் அவர் பாடல்களையும் மிகவும் ரசித்து இருப்பார். எம்எஸ்வி அமைக்கும் மெட்டுகளுக்கு யாராலும் பாட முடியாத காலகட்டத்தில் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் மிக எளிமையாக அதனை கையாண்டதால் உச்சஸ்தாயில் அமையும் பாட்டாகிலும் மெலடி பாட்டுகளினாலும் தன் குரல் வளத்தால் அந்த இசைக்கு உயிர் கொடுப்பார். இந்த நடிகர் பாடினார் என்பதை நீங்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொள்ள டி எம் எஸ் அவர்கள் மெனக்கெட்டு பாடி இருப்பதும் நாம் கவனிக்கப்பட வேண்டி ஒன்று.

மாயா வனங்களில் விகரிப்பவள் அல்ல நான் கனவுலகங்களில் பயணிப்பவள் அல்ல நான் 
அந்தி மேகங்களில் வசிப்பவளும் அல்ல நான் 
இசை நிரம்பி வழியும் ஒரு ஜீவன் மட்டும் நான் 

இந்த வங்க மொழிப்பாடல் பத்தாண்டுகளில் கேட்கப்பட்ட தனித்துவமிக்க பாடலாக கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். இதனை பாடியவர் நவீன வானம்பாடியான ஸ்ரேயா கோஷால் என்பதை கூறி புகழாரம் சூட்டுகிறார். இசையில் பூரண சுருதி தன்மை அல்லது தூய சுருதி தன்மை என்ற ஒன்று இருக்கிறது. இந்த இரண்டிலும் ஒருங்கே அமையப்பெற்றவர் தான் இப்பாடகி என்கிறார்.

ஒரு பாடல் உச்சத்துக்கு போகும் திறனையும் ஆழத்துக்குச் செல்லும் திறனையும் ஒரே போல் வெளிப்படுத்தும் மெட்டு அமைத்து, அது எத்தனையோ நுட்பமான திருப்பங்களும் வளைவுகளும் கொண்டு இறுதியில் உச்சத்துக்கு சென்று உலவும் என்பதை கவனித்தால் அத்தகைய மெட்டே நம்மை கவரும் ஒரு பாடலாக அமைந்து விடுகிறது. அதில் பின்னணி இசைக்கும் பாடலுக்கும் துல்லியமான ஒருமையை ஏற்படுத்தி மிகவும் ரசிக்க வைப்பவர் தான் ஏ எம் ராஜா என்ற தேன் கலந்த குரலுக்குச் சொந்தக்காரரான அவருக்கு புகழாரம் சூட்டுகிறார். மலையாளத்தில் சத்யனின் குரலாக புகழ்பெற்ற ராஜா தமிழில் ஜெமினியின் முகமாகவே இருந்தார். சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போலான துயரத்தையும் தாபத்தையும் தாங்கிய பாடல்கள் நீங்கா புகழ் பெற்றன. கல்யாண பரிசு தேன்நிலவு வரை ஸ்ரீதர் இடம் இணக்கமாக இருந்தவர் தேன்நிலவு படத்தில் பின்னணி இசை அமைக்க மறுத்து எழுந்த பிரச்சனையால் ஏற்பட்டமான கசப்பு அடுத்து நெஞ்சில் ஒரு ஆலயம் பட வாய்ப்பு எம்.எஸ்.விக்கு சென்றது. 

சின்ன சின்ன ஆசை பாடலை பாடிய மின்மினியை அறிமுகப்படுத்தியது இளையராஜா தான் மீரா படத்தில் அவரின் முதல் பாடல் அமைந்தது. அவரின் பாடல் வரிகளை சிலாகித்து முத்தாய்ப்பாய் ஒரு வரியை எழுதி முடித்து இருப்பார். பாடுவதற்கு தான் தயாராக இருந்தும் யாரும் பாடுவதற்கு அழைக்க முன்வரவில்லை என்ற சோகத்தையும்  மின்மினி பதிவு செய்திருப்பார். அதனை வைத்து ஒரு கவிதை வரி ஒன்று சொல்லி முடித்திருப்பார்

 மின்மினி 
மிகச்சிறியது 
இருள் கவியும் அந்தியில் 
ஒரே ஒரு கணம் 
எல்லா நட்சத்திரங்களையும் 
அது வெல்கிறது 
பின்னர் என்றென்றிக்குமாக 
எரிந்து மறைகிறது 

என்று சொல்லி இருப்பார்.

மர்லின் மன்றோவின் வாழ்வைப் பற்றியும் இசையை பற்றியும் சொல்லும்போது இறுதியில் அவருடைய கூற்றாக ஒரு கவிதையை நமக்குச் சொல்லி இருப்பார்."சிறுவயதில் நீ அழகாக இருக்கிறாய் என்று யாருமே எனக்குச் சொன்னதில்லை .நீ ஒரு அழகான குழந்தை என்று அழகில்லாத சிறுமிகளிடம் கூட நாம் சொல்ல வேண்டும். அந்த சொல்லில் அவர்களுக்கு கிடைக்க கூடிய தன்னம்பிக்கை வாழ்நாள் முழுவதும் அவர்களை வழிநடத்தும்" என்றார்.

"காற்றிலாடும் மெழுகுவர்த்தியை போல் இருந்தது உன் வாழ்க்கை 
உன் துயரமான தனிமை 
வழிதான் நீ பெற்ற ஊதியம் 
எல்லா கவர்ச்சிகளையும் மீறி 
எங்கள் நினைவில் என்றும் அழகாய் இருப்பாய் போய்வா மர்லின் மன்றோ"

என்ற ஒரு துயரக் கவிதையும் இறுதியில் கொடுத்து இருப்பார்கள்.

வாசிப்பிலும் சினிமாவிலும் நம்முடைய ரசனை இயல்பாக மேம்படுவது உண்டு. ஆனால் பாடல்கள் கேட்பதில் பெரும்பாலும் நாம் இளமைக்காலத்து ஏக்கங்களில்தான் இன்றும் பல பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம் .இசை ரசனையும் இசை பற்றிய புரிதல்களையும், இது போல புத்தகங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. மறந்து போன இசை கலைஞர்கள் இசை ஆளுமைகள் புகழாலும் வெற்றியாலும் துடைத்தெளிக்க முடியாத கலைஞர்களின் கண்ணீரைப் பற்றி, பெருங்கூடடங்கள் சூழ்ந்திருந்த வேளையிலும் தனிமையில் மடிந்த இசை கலைஞர்களைப் பற்றி, இசை வானத்தில் புதிதாய் பிறந்த வானம்பாடிகள், இன்னும் பறந்து கொண்டிருக்கும் பறவைகள், திரைப்பட நடிகர்களை பற்றி உலக வடிவிலான இசை வடிவங்கள் எவ்வாறெல்லாம் இருக்கின்றன என்பதை பற்றி, இசையை எவ்வாறெல்லாம் எப்போதெல்லாம் கொண்டாடலாம் என்பது பற்றியும் விரிவாக இந்த நூல் அலசுகிறது.

தமிழ் பாடல்கள் மட்டுமின்றி இந்தி பாடல்கள் கன்னடம் மற்ற மொழி பாடல்கள் இசை தொகுப்புகள் இசை குறிப்புகள் மேடை பாடல்கள் இசை கலைஞர்களின் வரலாறுகள் கர்நாடக இசை சங்கீதம் ஒலி அமைப்புகள் குறித்தும் இந்த புத்தகம் அலசுகிறது.

இசைக்கலைஞர்கள் யாரும் தெய்வத்தின் ஆசி பெற்று ஒரே நாளில் யாரும் முன்னேறவில்லை. ஒவ்வொரு நாளும் படிப்படியாக தங்கள் திறமைகளை முன்னிறுத்தி அவர்கள் அனைவரும் முன்னேறியுள்ளனர். அவர்களுக்கு பின்னால் ஒரு தன்னம்பிக்கை நிரம்பிய வாழ்வு ஒன்று உள்ளது. அதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். எந்தத் துறையை சேர்ந்தவராய் இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடனும புதிய தேடலுடனும் இருப்பவர்களுக்கு இந்த உலகம் வழிகாட்டுகிறது. ரத்தின கம்பளங்களையும் விரிக்கிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஜி.ராமானுஜம்


உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அளவுக்கு மீறிக் கவனிக்கக் கூடாது.  உடலில் உள்ள சிறு சிறு தொந்தரவுகளைக்கூட பெரிய பெரிய வியாதியாக நினைத்து அடிக்கடி மருத்துவர்களிடம் சென்றால் தேவையில்லாத பரிசோதனைகள், மருந்துகள் எனப் பிரச்சனைகள் கூடிக் கொண்டேதான் போகும். ஒன்று மருத்துவரும் பயந்து போய் பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்ப்பார் அல்லது பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையாக இருந்தால் உங்களை வைத்து ஒரு ரூம்  அல்லது குறைந்த பட்சம் ஒரு சுவராவது கட்டி விடுவார்கள். 

 முக்கியமாக இணையத்தில் நோய்  அறிகுறிகளை வைத்துத் தேடிப் படித்தால் கட்டாயம் பெரிதாக பீதி அடையத்தான் செய்வீர்கள். இது போல் விபரீதமாகக் கற்பனை செய்வதற்கு Hypochondriasis என்று பெயர். இப்போது Illness anxiety என அழைக்கப் படுகிறது. ( உடனே எனக்கு illness anxiety இருக்குமோ எனப் பயப்படாதீர்கள்)

பாதிக்கு மேற்பட்ட உடல் பிரச்சனைகளை  முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி , உறக்கம், உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலமே சரி செய்ய முடியும். ( நான்கு உ க்கள்)

( இருகைகளிலும் பெரிய பைகள் நிறைய மருத்துவ பைல்களோடு இன்று வந்த ஒருவரைப் பார்த்தபின் தோன்றியது)

- டாக்டர்.ஜி.ராமானுஜம்.

Sunday, 15 December 2024

திருச்செந்தாழை



ஒரு கனவு நிறைவேறுவதற்கு தன்னால் எதுவும் செய்யவியலாது என்கிறபோது வருகின்ற கையறுநிலை மௌனத்திற்கு தனி நிறம் உண்டு.
லட்சியங்களை அடைவதற்கு உதவிய மனதின் மகிழ்வைப்போல,
அந்த வெற்றியை தூரத்தில் இருந்தபடி பாதங்களின் தனிமை இன்னும் ஆழமானது.

ஒருபோதும் தான் அடகு வைத்த பொருட்களை மீட்கமுடியாதவளாக,
சதா வறுமைபீடித்தவளாக,
படிக்க விரும்பும் மகனை பட்டறைக்கு அனுப்புபவளாக இருக்கின்ற,
காப்பிக்கொட்டையை கடத்தி விற்பவளாக இருக்கின்ற அந்த பெண்மணி அழுக்கான தனது கைகளால்  மகனை  அணைத்தபடி உறங்கும்போது,
அவன் அவளிடமிருந்து தப்பி தனது கனவினை நோக்கி ஓடுகிறான்.
ஒரு லட்சியவாத விரும்பிக்கு படம் இதோடு முடிகிறது.

ஆனால்,பின்னொரு நாள் அவளது மரணத்திற்கு பிறகு, தான் வாழ்ந்த அந்த வீட்டிற்கு வருகின்ற - இப்போது பிரபலமான வயலினிஸ்டாகிவிட்ட - அவனுக்கு வறுமையின் காலத்தில் தான் வெறும் 30 லியாருக்கு அடமானம் வைத்த அந்த வயலினை ஏதோவொரு குற்றவுணர்வின் பொருட்டு மீட்டு வைத்திருக்கிறாள்.
ஒரு துணைப்பாத்திரம் போன்ற அவள்தான் இதில் நிஜமான வாழ்வினை வெளிப்படுத்துபவள்.
அதனாலேயே அவளைப் பார்த்து கோபம் வரவில்லை.மாறாக , ஒருவித ஆதங்கம் எழுந்துவிடுகிறது.

நாம் பார்க்கின்ற பெரும்பாலான அம்மாக்கள் " நீ பட்டாதான் திருந்துவ ..பாரு " எனத் திட்டிக்கொண்டே இருப்பவர்கள்.
நாம் பெறுகின்ற வெற்றியில் ஒரு விள்ளலை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள்.
தோற்றுப்போன ஒரு இரவில் தூக்கமற்று நாம் குமைந்துகொண்டிருக்கும்போது,
" கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு தூங்குய்யா..சரியாப்போகும் தூங்கு.."
என்றபடி இருட்டுக்குள்ளிருந்து குரல் தருபவர்கள்.
அதனாலேயே இவளும் நம் ஒவ்வொருவரின் அம்மாவைப் போல உலகின் அழகான பெண் ஆகிறாள்.

8am metro (Hindi)


8am metro (Hindi)

நல்ல படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் உண்டு .அந்த வகையில் நண்பர் ஒருவர் பரிந்துரையின் பெயரில் இந்த படம் பார்க்க நேர்ந்தது. ஆக்சன் படமோ காமெடி படமும் இல்லாமல் ஒரு ஃபீல் குட் மூவி 

#கதை

நாயகி கணவனுடன் குழந்தைகளுடன் வசித்து வருகிறாள். வீடே உலகம் என்று வாழ்ந்து வருபவர்களுக்கு அவளுடைய தங்கை பிரசவத்திற்காக ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சேர்ந்து இருப்பார். அவருடைய கணவன் அமெரிக்காவில் இருப்பதால் அவளை பார்ப்பதற்காக செல்ல வேண்டும் என கணவனிடம்  கூறுகிறாள்.

அவனும் வேலைப்பளுவில் உள்ளதால் நீ மட்டும் தனியாக சென்று வா என்று கூறுகிறான். சிறுவயதிலேயே அவள் தந்தையுடன் ரயிலில் செல்லும் போது ஏற்பட்ட கசப்புணர்வில் அவள் மீண்டும் ரயிலில் செல்வதையே மறந்து விட்டிருந்தாள். சொல்லப்போனால் வெளியே செல்வதையே அவள் பயந்து கொண்டு செல்லவில்லை. எனவே இது ஒரு புது அனுபவமாய் ஹைதராபாத்துக்கு செல்கிறாள். இரண்டு வாரங்கள் அங்கே தங்கி இருந்து தங்கையை கவனித்துக் கொள்ள வேண்டும். 

தங்கையை பார்த்துவிட்டு திரும்ப முயலும் போது தங்கை ஒரு யோசனை சொல்கிறாள். மெட்ரோ ரயிலில் சென்றால் வீட்டிற்கு செல்ல எளிமையாக இருக்கும் என கூறுகிறாள். அவளுக்கு இன்னும் பயம் அதிகரித்திருக்கிறது. மெட்ரோ ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கும் போது தான் நாயகன் ப்ரீத்தம் அறிமுகம் ஆகிறான். இவளின் பய உணர்வை கண்டு உதவி செய்ய முயல்கிறான் .ஆனால் இவள் பயத்தில் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. 

மறுநாளில் இருந்து இருவரின் நடவடிக்கைகளும் மாறி ஒருவருக்கொருவர் நண்பர் ஆகிறார்கள். அவள் சிறுவயதில் எழுதும் கவிதைகளை எல்லாம் படித்துவிட்டு ரசித்துக் கூறுகிறான். இவனும் ஒரு புத்தகப் பிரியராக இருப்பதனால் அவளுக்கு இவனையும் பிடிக்கிறது. இருவரும் நட்பாக பழகும் போது இவள் ஊருக்கு செல்ல வேண்டிய நாள் வருகிறது. 

இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் எவ்வாறு அதனை புனித படுத்துகின்றனர் என்பதைத்தான் இந்த படம் சொல்கிறது. எதார்த்தமான இத்திரைப்படம் திருமணத்துக்கு பிறகான ஆண் பெண் நட்பு குறித்து பேசுகிறது 

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பார்த்ததினால் ஒரு பீல் குட் மூவி பார்த்த உணர்வு வருகிறது 

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday, 14 December 2024

உதயகீதம் படத்தில் சிறையில் மோகன் இருக்கும் போது அவரை பார்க்க வரும் ரேவதி, சிறையின் வெளியே நின்று கொண்டு நிலாவை பார்த்து “பாடு நிலாவே தேன் கவிதை” என மோகனை மனதில் நினைத்து பாடுவார். அதற்கு பதில் சொல்ற மாதிரி மோகனும் “பாடு நிலாவே தேன்” என பாடுவார்.ஹீரோ சிறைக்குள் இருக்கும் போது அவர் கண்களுக்கு நிலா எப்படி தெரியும். அதனால அவர் பாடும் போது ஒரு “ம்” சேர்த்து “பாடும் நிலாவே தேன் கவிதை“ அப்படி இருக்கலாமே” என்று இசைஞானி சொல்ல.... கதாநாயகன் நாயகியை நிலவாக எண்ணி “பாடும் நிலாவே” என பாட... கவிஞர் மு.மேத்தா இசைஞானியிடம் “அண்ணே நீங்க சேர்த்த அந்த “ம்” வார்த்தை இந்த பாட்டை ஜம்முனு ஆக்கீடுச்சு” என்று கூறி மகிழ்ந்தார்... இந்த பாட்டை பாடிய பிறகே SPB இசை ரசிகர்களால் பாடும் நிலா என்று கொண்டாடப்பட்டார்..-படித்தது

புத்தகம்-31


Reading_Marathon2024
#24RM050

Book No:31/100+
Pages:138

சீமுர்க்
-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

கதை சொல்லுவதில் சம்பவங்களை கோர்வையாக்கி சொல்வது ஒருவகை என்றால், வார்த்தைகளின் மாயாஜாலத்தையும் வாசிப்பனுவத்தையும் சேர்த்துக் குலைத்து கதையை சொல்லுதல் என்பது இன்னொரு முறை. இந்த இரண்டாம் வகை கதைகள் தான் இந்த புத்தகத்தில் உள்ள  ஒன்பது கதைகளும்.

ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் மதுபான விடுதிக்குச் செல்லும் நாயகன் அங்கு எதிர்பார்த்து இருக்கும் பூனையை பற்றி விவரிக்கிறான். உயர் குடியில் நல்ல கம்பெனியில் பெங்களூருவில் பணிபுரியும் அவன் வாரத்துக்கு ஒருமுறை மதுபான விடுதிக்கு வந்து தன் மனதின் ஓவியங்களை சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் ஒப்பிட்டு பார்த்து இருப்பான். கடந்த காலத்தில் பனி மூடிய சிகரங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த கூர்காவின் அன்பினை பெரும் அவன் அவனுடைய வாழ்க்கையையும் கேட்கிறான். அதன்பின்பு இருவருக்கும் நடக்கும் உரையாடல்களின் வழியே அவன் எவ்வாறு இவருடைய எண்ணங்களை மாற்றி அமைக்கிறான் என்பது தான் கதை.

மூதாதையரிடமிருந்து இரண்டாம் உலகப் போர் கால வாள் ஒன்று தாத்தாவிடம் இருந்தது. அந்த வாளின் பெருமையை உணர்ந்தவர் தாத்தா மட்டுமே. பிறகு அவர் மதித்ததால் நாங்கள் அனைவரும் அவற்றை மதித்து வந்தோம், பாதுகாத்து வந்தோம். திடீரென அந்த வாள் காணாமல் போகிறது. தலைமுறை இடைவெளி தாண்டி அந்த வாள்  மதிக்கப்படுகிறதா அல்லது உதாசீனப்படுத்தப்படுகிறதா என்பது தன் வரலாற்று கனவுகளின் வரலாறு
 செய்த வாளின் வரலாறும் என்ற கதை.

பெண்கள் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவரும் கிரிக்கெட்டை குறித்து ஆய்வு செய்பவருமான பரத்குமார் மாதத்தின் இரண்டாம் சனி ஞாயிறு காதலி வைஷ்ணவியோடு செலவிடுபவர். அவர்களின் நண்பர்களான இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரசாந்த் மற்றும் வசுதாவிடம் வார இறுதியில் கொண்டாட செல்லும் போது பிரசாந்த் மெய்யியல் தர்க்க உரையாடல் தான் 'விடுமுறை தினத்தில் ஓர் அனார்கிஸ்ட்' இக்கதையாக சொல்லப்படுகிறது.

அலுவலகத்தில் பணியாற்றி வரும் நாயகனுக்கு 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கஸ்வினி குறித்த நினைவு மேலிடுகிறது. அந்த நினைவின் வழியே செல்லும் கதைகளில் அவர் கண்ட வாழ்வியல் என்ன என்பதை கனவின் வழியே கண்ட சொற்களை நமக்கு சொல்லி இருப்பதாக சீமூர்க் கதை இருக்கிறது

சிறுகதைகள் புதுமை வடிவில் ஜே.எம் கூட்ஸின் நாவலான 'த போல்' என்பது அடியொற்றி நீத்தார் கதையை எழுதியுள்ளார். அதில் உள்ள சிறப்பு என்னவெனில் எண்களிட்டு பாயிண்ட் ஆக இருக்கும் கதைகளில் நீத்தார் கதை எழுதி இருப்பார்.

அடுக்ககத்தில் குடியிருக்கும் நாயகன் மேலே கீழே வரும் போதும், போகும்போதும் கருப்பு பூனை ஒன்று இருப்பதை கண்டார். வளர்ப்பு பிராணி வளர்ப்பதை விரும்பாத தன் தாயிடம் எப்படி சொல்வது எனக்கு அந்த கருப்பு பூனை பிடிக்கும் என்று. இருந்தாலும் உள்ளூர ரசித்து கொண்டு சென்றவன் நான்காம் தளத்தில் வசிக்கும் பிருந்தா தான் பூனையின் உரிமையாளர் என்று தெரிந்தது. ஒரு கட்டத்தில் அந்த பூனையை பிருந்தா கொன்று விட்டதாக செய்தி வருகிறது. ஏன் கொன்றார் எதற்காக கொன்றார் என்பதற்கான நினைவுத் திரையில் கருப்பு பூனை கதை சொல்லி இருப்பார்

ஒருவரின் அல்லது வறிய நிலையை கண்டு இறங்கினால் அது கிருபை மட்டுமே. ஆனால் அதை மாற்றுவதற்கு முயன்றால் அது தயை. கிருபை எளியவர்களுக்கானது. தயை வலியவர்கள் செய்வது. கதையின் நாயகன் பணியாற்றும் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு 100 பிச்சைக்காரர்களுக்கு ஆளுக்கு 100 ரூபாய் வழங்குவது அவருடைய திட்டமாக இருந்தது. அவ்வாறு பல இடங்களில் தேடி 100 பிச்சைக்காரர்களுக்கு தலா 100 ரூபாய் கொடுக்கிறார். நண்பர்கள் இதனை கேலி செய்கிறார்கள் மறுநாள் நீண்ட நாளாக தர வேண்டிய நண்பர் அந்த பத்தாயிரம் தொகையை அனுப்பி இருந்தார். இரண்டையும் ஒப்பிட்டு நோக்கி கிளரிஸ் லிஸ்பெக்டரின் வரிகளை மேற்கோளாகக் கொண்டு இந்த கதை முடிகிறது

*எதிர்காலம் என்ற ஒன்றில் நான் நுழைந்து வழி தெரியாமல் நிற்பதை போல் உணர்ந்தேன் 

*எவையெல்லாம் நம் முன் தொடர்ந்து நிகழ்கின்றனவோ அவற்றில் நமது கவனம் குறைவதற்கு வெகுகாலம் ஆகிறது. 

*இருளை விரட்டுவதற்காக ஒரு மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

*அறிவால் வாழ்பவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து கற்பது தேவையானது.

*கடவுள் மனிதனின் மெய்க்காப்பாளன், அரசு மனிதனின் வாயில் காப்பாளன். ஆனால் உண்மையில் மனிதன் அரசின், கடவுளின் அடிமை. எல்லா ஜனநாயக அரசுகளும் மனிதனை எஜமான ஸ்தானத்தில் வைத்திருப்பதாக நடிக்கின்றன.

*திருமணத்தை தவிர்ப்பதற்கு எனக்கு பெரிய காரணங்கள் ஏதுமில்லை. வாழ்வை குறித்த எனது பார்வைகளை போதுமானதாக இருந்தன.

மேல்நாட்டு பாணியிலான கதை சொல்லும் வகையை நம் ஊர் சிந்தனையோடும் கலந்து கொடுத்திருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் சொல்லி இருந்த விதமும் அணுகி இருந்த நோக்கமும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 13 December 2024

கிழக்கு தொடர்ச்சி


கிழக்குத் தொடர்ச்சி, 

இந்தியாவில் குறைந்த அறியப்பட்ட ஆனால் குறிப்பிடத்தக்க மலைப்பகுதி, 

கிழக்குக் கடற்கரை ஓரமாக 1,750 கிலோமீட்டர் தூரம். 

உயிர்பன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியம் நிறைந்தவர்கள், காடழிப்பு மற்றும் வாழ்விட சீரழிவு போன்ற அச்சுறுத்தல்களை இந்த பிராந்தியத்தில் எதிர்கொள்கின்றனர்.

கிழக்குத் தொடர் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கு இணையாக ஓடுகிறது, 

அதன் அடிவாரம் மற்றும் கடற்கரைக்கு இடையே பரந்த சமவெளிகளை விட்டு.

ஒடிசாவில் உள்ள மகாநதி தொடங்கி தமிழகத்தில் உதகை வாகை வரை மிகவும் உடைந்து அகப்பட்ட மலைகளின் சங்கிலி இது. கோதாவரிக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் அவை கிட்டத்தட்ட மறைந்துவிட்டன

மகாநதிக்கும் கோதாவரிக்கும் இடையில் வடக்குப் பகுதியில் மட்டுமே கிழக்குத் தொடர் மலைப்பாடங்கள் உண்மையான மலைக் குணத்தை வெளிக்காட்டுகின்றன. 

இந்த பகுதி மாலியா மற்றும் மாடுகுலா கொண்டா கோலங்களை உள்ளடக்கியது.

மாலியா வரம்பின் சிகரங்கள் மற்றும் விடுதிகள் 900-1,200 மீ. மற்றும் மகேந்திர கிரி (1,501 மீ) என்பது இங்கு உயரமான சிகரம் ஆகும்.

மாடுகுலா கொண்டா வரம்பில் 1,100 மீ மற்றும் 1,400 மீ வரை அதிக உயர்வுகள் 1,600 மீ மேல் பல சிகரங்கள் உள்ளன. அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஜிந்தகடா சிகரம் (1690 மீ) அர்மா கொண்டா (1,680 மீ), கலி கொண்டா (1,643 மீ), சின்க்ரம் குட்டா (1,620 மீ) ஆகியவை முக்கியமான சிகரங்கள்.

கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடையே, கிழக்குத் தொடர் மலைகள் மலைப்பாதையை இழந்து, கோண்ட்வானா வடிவங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இந்த ரேஞ்சின் தெற்கு பகுதி பால்கோட்னா ரேஞ்ச் என அழைக்கப்படுகிறது.

தெற்கே, மலைகள் மற்றும் பீடங்கள் மிகக் குறைந்த உயரங்களை அடைகின்றன. ஜவ்வாதுமலை மற்றும் சேர்வராயன்-கல்வராயன் மலை மட்டுமே 1,000 மீ உயரத்தில் இரண்டு தனித்துவமான அம்சங்களை உருவாக்குகின்றன.

எஸ்.ரா


நரையேறும்_காலம்

அப்பாவின் மீது கோபம் துளிர்க்காத இருபது வயது இளைஞனே உலகில் இல்லை. ஆனால், அந்தக் கோபம் அப்பாவின் மீதான கோபமில்லை. தனது அடையாளங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் விளைவாக உண்டான கோபம். 

பையனுக்கும் அப்பாவுக்குமான உறவு படகுக்கும் அதைச் செய்த மரத்தச்சனுக்கும் உள்ள உறவைப் போன்றது. படகு ஆற்றில் விடப்படுவதற்காகத்தான் உருவாக்கப்படுகிறது. தச்சன் அதைச் செய்யும் போது மிகக் கவனமாகச் செய்கிறான். ஆனாலும் அதை ஆற்றில் விடாமல் வீட்டிலே வைத்துக்கொண்டு இருக்க முடியாது. அதோடு ஆற்றின் சீற்றத்தைச் சந்திக்க படகிற்கு அவன் கற்றுத்தந்து விடவும் முடியாது. கூடவே இருக்கவும் முடியாது. ஆற்றின் விசையை எதிர்கொள்வது படகின் விதி. 

தொலைவில் செல்லும் படகின் போக்கினைக் கரையிலிருந்து மௌனமாகப் பார்க்கும் தச்சனைப் போன்றதுதான் அப்பாவின் நிலை. ஒரு நாள் நாமும் அந்த தச்சனில் ஒருவனாக இருப்போம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை .

-எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு மகுடத்தை அல்லது அங்கீகாரத்தைத் தேடி அலைந்து இத்தனையாண்டுகளை நான் வீணடித்துவிட்டேன் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். போதுமான அளவுக்கு மகத்தான செயல்களை ஆற்றுவதன் வழியாக அந்த வெகுமதிக்குத் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள விரும்பினேன். ஆனால், இனிமேல் அவை எனக்குத் தேவையில்லை. தற்போது நான் விரும்புவதே வேறு. கொஞ்சம் கதகதப்பான, புகலிடமாக விளங்குகிற, எனது தகுதி குறித்து அக்கறைப்படாத, வருங்காலத்தில் நான் எப்படிப்பட்ட ஆளுமையாக மாறுவேன் எனக் கணக்கிடாத, என்னை எடைபோடாத, எந்தச் சூழலிலும் நான் தஞ்சமடையக்கூடிய ஒன்று! நிலை திரியாமல் எப்போதும் நீடித்திருக்கக்கூடிய ஒன்றையே நான் இப்போது வேண்டுகிறேன், நாளைய ஆகாயம் போல! - கஸூவோ இஷிகுரோ

Friday, 6 December 2024

மழை மானி


மழையை எவ்வாறு அளக்கிறார்கள்?

 செய்திகளில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை ,
அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம். அவை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்து காணலாம்.

வானிலை ஆராய்ச்சி மையங்களில் 
“Rain gauge” என்று கூறப்படும் மழை மானி கருவி இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, 'இத்தனை மி.மீ. மழை பெய்தது' என்று சொல்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள்.

ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம். 

எனவே, 10 மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ள வேண்டும். தற்போது பல வகையான தானியங்கி மழை மானிகள் சந்தையில் கிடைக்கின்றன. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மழை அளவை குறித்து தகவல் தந்துவிடும்.

Thursday, 5 December 2024

புத்தகம்-30


Reading_Marathon2024
#24RM050

Book No:30/100+
Pages:160

மரபு மருத்துவம்
-டாக்டர் வி விக்ரம் குமார்

சிறிய வயசுல புத்தக கடைக்கு போன உடன் முதலில் கண்ணில் படுவது ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகம் தான் .எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் அந்த பக்கங்களை பள்ளி நாட்களில் புரட்டிய நினைவு. அதே போல் தற்போது புத்தகக் கடைக்கு போகும் போதெல்லாம் மருத்துவம் சம்பந்தமான உணவு சம்பந்தமான உடல் சம்பந்தமான புத்தகங்களை எல்லாம் பார்க்கும் போது சற்று ஆர்வமுடன் புரட்டிப் பார்ப்பது வழக்கம். ஏனெனில் நமக்கு தெரியாத தகவல்கள் இருக்கும் அல்லதுசெய்கின்ற நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்தும் தகவல்களாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் தான். அதேபோலத்தான் இந்த புத்தகமும் கைக்கு கிடைத்தது.

தி இந்து நாளிதழில் நலம் வாழ இணைப்பிதழில் வெளியான 40 கட்டுரைகளின் தொகுப்பு தான் இது. வாரந்தோறும் படித்திருந்தாலும் புத்தகமாய் படிக்கும் போது ஒரு இன்பம் தான். தலைவலி இருமல் வந்தவுடன் அருகில் இருக்கும் மருந்து கடைக்கு சென்று இருபது ரூபாய் கொடுத்தால் மாத்திரை கொடுப்பார்கள் .உண்டு விட்டு படுத்தால் காலையில் தலைவலி குணமாயிருக்கும். ஆனால் உண்மையில் அந்த காலத்தில் ஆவி பிடிப்பது என்பது தான் தலைவலிக்கு சிறந்த தீர்வாக இருந்தது என்பதை அக்கால மனிதர்கள் அறிவார்கள் .அதனை வலுப்படுத்தும் நோக்கில் முதல் கட்டுரை நல்லது செய்யும் ஆவி என்ற பகுதி இருக்கின்றது.

அவசர உலகில் ஒற்றட முறைகளை சினிமாவில் மட்டுமே அதுவும் பழைய சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும் .ஆனால் வாத நோய்கள் தீர, கட்டிகள் வீக்கங்கள் மறைய, வெந்நீர் ஒற்றடம் ,கப நோய்கள் மறைய, முள்தைத்த காயத்துக்கு என ஒற்றடத்தின் பல்வேறு வழிமுறைகளை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

முழுமையாக குளிப்பது குளியல் என்பார்கள் அதாவது கழுத்து கீழ் மட்டும் குளிப்பது குளியல் நல்லதல்ல. எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையை பற்றி சொல்லும்போது செவ்வாய் வெள்ளிகளில் பெண்களும், புதன் சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும். அத்துடன் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் என்னும் பிணியணுகா விதி பாடல் எண்ணெய் தேய்த்த நாள் என்று குளிக்க வெந்நீரையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறது .உடல் சூடு தூக்கமின்மை மன அமைதியின்மை ஆகியவற்றை குறைத்து மனதை அமைதிப்படுத்த என்னை குளியல் எவ்வாறெல்லாம் உதவி புரிகிறது என்பதை சொல்லி இருக்கிறார்.
என்னுடைய நண்பர் ஒருவரும் வாரந்தோறும் என்னை குளியல் எடுப்பார். என்னிடமும் எண்ணெய் குளியல் எடுக்க பரிந்துரைப்பார் .இன்றும் இரும்பு போன்ற தேகத்துடன் பவனி வந்து கொண்டிருக்கிறார்.

பழைய உணவு பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றை இந்த அவசர உலகில் நாம் அதிகம் உண்கிறோம்.நோய் நம்மை நெருங்காமல் இருக்க 'முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்' என்ற கருத்தை சித்த மருத்துவர் தேரையார் கூறுகிறார் .திரிகடுகம் எனும் நூலும் பழைய உணவை சாப்பிடாமல் நாள்தோறும் சமைத்து சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

*உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியை தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் மெலடோனின் ஹார்மோன் நம்முடைய தூக்கம் விழிப்பு நிலைகளை கட்டுப்படுத்தவும் ,ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

*எல்லா சூழ்நிலைகளிலும் நோய்களை எதிர்த்து உயிர் வாழ்வதற்காகவும் உடல் எடை அதிகரிக்கவும் கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் விளைவால் ரெசிஸ்டன்ட் பாக்டீரியாக்கள் அதிகரித்து கோழிகள் இடையே அந்த நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகிறது இந்த நோய்களின் தாக்கம் அதை சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடர்போல் நீள்கிறது.

*உணவு சாப்பிட்ட பின் குறுநடை நடப்பது ஆரோக்கியத்தை தரும். அது உணவை செரிப்பதற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகள் சிறப்படையச் செய்யும். வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் கூழ்மங்களின் நகரும் தன்மை விரைவு படுத்தப்பட்டு செரிமானம் முறை படுத்தப்படும்.

கிராமங்களில் பிறந்து வளர்ந்தவருக்கு அருகில் இருப்பவர்களின் மருத்துவ குணமும் மூதாதையர்களின் அனுபவமும் கை கொடுக்கும். நகரத்தில் அது நிச்சயம் தவற விடுகிறோம். ஒவ்வொரு செடிகளின் பெயரையும் அதன் மருத்துவ குணத்தையும் கூறிய நமக்கு சிறுவயதிலேயே பெரியவர்கள் புகட்டி விடுவார்கள். அதுதான் கை வைத்தியம் பாட்டி வைத்தியம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய அவசர உலகில் அதை எல்லாம் விட்டு நாம் மிக நீண்ட தூரம் வந்து விட்டோம் .உணவு முறைகளில் மாற்றம் வந்து விட்டது. வருடத்தின் எல்லா நாள்களிலும் இட்லி தோசை ஒன்று நமக்கு கை கொடுக்கிறது. சிறுதானியங்களை அறவே மறந்து விட்டோம் ஏதேனும் உணவுத் திருவிழாக்களில் பார்த்தால் தன் உண்டு

ஆகவே நாம் சிறு தானியங்களையும் முன்னோர்களின் வாழ்க்கை முறையும் அவ்வப்போது கொஞ்சம் பயன்படுத்திக்கொண்டால் தான்.. நம்மை சூழ்ந்துள்ள பிணிகளை வெல்வோம். மெடிக்லைம் பாலிசியை தேடி ஓட மாட்டோம். ஆகவே ஆரோக்கிய தரும் விஷயங்களை நாம் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டால் நாம் 100 வயது வரை வாழ வேண்டும் என்ற பேராசை இல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக 60 வயது வரை வாழ்ந்தாலே போதும் என்ற எண்ணங்களை நோக்கி சிறகடித்து பரக்கவும் இது போன்ற ஆரோக்கிய தரும் புத்தகங்களையும் அவ்வப்போது வாசித்து பயன்பெறுவோம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 4 December 2024

புத்தகம்-29


Reading_Marathon2024
#24RM050

Book No:29/100+
Pages:109

நான் காணாமல் போகும் கதை
-ஆனந்த்

தனிமனித வாழ்வில் எண்ணங்களுக்கு என்றும் நிலை இல்லை, மனிதர்களுக்கும் அதே நிலைமை தான். அதனை வலியுறுத்துவது போலவே இந்த நாவல் அமைந்துள்ளது. கணத்துக்கு கணம் தோன்றி இருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் மனிதன் ஒவ்வொரு கணத்திலும் நுழைந்து பார்த்து உடனே காணாமல் போவது சலிப்பை ஏற்படுத்துவதாக இல்லாமல் அது அவனுக்கு பழக்கமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எங்கோ ஒரு வெற்றிடத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது நாம் நினைவுகளையும் அசைபோட்டுக் கொண்டிருப்போம். அதுபோலத்தான் இக்கதைகளில் வரும் அவன் நினைவுகள் காலங்களை பின்பற்றி வந்து கொண்டே இருக்கும். தற்காலத்திய இன்ட்ரோவர்ட் போல யாரிடமும் பேசாமல் பயத்தில் ஆச்சரியத்தில் கூச்ச சுபாவத்துடன் இருப்பான். இன்னொரு சமயம் தனிமையில் அவனுடைய எண்ணங்கள் தாறுமாறாக சென்று கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு இப்போது இறந்து போய்விட்டால் என்ன ஆகும் என்று யோசிப்பது.

கவலைக்குள் விழுந்து எழுந்து சுயசமாதானம் செய்து கொள்வது போல துன்பம் இருக்கும்போது துக்கப்படுவதை விட துன்பமில்லாமல் காரணம் இல்லாமல் ஏதேனும் வெறுமனே நினைத்து துக்கப்படுவது என ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித உணர்வுகளை துல்லியமாக எழுதியுள்ளார்.

சிந்தனையில் எங்கோ தனிமையில் சென்று திரும்பி வர இயலாமல் யோசிப்பது, காணாமல் போவது, கனவுகளில் அடிக்கடி பார்த்த முகங்கள் நிஜத்தில் எதிர்ப்படுவது, உறக்கத்தில் வரும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு சிக்குவது பின்பு ஓரிருவரை காப்பாற்றுவது அந்த சமயத்திலெல்லாம்.. விழித்துக் கொண்டு ஒருவித பதட்டத்துடனும் விசித்திரமான நிம்மதியுடனும் மனதை தேற்றிக் கொள்வதை குறித்து சொல்லி இருப்பார்.

இனம் புரியாத மென்மயிலும் தழுதழுப்பிலும் மனம் நெகிழ்ந்து செல்லும் நிகழ்வுகளை வரிசையாக சிறுவயது முதல் ஒவ்வொன்றாய் சுட்டிக்காட்டிக் கொண்டே வருகிறார். கனவில் தென்படும் இடங்களை பற்றி சொல்லும் புது
 உலகில் தான் பார்த்திராத வேறொரு உலகம், அடர்ந்த காடு இருளான வனம் அதில் ஏதாவது அறிந்ததை தேடுகிறதா மனம் என்று ஒவ்வொரு முறையும் எண்ணிப் பார்ப்பார்.

நினைவுகளும் கனவுகளும் தவிர விழித்திருக்கும் போதே சில சமயம் தானாக மனதில் எழும் கற்பிதங்களும் உண்டு. கற்பிதம் தரும் சுதந்திரம் கட்டுப்பாடுகள் அற்றது. வாழ்வனுபவ உலகம் இயங்கும் வரையறைகள் கற்பித உலகங்களுக்கு கிடையாது .எதுவும் எங்கும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் .காரண காரியங்கள் தன்னிச்சையான வேறொரு இலக்கணத்தில் இங்கு நடக்கின்றன என்று நிகழ்காலத்தில் நிகழும் எண்ணங்களையும் மனதுடன் ஒப்பிட்டு தன்னுடைய மன அழுத்தத்தை அழகாய் விவரித்து இருப்பார்.

கால தேவனிடம் கேள்வி கேட்பது போல சில பகுதி வருகிறது .பிறப்பு நிற்காமல் இறப்பது மட்டும் நின்று போனால் என்னவாகும் ? புதிய புதிய மரங்கள் செடி கொடிகள் அனைத்துவித மிருகங்கள் குழந்தைகள் பிறந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.எதுவும் யாரும் இறந்து போகாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் வயது மட்டும் ஆகிக்கொண்டிருக்கும். முதுமை வரும். ஆனால் மரணம் இருக்காது. பூமி பழையதாய் கொண்டே இருக்கும் .உலகம் முழுதும் நகர்வதற்கு கூட இடமில்லாமல் உயிரினங்கள் நிறைந்திருக்கும் என்று சொல்கிறார்.

வெறும் கனவு ஒன்றை நம்பிக் கொண்டு இப்படி மாதக்கணக்கில் நேரத்தை செலவழித்துக்கொண்டு அலைந்து கொண்டிருப்பதால் என்ன உபயோகம்? இது சற்று பைத்தியக்காரத்தனமாகப்படவில்லையா என்று மனம் புழுங்குகிறது. ஆனால் கேள்வி விடவில்லை .மனதின் எண்ணங்களை பற்றியும் உணர்ச்சிகளை பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது என்று மனதின் உள நிலையை சமாதானம் செய்ய முடியாமல் எண்ணங்கள் விரிந்து கொண்டே இருப்பதை வேதனையுடன்  பகிருகிறார்.

இவ்வாறாக கதை அடுத்தடுத்த சில பல சம்பவங்களை சொல்லிக் கண்டே செல்கிறது.
எந்த இடத்திலும் ஆயற்சி ஏற்படாமல் இந்த நாவலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் நம்மை கட்டி போடுகின்றன வசியமிக்க எழுத்து ஈர்ப்பு விசையால்.

*தரையில் பார்வை படியும் போது ஆச்சரியம் மனதில் விரிகிறது 

*பொதுவாக விழிப்பு வந்ததும் கூடவே மனமும் விழித்துக் கொண்டு தன் ஓட்டத்தை தொடங்கி விடும்

*மையத்தில் ஒரு புள்ளியாய் இருந்து கொண்டு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த நான் இப்போது ஒரு வெளியாகி விரிந்து மற்றவர்கள் அனைவரும் என்னை பார்க்கும் கோணம் நிகழ்கிறது. 

*என்னை அறிந்தவர்கள் அறிந்ததை வைத்துக் கொண்டுதான் என்னை வாங்கிக் கொள்கிறார்கள்

*விரிந்திருக்கும் காட்சி புலத்தின் விசாலத்திலும், மழையின் நிசப்தத்திலும் அமைதி கொண்ட தன்னுணர்வு மனத்தின் ஆழங்களில் இறங்கி சஞ்சரிக்கிறது.

கதை தனி மனிதனின் கனவுகளுக்கும் நனவுகளுக்குமான கனவுகளில் தான் கண்ட ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் தொலைந்து போவதும் மனதிற்கு சமாதானம் சொல்லி அடுத்த நிகழ்வில் தொலைந்து போவதுமான கதைக்கு உயிராக இருப்பது வார்த்தைகள் தான். ஒவ்வொரு வார்த்தைகளையும் அழகிய கோலமாக கோர்த்து இந்த கதையை ஒவ்வொரு கணத்திலும் நம்மை உணர வைக்கிறார் வெறும் 100 பக்கங்களே கொண்ட நாவலில் நாம் பல இடங்களில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டுதான் அடுத்த கட்டத்துக்கு நாம் செல்ல முடிகிறது. நல்ல வார்த்தைகள் தோய்ந்த சித்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் ஆனந்த் அவர்கள் 

தொடர்ந்து வாசிப்போம் 
தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday, 3 December 2024

Nassim Nicholas Taleb ( புகழ்பெற்ற Black swan நூலின் ஆசிரியர்) எழுதிய Fooled by Randomness என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Black Swan க்கு முன்பே அவர் எழுதிய நூல் இது.தற்செயலாக நடக்கும் ( Random events) நிகழ்வுகளுக்கு இதுதான் காரணம் என காரணம் கற்பிப்பது ( Determinism) மனித இனத்தின் சிந்தனைப் பிழைகளில் ( Cognitive errors) முதன்மையானது.இந்த நிற உடை அணிந்ததால்தான் நல்லது நடந்தது என்பது போன்ற மூட நம்பிக்கைகளில் தொடங்கி பல்வேறு வரலாற்று, சமூக, பொருளாதார நிகழ்வுகளுக்கும் இதுதான் காரணம் எனப் பலவற்றைத் தவறாகக் கற்பிக்கிறோம் என்பதை விளக்கும் நூல்.சட்டென்று எனக்குத் தோன்றியது- இந்த பிரபஞ்சம் உருவானது அதில் உலகம் உருவானது மனித உயிர் தோன்றியது- இவை எல்லாமே தற்செயல் நிகழ்வுகள்தான் ( Random events) . ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இதுபோல் பல Random events நடக்கின்றன. இவற்றுக்கெல்லாம் பின்னால் எதோ காரணமோ, நோக்கமோ, சக்தியோ இருக்கிறது என்று நம்புவதுதான் மனிதனின் தலையாய மூட நம்பிக்கைகளில் ஒன்று. அறிவியல் படி இயற்கையாக ஒரு கரப்பான் பூச்சிக்கும் மனிதனுக்கும் பிறப்பின் நோக்கம் என்று எதுவும் கிடையாது. வாழ்ந்து மடிவது தற்செயல் நிகழ்வே. நோக்கங்கள் எல்லாமே நாமாகக் கற்பித்துக் கொண்டதேஇந்த எண்ணம் மிகப்பெரும் விடுதலையைத் தரவல்லது. மிகப்பெரும் வெறுமையையும்.டாக்டர் ஜி ராமானுஜம்

Monday, 2 December 2024

பெரும் ஆளுமைகளிடம் நாம் வியக்கத்தக்க ஒரு பண்பு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையோ அந்தரங்கக் கவலைகளோ அவர்களது செயலூக்கத்தைப் பாதித்திருக்காது. குடும்பத் தகராறு இருந்திருக்கும், மணமுறிவு ஏற்பட்டிருக்கும், புத்திர சோகம் வாட்டியிருக்கும், காது கேளாமல் போயிருக்கும். கடும் உடற்சிக்கல், தீராத மனநோய்கூட இருந்திருக்கும். எதுவும் தங்களது வேலையை, தொழிலை அல்லது படைப்பாற்றலைக் குலைக்காத வகையில் கவனத்துடன் செயல்பட்டிருப்பார்கள். துக்கத்தை அண்டவிடாமல் ஒருமுகப்பட்டு செயலில் ஆழ்ந்திருப்பார்கள். சில சமயங்களில் அத்தகைய காலமே அவர்களது சிறந்த productive years-ஆக அமைவதும் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை குடும்பம், குழந்தைகள், பெண்கள் எல்லாமே லட்சியப் பயணத்தில் அவ்வப்போது இளைப்பாறுகிற pit stops மட்டுமே. அவை தங்களது அறிவுநாட்டத்துக்கு, தேடலுக்கு, சமூக/கலைப் பங்களிப்புக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விலகலுடனும் அலட்சியத்துடனும் வாழ்வார்கள். அவர்களே மகத்தான முன்மாதிரிகள் ஆகிறார்கள். அவர்களையே நாம் ஆல்பா என்கிறோம்.-கோகுல்பிரசாத்உதாரணம் இளையராஜா, கார்ல்மார்க்ஸ் போல

நியாண்டர்


ஒளி என்பது கற்றை (wave) மற்றும் துகள் (particle) இரண்டும் ஆகும். துகளாக இருக்கும் ஒளி கற்றைகளாக விண்வெளியில் ஒளியின் வேகத்தில் பறக்கும். இது ஒளியின் இரட்டை இயல்பு எனப்படும் குவாண்டம் இயற்பியலின் ஒரு முக்கியமான கொள்கை.

இப்படி நொடிக்கு 3 லட்சம் கிமி வேகத்தில் பறக்கும் ஒளிக்கு மரணம் என்பதே கிடையாதாம். ஒளி என்பது அடிப்படையில் போட்டான் (Photon) துகள்கள். அதற்கு எடை கிடையாது. அதனால் எத்தனை லட்சம் கோடி ஆண்டுகள் கழித்தாலும் ஒளிக்கு அழிவே இல்லை. பெருவெடிப்பில் 13.80 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒளீயை கூட நாம் காணமுடிவது இதனால் தான்

போட்டான்கள் பூமியின் மேலோ, வேறு எதன்மேலோ பட்டால் மட்டுமே அதன்பயணம் முடிவுக்கு வரும். அத்துடன் ஒளி இறந்துவிடும். ஒளி உறிஞ்சப்படுதல், சிதறல் போன்ற பிற செயல்முறைகளாலும் அதன் தீவிரம் குறையலாம்.

ஆனால் எதன்மேலும் அது படவில்லை எனில் ஒளியானது நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஆயுள் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான் அதற்கான விதி. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். எங்கோ பல லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து பயணித்து வந்து சேரும் ஒளியை எல்லாம் தொலைநோக்கி மூலம் காண முடிவது இதனால் தான். 

வெப்பமும் அதுபோன்றதே. வெப்பம் பூமி, மற்றும் காற்றில் மோதி, காற்றையும், பூமியையும் சூடாக்குவதால் தான் பூமி வெப்பமாக உள்ளது. பூமிக்கு மேலே விமானத்தில் செல்ல, செல்ல சூரியனுக்கு அருகே சென்றாலும், அங்கே குளிராக இருப்பது இதனால் தான். சில பறவைகள் 8000 மீட்டர் உயரம் வரை பறக்கும் சக்தி கொண்டவை. அங்கே காற்று மிக லேசாக இருப்பதால் வெப்பம் மிக குறைவாக இருக்கும். சுமார் மைனஸ் அறுபது டிகிரி செல்சியஸ் குளிர் இருக்கும். இறகுகள் மற்றும் அதன் பயாலஜி காரணமாக்வே பறவைகள் இதை தாக்குபிடிக்கின்றன

விண்வெளியில் சூரியவெப்பம்  ஒளியின் வேகத்தில் பயணிக்கும். இதற்கும் மரணம் என்பதே இல்லை. விண்வெளியில் கதிர்வீச்சுகள் நீண்டதூரம் பரவி அதன் வெப்பமானது ரேடியேஷன் ஆக ஆகிவிடும்: கதிர்வீச்சு என்பது வெப்பத்தின் ஒரு வடிவம் தான். வெப்பம் கதிர்வீச்சாக மாறும்போது அதன் தீவிரம் குறையும்.

 சுமார் பத்துக்கு பின் 100 பூஜ்யங்கள் போட்டால் எத்தனை ஆன்டுகளோ, அத்தனை ஆண்டுகளில் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் இறந்து, போட்டான்கள் ரேடியோ கதிர்களாக மாறி, மறைந்து பிரபஞ்சமே காரிருளில் மூழ்கிவிடும் என்கிறார்கள்.

அப்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் துளிகூட வெப்பமாகவோ, வெளிச்சமாகவோ இருக்காது,. எல்லையற்ற கொடிய குளிர். அணுக்கள் உறையும் அளவு குளிர், எதுவும் தென்பாட காரிருள். " Heathdeath" என இந்த நிகழ்வு அழைக்கபடுகிறது. அதன்பின் எத்தனை லட்சம் கோடி ஆண்டுகள் இந்த காரிருள் நீடிக்கும், அதன்பின் என்ன என யாருக்கும் தெரியாதாம்

கற்பனைகள் கூட தோற்கும் இடம் பிரபஞ்சம் தான்



~ நியாண்டர் செல்வன்

Sunday, 1 December 2024

புத்தகம்-28


Reading_Marathon2024
#24RM050

Book No:28/100+
Pages:120

டாக்ஸி டிரைவர்
-ஆனந்த ராகவ்

ஆனந்த ராகவ் கதை சொல்லல் முறை மிகவும் நுட்பமானது. வார இதழில் ஆங்காங்கே கதைகளை படித்திருந்தாலும் தொகுப்பாக படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எழுத்துக்களில் அவர் காட்டும் ஈடுபாடு எதார்த்தமான சொற்களின் பின்னணியில் இருக்கும் ஆழமான உண்மைகள் கதை முழுவதும் தொய்வின்றி இறுதி வரை இழுத்துச் செல்வது என இவரின் சிறுகதைகளுக்கு ஒரு தனித்துவம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

 பர்மாவில் இருந்து எல்லை கடந்து அகதியாய் தாய்லாந்தில் பாதுகாப்பில்லாமல் வாழவரும் சீதாவுக்கு நேர்ந்த இழப்புகளும் வேதனைகளும் கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அடுத்து என்ன என்று பதற்றத்துடன் நம்மையும் படிக்க வைக்கிறது இவரின் எழுத்து கடைசியில் ஒரு சோக முடிவுடன் முடிந்தாலும் அது தரும் அனுபவம் பிரமக்க வைக்கிறது.

அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் பல பிரச்சனைகளுக்கு எளிமையான ஒரு தீர்வு தான் மிகப்பெரிய பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறது. நீதிக்கதைகளில் வரும் பூட்டாத பூட்டிற்கு சாவி தேடுவது போல பல பிரச்சனைகளுக்கு தீர்வை நோக்கி ஓடுகிறோம். அது பிரச்சனை இல்லை என்று தெரியாமல். அதுபோலத்தான் அப்பார்ட்மெண்டில் நீச்சல் குளம் கட்டுவதற்கான யோசனை வரும் போது ஒவ்வொருவரும் ஒரு யோசனை அதற்கான முட்டுக்கட்டை ஏன் போடுகிறார்கள்? இறுதியில் எவ்வாறு அந்த அப்பார்ட்மெண்டில் நீச்சல் குளத்தை கட்டினார்கள் என்பதை நகைச்சுவையாகவும் அட இவ்வளவுதானா என எண்ணும் படியும் சிந்திக்க வைக்கிறது கதை.

நேர்மையாய் வாழ்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. எல்லா நேரத்திலும் நாம் நேர்மையாக இருந்து விட முடியாது. சில நேரங்களில் மனசாட்சிக்கு பயந்து கொண்டும் நேர்மையாய் வாழ வேண்டுமா என்ற கேள்வியை அடிக்கடி நாம் கேட்டுக்கொள்வதுண்டு. அதுபோல ஒரு இக்கட்டான சூழலில்தான மகேஷ் என்னும் நடுத்தர வயது இளைஞன் கடைநிலை ஊழியம் பார்ப்பவன் தன்னுடைய மேனேஜருக்கு விசுவாசமாக இருக்கிறான். அவர் தரும் பண உதவி அவரின் குடும்பத்தையே காக்கிறது. கடைசியில் நேர்மையாய் இருந்ததால் அவனுக்கு நேர்ந்தது என்ன என்பதை "விலை" கதை நமக்கு சொல்கிறது.

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை ஐன்ஸ்டீன் ஐயப்பன் தான் .தனியார் பள்ளிகளில் சொற்ப ஊதியத்தில் தகுதியின்றி சேரும் சில ஆசிரியர்களால் அந்தப் பள்ளிக்கு நேரும் ஆபத்தும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால் அந்தப் பள்ளிக்கு நேரும் பிரச்சனையும் பற்றி மிக அழகாக கதை பேசுகிறது. ஐ க்யூ அதிகம் உள்ள ஐயப்பன் என்ற மாணவன் அந்த பள்ளிக்கு புதிதாய் சேருகிறான். அவனின் அறிவுத்திறமை கண்டு வியக்கிறது அந்தப் பள்ளி நிர்வாகம். ஒவ்வொரு ஆசிரியரும் திணறுகிறார்கள் அவனுடைய அறிவின் மேன்மையை சொல்ல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிறார்கள் ஆனால் அந்தப் பள்ளியின் தரம் உயர்கிறது .அதுவே ஒரு விஷயத்தில் எதிராகவும் அமைகிறது அது என்ன என்பதுதான் மீதிக்கதை.
ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசும் ஆங்கிலம் முழுக்க நம்மை நகைச்சுவையால் கட்டிப் போடுகிறது

நடுத்தர வயது பெண்களின் கழுத்தில் இருக்கும் நகைகள் அவர்களின் சந்தோஷத்தை போலவே அடிக்கடி காணாமல் போகும் .அது போன்ற நடுத்தர வயது பெண்மணியின் ஒரு தாயின் நகை காணாமல் போகிறது. குடும்பமே தேடுகிறது. கடைசில அந்த நகையை யார் எடுத்திருப்பார்கள் என்பதனை அவலச் சுவையுடன் இக்கதை சொல்கிறது.

என்ன படிக்க வேண்டும் என்று தெளிவில்லாமல் என்ன வேலைக்கு செல்கிறோம் என்ற இலக்கும் இல்லாமல் செல்லும் இளைஞர்களின் கதை வித்தியாசமானது. அவர்களின் முகங்களையும் மன நிலையும் படம் பிடித்து அப்படியே பாதை என்னும் கதையை எழுதி இருக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையாக உள்ள தந்தையும் அவரின் மனைவி படும் பாட்டினையும் அவரால் மகனுக்கு ஏற்படும் ஆசையே மருந்து என்னும் கதை படிக்கும் போது உணர முடிகிறது.

வயதான தந்தை திடீரென மயங்கி விழுகிறார். சர்க்கரை நோயாளியின் அவர் மருந்துகளால் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். இப்போது அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடனும் மருத்துவமனையில் சேர்த்து விட்டேன் .ஆனால் ஐசியூ லையே பல நாள்கள் இருக்க வேண்டிய சூழல். குடும்பத்தில் நிம்மதி இல்லை, சேமிப்பு குறைகிறது, கடன் அதிகரிக்கிறது .இந்த நிலையில் அலுவலகத்தில்  வெளிநாடு செல்லும் வேலை வருகிறது. தன்னிச்சையாக தன் தந்தையைக் காக்க போராடுவதுடன் பாசப்பிணைப்புடனும் அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடிப்புடனும் நாயகன் இருக்கிறான் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இரண்டாம மரணத்தின் கதை

சிறுகதை தொகுப்புகளை வாசிப்பதற்கு அச்சம் வரும். ஏனெனில் இந்த புத்தகம் நம் நேரத்தை வீணாக்கி விடுமோ புதிய செய்தி இல்லாமல் எழுதுபவரின் மேதாவித்தனத்தை மட்டும் கொண்டாடுமோ அல்லது பழமை வாதத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருப்பவரோ என எண்ணத் தோன்றும். எதெச்சியாக வாசித்தது இந்த புத்தகம் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு வடிவினில் நேர்த்தியான சொல் கட்டமைப்பு முறையில் நம்மை மிகவும் கவர்கிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

 தோழமையுடன் மணிகண்ட பிரபு