*
கூந்தல் இலக்கணம் - வைரமுத்து ❤
ஒரு பெண்ணின் கூந்தலை எப்படி ரசித்துவிட முடியும்? அலையலையாய் இருப்பதால் கடலலை, பரந்து விரிவதால் மேகம், மோதி சரிவதால் காற்று என எப்படி வேண்டுமானாலும் ரசிக்கலாம்.
வைரமுத்து கொண்ட கூந்தல் பார்வை கூந்தலைப்போலவே மலர்சூட வேண்டியது.
கூந்தல் சரிந்தால் ஒவ்வொரு முடியால் கோடுகள் கொண்ட அழகிய கோலம் என்பது அவரின் முதல் கூற்று.
"கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில்
கர்வம் அழிந்ததடி
என் கர்வம் அழிந்ததடி"
(சிநேகிதனே - அலைபாயுதே)
அடுத்தது, அதே கூந்தல் சிக்கலாக விழாமல் அலையாய் விழுந்தால் அது பெருக்கெடுக்கும் பேராறு. சாய்த்துக்கொண்டு மீன் கூட பிடிப்பார்கள் வைரமுத்துவின் காதலர்கள்.
"கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்"
(என்னவளே - காதலன்)
அதே பெண்ணின் கூந்தல் திடமாக, அடர்த்தியாக, காத்திரமாக நீண்டிருந்தால் அதுவே பலம் வாய்ந்த கயிறு. வைரமுத்துவின் கதாநாயகிகள் சூரியனையும் கூந்தல் கொண்டு கட்டுவார்கள் அது இயக்கும் உலகையும் கட்டிவிட ஆசைப்படுவார்கள்.
"கார்குழலில் உலகை...
கட்டிவிட ஆசை..."
(சின்ன சின்ன ஆசை - ரோஜா)
"ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்"
(ஆகாய சூரியனை - சாமுராய்)
இப்படியெல்லாம் சரிந்துவிழும் கூந்தலை ஒரு பாதுகாப்புக்கு சரணாலயமாக கூட எழுதலாமென்று சொல்கிறார் வைரமுத்து. காதலனை மடிகிடத்தி அலைபாயும் கூந்தலில் சுவரெழுப்பி கருவறையின் வாசமும் இருளும் தருகிறாள் வைரமுத்துவின் காதலி.
"மார்பில் ஒளிந்து கொண்டால்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா"
(மலர்களே - லவ் பேர்ட்ஸ் )
கூந்தல் என்றால் கருமை. அதனால் தான் "கார்கூந்தல் பெண்ணழகு" என்றும் எழுதினர்.
அவர் ரசிக்கும் அவளின் கூந்தலுக்கு வேறு என்னவெல்லாம் நிறங்கள் இருக்கின்றன.
"இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே"
(பச்சைநிறமே - அலைபாயுதே)
இரவின் நிறம், மழைக்கால இருட்டின் நிறம், காக்கைச்சிறகின் நிறம், பெண்ணிடம் கண்மையின் நிறம், குயிலின் நிறம் என அனைத்தின் நிறமும் கூந்தலின் நிறமென ரசித்து எழுத்துவிடுகிறார்.
இவ்வளவு நிறத்தையும் சொல்லிவிட்டு அதில் வரும் இரவை மட்டும் தனித்து எழுதுகிறார். மேலோட்டமாக கூந்தலை இரவு என்று சொல்வதைக்காட்டிலும் விடியாத இரவு என்று சொல்வதில் இருக்கிறது கவியாளுமை. என்றால் விடியாத இரவுகளென்று எதுவுமில்லை.
"விடியல் வந்த பின்னாலும்
விடியாத இரவு எது ?
பூ வாசம் வீசும்
உந்தன் கூந்தலடி…"
(சந்தனத்தென்றலை - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் )
இப்படி கூந்தலை இரவெனச் சொல்லிவிட்டு பகலை விட்டுவிட முடியாது. அப்படியென்றால் பகல் பெண்ணின் நிலையில் எப்படியாக இருக்கிறதென்று கேட்டால் கண்களைச் சொல்கிறார்.
"இவ்வுலகம் இருண்ட பின்னும்
இருளாத பாகம் எது ?
கதிர் வந்து பாயும்
உந்தன் கண்களடி…"
(சந்தனத்தென்றலை - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
-இளம்பரிதி.
அருமை "கூந்தல் நெழிவு" பாடல் வரிகளுக்கு மிக அருமையான விளக்கம்👍👌👌😍
ReplyDelete